பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பாட்டியும் பேத்தியும் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். பேத்தி, கடந்த வருடப் பங்குச்சந்தை அவளை நட்டாற்றில் விட்டதாகப் புலம்புகிறாள். பாட்டி, கடந்த வருடப் பங்குச்சந்தை மிகச் சிறப்பாக இருந்ததாகவும், பங்காதாயம், அதற்கு முந்தைய வருடத்தை விடக் கூடுதலாகக் கிடைத்ததாகவும் கூறுகிறாள். யார் சொல்வது சரி? அவரவர் கோணத்தில் இருவர் சொல்வதும் சரி தான். ஆனால், பங்குச்சந்தையைச் சரியான கோணத்தில் பார்ப்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் பாட்டியின் கருத்து தான் சரி. 

பங்கு முதலீட்டில் இரண்டு விதங்களில் வருமானம் கிடைக்கிறது. ஒன்று, முதலீட்டுப்பெருக்கம் (capital appreciation)  இரண்டு, பங்காதாயம் (dividend) இதில் முதலீட்டுப் பெருக்கத்தைத் தான் நம்மவர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகின்றனர். இன்ன விலைக்கு வாங்கினேன், இன்ன விலைக்கு விற்றேன், இவ்வளவு இலாபம் என்பதாகத் தான் அவர்களின் எண்ணக்கணக்கு இருக்கும். பங்காதாயத்தைப் பற்றிய பேச்சே இருக்காது. மேலும், பங்காதாயம் பங்குகளின் முக மதிப்பிற்கு வழங்கப்படுவதால் மிகவும் குறைவாக இருக்கும். ஒரு சின்ன உதாரணம். HDFC நிறுவனப் பங்கின் முக மதிப்பு ரூபாய் 2. அது 2021 ஆம் வருடத்திற்கு 1150 சதவீதம் பங்காதாயம் வழங்கியிருக்கிறது. 2 ரூபாய்க்கு 1150 சதவீதம் என்பது 23 ரூபாய். HDFC பங்கை அதன் ஆரம்பப் பங்கு வெளியீட்டின் போது முக மதிப்பில் வாங்கியவர்களுக்குத் தான் இந்த 1150 சதவீதப் பங்காதாயம். இப்போது சந்தையில் HDFC பங்கு 2560 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 2560 ரூபாய்க்கு வாங்கியவர்களுக்குப் பங்காதாயம் 0.89 சதவீதம் மட்டுமே கிடைக்கும். இது பங்கு ஈட்டு விகிதம் (dividend yield) என்று அழைக்கப்படும். HDFC பங்கை 1000 ரூபாய் என்ற விலையில் வாங்கியவர்களுக்கு 2.3 சதவீதம் பங்கு ஈட்டு விகிதம். பங்கின் விலை குறையக் குறைய பங்கு ஈட்டு விகிதம் அதிகரிக்கும். கரடிச்சந்தையில் பங்குகளை வாங்க வேண்டும் என்பதற்கான அடிப்படையே இது தான். மேலும் நிறுவனம் வளர வளர இந்தப் பங்கு ஈட்டு விகிதம் அதிகரித்த வண்ணமாக இருக்கும். 3 சதவீத பங்கு ஈட்டு விகிதத்தில் தரமான பங்குகளை மதிப்பு முதலீட்டு அடிப்படையில் சந்தையில் வாங்கலாம். நிறையப் பேர் இந்த 3 சதவீதம் என்பது வங்கி நிரந்தர வைப்புத் தொகை வட்டியை விடக் குறைவாக இருப்பதால் பங்குகளில் முதலீடு செய்ய மாட்டார்கள். போதாக்குறைக்கு பங்குகளின் விலை வினாடிக்கு வினாடி ஏறி இறங்குவதால் பங்குச்சந்தை என்றாலே பயந்து ஒளிந்து கொள்வார்கள். ஆனால், ஆபத்து என்று எதைக் கருதுகிறோமோ அதில் தான் வாய்ப்பும் பொதிந்திருக்கிறது. 

வங்கியில் 8 சதவீத வட்டி என்பதும் உங்கள் ஆரம்ப முதலும் மாறாது. பங்குச்சந்தையில் இந்த இரண்டும் மாறக்கூடியது. 3 சதவீத பங்கு ஈட்டு விகிதம் சில பல காரணங்களால் 2 சதமாகக் குறையலாம். பங்கின் விலை ஏறி இறங்குவதால் உங்கள் முதலீடும் ஏறி இறங்கும். ஆனால் வங்கி முதலீட்டின் ஸ்திரத்தன்மைக்கு நாம் கொடுக்கக்கூடிய விலை மிகவும் அதிகம். பணவீக்கம் என்னும் கண்ணுக்குத் தெரியாத அரக்கன் இந்த 8 சதவீதத்தில் பாதியை விழுங்கி விடும். வருமானவரி போக மீதி கிடைக்கும் உண்மையான இலாபம் மிக மிகக் குறைவு. எது ஆபத்தில்லாதது என்று நினைக்கிறீர்களோ அது தான் மிகவும் ஆபத்தானது. 

பங்குச்சந்தைக்கு வருவோம். தரமான பங்குகளில் முதலீடு செய்தால் பங்காதாயம் கூடக்கூடிய வாய்ப்புகள் மிக அதிகம். பங்காதாயம் கூடக்கூட பங்கு ஈட்டு விகிதங்களும் கூடும் என்பது தெளிவு. பங்கு ஈட்டு விகிதம் கூடக்கூட, அந்தக் கூடக்கூடிய பங்கு ஈட்டு விகிதங்களைக் கொடுக்கக் கூடிய பங்கின் விலைகளும் கூடியே தீரும். முக மதிப்பு 10 உள்ள ஒரு நிறுவனப்பங்கு 60 ரூபாய்க்கு வர்த்தகமாவதாக வைத்துக் கொள்ளலாம். நிறுவனம் பங்காதாயமாக 28 சதவீதம் வழங்குகிறது. முகமதிப்பிற்குத் தான் பங்காதாயம். ஆக பங்கு ஒன்றுக்கு 2.8 ரூபாய் பங்காதாயம். பங்கு ஈட்டு விகிதம் 100×2.8÷60= 4.66% நிறுவனம் நன்கு செயல்பட்டு பங்காதாயம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கிறது. 14 வருடங்கள் கழித்து 375 சதவீதம் பங்காதாயமாக வழங்குகிறது. பங்கின் விலை அதே 60 ரூபாய்க்கு வர்த்தகமாவதாக வைத்துக் கொள்வோம். இப்போது பங்கு ஈட்டு விகிதம் 100×37.5÷60=62.5% ஒரு நிறுவனம் பங்கு ஈட்டு விகிதமாக 62.5 சதவீதம் அளித்தால் அந்த நிறுவனப்பங்குகளுக்கு பங்குச்சந்தையில் தேவைப்பாடு அதிகரித்து பங்கின் விலை உயர்ந்து விடும். அது கரடிச்சந்தையாக இருந்து நிறுவனப்பங்கு தோராயமாக 6 சதவீத பங்கு ஈட்டு விகிதத்தில் வர்த்தகமாவதாகக் கொள்ளலாம் . 6 சதவீத பங்கு ஈட்டு விகிதம் என்று கணக்கிட்டால் பங்கின் விலை 620 ரூபாய்க்கு வர்த்தகமாக வேண்டும். இப்படித்தான் பங்கின் விலை கூடுகிறது. வங்கி நிரந்தர வைப்பு வட்டியாகிய 8 சதவீதம் என்பதைக் கொண்டு பங்கு ஈட்டு விகிதத்தைக் கணக்கிட்டாலும் பங்கின் விலை 465 ஆக வேண்டும். இந்த உதாரணம் உண்மையானது. மும்பை பங்குச்சந்தையில் மட்டும் பட்டியலிடப்பட்ட Balmer Lawrie Investments நிறுவனப்பங்கை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. பங்குச்சந்தைகளில் பங்குகளின் விலை ஏன் கூடுகிறது என்பதற்கான விளக்கம் இது தான். கூடுதல் பங்காதாயம்... கூடுதல் பங்கு ஈட்டு விகிதம்... கூடுதல் பங்கு விலைகள்... 

பங்குச்சந்தையின் இந்த மதிப்புப்பாய்ச்சலை (value flow) நீங்கள் கைக்கொள்ள வேண்டுமென்றால் ஒருங்கமைவு (system)  ஒன்றை உருவாக்கிக் கொள்வது மிக அவசியம். அது என்ன ஒருங்கமைவு? ஒரு சாதாரண மழைநீர் சேகரிப்புத் தொட்டியை எடுத்துக் கொள்ளலாம். அதில் அடிப்படையாக என்ன நிகழ்கிறது? மழைக்காலங்களிலும் அபூர்வமாகக் கோடைக்காலங்களிலும் பெய்யும் மழை நீரை வீணாக்காமல் சேகரிக்க மழைநீர்த் தொட்டி என்ற ஒருங்கமைவை உருவாக்கி வைத்திருக்கிறோம். நாம் அங்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் மழைநீர் அதில் பாய்ந்த வண்ணம் இருக்கிறது. துணை விளைபொருளாக நிலத்தடி நீர் மட்டம் கூடுகிறது. பங்குச்சந்தையிலும் இந்த மாதிரி பங்காதாயத்திற்கென்று ஒருங்கமைவு ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம். வளர்ந்து வரும் பங்காதாயத்தைக் கொடுக்கக்கூடிய பங்குகளாகப் பார்த்துப் பார்த்து வாங்கிச் சேர்க்கலாம். முதலில் இந்த ஒருங்கமைவில் சொட்டுச் சொட்டாகத் தான் தண்ணீர் மன்னிக்கவும் பங்காதாயம் விழும். கூட்டு வட்டியின் பலன்கள் முதலீட்டுக் காலத்தின் பிற்பகுதியில் தான் உணரப்படத் தக்கவையாக இருக்கும் . எனவே பொறுமையாகக் காத்திருந்தால் பணவீக்கத்தை விஞ்சிய பணப்பாய்ச்சல் (cashflow) பாயத் தொடங்கும். இந்த வளர்ந்து வரும் பங்காதாயத்தைக் கொடுக்கக் கூடிய பங்குகளும் முதலீட்டுப் பெருக்கத்தை அடையும். இதில் இன்னொரு அனுகூலம் என்னவென்றால் பங்குச்சந்தை ஏறுகிறதோ அல்லது இறங்குகிறதோ உங்களுக்குப் பங்காதாயம் கண்டிப்பாகக் கிடைத்து விடும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் நீங்கள் உங்கள் இலாபத்திற்குப் பங்குச்சந்தையை எதிர்பார்த்து இல்லை. பங்குச்சந்தை குறித்த பாட்டியின் கோணம் இப்போது உங்களுக்குக் காணக் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். 

தினசரி ஏறியிறங்கும் பங்கு விலைகள் ஒரு இரைச்சல் (noise) தொடர்ந்து ஒரே சீராக ஏறுமுகத்தில் இருக்கும் பங்காதாயங்கள் ஒரு குறியீடு (signal)  இரைச்சலில் கவனத்தைச் சிதற விடாமல் குறியீட்டைக் கவனியுங்கள். ஏறுமுகமான பங்காதாயங்களைத் தரும்  பங்கின் விலைகள்  கூடியே தீரும். மகிழ்ச்சியை நேரடியாக அடைய முடியாது. நான் இன்று மாலை  ஆறு மணியிலிருந்து ஆறரை வரை மகிழ்ச்சியாக இருக்கப் போகிறேன் என்பதெல்லாம் கதைக்கு  உதவாது‌. இந்தப் பதிவை நான் எழுதுகிறேன். அது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த மாதிரி மறைமுகமாகத் தான் மகிழ்ச்சியை அடைய முடியும். பங்குச்சந்தை இலாபமும் அப்படித்தான். அதை நேரடியாக அடைய முடியாது. பங்காதாயத்தில் கவனத்தைக் குவியுங்கள்‌. இலாபத்தை அடைந்தே தீருவீர்கள். 

Castrol என்னும் மசகு எண்ணெய் (lubricant oil) தயாரிக்கும் நிறுவனம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். 1983 ல் முதன்முறையாகத் தன் பங்குகளைப் பங்குச்சந்தையில் பட்டியலிட்டது. ஒரு பங்கின் விலை 19 ரூபாய். ஒருவர் நூறு பங்குகளை 1900 ரூபாய்க்கு வாங்கி இன்றைய தேதி வரை வைத்திருப்பதாக ஒரு கற்பனை. அவருடைய ஆரம்ப முதலீடான ரூ.1900/- க்கு 2021 ஆம் ஆண்டுக்கான பங்கு ஈட்டு விகிதம் 15432 சதவீதம். அதாவது ரூ.1900 க்கு பங்கு ஈட்டு விகிதமாக ரூ.293216/_  கொடுத்திருக்கிறது. ஒரு முதலீடு 15432 சதவீத பங்கு ஈட்டு விகிதத்தைக் கொடுக்கிறதென்றால் அந்த உயர் பங்கு ஈட்டு விகிதத்தைக் கொடுக்கின்ற பங்கின் விலையும் கூட வேண்டும். அந்த ரூ.1900/- ன் இன்றைய மதிப்பு கிட்டத்தட்ட 79 இலட்சம் . 

பங்குச்சந்தையில் பணம் சம்பாதிப்பது எளிமையானது ஆனால் இலகுவானதல்ல. பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்க பணத்தை விட பொறுமை, தாமதமான மனநிறைவு போன்ற மென் சொத்துக்கள் தான் தேவை .

Comments

Popular posts from this blog

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14