நேரப் பன்மயமாக்கம்
நேரப் பன்மயமாக்கம்
TIME DIVERSIFICATION
பங்குத் தொகுப்பின் பன்மயமாக்கம் (Portfolio Diversification) குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள் . வெவ்வேறு துறைகளில் வெவ்வேறு பங்குகளில் முதலீடு செய்வதன் மூலமாக பங்குச்சந்தை முதலீட்டு அபாயத்தைப் பெருமளவில் குறைத்துக் கொள்வது பங்குப் பன்மயமாக்கம் . அது என்ன நேரப் பன்மயமாக்கம் ?
நேரப் பன்மயமாக்கம் குறித்துப் பார்ப்பதற்கு முன் பங்குப் பன்மயமாக்கம் குறித்துக் கொஞ்சம் பார்த்து விடலாம் .
எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் இடக்கூடாது என்பது தான் பங்குப் பன்மயமாக்கத்தின் அடிப்படை . சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஒருவர் தன் பங்குத் தொகுப்பு முழுவதையும் வைத்திருப்பதாக ஒரு கற்பனை . சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் கற்பனைக் கணக்கு பிரச்னை வெடித்த பின்னர் என்ன நடந்தது என்பது நீங்கள் அறிந்ததே . சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் தன் மொத்த முதலீட்டையும் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனப் பங்குகளாக வைத்திருப்பதாக இன்னொரு கற்பனை . ஒரே இரவில் அவர் நடுத்தெருவிற்கு வந்து விடுவார் .
ஆக , சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனப் பங்குகளுடன் டிசிஎஸ் , விப்ரோ , இன்ஃபோசிஸ் , ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் என்ற வாக்கில் முதலீடு செய்வது உங்கள் பங்குத் தொகுப்பின் அபாயத்தைப் பேர் பாதி குறைக்கிறது . கணினி தவிர பிற துறைகளில் முதலீடு செய்வது மீதி அபாயத்தையும் குறைக்க வல்லது . நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் பங்குகளால் உங்கள் பங்குத் தொகுப்பு முழுவதையும் கட்டுவது ஆகப்பெரிய அபாயம் . மனித முதல் (human capital) மற்றும் நிதி முதல் (financial capital) இரண்டையும் ஒரே இடத்தில் இடக்கூடாது .
வாரன் பஃபெட் இதற்கு நேரெதிர் . எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் இட்டு அந்தக் கூடையை விழிப்புடன் பார்த்துக் கொண்டிருப்பதான உத்தி அவருடையது .
ஆனால் வாரன் பஃபெட் அவருடைய காலத்திற்குப் பின்னர் தனது மனைவிக்குக் குறியீட்டுப் பரஸ்பர நிதிகளைச் சிபாரிசு செய்வது இவ்விடத்தில் கவனத்தில் கொள்ளத்தக்கது . குறியீட்டு பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வதன் மூலமாகக் குறைந்த செலவில் பன்பயமாக்கம் செய்து கொள்ளலாம் . குறியீட்டு ETF (Exchange Traded Funds) களில் முதலீடு செய்தால் இன்னும் குறைந்த செலவில் பங்கு பெறலாம் . முதலீட்டுத் திட்டங்களில் குறைந்த பட்ச உராய்வுச் செலவுகளுடன் பங்கு பெறுவது ஒரு சாதகமான கட்டமைப்பைக் கொடுக்கவல்லது .
வெவ்வேறு துறைப் பங்குகளில் வெவ்வேறு கால கட்டங்களில் முதலீடு செய்வது நேரப் பன்மயமாக்கம் என்று அழைக்கப்படுகிறது .
இன்ஃபோசிஸ் பங்குகளில் , தகவல் தொழில்நுட்பக் குமிழியின் உச்சக்கட்டத்தில் முதலீடு செய்தவர்கள் , இலாபம் அல்லது நஷ்டம் இல்லாத நிலையை (breakeven point) அடையப் பல்லாண்டுகள் பிடித்தது . ஆனால் இன்ஃபோசிஸ் பங்குகளில் இந்தக் குமிழி வெடிப்பின் போது முதலீடு செய்தவர்கள் , தொடர்ந்த வாக்கில் வெவ்வேறு கால கட்டங்களில் முதலீடு செய்து வந்தால் இலாபப் பாதைக்கு வெகு விரைவில் திரும்பி விடுவார்கள் . ஒரு பங்கு முதலீட்டில் உயர்ந்த விலையில் பங்கு பெற்று பங்கின் விலை குறையக் குறைய முதலீடு செய்வது average down என்பதாக அழைக்கப்படுகிறது . இன்ஃபோசிஸ் போன்ற தரமான பங்குகளில் மட்டுமே இந்த உத்தியைக் கடைப்பிடிக்க வேண்டும் . தரமற்ற பங்குகளில் இந்த உத்தியைக் கைக்கொள்வது கருந்துளை முதலீடாகி (black hole investing) விடும் . பங்கின் விலை கூடக்கூட முதலீடு செய்து வருவது average up என்று அழைக்கப்படும் .
நேரப் பன்மயமாக்கம் என்பதை Rupee Cost Averaging என்ற வகையிலும் பார்க்கலாம் . ஒரே அளவிலான பணத்தை ஒரே சீரான கால இடைவெளியில் பங்குகளில் முதலீடு செய்து , பங்குகள் விலை அதிகமாக இருக்கும் போது குறைந்த எண்ணிக்கையிலும் , பங்குகள் விலை குறைவாக இருக்கும் போது அதிக எண்ணிக்கையிலும் வாங்குவதான உத்தி Rupee Cost Averaging என்பதாக அழைக்கப்படுகிறது .
எவ்வளவு தான் பார்த்துப் பார்த்து முதலீடு செய்தாலும் அவ்வப்போது வரும் கரடிச் சந்தைகளில் உங்கள் முதலீடு தரையைத் தட்டுவது (under water) இயல்பானது . பங்குகளின் விலை என்பது வேறு . பங்குகளின் மதிப்பு என்பது வேறு . தரமான நிறுவனப் பங்குகளின் விலை குறையக் குறைய அதன் மதிப்பு கூடிய வண்ணம் இருக்கும் . அந்த வகையில் இந்தக் கரடிச் சந்தைகளைப் பணமாக்கம் (encashment) செய்வது முக்கியத்துவம் பெறுகிறது . கரடிச் சந்தைகளை எப்படிப் பணமாக்கம் செய்வது ? அத்தகைய தருணங்களில் உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்குவதன் மூலமாக . எளிது , ஆனால் இலகுவானதல்ல .
நாம் இவ்வாறு வெவ்வேறு கால கட்டங்களில் முதலீடு செய்து வருவது ஒருபுறம் இருக்க தரமான நிறுவனங்களும் தங்கள் பங்குக்கு , பங்குகளை , இலவசப்பங்கு , பங்குப் பிரிப்பு மற்றும் நிறுவனப் பிரிப்பு என்று வழங்கிய வண்ணமாகவே இருக்கும் . அந்த வகையில் விப்ரோ மற்றும் பஜாஜ் ஆட்டோ பங்குக் கதைகளை ஏற்கனேவே பார்த்திருக்கிறோம் . இந்தப் பதிவில் சிப்லா (CIPLA) நிறுவனத்தின் பங்குப் பெருக்கக் கதையைக் கொஞ்சம் பார்க்கலாம் . சிப்லா நிறுவனம் மாதிரி இன்னும் பன்மடங்காளர் பங்குகள் நூற்றுக் கணக்கில் இருக்கின்றன . அவைகளைக் குறித்து எதிர் வரும் பதிவுகளில் ஊடும் பாவுமாகத் தொடர்ந்து பார்க்கலாம் .
ஒருவர் சிப்லா நிறுவன முதல் பொது வெளியீட்டில் 100 ரூபாய் முக மதிப்பைக் கொண்ட ஒரு பங்கை அதன் முக மதிப்பில் வாங்கி இன்றளவும் வைத்திருந்தால் அவரிடம் எவ்வளவு பங்குகள் இருக்கும் என்பதான ஒரு கணக்கு .
Cipla - Bonus & Split History
1963 - IPO - 1
1980 - 1:1 Bonus - 2
1986 - 1:1 Bonus - 4
1988 - 1:1 Bonus - 8
1992 - 1:1 Bonus - 16
1994 - 10:1 Split - 160
1994 - 5:1 Bonus - 800
1999 - 2:1 Bonus - 2400
2004 - 5:1 Split - 12000
2006 - 3:2 Bonus - 30000
இந்த அட்டவணையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்கள் ...
நிறுவனம் பொதுப் பங்கு வெளியிட்டு 17 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் முதல் இலவசப் பங்களிப்பை மேற்கொண்டிருக்கிறது . எனவே பங்கு முதலீடுகளில் பொறுமை காக்கவும் .
1:1 என்ற விகிதத்தினால் ஆன முதல் இலவசப்பங்களிப்பு ஒரு பங்கை மட்டுமே வழங்கியிருக்கிறது . ஆனால் அதே 1:1 என்ற விகிதத்தினால் ஆன கடைசி இலவசப்பங்களிப்பு ( நிறுவனம் உண்மையில் வழங்கிய விகிதம் 3:2 ) 12000 பங்குகளை வழங்கியிருக்கிறது . இது தான் கூட்டு வட்டியின் உருப்பெருக்கம் .
2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நிறுவனம் இலவசப்பங்குகள் எதனையும் வழங்கவில்லை . 2023 ஆம் ஆண்டு , நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதால் பவள விழா ஆண்டு என்ற அடிப்படையில் இலவசப்பங்குகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது . நிறுவனத்தின் உபரிப்பணம் (Reserves and Surplus) அதன் பங்கு சார் மூலதனத்தைப் போல் 122 மடங்குகள் உள்ளதால் இலவசப் பங்களிப்பை மேற்கொள்வதில் பிரச்னை ஏதுமில்லை என்றே தோன்றுகிறது .
ஒரு சிப்லா பங்கு 30000 பங்குகள் ஆகியிருக்கிறது . ஒரு பங்கின் இன்றைய விலை 950 ரூபாய் . 30000 பங்குகளின் விலை 2 கோடியே 85 இலட்சம் ரூபாய் . சிப்லா பங்கு இன்றைய தேதியில் 285000 Bagger . 2021 ஆம் ஆண்டுக்கான பங்காதாயம் ஒரு பங்குக்கு 5 ரூபாய் . பங்காதாயம் மூலமாக இந்த ஆண்டுக்கு மட்டும் ஒன்றரை இலட்சம் ரூபாய் கிடைத்திருக்கிறது . சிப்லா நிறுவனப் பங்குகளின் பங்காதாயத்தை அவ்வப்போது நேரப் பன்மயமாக்கம் செய்திருந்தால் எவ்வளவு சொத்து உருவாக்கம் பெற்றிருக்கும் என்பதனை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன் .
சிப்லா பங்கு ஒரே நேர்கோட்டில் அதாவது 45 டிகிரி என்ற பாகையில் நூறு ரூபாயிலிருந்து கோடி ரூபாய் ஆகவில்லை . ஏறி இறங்கி , இறங்கி ஏறி சமயங்களில் ஒரு குறுகிய விலைப்பட்டையில் (price band) பல்லாண்டுகள் பயணித்துத் தான் இந்த இலக்கை எட்டியிருக்கிறது . இறங்கும் போது அச்ச விற்பனையிலும் , ஏறும் போது ஆசை விற்பனையிலும் , இவ்வாறு ஏறி இறங்காமல் குறுகிய விலைப்பட்டையில் வர்த்தகமாகும் போது பொறுமை இழந்த விற்பனையிலும் ஈடுபடுபவர்கள் பன்மடங்காளர் பங்குகளை ஒருக்காலும் அடைய முடியாது .
இவ்வாறாக காலம் என்ற உரம் போட்டு வளர்த்ததால் வெறும் ஒரு பங்கு 30000 பங்குகள் ஆகியிருக்கிறது . வெறும் 100 ரூபாய் கிட்டத்தட்ட 3 கோடி ஆகியிருக்கிறது . பன்மடங்காளர் பங்குகளைக் கைக்கொள்வதில் நிறுவனங்களின் 'பங்கு' ஒருபுறம் இருந்தாலும் இதில் நமது 'பங்கும்' இருக்கிறது . பங்குச்சந்தை தின அளவில் ஏறி இறங்கிய வண்ணமாகவே இருக்கும் . முன்பே குறிப்பிட்டது மாதிரி ஏறும் போது ஆசை விற்பனையிலும் இறங்கும் போது அச்ச விற்பனையிலும் ஈடுபடாமல் நம்பிக்கையும் பொறுமையும் கொள்ளுங்கள் . நிறுவனங்களின் எதிர்காலத்தில் நம்பிக்கை . உங்கள் முதலீட்டுத் திட்டங்களில் பொறுமை .
பங்குச்சந்தையில் பெரும்பாலான நேரம் சும்மாவேனும் கையைக் கட்டிக் கொண்டிருத்தல் மற்றும் மதிப்பு முதலீட்டு வாய்ப்புகளின் போது செயலாக இருத்தல் கடை முடிவான ஒரு முதலீட்டு உத்தியாகும். ஆனால் எல்லோராலும் இந்த உத்தியைக் கைக்கொள்ள இயலாது . மாறாக வெவ்வேறு காலங்களில் நேரப் பன்மயமாக்கம் செய்வது இதற்கு மாற்றான மற்றும் இலாபகரமான ஒரு உத்தியாகும் .
Excellent write up.keep tight 90 %of the time is really thoughtful and brilliant
ReplyDelete