பழமொழி பதில்கள் - 2
பழமொழி பதில்கள் - 2
கேள்வி : குறியீட்டு நிதிகள் சராசரி வருமானத்தை மட்டுமே தருவதாக இருக்கையில் ஏன் அவற்றில் முதலீடு செய்ய வேண்டும் ?
பதில் : மணிக்கு ஓர் அங்குலமே ஆனாலும் ஒரு நாளைக்கு ஓர் அடியாகும் .
கேள்வி : Futures and Options நிலைப்பாடுகள் ஏன் தொடர்ந்தவாக்கில் பலன் தருவதாக இல்லை ?
பதில் : நெருப்புப் பந்தலிலே மெழுகு பொம்மை ஆடுமா ?
கேள்வி : முதலீடுகளுக்கான வங்கி வட்டி விகிதங்கள் குறைந்து கொண்டே வருகிறது . தனிப்பட்ட முறையில் வட்டிக்கு விடலாமா ?
பதில் : கையால் கொடுத்ததைக் காலால் வாங்க வேண்டும் .
கேள்வி : பங்குத் தொகுப்பைப் பழுது பார்ப்பது குறித்து ?
பதில் : மனிதனால் பராமரிக்கப்பட்ட தோட்டத்தை விட இயற்கையால் பராமரிக்கப்பட்ட காடு செழிப்பாகக் காணப்படுகிறது .
கேள்வி : IPO ல் வாங்கப்பட்ட ஒரு ITC பங்கு 413 பங்குகளாக வளர்ந்திருக்கிறது என்பதாகப் படித்தேன் . இது உண்மை தானா ? பங்குகள் இத்தனை வளர்ச்சிக்கு உள்ளாகுமா ?
பதில் : ஒரு மரத்திலுள்ள கனிகளை எண்ண முடியும் . ஒரு கனியினுள் இருக்கும் மரங்களை எண்ண முடியாது .
கேள்வி : குறுகிய காலத்தில் கூடக் கூடிய பங்குகளை இனங்கண்டு முதலீடு செய்து அவற்றைக் கை மாற்றி விடுதல் எப்படித் தவறாகும் ?
பதில் : ஆறு முறை இருக்கையை மாற்றுவோன் ஆண்டியாவான் .
கேள்வி : பணவீக்கத்தை விட பொருட்களின் விலை குறைவதான பணவாட்டம் நல்லது தானே ?
பதில் : சாமான்கள் கிராக்கியாயிருந்தால் ஒருமுறை அழுபவர்கள் மலிவாயிருந்தால் பலமுறை அழ வேண்டியிருக்கும் .
கேள்வி : மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பண்புகளில் தலையாய ஒன்று என்று எதனைக் கூறுவீர்கள் ?
பதில் : சிக்கனம் இருந்தால் மற்ற நல்ல பண்புகள் யாவும் வந்து விடும் .
சிக்கனத்திற்கு மேலான ரசவாதமில்லை.
கேள்வி : பங்குச்சந்தையில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் ?
பதில் : நடந்து கொண்டே இருங்கள் . பாதை தானாக உருவாகும் .
கேள்வி : வளமையை அடைவதற்கான வழிமுறையில் பயணிப்பது அல்லது வளமையை அடைவது - எதில் அதிக சுவாரஸ்யம் ?
பதில் : மலையுச்சியில் வெறுமை . மலையேற்றமே இனிமை .
Comments
Post a Comment