100 மடங்காளர்கள்

100 மடங்காளர்கள்

100 Baggers


ஒரு நிறுவனப் பங்கு நீங்கள் வாங்கிய விலையிலிருந்து 100 மடங்கு முதலீட்டுப் பெருக்கத்தை அடைவது 100 bagger (சுருக்கமாக 100 x) தமிழில் 100 மடங்காளர் என்று அழைக்கப்படுகிறது . இந்த இலக்கு விலை (Target Price) யுகத்தில் ஒரு பங்கு 100 மடங்கு முதலீட்டுப் பெருக்கத்தை அடையும் வரை காத்திருப்பது முடியாது என்பதற்கு அடுத்ததாகத் தோன்றினாலும் அந்தப் பொறுமையான காத்திருத்தலுக்குப் பெரும் பலன் இருக்கிறது . இந்த மாதிரி ஒரு பங்கின் விலை நீங்கள் வாங்கிய விலையிலிருந்து 100 மடங்கு முதலீட்டுப் பெருக்கத்தை அடையும் போது அந்த நிறுவனம் வருடாவருடம் அளிக்கும் பங்காதாயப் பலன்கள் மூலமாகவே உங்களுக்கான ஒரு பணப்பாய்ச்சல் (cash flow) கிடைக்கப்பெற்று விடும் . முதலீட்டுப் பெருக்கம் (capital appreciation) தனி .


பங்குச்சந்தையில் இந்தப் பன்மடங்காளர்களை அடைவதற்கு சில எளிய வழிகள் இருக்கின்றன . முதலாவது மற்றும் முக்கியமானது மீமிகை கரடிச்சந்தையில் நிறுவனப் பங்குகளை இனங்கண்டு வாங்கி வைக்க வேண்டும் . அது நன்றாக வளர்ச்சி வாய்ப்புகளை அடையக்கூடிய சிறு நிறுவனப்பங்காக இருந்தால் இன்னும் நல்லது . இவ்வாறு வாங்குவது பன்மடங்காளர் பங்குகளைக் கைப்பற்ற ஒரு சாதகமான கட்டமைப்பைக் கொடுப்பதாக இருந்தாலும் கரடிச் சந்தையில் மட்டுமே பங்குகளை வாங்க வேண்டும் , அது சிறு நிறுவனப் பங்காக மட்டுமே இருக்க வேண்டும் என்று கட்டாயம் எதுவும் கிடையாது . இன்னும் சொல்லப்போனால் நமது பங்குச் சந்தையில் ஏராளமான சிறு மற்றும் பெரு நிறுவனப்பங்குகள் பன்மடங்காளர் பங்குகள் என்ற தகுதியை எட்டியுள்ளன . காளைச்சந்தையில் பெரு நிறுவனப் பங்குகளை வாங்கினால் அவை பன்மடங்காளர் ஆக எடுத்துக் கொள்ளும் காலம் வேண்டுமானால் ஒருவேளை அதிகரிக்கலாம் . இவ்வாறு பங்குகளை வாங்கிய பின்னர் ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட புறக்கணிப்பை (Benign neglect) மேற்கொள்ள வேண்டும் . அதன் பங்காதாயப் பலன்களில் கவனத்தைக் குவிக்க வேண்டும் . பங்காதாயம் அவ்வப்போது குறைந்தாலும் அச்ச விற்பனையை மேற்கொள்ளாது அதன் காரண காரணங்களை ஆராய வேண்டும் . நிறுவன விரிவாக்கச் செலவுகள் (capital expenditure) காரணமாகக் கூட பங்காதாயம் குறைந்திருக்கலாம் . இந்த மாதிரி பகுத்துணரும் திறன் , பங்குகளைப் பல்லாண்டுகள் வைத்திருப்பதற்கான பொறுமை , நீண்ட கால நோக்கில் அந்த நிறுவனம் அடையக்கூடிய உயரங்களை மனக்கண்ணில் பார்க்கும் திருஷ்டி போன்ற கல்யாண குணங்களைக் கைக்கொள்ள வேண்டும் . காளைச்சந்தை கரடிச்சந்தை என்று சந்தை ரங்கராட்டினம் கணக்காகச் சுழன்ற வண்ணமாகவே இருக்கும் . Buy right and sit tight . சரியாக வாங்குங்கள் , அடங்கி அமருங்கள் . ரங்கராட்டினம் எவ்வளவு வேகமாகச் சுழன்றாலும் அடங்கி அமர்ந்திருப்பவருக்கு அடிபடாது . சுழன்று கொண்டிருக்கும் ராட்டினத்திலிருந்து  குதிப்பவர்களுக்குத் தான் ஆபத்து .


பங்குகள் ஏன் பன்மடங்காளர் ஆகின்றன ? பங்குகளின் விலையை இரண்டு காரணிகள் தீர்மானிக்கின்றன . ஒன்று , பங்கு ஈட்டும் ஒரு பங்குச் சம்பாத்தியம் (Earnings Per Share) இரண்டு , பங்குகள் ஈட்டும் இந்த ஒரு பங்குச் சம்பாத்தியத்திற்குச் சந்தை கொடுக்கும் விலை (Price Earnings Multiple) இவையிரண்டையும் பெருக்கினால் பங்கின் விலை கிடைத்து விடும் . ஒரே சீராக தொடர்ந்து உயர்ந்து வரும் EPS க்கு சந்தை உயர் அளவிலான PE ஐ வழங்கும் . பங்குகளின் விலை உயர்வுக்கு ஆதாரமான காரணம் இந்த இரண்டு காரணிகளின் பெருக்கம் மட்டுமே .


இந்த மாதிரி 100 மடங்காளரை அடைவது ஒரு முடிவல்ல , அது ஒரு ஆரம்பம் . 100 மடங்கு ஆன நிறுவனத்தின் ஓடுதளத்தை ஆராய வேண்டும் . நிறுவனம் ஓடுவதற்கான தளம் இன்னும் உள்ளதா ? அல்லது நிறுவனம் புதிய பாதைகளில் இலாபகரமான பயணத்தை மேற்கொள்ள இருக்கிறதா ?  விப்ரோ ,  டால்டா தயாரிக்கும் நிறுவனமாகத் தான் தொடங்கப்பட்டது . கணினித் துறையில் கால் பதித்ததும் அப்புறம் நடந்ததும் வரலாறு . இப்போது விப்ரோ 18 இலட்சம் மடங்காளர் . அப்புறம் எப்போது தான் இலாபத்தைப் பிடிப்பது என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது . உங்களுக்குப் பணத்தேவை இருக்கும் போது அதற்கேற்ப பங்குகளை விற்றுக் கொள்ளுங்கள் . இலாபத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காகப் பொன் முட்டையிடும் வாத்தை அறுத்து விட வேண்டாம் . 


இத்தகைய பங்குகளின் பங்காதாயம் மூலமாக முதலில் தூறலாகவும் சாரலாகவும் பின்னர் பெரு மழையாகவும் ஒரு பணப் பொழிவு இருந்த வண்ணமாகவே இருக்கும் . மூன்றே மூன்று பங்குகளை , விப்ரோ நிறுவன IPO வில் வாங்கிய முதலீட்டாளருக்கான , பங்காதாயம் மூலமான தற்போதைய மாத வருமானம் எவ்வளவு தெரியுமா ? கிட்டத்தட்ட ரூபாய் ஒரு இலட்சம் . 1946 ஆம் வருட விப்ரோ IPO ( உண்மைக்) கதை கொஞ்சம் அந்நியமாகத் தோன்றுவதால் இந்த வாரம் என்  கதையையும் கொஞ்சம் கூறி வைக்கிறேன் . 


100 மடங்காளர் குறித்து எழுதுவது வேறு . நாமே 100 மடங்காளரைக் கைப்பிடிப்பது என்பது வேறு . யார் வேண்டுமானாலும் 100 மடங்காளர்கள் குறித்து எழுதி விடலாம் . ஆனால் அத்தகைய பங்குகளை இனங்கண்டு பல்லாண்டுகள் வைத்திருப்பதில் கொஞ்சம் கர்ம பலன்களும் கலந்திருப்பதாகத் தோன்றுகிறது . HDFC வங்கி அதன் IPO விலிருந்து 1500 மடங்கு கூடியிருக்கிறது . அதன் IPO விண்ணப்பம் கையில் கிடைத்தும் அதனை நான் தவற விட்டதை என் முதல் பிழை என்று சொல்லலாம் . நீங்கள் முதலீடு செய்யாத நிறுவனத்தில் நஷ்டக்கணக்கு பார்க்கக்கூடாது . இருந்தாலும் விடுபிழை (Errors of omission) என்ற வகையில் அது முக்கியத்துவம் பெறுகிறது .  செய்பிழை (Errors of commission) என்ற வகையில் நான் Shriram Transport நிறுவனத்தின் 500 பங்குகளை 10 ரூபாய்க்கு வாங்கி 130 ரூபாய்க்கு விற்று வைத்ததைச் சொல்லலாம் . இன்று அந்த நிறுவனப்பங்கு ஒரு பன்மடங்காளர் . அந்த வகையில் என்னுடைய முதல் 100 மடங்காளர் ஆகிய ஐசிஐசிஐ வங்கிப் பங்கு குறித்துப் பார்க்கலாம் . 


1997 ல் ஐசிஐசிஐ வங்கியின் முதல் பொது வெளியீடு முக மதிப்பு ரூபாய் 10 மற்றும் உயர் மதிப்பு ரூபாய் 25 ஆக 35 ரூபாய் என்ற விலையில் வெளியிடப்பட்டது . அதன் 200 பங்குகளுக்கு விண்ணப்பித்ததில் 100 பங்குகள் ஒதுக்கீடு கிடைத்தது . 2014 ஆம் ஆண்டு 10 ரூபாய் முக மதிப்பைக் கொண்ட அதன் பங்கு 2 ரூபாயாகப் பிரித்தளிக்கப்பட்டது . இதன் மூலம் 100 பங்குகள் 500 பங்குகள் ஆகி விட்டன . 2017 ஆம் ஆண்டு 10 பங்குகளுக்கு 1 பங்கு என்ற விகிதத்தில் இலவசப் பங்குகள் வழங்கப்பட்டன . 500 பங்குகள் 550 ஆகி விட்டன . இதில் 50 பங்குகளை நான் விற்றது போக தற்போது என் வசம் 500 பங்குகள் உள்ளன . இந்த 500 பங்குகளின் மதிப்பு இன்றைய தேதியில் 500000 ரூபாய் . 100 பங்குகளை நான் வாங்கிய விலையான 3500 ரூபாய் கொண்டு கணக்கிட்டால் ஐசிஐசிஐ வங்கி 143 மடங்காளர் . வங்கி வருடாவருடம் வழங்கிய பங்காதாயம் இந்தக் கணக்கில் சேர்க்கப்படவில்லை . வங்கி , 2023 ஆம் வருட பங்காதாயமாக பங்கு ஒன்றுக்கு 8 ரூபாய் என்ற கணக்கில் 4000 ரூபாய்  வழங்கியிருக்கிறது . IPO விலையைக் கொண்டு கணக்கிட்டால் பங்கு ஈட்டு விகிதம் 100 சதவீதத்திற்கு மேல் வருகிறது . 


2008 கரடிச் சந்தையில் நான் வாங்கிய V Guard நிறுவனப் பங்கு குறித்தும் கொஞ்சம் பார்த்து விடலாம் . 2008 ல் அமெரிக்க சப் பிரைம் பிரச்னை காரணமாக உலகம் முழுவதுமான பங்குச்சந்தைகள் தலைகுப்புற விழுந்தன. பத்து ரூபாய் முக மதிப்பைக் கொண்ட V Guard நிறுவனப் பங்கின் அன்றைய விலை வெறும் 42 ரூபாய் . அந்த மாபெரும் விலை வீழ்ச்சியில் எதிர் நீச்சல் போட்டு 2100 ரூபாயை முதலீடு செய்து என்னால் 50 பங்குகளை மட்டுமே வாங்க முடிந்தது . பணத்தடை அல்ல ஆனால் பங்குகளை வாங்க மனத்தடையாக இருந்தது . பின்னர் நிறுவனம் பங்குப் பிரிப்பை மேற்கொள்ளும் அளவுக்கு வளர்ந்தது . பத்து ரூபாய் முக மதிப்பைக் கொண்ட பங்குகள் ஒரு ரூபாய் என்ற அளவில் பிரிக்கப்பட்டன . 50 பங்குகள் இப்போது 500 பங்குகள் ஆகி விட்டன . நிறுவனம் பின்னர் ஐந்துக்கு இரண்டு என்ற விகிதத்தில் இலவசப்பங்குகளை வழங்கியது . 500 பங்குகள் இப்போது 700 பங்குகளாகப் பெருகி விட்டன . அதன் இன்றைய ஒரு பங்கின் விலை 293 ரூபாய் . 700 பங்குகளின் மதிப்பு ரூபாய் 205100 /- நான் வாங்கிய விலையைக் கொண்டு கணக்கிட்டால் அது 98 மடங்கு கூடியிருக்கிறது . V Guard நிறுவனப் பங்கின் மூலமான எனக்கான 2023 ஆம் வருடத்திற்கான பங்காதாயம் 910 ரூபாய் . நான் வாங்கிய விலையான 2100 ரூபாய்க்கு 43.33 சதவீதம் .


இவை தவிர எனது பங்குத் தொகுப்பில் Sundram Fasteners (40 ×) Astral Ltd (38 ×) Balkrishna Industries (33 ×) Pidilite Industries (33 ×) Godrej Consumer Products (27 ×) PI Industries (24 ×) Elgi Equipments (17 ×) Info Edge (17 x) ஆகிய பங்குகள் முதல் பத்து (Top Ten) என்ற வகையில் வருகின்றன . இன்னும் சில பங்குகள் அவற்றை வாங்கிய காலக் கணக்கிற்கேற்ப வெவ்வேறு படிநிலைகளில் இருக்கின்றன . பெரும்பாலான பங்குகள் ஒரு மடங்காளர் எனற இலக்கை எட்டும் வகையில் இருக்கின்றன . இன்னும் சில பங்குகளை இப்போது தான் ஊன்றி வைத்திருப்பதால் அவை இன்னும் முளை விடத் தொடங்கவில்லை . ஒரு பங்கு 20 % CAGR என்ற அளவில் முதலீட்டுப் பெருக்கத்தை அடைகிறதென்றால் அது 100 மடங்காளர் இலக்கை அடைய 25 ஆண்டுகள் ஆகும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது . 


பங்கு ஈட்டு விகிதப் பங்குகளில் (Dividend Yield Stocks) பங்காதாயம் மூலமாகப் பணவரவு கிடைத்து விடுவதால் அவை பன்மடங்காளராக அதிக காலம் எடுத்துக்கொள்ளும் . அந்த வகையில் Coal India , NMDC , PTC India ... என்பதாக ஒரு வரிசை இருக்கிறது . 


பங்கு ஈட்டு விகிதப் பங்குகளின் மூலமாகப் பெரு மழையாகவும் மற்ற பங்குகள் மூலமாகச் சாரல் மழையாகவும் பெய்யும் பணப்பொழிவை மறு முதலீடு செய்வது கடை முடிவான (ultimate) ஒரு முதலீட்டு உத்தியாகும் . முன்பே குறிப்பிட்ட மாதிரி எப்போது தேவை எழுகிறதோ அப்போது தேவையான பணத்தை இந்தப் பங்குச்சந்தை அட்சய பாத்திரத்திலிருந்து எடுத்துக் கொள்ளலாம் .  


என் கதையைக் கடை விரிக்க வேண்டும் என்பதற்காக இதனை இவ்வளவு விரிவாக எழுதவில்லை . இதைப் படிப்பவர்களுக்கு உத்வேகம் ஊட்டும் வண்ணமாக இது எழுதப்பட்டது . மேலும் இது யாராலும் அடையப்படக் கூடிய ஒரு கனவு மட்டுமே . தேவை பகுத்தாயும் தன்மை ,  நம்பிக்கை மற்றும் பொறுமை . 


சரி , பன்மடங்காளர் கதையைப் பார்த்து விட்டோம் . எதிர் மடங்காளர் என்று ஒரு கருத்தாக்கம் இருக்கிறது . அது என்ன எதிர் மடங்காளர் ? நிறுவனப்பங்கு முதலீட்டுச் சுருக்கத்தை அடைந்து ரூபாய் பங்காக (Rupee Stock) மாறி விடுவது எதிர் மடங்காளர் என்பதாக அழைக்கப்படுகிறது . என்னுடைய பங்குத் தொகுப்பில் Satyam Computer ல் தொடங்கி Cox and kings ஈறாக அது ஒரு பெரும் பட்டியல் உள்ளது . அதைப் பற்றி இன்னொரு தனிப்பட்ட பதிவு எழுத உத்தேசம் . இந்த இடத்தில் இன்னொரு தகவல் . எவ்வளவு தான் பார்த்துப் பார்த்து பங்குகளை வாங்கினாலும் பன்மடங்காளர்களுடன் சில எதிர் மடங்காளர்களும் கலந்து வருவது இயற்கையானது . பன்மடங்காளர்களை எண்ணிக்கையிலும் (number) அதனினும் முக்கியமாக அளவிலும் (scale) அதிகப்படுத்துவது மற்றும் எதிர் மடங்காளர்களைக் குறைப்பதில் இருக்கிறது சூட்சுமம் . 


ஒரு சிறிய கணக்குடன் இந்தப் பன்மடங்காளர் பதிவை நிறைவு செய்யலாம் . முன்னரே குறிப்பிட்டபடி 100 ஐசிஐசிஐ வங்கிப் பங்குகளை நான் 3500 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறேன் . தற்போது என் கைவசம் அதன் 500 பங்குகள் இருக்கின்றன . 3500 ஐ 500 ஆல் வகுத்தால் ஒரு பங்கின் அடக்க விலை 7 ரூபாய் என்று ஆகிறது . ஐசிஐசிஐ வங்கிப் பங்கு வெறும் 7 ரூபாய் கூடினால் எனக்கு அது ஒரு மடங்கு கூடியதாகி விடும் . அதே மாதிரி V Guard பங்கு வெறும் 3 ரூபாய் கூடினால் எனது 98 மடங்காளர் 99 மடங்காளர் ஆகி விடும் . IPO ல் வாங்கப்பட்ட இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்கிற்கு இந்தக் கணக்கைப் போட்டுப் பார்க்கலாம் . அது வெறும் 9 காசு . ஆம் . நீங்கள் படித்தது சரி தான் . இன்ஃபோசிஸ் பங்கு 9 காசு கூடினால் அதன் IPO முதலீட்டாளருக்கு அது கூடுதல் one bagger . இதெல்லாம் காலத்தால் கூடியது . 


மீண்டும் சந்திப்போம் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14