மூடுபனி முதலீடு
மூடுபனி முதலீடு
மூடுபனியில் தன் அஸ்திவாரத்தைக் கட்டிய இந்திய நிறுவனம் ஒன்றைக் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம் .
கணினிகளின் ஆரம்ப காலம் அது . இப்போது மாதிரி உள்ளங்கையில் உலகமான திறன்பேசியை அது ஒத்திருக்கவில்லை . அப்போதைய கணினி , சின்ன அறை ஒன்றின் அளவில் இருந்தது . அதன் செயல்பாட்டு வேகமோ மிகவும் குறைவாக இருந்தது . கணினிக்கான செலவை விட வரி வகையறாக்களுக்கு ஆன செலவு அதிகம் . அந்நியச்செலாவணிக் கட்டுப்பாடுகள் தனி . டாலர்களில் பணம் கொடுத்துக் கணினிகளை வாங்குவது கொடுங்கனவாக இருந்தது . இவை போதாதென்று அரசாங்கத்தின் சிவப்பு நாடா கழுத்தை இறுக்குவதாக இருந்தது .
Moore's law பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் . ஒவ்வொரு வருடமும் கணினியின் ஆதார சுருதியான சிலிக்கன் சில்லுகளின் ஆற்றல் இரட்டிப்பாகும் . அதன் விலை பாதியாகக் குறையும் . இந்த Moore's law அதன் வேலையை முழு வீச்சில் இன்னமும் தொடங்கியிருக்கவில்லை .
இணையம் அப்போது ஆமை வேகத்தில் இயங்கியது .
இந்த சூழலில் நிறுவனம் , அமெரிக்காவில் ஆரம்பித்து உலகம் முழுவதும் தன் கிளைகளைத் திறந்தது . அயலாக்கம் என்று சொல்லப்படும் outsourcing ஐ அப்போதே செய்யத் தொடங்கியிருந்தது . CD என்று சொல்லப்படுகிற குறுந்தகட்டை விமானம் மூலம் அனுப்பி அது இத்தகைய வேலைகளைச் செய்தது .
நிறுவனம் தனிப்பட்ட முறையில் (private entity) எதிர்நீச்சல் போட்டு இவ்வாறு வளர்ந்து வருவது பொதுவெளியில் யாருக்கும் தெரியாது .
இந்த சூழ்நிலையில் நிறுவனம் அதன் முதல் பொது வெளியீட்டுக்கும் அவசரம் கொள்ளவில்லை . அது நினைத்திருந்தால் 2000 ஆவது ஆண்டில் IT குமிழி வெடிப்பதற்கு முன்னர் உயர் விலை-வருவாய் விகிதங்களில் அதன் பங்குகளை வெளியிட்டிருக்கலாம் . குறைவான பங்குகளை விட்டுக் கொடுத்து நிறைய நிதியைத் திரட்டியிருக்கலாம் . ஆனால் அந்தக் குழுமம் மதிப்பின் மறு உருவமாக இருந்தது . நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டாலும் சரி , பட்டியலிடப்படாவிட்டாலும் சரி அல்லது குறை மதிப்பில் பட்டியலிடப்பட்டிருந்தாலும் சரி அது தரமான நிறுவனமாக இருந்தால் , மதிப்பு என்பது உருவாகிய வண்ணமாகவே இருக்கும் . அந்த நிறுவனத்தலைவர் கூறுகிறார் : 2000 ஆவது ஆண்டில் எங்கள் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிட்டிருந்தால் நிறுவனத்திற்குக் கூடுதல் பணம் கிடைக்கப் பெற்றிருக்கும் என்பது உண்மை தான் . ஆனால் இதனைப் பங்கு முதலீட்டாளர்களின் கோணத்திலிருந்து பாருங்கள் . எவ்வாறேனும் இந்தத் தகவல் தொழில்நுட்பக்குமிழி உடையத் தான் போகிறது . அப்போது பங்குகளின் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் . கடைசியில் முதலீட்டாளர்களுக்கு இந்த இடைப்பட்ட காலத்திற்கான பங்காதாயம் மட்டுமே மிஞ்சும் . அதனை நாங்கள் விரும்பவில்லை .
அந்த நிறுவனம் Tata Consultancy Services . அந்த நிறுவனத்தலைவர் ரத்தன் டாடா . அது நிறுவப்பட்ட ஆண்டு 1995 என்றாலும் நிறுவனம் 1968 ஆம் ஆண்டிலேயே செயல்படத் தொடங்கி விட்டது . அப்போது அதனைக் கட்டமைத்தவர் F.C.Kohli . அதன் முதல் பொது வெளியீடு 2004 ஆம் ஆண்டு வெளி வந்தது . நிறுவனம் 11.59 சதவீதப் பங்குகளை விற்று 4713 கோடி ரூபாயைத் திரட்டிக் கொண்டது . அப்போதைய அதன் சந்தை மதிப்பு ரூபாய் 47232 கோடி . தற்போதைய சந்தை மதிப்பு 1500000 கோடி . சமீபத்தில் அதன் 0.65 சதவீதப் பங்குகளை QIP முறையில் விற்று அது 9000 கோடி ரூபாயைத் திரட்டிக் கொண்டது . முதல் பொது வெளியீட்டின் 11.59 சதவீதம் 4713 கோடி . தற்போதைய QIP ன் 0.65 சதவீதம் 9000 கோடி . இந்த இடைப்பட்ட காலத்தில் நிறுவனம் எவ்வளவு மதிப்பை உருவாக்கியிருக்கிறது என்று கவனிக்க வேண்டுகிறேன் . தற்போது நிறுவனத்தில் நிறுவனர் பங்கு 71.73 என்ற அளவில் உள்ளது . இவ்வாறு ஒரு துறையையே நிறுவனம் கட்டமைத்தது .
நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற , நெறிமுறைகள், மதிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் , அறவழியில் , முன்னுதாரணமாகச் செயல்படும் நிறுவனங்களைப் பேணிப் பாதுகாத்து , அவற்றை வளர்த்து , இத்தகைய நிலையான நிறுவனங்களை விட்டுச் செல்வதை தன் கடமையாகக் கருதினார் ரத்தன் டாடா . அந்த வகையில் 1991 ஆம் ஆண்டு முதல் 2012 வரை அவர் டாடா குழும நிறுவனத்தலைவராகப் பணியாற்றிய காலகட்டத்தில் டாடா நிறுவனங்களின் சந்தை மதிப்பு 30000 கோடியிலிருந்து 5 இலட்சம் கோடியாக அதிகர்த்தது . டாடா நிறுவனங்களின் இன்றைய சந்தை மதிப்பு 30 இலட்சம் கோடி .
டாடா நிறுவனங்களின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான நிகர இலாபம் 49000 கோடி . டாடா சன்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படவில்லை . ஒரு ரூபாய் கூட நிகர இலாபம் ஈட்டாத நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடவும் , பணத்தைக் கைப்பற்றவும் அவசரம் கொள்ளும் போது கோடிகளில் இலாபமீட்டும் நிறுவனம் தனிப்பட்ட முறையில் இயங்க விரும்புவது விந்தையான ஒன்று தான் . அதற்கெல்லாம் பெரிய மனசு வேண்டும் .
இந்த உதாரணத்தின் மூலமாக நாம் கற்க வேண்டிய பாடம் என்ன ? முதலாவது பாடம் , சந்தை , மூடுபனியில் இருக்கும் போது தான் நாம் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும் . நன்றாக வெளிச்சம் வந்து எல்லாம் துலாம்பரமாகத் தெரியும் போது பங்கின் விலைகள் வானளாவ உயர்ந்து விடும் . By the time the smoke has lifted , the (value) train has left the station . பனி விலகும் போது (மதிப்பு) இரயில் , நிலையத்தை விட்டுக் கிளம்பியிருக்கும் .
பங்குச்சந்தையைப் பொறுத்தவரை இந்த மூடுபனி வாய்ப்புகள் கரடிச்சந்தையில் மீண்டும் மீண்டும் கிடைக்கப் பெறுகின்றன . தரமான நிறுவனம் ஒன்று தற்காலிகமான பிரச்னை ஒன்றில் சிக்கித் தவிக்கும் போதும் இத்தகைய வாய்ப்புகள் முகிழ்த்தெழுகின்றன .
இரண்டாவது பாடம் பணத்தின் மேல் காதல் கொண்டு பங்குச்சந்தை முதலீட்டை மேற்கொள்ளாதீர்கள் . மகிழ்ச்சியை நேரடியாக அடைய முடியாது . அதே மாதிரி பணத்தையும் நேரடியாக அடைய முடியாது . பணம் என்பது துணை விளைபொருள் மட்டுமே . டாடா குழுமம் அற வழியில் செயல்படுகிறது . அதற்கான துணை விளைபொருளே கோடிகளிலான அதன் சந்தை மதிப்பு .
ரத்தன் டாடா
தோற்றம் : 1936
மறைவு : 2024
Comments
Post a Comment