பணவீக்கம்
பணவீக்கம்
Inflation
என் அப்பா நான் சிறுவனாக இருந்த போது ஆறரை அடி அலமாரி ஒன்றை ரூபாய் 4500 க்கு வாங்கினார். நான் ஐந்தரை அடி அலமாரி ஒன்றை ரூபாய் 4500 க்கு வாங்கினேன். என் மகன் நான்கரை அடி அலமாரி ஒன்றை ரூபாய் 4500 க்கு வாங்கியிருக்கிறான். பணத்தின் மதிப்பு நாட்கள் செல்லச் செல்ல குறைந்து கொண்டே வருகிறது. இது தான் பணவீக்கம் (Inflation) என்று அழைக்கப்படுகிறது .
முதலீட்டுச் சமன்பாட்டில் பணவீக்கத்தையும் கட்டாயம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். முதலீட்டு வருமானத்திலிருந்து பணவீக்கத்தைக் கழித்தால் கிடைப்பது தான் உண்மையான வருமானம். அதுவும் நீண்ட கால முதலீட்டுத் திட்டங்களான ஓய்வு கால முதலீடு, குழந்தைகளுக்கான கல்வி மற்றும் திருமணம் போன்ற முதலீட்டுத் திட்டங்களில் பணவீக்கத்தைக் கழித்த மதிப்பீடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் நீண்ட கால நோக்கில் பணம் முதலீட்டுப் பெருக்கத்தை அடைவது மாதிரி பணவீக்கமும் பெருக்(சுருக்)கத்தை அடைந்து விடும். பணவீக்கம் என்பது சட்டம் இயற்றப்படாமல் பிடிக்கப்படும் உலகளாவிய வரி என்பதாகச் சொல்வார்கள்.
பணவீக்கத்தைக் கணக்கில் கொள்ளாமல் முதலீட்டுத் திட்டங்களைத் தொடங்கினால் கார் வாங்க வேண்டிய நேரத்தில் காரின் ஒரு சக்கரத்தை மட்டுமே வாங்க முடியும்; அலங்கார விளக்கை வாங்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தால் ஒரு குண்டு பல்பைத் தான் வாங்க முடியும் என்று The Single Best Investment புத்தகத்தின் ஆசிரியர் Lowell Miller கூறுகிறார். பணவீக்கத்தின் கொடுங்கரங்களை நாம் தினந்தோறும் ஏறும் விலைவாசியின் ஊடாக உணரலாம். சின்ன வயதில் வாழ்க்கைக்கான காப்பீடு எடுக்கும் போது அதன் முதிர்வுத்தொகை ரொம்பவும் பெரியதாகத் தோன்றும். 40 வருடங்கள் கழித்து முதிர்வின் போது அது ரொம்பவும் சிறியதாகி விடும். உபயம்: பணவீக்கம்.
அரசாங்கம் பணவீக்கத்தை மொத்தக் கணக்கில் 3 சதவீதம் என்பதாகச் சொல்கிறது. நாம் சில்லறைக் கணக்கில் 6 சதவீதம் என்பதாக வைத்துக் கொள்ளலாம். வங்கி நிரந்தர முதலீடுகள், கடன் பத்திரங்கள் மற்றும் தங்கம் போன்றவை பணவீக்கத்தை சமன் செய்யவோ அல்லது மிகக் குறுகிய அளவில் விஞ்சவோ செய்யலாம். மற்றபடி தரமான பங்குகளில் மதிப்பு முதலீடு (Value Investing) செய்வது தான் பணவீக்கத்தை வெற்றி கொள்வதற்கான ஒரேயொரு சரியான வழி.
விவரம் தெரிந்தவர்கள் கூட பணவீக்கம் பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பது எனக்கு எப்போதும் ஆச்சரியமளிக்கும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. பங்குச்சந்தையைக் கண்டு அஞ்சி நடுங்குபவர்கள் பணவீக்கத்தைக் கணக்கில் கொள்ளாமல் இருப்பது ஏன் என்பது ஒரு புரியாத புதிர் . அதிவேகமான (exponential) பணவீக்கத்தை இந்தியா இன்னும் எதிர் கொள்ளாதது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஜிம்பாப்வே மாதிரி நாம் இன்னும் ஒரு இலட்சம் ரூபாய் மதிப்பில் நோட்டு அடிக்கவில்லை. மீமிகை (extreme) பணவீக்கம் ஒன்றை எதிர் கொள்ளும் போது ஒரு நாட்டின் அரசாங்க ஊழியர்கள் தினமும் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று போராடியதெல்லாம் எத்தனை பேருக்குத் தெரியும்? காலையில் சம்பளம் வாங்கியவுடன் கடைக்கு ஓடோடிச் சென்று அன்றைக்குத் தேவையான பொருட்களை வாங்கி விடுவார்கள். ஏனெனில் மாலையில் பொருட்களின் விலை இரட்டிப்பாகி விடும். கொஞ்சம் நகைச்சுவையாகக் கூட ஒரு விஷயம் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு அதி தீவிர பணவீக்கத்தின் போது ஒரு திருடன் பணப்பெட்டியிலிருந்த பணத்தைக் கொட்டி விட்டு அந்த பணப்பெட்டியை மட்டும் தூக்கிக் கொண்டு ஓடி விட்டானாம். ஏனெனில் பணத்தை விட பெட்டி மதிப்பு வாய்ந்தது.
எனக்குத் தெரிந்து நம் நாட்டில் பணவீக்கத்தின் கை படாத ஒரே இடம் பழைய புத்தகக் கடை தான். ஐநூறு ரூபாய் மதிப்பிலான புத்தகங்களை வெறும் ஐம்பது ரூபாய்க்கு சர்வ சாதாரணமாக வாங்கலாம். ஒரேயொரு விஷயத்தில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். புத்தகத்தைப் பார்த்தவுடன் உங்கள் கண்களின் பாப்பா விரியாமல் மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும். அதைக் கடைக்காரர் பார்த்து விட்டால் புத்தகத்தின் விலை இரட்டிப்பாகி விடும்.
அது போகட்டும், பணவீக்கத்திற்கு ஒரு உடன் பிறவா சகோதரன் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அவன் பெயர் பணவாட்டம் ( Deflation) பணவாட்டம் என்பது பணவீக்கத்திற்கு நேர் எதிர். அதாவது பொருட்களின் விலை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வருதல் பணவாட்டம் என்று அழைக்கப்படுகிறது. இன்று தொலைக்காட்சிப் பெட்டி வாங்கினால் 25000 ரூபாய். மூன்று மாதம் கழித்து வாங்கினால் 24000 ரூபாய். இது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு என்கிறீர்களா? ரொம்பத் தப்பு. மூன்று மாதம் கழித்தும் யாரும் பொருட்களை வாங்க மாட்டார்கள். இன்னும் கொஞ்ச நாட்கள் போகட்டும் , இன்னும் குறைவாக வாங்கலாம் என்று முடிவேயில்லாமல் காத்திருக்கத் தொடங்கி விடுவார்கள். பொருட்களின் விலை இவ்விதம் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தால் யார் பொருட்களை உற்பத்தி செய்வார்கள்? எல்லாத் தொழிற்சாலைகளும் மூடப்பட்டு விடும். நாட்டின் பொருளாதாரம் அப்படியே உறைந்து நின்று விடும். அதனுடைய விளைவுகளைச் சற்று யோசித்துப் பாருங்கள். பணவீக்கம் மூன்று சதவீதம் என்ற கையாளத்தக்க அளவில் இருந்தால் எதிர்காலத்தில் விலை கூடும் என்று கருதி மக்கள் பொருட்களை வாங்கிய வண்ணம் இருப்பார்கள்.
பங்குகள் பணவீக்கத்தை விஞ்சிய வருமானம் கொடுப்பதற்கான காரணம் என்னவாக இருக்க முடியும்? ஒரு சின்ன உதாரணம் மூலமாக விளக்குகிறேன். MRF பங்கை கொஞ்சம் நெருங்கிச் சென்று ஆராயலாம். 1991 ல் MRFன் பங்கு முதல் (share capital) 4.24 கோடி. அதாவது 10 ரூபாய் முக மதிப்பைக் கொண்ட 4240000 பங்குகள் . நாளது தேதி வரை அதில் எந்த மாற்றமும் இல்லை. நிறுவனம் இலவசப்பங்கு எதுவும் கொடுக்கவில்லை. பங்குப்பிரிப்பையும் மேற்கொள்ளவில்லை. பத்து ரூபாய் முகமதிப்பு உள்ள ஒரு பங்கு 2945.09 ரூபாய் சம்பாதிக்கிறது. இது ஒரு பங்குச் சம்பாத்தியம் என்று அழைக்கப்படுகிறது (Earnings per share) நிறுவனம் 28 என்ற விலை வருவாய் விகிதத்தில் (PE Multiple) வர்த்தகமாகிறது. ஒரு பங்குச் சம்பாத்தியத்தையும் பங்கின் விலை வருமான விகிதத்தையும் பெருக்கினால் பங்கின் விலை கிடைத்து விடும். பங்கின் விலை ரூபாய் 82450/-நிறுவனத்தின் கடன் பங்கு விகிதம் ஒரு ரூபாய்க்கு 6 காசுகள் ( Debt Equity Ratio 0.06) என்ற குறைந்த அளவில் உள்ளது. பங்காதாயமாக (Dividend) அதன் ஒரு பங்குச் சம்பாத்தியத்தில் ( EPS) 5.09 சதவீதம் கொடுக்கிறது. இது பங்காதாயம் வழங்கு விகிதம் என்று அழைக்கப்படுகிறது (Dividend Payout Ratio) 2945.09 ரூபாயில் 5.09 சதவீதம் என்பது 150 ரூபாய் மட்டுமே. மீதி வருமானத்தை விரிவாக்க நடவடிக்கைகளுக்காகவும் மற்றும் முதலீட்டுத் தொகுப்பிலுமாக (Investment Portfolio) வைத்திருக்கிறது. இவ்விதம் சேர்ந்த உபரிப்பணம் 13174 கோடி (Reserves and Surplus) ஒவ்வொரு நிறுவனமும் தனிநபர் மாதிரி ஒரு முதலீட்டுத்தொகுப்பை வைத்திருக்கும். MRFன் return on capital employed மார்ச் 2021 ஆம் ஆண்டு கணக்கின்படி 13.09 சதவீதம்.
அரசாங்கம் அதன் பணத்தை இத்தனை விவேகமாகக் கையாளும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆக, நீங்கள் பணத்தைப் பணமாகவோ அல்லது நிலையான வருமான முதலீடுகள் (Fixed Income Investments) என்று சொல்லப்படும் கடன் பத்திரங்கள் மற்றும் தங்கம் என்பதாக வைத்திருந்தாலோ அந்த முதலீடு இவ்வளவு வருமானத்தை ஈட்டாது. அந்தப் பணத்தை நீங்கள் MRF போன்ற நிறுவனப் பங்குகளாக வைத்திருந்தால் அந்தப் பங்குகள் பணத்தின் வாங்கு திறனைத் (Purchasing power of money) தக்க வைக்கும் வல்லமை பெற்றவையாக இருப்பதால் உங்கள் பணம் உண்மையான வருமானத்தை ஈட்ட ஏதுவாகிறது. நிறுவனம் வளர வளர EPS கூடிக்கொண்டே செல்லும். EPS கூடக்கூட PE விகிதம் கூடாவிட்டாலும் பங்கின் விலை கூடும். நிறுவனம் அறவழியில் (Ethical) செயல்பட்டால் சந்தை அதற்குக் கூடுதலான PE மதிப்பை வழங்கும். இது PE விரிவாக்கம் (PE Expansion) என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு தான் பங்குச்சந்தையில் மதிப்பு என்பது உருவாகிறது. இந்த மதிப்பைத் தரும் பங்குகளை நாம் வைத்திருந்தால் பணவீக்கத்தை விஞ்சிய வருமானங்களைப் பெற முடியும்.
சில நிறுவனங்கள் தங்கள் முதலீட்டுத் தொகுப்பைத் தனியே பிரித்து ( நிறுவனப் பிரிப்பு) அதனைப் பங்குச்சந்தையில் பட்டியலிடும். நீங்கள் பங்குதாரராக இருக்கும் பட்சத்தில் நிறுவனப்பிரிப்பிலும் உங்களுக்குப் பங்கு உண்டு.
ஒரு நாடு எவ்வளவு தங்கம் வைத்திருக்கிறதோ அதே அளவில் தான் பண நோட்டுக்களை அடிக்க முடியும். 1973 ல் இந்தத் தங்கமான தங்க அளவு ( Gold Standard) கைவிடப்பட்டு விட்டது. இப்போது எந்த நாடு வேண்டுமானாலும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் அடித்துக் கொள்ளலாம். உலகெங்கிலும் உள்ள பண அச்சகங்கள் இப்போது ஓய்வின்றி வேலை பார்த்து வருகின்றன. MRFன் மாறாத 4240000 என்ற பங்கு எண்ணிக்கையையும் இதனையும் ஒப்பிட வேண்டுகிறேன் .
சுருக்கமாகச் சொன்னால் பங்குகள் என்பவை தண்ணீர் கலக்காத பழச்சாறு. பணம் என்பது தண்ணீர் கலந்த பழச்சாறு. ஒரு பெரிய குடம் தண்ணீரில் ஒரே ஒரு பழத்தைக் கலந்த தண்ணீர்ச்சாறு என்றும் சொல்லலாம். ஆக, பணவீக்கம் மிகையாகவும் இருக்கக்கூடாது. பணவாட்டம் கூடவே கூடாது. பணவீக்கம் ஒரு மூன்று சதவீதம் என்ற அளவில் இருந்தால் நனி நன்று.
Comments
Post a Comment