பங்குச்சந்தை பதில்கள்- 16
பங்குச்சந்தை பதில்கள்- 16
கேள்வி: உலகப் பங்குச்சந்தைகளின் எதிர்காலப் போக்கு என்னவாக இருக்கும் என்று கணிக்க முடியுமா?
பதில்: இன்றைய சூழ்நிலையில் மட்டுமல்ல, எந்த சூழ்நிலையிலும் பொருந்துவதான ஒரே கணிப்பு: எதிர்பாராததை எதிர்பாருங்கள்!
கேள்வி: ஒரு காளைச்சந்தையில் முதலீட்டு வெளிச்சத்தில் இருக்கும் சில துறைகள் அடுத்த காளைச்சந்தையில் பங்கேற்காது என்பது உண்மையா? எனில் அத்தகைய துறை சார்ந்த நிறுவனப்பங்குகளை விற்று விட வேண்டுமா?
பதில்: பங்குச்சந்தை முதலீடுகளில் வெற்றி பெற உடைமை மனப்பான்மை (ownership mentality) கொள்வது அடிப்படையான ஒன்று. வாகன உதிரி பாகங்கள் (Auto ancillary) துறை முதலீட்டு வெளிச்சத்தில் இருக்காது என்று Samvardhana Motherson International நிறுவனர் அதன் பங்குகளை விற்று விடுவாரா? Samvardhana Motherson International (Formerly Motherson Sumi Systems) நிறுவனப்பங்குகள் அதன் IPO விலிருந்து நாளது தேதி வரை 30 சதவீத CAGR கொடுத்திருப்பது இங்கே கவனம் பெறுகிறது.
கேள்வி : ஒருவர் தனது வருமானத்தில் எத்தனை சதவீதம் சேமிக்க வேண்டும்?
பதில் : (பங்கு) முதலீடுகள் மூலமாக நமக்குக் கிடைக்கப்பெறும் வருமானம் என்பது நமது கையில் இல்லை. ஆனால் நமது வருமானத்தில் எத்தனை சதவீதத்தைச் சேமிக்க வேண்டும் என்பது நமது கையில் இருக்கிறது. அதனை உயர் விகிதங்களில் அமைத்துக் கொள்வது சாலச் சிறந்தது.
கேள்வி: ஏன் முதலீடு என்றாலே சிலருக்குக் கசக்கிறது? அப்படி முதலீடு செய்பவர்களும் பத்தோடு பதினொன்றாக அதனை மேற்கொள்வது ஏன்?
பதில்: முதலீடு என்பது நிகழ்காலப் பணத்தை எதிர்காலத்திற்குக் கொண்டு செல்வது. அது அடிப்படையில் தாமதமான மனநிறைவு கொள்வது. எதையும் தாமதமாகப் பெறுவது பெரும்பாலானவர்களுக்குப் பிடிப்பதில்லை.
கேள்வி: எனது நண்பர் ஒருவர் பங்குச்சந்தையில் எப்போதும் நஷ்டமே இல்லாமல் இலாபத்தைப் பெறுவதற்கான முதலீட்டு வழிமுறை ஒன்று அவரிடம் இருப்பதாகக் கூறுகிறார். அதனை நம்பி முதலீட்டை மேற்கொள்ளலாமா?
பதில்: அவருடைய முதலீட்டு வழிமுறையே உங்களை வைத்து இலாபம் பெற முயல்வது தான்.
கேள்வி: எவ்வளவு கஷ்டப்பட்டு பணம் சேமித்தாலும் பணவீக்கத்தின் காரணமாக எதிர்காலத்தில் கோடிகளின் மதிப்பு இலட்சங்களாகக் குறைந்து விடும். பின்னர் எதற்காகச் சேமிக்க வேண்டும்?
பதில்: அதற்காகத் தான் சேமிக்க வேண்டும். இலட்சங்களாவது கையில் மிஞ்சும்.
கேள்வி: Circle of competence க்கு உட்பட்டு பங்குகளை வாங்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். நிறைய துறைப் பங்குகளை வாங்க வேண்டும் என்றும் கூறுகிறீர்கள். இது எப்படி சாத்தியமாகும்?
பதில்: திறமை வளையத்திற்கு உட்பட்டுப் பங்குகளை வாங்க வேண்டும். நாட்பட திறமை வளையத்தைப் பெரிதுபடுத்தவும் வேண்டும்.
கேள்வி : Only buying almost no selling- இது சரியான உத்தி தானா?
பதில்: நான் அரிதினும் அரிதாகத் தான் பங்குகளை விற்பேன். அப்படி விற்ற பல பங்குகள் இன்று பன்மடங்காளர் ஆகி விட்டன. பங்குகளை வாங்க மட்டுமே வேண்டும், விற்கக்கூடாது என்ற உத்தி சரியானது.
கேள்வி: நல்ல செய்தி வருகிறது, சந்தை சரிகிறது. கெட்ட செய்தி வருகிறது, சந்தை உயர்கிறது. இது ஏன்?
பதில்: சந்தை எப்போதும் பொருளாதாரத்திற்கு ஒரு படி முன்னதாகச் செல்லும். அந்த வகையில் பொருளாதாரம் ஒரு உச்சநிலையை எட்டியிருக்கும் போது தவிர்க்க முடியாமல் அதன் பின்னர் வரவிருக்கும் பொருளாதார மந்தம் மற்றும் வீழ்ச்சியை இனங்கண்டு சந்தை சரியும். அதே மாதிரி பொருளாதாரம் தரை தட்டும் போது சந்தை அதனை இனங்கண்டு பின்னர் வரவிருக்கும் முன்னேற்றங்களுக்குத் தக்கவாறு தங்களைத் தகவமைத்துக் கொள்ளும்.
கேள்வி: பங்குச்சந்தையில் இலட்சம் கோடிகளில் நஷ்டம் என்பதாக அன்றாடம் செய்தி வருகிறது. முதலீடு செய்ய அச்சமாக இருக்கிறது?
பதில்: இந்த மாதிரி செய்திகள் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து வருகின்றன. இதற்கு நடுவில் தான் சென்செக்ஸ் 100 என்ற புள்ளியிலிருந்து ஆரம்பித்து தற்போது 75000 என்ற புள்ளியில் நிலை கொண்டுள்ளது.
Comments
Post a Comment