அதிர்ஷ்டத்திற்குத் திட்டமிடுவது எப்படி ?
அதிர்ஷ்டத்திற்குத் திட்டமிடுவது எப்படி ?
How to get lucky என்ற புத்தகத்தில் Max Gunther எடுத்துரைக்கும் ஒரு கருத்தாக்கம் : அதிர்ஷ்டம் வேறு , திட்டமிடல் வேறு . அதிர்ஷ்டத்தைத் திட்டமிடல் என்று கொள்வது ஆபத்தை விளைவிக்கும் .
இந்தக் கருத்தைச் சிறிய ஒரு உண்மைக்கதையின் மூலம் அவர் விளக்குகிறார் . சூதாட்ட வட்டில் (Roulette wheel) பணம் கட்டி வெற்றி பெற பெண்மணி ஒருவர் ஒருங்கமைவு (system) ஒன்றைக் கண்டறிகிறார் . அது என்னவென்றால் , சூதாட்ட வட்டு குறிப்பிட்ட ஒரு எண்ணில் நிற்கும் என்பதாகப் பந்தயம் கட்டுகையில் பந்தயத்தில் தோற்றால் பந்தயப் பணத்தை இரட்டிப்பாக்கி அதே எண்ணில் மீண்டும் கட்டுவது . தோற்றால் மீண்டும் ... இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நீங்கள் இழந்த பணத்தை மட்டுமின்றி பெரும் பணத்தையும் ஒரு கட்டத்தில் சம்பாதித்து விடலாம் . இந்த ஒருங்கமைவைக் கொண்டு முதல் நாள் அந்தப் பெண்மணி சூதாட்டத்தில் வெற்றி பெறுகிறார் . மறுநாளும் வெற்றி . மூன்றாம் நாள் ஆகப்பெரிய அளவிலான பணத்தைப் பந்தயமாகக் கட்டி அதைத் தொடர்ந்து இரட்டிப்பாக்க முனைகையில் ஒருங்கமைவு வேலை செய்யவில்லை . என்னவாயிற்று ஒருங்கமைவுக்கு ? சூதாட்ட வட்டில் வெற்றி பெறும் எண்கள் சீரற்ற முறையில் (random) வருபவை மட்டுமே . ஒவ்வொரு முறை பந்தயம் கட்டும் போதும் தொடர்ந்த வாக்கில் நீங்கள் தோற்றால் ஒரு கட்டத்தில் பந்தயம் கட்ட உங்களிடம் பணம் இருக்காது . சூதாட்ட நிலையங்கள் பந்தயப் பணத்திற்கு உச்சபட்ச அளவு நிர்ணயித்திருப்பதையும் இங்கே கணக்கில் கொள்ள வேண்டும் . மேலும் சூதாட்டத்தில் எப்போதும் சூதாட்ட நிலையங்கள் தான் வெற்றி பெறும் என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ளவும் . முதல் இரண்டு நாட்கள் அவர் பெற்ற வெற்றி அவருடைய திட்டமிடல் மூலமாக வந்தது அல்ல . அது குருட்டு அதிர்ஷ்டம் . ஆக , அதிர்ஷ்டம் வேறு . திட்டமிடல் வேறு .
பங்குச்சந்தையில் இதன் பாதிப்புகளைப் பார்க்கலாம் . பொதுவாகப் பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் காளைச்சந்தையினால் கவரப்பட்டு சந்தை முதலீடுகளை மேற்கொள்வார்கள் . கரடிச்சந்தை மாதிரியில்லாமல் காளைச்சந்தையில் நாம் தொட்டதெல்லாம் துலங்கும் . நாம் வாங்கிய பங்குகள் அனைத்தும் பன்மடங்காளர் ஆகி விடும் . முதல் பொது வெளியீடுகளில் முதலீடு செய்து பட்டியல் விலையில் வெளியேறி பணத்தை இரட்டிப்பாக்கலாம் . இதன் பின்னால் உங்கள் திட்டமிடல் எதுவுமில்லை . இது வெறும் அதிர்ஷ்டம் என்பதை நினைவில் கொள்ளவும் . சூதாட்ட வட்டுப் பெண்மணி மாதிரி நீங்கள் F & O ல் பெற்ற இரட்டிப்புப் பணத்தை மறுபடி F & O வில் போட்டால் அதிர்ஷ்டம் இருக்கும் வரை உங்கள் நிலைப்பாடுகள் பலன் தருவதாக இருக்கும் . மாறாக நிலைத்து நிற்கும் நிறுவனப் பங்குகளை வாங்கி வைத்தல் சரியான ஒரு ஒருங்கமைவாக இருக்கும் .
கதை சொல்லி வெகு காலம் ஆகி விட்டது . க.நா.சு மொழி பெயர்த்த ஐரோப்பியச் சிறுகதை (எழுதியவர் : பெடோர் ஸோலோகம் - ரஷ்யா) ஒன்றுடன் இந்தப் பதிவை நிறைவு செய்யலாம் .
நகரில் கப்பிரோடு ஒன்று இருந்தது . அதன் மேல் வேகமாகப் போன வண்டியின் சக்கரம் ஒன்று ஒரு நாள் ஒரு கப்பிக்கல்லைப் பெயர்த்து உருட்டி விட்டுப் போய் விட்டது . அந்தக் கப்பிக்கல் தனக்குள் சொல்லிக்கொண்டது . என்னைப் போன்ற மற்றவர்களுடன் பிணைக்கப்பட்டு நான் இப்படி ஒரே இடத்தில் கிடப்பானேன் ? நான் தனியாகவே வாழ்ந்து பார்க்கிறேன் .
தெருவோடு போன ஒரு பையன் அந்தக் கல்லைத் தன் கையில் எடுத்துக் கொண்டான் .
கல் தனக்குள் சொல்லிக் கொண்டது . நான் பிரயாணம் செய்ய விரும்பினேன் . பிரயாணம் செய்கிறேன் . தீவிரமாக விரும்பினால் போதும் ; விரும்பியது நடக்கும் .
கல்லை ஒரு வீட்டை நோக்கி எறிந்தான் பையன் . ஹா ! நான் பறக்க விரும்பினேன் ; பறக்கிறேன் . என் விருப்பம் போலவே நடக்கிறது .
ஒரு ஜன்னல் கண்ணாடியில் டண் என்று போய்க் கல் மோதிற்று . கண்ணாடிக் கதவு உடைந்து விட்டது . உடையும் போது கண்ணாடிக்கதவு சொல்லிற்று . போக்கிரி ! நீ என்னடா செய்கிறாய் ?
ஆனால் கப்பிக்கல் பின்வருமாறு பதில் அளித்தது .
நீ என் வழியை விட்டு விலகிக் கொள்வதற்கென்ன ? என் வழியை மறிப்பவர்களைக் கண்டால் எனக்குப் பிடிக்காது . என் சௌகரியத்துக்காகத் தான் எல்லாம் இருக்கிறது . என் வாழ்க்கை வழி அது தான் .
வீட்டில் அறைக்குள்ளிருந்த ஓர் மெத்தையில் போய் விழுந்தது அந்தக்கல் .
இவ்வளவு நேரம் பிரயாணம் செய்ததும் , சுற்றி அலைந்ததும் எனக்கு அலுப்பாக இருக்கிறது . சற்றுநேரம் படுத்து ஓய்வெடுத்துக் கொள்கிறேன் என்று எண்ணிற்று .
ஒரு வேலைக்காரன் வந்தான் . படுக்கையில் கல் கிடப்பதைப் பார்த்தான் . கல்லை எடுத்து ஜன்னல் வழியாகத் திரும்பவும் தெருவிலே தூக்கி எறிந்தான் .
அப்புறம் அந்தக் கப்பிக்கல் தன்னுடைய சகோதரக் கப்பிக் கற்களிடம் கூறிற்று . சகோதரர்களே ! சௌக்கியமா ? நான் இப்போது தான் பெரிய மனுஷனைப் பார்க்க அவனுடைய மாளிகைக்குப் போய்விட்டுத் திரும்பி வந்தேன் . பெரிய மனுஷர்களையும் , பணக்காரர்களையும் எனக்குப் பிடிப்பதில்லை . என்னைப் போன்ற சாதாரண மக்களிடம் தான் எனக்கு உண்மையில் ரொம்பப் பிரியமும் , மரியாதையும் இருக்கிறது . அதனால் நான் திரும்பி விட்டேன் .
நுட்பமாக அறிய வேண்டியது :
1. அதிர்ஷ்டத்தையும் திட்டமிடலையும் பிரித்து இனங்காண்பது அதிர்ஷ்டத்தைப் பெறுவதற்கான ஒரு வழிமுறையாகும் .
2. அதிர்ஷ்டம் வேறு , திட்டமிடல் வேறு . காளைச் சந்தை வேறு , மூளைத் திறமை வேறு . காளையையும் மூளையையும் இடமாறு தோற்றப்பிழை செய்யாதீர்கள் .
3. நிலைத்து நிற்கும் உத்தியைக் கைக்கொள்ளுங்கள் .
Comments
Post a Comment