பன்மடங்காளர் இரகசியம்

பன்மடங்காளர் இரகசியம்

Multibagger Secret

பங்குச்சந்தை பனை ஓலைகளிலிருந்து ...

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார் . அவர் தனது நாட்டின் கருவூலத்தில் (Treasury) அதிகப்படியாக இருக்கும் பணத்தை அவ்வப்போது பங்குச்சந்தையில் முதலீடு செய்வது வழக்கம் . ராஜாவுக்கு பங்குச்சந்தை முதலீடுகள் மூலமாக ஓரளவு இலாபம் கிடைத்தது என்றாலும் Multibagger Stocks என்று சொல்லப்படும் பன்மடங்காளர் பங்குகளை அவரால் இனங்காண முடியவில்லை . ராஜாவுக்கு அது ஒரு பெரிய மனக்குறையாக இருந்தது . இது இவ்வாறு இருக்கையில் பங்குச்சந்தை ஜென் குரு ஒருவர் அவருடைய நாட்டிற்கு வருகை தந்திருந்தார் . ராஜா அவருக்கு மரியாதை செய்து தக்க சமயத்தில் தன் மனதின் குறையைத் தெரிவித்துக் கொண்டார் . பங்குச்சந்தை ஜென் குரு உனது நாட்டின் ஈசானிய மூலையில் இருக்கும் மலை உச்சியில் கொடுங்கோடையிலும் வற்றாத சுனை ஒன்று உள்ளது நீ அறிந்ததே . ஒரு நாள் நீ அங்கு சென்று வா ! பன்மடங்காளர் பங்குகளைக் கைக்கொள்ள எது தடையாக இருக்கிறது என்பதற்கான பதில் அங்கு கிடைக்கும் . ராஜா ஒரு நல்ல நாளில் சுனையை அடைந்தார் . அதன் சுவையான தண்ணீரைப் பருகி விட்டு அதனுள் ஆழ்ந்து நோக்கினார் . சுனையில் அவர் பிம்பம் தெரிந்தது .

               *                 *                    *

பன்மடங்காளர் பங்குகளைக் கைப்பற்றுவதற்கான இரகசியம் என்ன என்பதான ஒரு கேள்வி முதலீட்டாளர்களிடையே எழுவது இயற்கையான ஒன்று தான் . பிரச்னை என்னவென்றால் அப்படி ஒரு இரகசியம் என்று எதுவும் கிடையாது . மதிப்பு முதலீடாக வாங்கிய தரமான நிறுவனப் பங்குகள் அனைத்துமே பன்மடங்காளர் பங்குகள் தான் என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும் . மேலும் ஆச்சரியமான இன்னொரு உண்மை என்னவென்றால் பெரும்பாலான சமயங்களில் இந்தப் பன்மடங்காளர் பங்குகளைக் கைப்பற்றத் தடையாக இருப்பது நாம் மட்டுமே . இந்தத் தடைக்கு நாம் அவசரப்பட்டு ஆசை விற்பனையிலும் கலவரப்பட்டு அச்ச விற்பனையிலும் ஈடுபடுவதை முழுமுதற்காரணமாகச் சொல்லலாம் .

ஒரே பங்கு ஒருவருக்குப் பன்மடங்காளராகவும் மற்றொருவருக்கு எதிர் மடங்காளராகவும் இருக்கும் . அது என்ன எதிர் மடங்காளர் ? 100 ரூபாய்க்கு வாங்கிய பங்கு 50 ரூபாய்க்கு இறங்கி நீங்கள் அதனை விற்று விட்டால் அது எதிர் மடங்காளர் .

இந்தப் பதிவில் ICICI வங்கியின் 100 பங்குகள் உடனான எனது 100 மடங்காளர் (100 Bagger) பயணத்தைப் பகிர்ந்து கொள்ள உத்தேசம் . 1997 ஆம் ஆண்டு முதல் பொது வெளியீட்டின் போது ICICI வங்கிப் பங்குகள் 10 ரூபாய் முக மதிப்பு + 25 ரூபாய் உயர் மதிப்புடன் 35 ரூபாய் என்ற விலையில் வெளியிடப்பட்டன . 100 பங்குகளின் விலை 3500 ரூபாய் . 2014 ஆம் ஆண்டு 10 ரூபாய் முக மதிப்பைக் கொண்ட பங்கு 2 ரூபாய் என்று பிரிக்கப்பட்டது . 2017 ஆம் ஆண்டு 10 பங்குகளுக்கு 1 பங்கு என்ற அளவீட்டில் இலவசப் பங்கு கொடுக்கப்பட்டது . முதல் பொது வெளியீட்டின் 100 பங்குகள் தற்போது 550 பங்குகள் ஆகி விட்டன . ஒரு பங்கின் தற்போதைய விலை 700 ரூபாய் . 550 பங்குகளின் விலை 385000 ரூபாய் . ஆக , IPO விலையான 3500 ரூபாய் என்பதைக் கொண்டு கணக்கிட்டால் தற்போது ICICI வங்கி 110 மடங்காளர் . 1997 ஆம் ஆண்டிலிருந்து 2021 வரை CAGR கணக்கிட்டால் 21.63 சதவீதம் வருகிறது . இதில் வங்கி , வருடாவருடம் வழங்கிய பங்காதாயம் கணக்கில் கொள்ளப்படவில்லை .

1997 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை வங்கிப் பங்கு ஒரே சீராக இந்த விலையேற்றத்தை அடையவில்லை . ஏறி இறங்கி , இறங்கி ஏறி சமயங்களில் ஒரே விலைப்பட்டையில் பல்லாண்டுகள் உழன்று இன்றைக்கு 110 மடங்காளர் ஆகியிருக்கிறது . ஒருவர் IPO வில் ICICI வங்கிப் பங்கை 35 ரூபாய்க்கு வாங்கி பட்டியல் விலையான (listing price) 50 ரூபாய்க்கு விற்று பின் விலை குறைந்ததும் மறுபடி வாங்கி விலை கூடியதும் மறுபடி விற்று இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் அவர் இந்த 110 மடங்காளரை 500 மடங்காளர் அல்லது 1000 மடங்காளர் ஏன் அதற்கும் மேல் ஆக்கியிருக்கலாம் . ஆனால் இது சாத்தியமா என்று சற்றே யோசித்துப் பாருங்கள் . ஒவ்வொரு முறை வாங்கி விற்கும் போதும் குறுகிய கால மூலதன ஆதாய வரி மற்றும் தரகு முதலான உராய்வுச் செலவுகள் தலை காட்டும் . பத்து முறை சரியாக (?) வாங்கி விற்று பதினோராவது முறை தவறினால் பல படிகள் கீழே சென்று விடக்கூடிய வாய்ப்பும் உள்ளது . மேலும் முதலீட்டாளர்களுக்குத் தனிப்பட்ட ஒரு வாழ்க்கை உள்ளது . 24 மணி நேரமும் ஒரு நிறுவனப்பங்கையே கண்காணித்துக் கொண்டிருப்பதை என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை .

இந்த 24 ஆண்டுகளில் ICICI வங்கிப் பங்கை விற்று விட நியாயமான சில காரணங்கள் நிறுவன அளவிலும் எனது சொந்தப் பணத்தேவையின் பொருட்டும் அவ்வப்போது எழுந்ததையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன் . வங்கியின் வாராக் கடன் பிரச்னை ஒரு சமயம் பூதாகரமாக எழுந்தது . அது ஒரு கட்டத்தில் , வங்கி வருடாவருடம் வழங்கிய அதிகரித்து வரும் பங்காதாயத்தைக் குறைக்கும் வண்ணம் சென்றது . வங்கியின் CEO ஊழல் வெகு நாட்கள் வரை நிறுவனத்தின் நீங்காத ஒரு கறையாக இருந்தது . வங்கியின் துணை நிறுவனங்களின் உட்கிடக்கை மதிப்பு (embedded value) மற்றும் அதன் பங்கு ஈட்டு விகிதம் ஆகிய தரவுகள் வங்கிப் பங்கை நான் விற்காமல் காக்கும் அரணாக இருந்தன . மேலும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரத்தில் வங்கி செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது . சொந்தப் பணத்தேவைக்குக் குறைச் செயலாக்கம் (under performance) புரியும் பங்குகளை விற்பது எனது வழக்கம் .

முன்னரே குறிப்பிட்டது மாதிரி ICICI வங்கியின் ஒரு பங்கை நான் வாங்கியது 35 ரூபாய்க்கு . தற்போது வங்கிப் பங்கின் தின அளவிலான ஏற்ற இறக்கம் (Intra day swing) 35 ரூபாய்க்கு மேல் இருக்கிறது . 100 பங்குகளை நான் வாங்கியது 3500 ரூபாய்க்கு . தற்போது வங்கிப் பங்கு 7 ரூபாய் கூடினால் என்னுடைய முதலீட்டுப் பெருக்கம் ஒரே நாளில் என் ஆரம்ப முதலீட்டை விட அதிகரித்து விடும் . வேறு மாதிரி சொல்வதானால் ஒரு மடங்கு அதிகமாகி விடும் . இதெல்லாம் காலத்தால் கூடியது . 

24 ஆண்டுகளில் 21.63 சதவீத CAGR என்ற அளவில் வங்கிப் பங்கு பன்மடங்காளர் ஆகியிருக்கிறது . பத்து ஆண்டுகளில் அல்லது ஐந்தே ஆண்டுகளில் இந்த வருமானத்தை ஈட்டுகிறேன் பேர்வழி என்று கூட்டு வட்டியை விரைவுபடுத்த முயல்வது ஆகப்பெரிய தவறு . மாறாக வருடாவருடம் கிடைக்கப்பெறும் பங்காதாயங்களைப் பருவப் பன்மயமாக்கம் செய்வது சிறப்பு . 

ஆக ஒரு நிறுவனப் பங்கைப் பன்மடங்காளராக மாற்றுவது உங்கள் கையில் மட்டுமே உள்ளது . மேலும் கரடிச்சந்தைகளில் பன்மடங்காளர் பங்குகள் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற வாக்கில் மீண்டும் மீண்டும் பிறக்கின்றன .

Key Takeaways

1. மதிப்பு முதலீட்டு அடிப்படையில் வாங்கிய தரமான நிறுவனப்பங்குகள் அனைத்தும் பன்மடங்காளர் பங்குகளே .

2. பெரும்பாலான சமயங்களில் பன்மடங்காளர் பங்குகளைக் கைப்பற்றத் தடையாக இருப்பது நாம் மட்டுமே .

3. பங்குகளைப் பன்மடங்காளர் ஆக்குவதற்குக் காளைச் சந்தையிலும் கரடிச் சந்தையிலும் நீங்கள் அந்தப் பங்குகளை வைத்திருக்க வேண்டும் .

4. பங்குகளின் விலையைத் தவிர்த்து மற்ற அளவீடுகளில் கவனத்தைக் குவியுங்கள் .

5. பங்காதாயங்களை காலப் பன்மயமாக்கம் செய்தல் உத்தமம் .

6. கரடிச்சந்தையில் பன்மடங்காளர் பங்குகள் மீண்டும் மீண்டும் பிறக்கின்றன .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14