கூட்டுப்பெருக்கக் கதைகள்

கூட்டுப்பெருக்கக் கதைகள்

இந்த ஒப்பந்தம் எங்கு எப்போது நடந்தது என்று தெரியாது. நடக்காமலே கூட இருக்கலாம். அதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த ஒப்பந்தம் மெய்யோ பொய்யோ ஆனால் படிக்கச் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது மட்டும் உறுதி. ஒரு கோடீஸ்வரர் மிகவும் மனமகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார். தன் மகிழ்ச்சியை மனைவியுடன் பகிர்ந்து கொண்டார். பணக்காரர்கள் தான் மென்மேலும் பணக்காரர்கள் ஆவார்கள் என்பது உண்மை தான். அந்த மாதிரியான ஒரு அதிர்ஷ்டம் நமக்குக் கிடைத்திருக்கிறது. இன்று ஒருவரைச் சந்தித்தேன். நான் ஒரு கோடீஸ்வரர் என்பதைத் தெரிந்து கொண்டு அவர் என்னுடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டார். அது என்னவென்றால், அவர் தினமும் எனக்கு ஒரு இலட்சம் ரூபாய் தருவார். நான் பதிலுக்கு அவருக்கு முதல் நாள் ஒரே ஒரு பைசா, இரண்டாம் நாள் இரண்டு பைசா, மூன்றாம் நாள் நான்கு பைசா, பின் எட்டு... இவ்வாறாக முப்பது நாட்களும் தரவேண்டும். என்ன ஒரு இலாபகரமான ஒப்பந்தம்! நாளைக்கு அவர் வருவாரா என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. அவர் சந்தேகப்பட்டிருக்க வேண்டாம். மறுநாள் காலை கோடீஸ்வரர் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. அந்த ஒப்பந்தக்காரர் ஒரு இலட்சம் ரூபாயைக் கொடுத்து விட்டு பதிலுக்கு ஒரு பைசாவை வாங்கிச் சென்றார். இந்த மாதிரி இன்னும் இரண்டு ஒப்பந்தங்கள் போட்டுக் கொண்டால் நான் வெகுவிரைவில் வாரன் பஃபெட் ஆகி விடலாம் என்பதாகக் கோடீஸ்வரர் மனக்கோட்டை கட்டிக் கொண்டார். ஒரு வாரம் கழிந்து விட்டது. இது வரை கோடீஸ்வரர் கொடுத்த பணம் 1+2+4+8+16+32+64= 1 ரூபாய் 27 பைசா. ஆனால் அவர் பெற்றுக் கொண்டதோ ஏழு இலட்சம் ரூபாய்கள். ஒப்பந்தத்தை இன்னும் கொஞ்ச காலம் நீட்டித்துக் கேட்டிருக்கலாமோ என்று கோடீஸ்வரர் வருத்தப்பட்டுக் கொண்டார். 19 நாட்கள் கழிந்து விட்டன. கோடீஸ்வரர் இது வரை மொத்தமாக 5000 ரூபாய்கள் கொடுத்திருக்கிறார். ஆனால் அவர் பெற்றுக் கொண்டதோ 19 இலட்சம் ரூபாய்கள். இருபதாவது நாள் ரூபாய் 5242.88 கொடுக்க வேண்டி வந்தது. நாட்கள் செல்லச் செல்ல அவர் கொடுக்க வேண்டிய தொகைகள் மென்மேலும் அதிகரித்த வண்ணம் இருந்தன. 25ஆம் நாள் அவர் கொடுத்தது ரூ.167772.16 கடைசி 5 நாட்கள் அவர் கொடுத்த தொகைகள் அவரை ஓட்டாண்டியாக்கி விட்டன. 30வது நாள் மட்டும் அவர் கொடுத்தது 5368709.12 மொத்தமாக அவர் கொடுத்தது கிட்டத்தட்ட ஒரு கோடி. 

MLM லும் அடிப்படையாக இதே தான் நிகழ்கிறது. ஒருவர் நான்கு நபர்களைச் சேர்க்க வேண்டும். அந்த நால்வர் இன்னும் நால்வரை ... கடைசியில் கீழ்க்கண்ட பிரமிடு மாதிரி வளர்ந்து விடும். அது சிறிய ஊராக இருந்தால் எட்டாம் வரிசையிலேயே நிறைவு நிலையை எட்டி விடும். அந்த ஊரில் MLM விற்பனையாளர்கள் மட்டும் தான் இருப்பார்களேயன்றி வாங்குவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.

                         1

                         4

                        20

                       100

                       500

                      2500

                     12500

                     62500

இரண்டு எதிர்மறை உதாரணங்கள் பார்த்து விட்டோம். இனி ஒரு நேர்மறை உதாரணம். கோல்கெட் நிறுவனத்தின் 100 பங்குகளை ஒருவர் 1978ல் அதன் IPOல் 2500 ரூபாய்க்கு வாங்கி இன்றைய தேதி வரை வைத்திருப்பதாக ஒரு கணக்கு.

1978- IPO - 100

1982- 1:1 bonus- 200

1985- 1:1 bonus- 400

1987- 1:1 bonus- 800

1989- 1:1 bonus- 1600

1991- 1:1 bonus- 3200

1993- 3:5 bonus- 5120

2015- 1:1 bonus- 10240

ஒரு பங்கின் விலை இன்றைய நிலவரப்படி  1700 ரூபாய். மொத்தப் பங்குகளின் மதிப்பு 1.7 கோடி ரூபாய்கள். ஆரம்ப முதலீடான 2500 ரூபாய் 6963 மடங்காகப் பல்கிப் பெருகியிருக்கிறது. 2021 ஆம் வருடத்திற்கான பங்காதாயம் மட்டும் ரூபாய் 3.89 இலட்சம் .

பங்கு ஈட்டு விகிதம் ஆரம்ப முதலீட்டிற்கு 15564 சதவீதம். வங்கி உங்கள் நிரந்தர வைப்பு முதலீட்டிற்குக் கொடுக்கும் 8 சதவீத வட்டியுடன் இதை ஒப்பிட்டுப் பாருங்கள். 

கூட்டுப் பெருக்கக் கதைகளிலேயே என் மனதைக் கவர்ந்த , நற்செயல் ஒன்றின் கூட்டுப் பெருக்கத்தைக் கூறும் உண்மைக் கதை ஒன்றுடன் இந்தப் பதிவை முடிக்கிறேன். 

1917 ஆம் வருடம். முதல் உலகப் போர் முடிந்த அந்த தருணத்தில் அமெரிக்கச் சிப்பாய் ஒருவன் வழி தவறி எதிரி நாடான ஜெர்மனியில் மாட்டிக் கொள்கிறான். ஜெர்மானிய யூதர் ஒருவர் அவனை வரவேற்று தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அன்றிரவு அவர் வீட்டில் ஒரு எளிய உணவை உட்கொள்கிறான். அந்த சிப்பாய் அமெரிக்கா திரும்பியவுடன் அவருடைய விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதுகிறான். காலம் உருண்டோடுகிறது‌. 1938 ஆம் வருடம். அந்த யூதரின் மகள் மற்றும் மகளின் மூன்று குழந்தைகள் ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிரான தாக்குதலில் நிலைகுலைந்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கையில் அவரின் பதினோரு வயதுப் பேரன், தாத்தாவின் அலமாரியிலிருந்து அமெரிக்க தபால்தலை ஒட்டப்பட்ட அந்த சிப்பாயின் கடிதத்தை எடுத்து அம்மாவிடம் கொடுக்க அம்மாவிற்கு மின்னலாக ஒரு யோசனை தோன்றுகிறது. அந்த சிப்பாய்க்கு அவர்கள் நிலைமையைச் சொல்லி எவ்வாறேனும் உதவ முடியுமா என்று கேட்க முடிவெடுக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக அனுப்பியவர் முகவரி அதில் இல்லை. வெறுமனே அந்த சிப்பாயின் பெயர் மற்றும் ஊரை எழுதி கடிதம் ஒன்றை அனுப்புகிறார்கள். அதிர்ஷ்டவசமாக அந்த சிப்பாய் அமெரிக்காவில் ஒரு பெரிய தொழிலதிபராக வளர்ந்திருக்கிறார். நம்ம ஊர் முகேஷ் அம்பானி, மும்பை என்பதாக ஒரு கடிதம் எழுதினால் அது அம்பானியை அடைந்து விடுவது மாதிரி கடிதம் அவரை அடைந்து விடுகிறது. மறு விமானத்தில் அந்த சிப்பாய் அவர்களை அமெரிக்காவிற்கு அழைத்துக் கொள்கிறார்‌. எந்த வித பிரதிபலனும் எதிர்பாராமல் செய்யப்பட்ட ஒரு சிறிய நற்செயல் 21 வருடங்கள் கழித்து விலைமதிப்பற்ற ஒரு பொக்கிஷத்தைத் திரும்பத் தந்திருக்கிறது. 

நல்ல மனிதனுடைய வாழ்க்கையில் சிறந்த பகுதி எதுவென்றால், அவன் அவ்வப்போது அன்புடன் சிறுசிறு செயல்களைச் செய்வது தான். அவை அற்பமானவையாகவும், குறிப்பிட முடியாதவையாகவும், நினைவில் வைத்துக் கொள்ள இயலாதவையாகவும் இருக்கும் என்று வேர்ட்ஸ்வொர்த் ஏற்கெனவே கூறியிருக்கிறார். 


குறிப்புதவிய நூல்கள்: 

1. Mathematics can be fun- Yakov Perelman

2. Psychology of wealth_

Charles Richards

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14