தாமதமான மனநிறைவு

தாமதமான மனநிறைவு

Delayed Gratification

தாமதமான மனநிறைவு என்பது முதலீட்டு வாழ்க்கையின் முதலாவதும் மற்றும் முக்கியமானதுமான ஒரு மனோநிலையாக கருதப்படுகிறது. பன்மடங்காகக் கூடிய (Multi baggers) ஒரு பங்கை இரண்டு மடங்கானதும் நிறைய பேர் விற்று விடுவதற்கு இந்தத் தாமதமான மனநிறைவு இல்லாமையே அடிப்படைக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. 

HDFC வங்கி 1995ல் ஆரம்பப் பொதுப் பங்கு வெளியிட்டதிலிருந்து நாளது தேதி வரை 1500 மடங்கு முதலீட்டுப் பெருக்கத்தை அடைந்திருக்கிறது. அதாவது நீங்கள் பத்து ரூபாய் முதலீடு செய்திருந்தால் உங்களிடம் இப்போது 1500 பத்து ரூபாய்கள் இருப்பதாக அர்த்தம். 2018 ஆம் ஆண்டிற்கான ஈவுத்தொகை (dividend) ஒரு ரூபாய் முக மதிப்பைக் கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூபாய் 7.50/- (கடந்த இரண்டு வருடங்களாக வங்கி , covid 19 காரணமாக பங்காதாயம் வழங்கவில்லை) அதாவது நீங்கள் முதன்முதலில் முதலீடு செய்த பத்து ரூபாய்க்கு 750 சதவீதம் பங்காதாயம். வேறு மாதிரி சொல்வதானால்  உங்கள் முதலீட்டு மதிப்பைப் போல் ஏழரை மடங்கு ஒரு வருடத்திற்கான பங்காதாயமாகக் கிடைத்திருக்கிறது. HDFC வங்கி நமது நிரந்தர வைப்புத் தொகைகளுக்குக் கொடுக்கக்கூடிய 8 சதவீத வட்டியுடன் இந்த 750 சதவீதத்தை ஒப்பிட வேண்டுகிறேன். பங்குச்சந்தையின் பற்பல மாயவித்தைகளில் இதுவும் ஒன்று. 

பட்டியலிடப்பட்ட போது HDFC வங்கிப் பங்கை 40 ரூபாய்க்கு விற்றவர்கள் தங்கள் முட்டாள்தனத்தைச் சபித்துக் கொண்டிருக்கலாம். இலாபமீட்டுவதன் மூலமாக யாரும் நஷ்டமடைய முடியாது என்பது பங்குச்சந்தையின் முட்டாள் மொழிகளில் ஒன்று. 

பங்குச்சந்தையில் வெற்றி பெற பணமோ, முதலீட்டு இலாபமோ முக்கியமில்லை. தாமதமான மனநிறைவு, பொறுமை போன்ற மனோநிலைகள் தான் முக்கியப்பங்கை வகிக்கின்றன. 

கூட்டு வட்டி உலகின் எட்டாவது அதிசயம் என்று அழைக்கப்படுகிறது. அதன் மாயாஜாலம் முதலீட்டுக்காலத்தின் பிற்பகுதியில் தான் தொடங்கும். அல்லி மலர்கள் குளத்தை மூடும் கதையை நீங்கள் கேள்விப்பட்டதில்லையா? ஒரு குளத்தில் பூத்திருக்கும் அல்லி மலர்கள் தின அளவில் இரட்டிப்பான வண்ணம் இருக்கின்றன. ஒரு கட்டத்தில் பாதிக் குளத்தை அல்லி மலர்கள் மூடி விட்டன. மீதிக் குளத்தை மூட எத்தனை நாட்களாகும்? பதில்: ஒரே ஒரு நாள். அது தான் கூட்டுப் பெருக்கத்தின் மகத்துவம்

முதலீடு மட்டுமல்ல, ஒரு சாதாரண நடைப்பயிற்சியை எடுத்துக் கொள்ளலாம். அதன் பலனைக் கண்கூடாக காண நீங்கள் பல்லாண்டுகள் நடக்க வேண்டும். முதல் சில ஆண்டுகளில் அதன் பலன் நீங்கள் உணரவே முடியாத அளவுகளில் தான் இருக்கும். உடனே பெரும்பாலோனோர் நடைப்பயிற்சியை நிறுத்தி விட்டு ஓடுபொறியில் (treadmill) ஓடத் தொடங்கி விடுவார்கள். அதுவும் இதே கதை தான். பிரச்னை நடைப்பயிற்சியிலோ ஓடுபொறியிலோ இல்லை. அது உங்கள் மனோநிலை சார்ந்து இருக்கிறது. 

இன்னும் சிலர் உடம்பு சரியில்லை என்று ஆங்கில மருத்துவம் எடுத்துக் கொள்வார்கள். பிறகு சித்த மருத்துவம், பிறகு ஓமியோபதி... இன்னும் சிலர் மருத்துவரையே மாற்றி விடுவார்கள். நீங்கள் ஏதாவது ஒரு மருத்துவ முறையையோ அல்லது ஒரு மருத்துவரையோ நம்பி, தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டால் தான் அந்த மருத்துவ முறையின் நன்மைகளை அடைய முடியும். 

பங்குச்சந்தையில் சிலர் மதிப்பு (value) முதலீடு, வளர்ச்சி (growth) முதலீடு, வேக (momentum) முதலீடு என்று சட்சட்டென்று தங்கள் முதலீட்டு உத்திகளை மாற்றிய வண்ணம் இருப்பார்கள். பங்குச்சந்தையில் சி(ப)ல நேரம் மதிப்பு முதலீடு கை கொடுக்கும். சில நேரம் வளர்ச்சி முதலீடு, சில நேரம் வேக முதலீடு என்று கை கொடுக்கும் கைகள் மாறிக் கொண்டேயிருக்கும். நாம் ஏதாவது ஒரு உத்தியைக் தொடர்ந்து கையாண்டால் தான் அதன் சாதக பாதகங்களை உணர முடியும். இல்லையேல் மதிப்புச் சந்தையில் வளர்ச்சி உத்தியையும், வளர்ச்சிச் சந்தையில் வேக உத்தியையும் கையாண்டு எப்போதும் ஒரு தோல்விப் பாதையிலேயே பயணிக்க வேண்டியதாகி விடும். 

முதலீட்டுக் கூட்டுப் பெருக்கம் மாதிரி அறிவின் கூட்டுப் பெருக்கமும் பல்லாண்டுகளின் பயிற்சிக்குப் பின்னர் தான் பலன் கொடுக்கும். மதம் சார்ந்த நம்பிக்கை மாதிரி நீங்கள் ஒரு பழக்கத்தை தவம் மாதிரி கைக்கொண்டு வந்தால் ஒரு நாள் நீங்கள் ஒரே இரவு வெற்றியாளராகி (overnight success) விடுவீர்கள். ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்  அவரது இளம் வயதில் கொஞ்ச நாட்கள் அச்சுக்கலை (typography) பயின்றது பின்னாட்களில் Macintosh கணினிக்கான எழுத்துரு (font) க்களை வடிவமைக்க உதவியது. வாழ்க்கையில் படித்துக் கெட்டவர்கள் என்று யாருமேயில்லை. எல்லாம் சரி, தாமதமான மனநிறைவை எப்படி வளர்த்துக் கொள்வது? பயணத்தை நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14