திட்டமிடப்படாத விளைவுகள்

திட்டமிடப்படாத விளைவுகள்

Unintended Consequences

குழந்தைகள் காப்பகம் ஒன்றில் ஒரு சிறிய பிரச்னை எழுந்தது . மாலை ஆறு மணிக்கு காப்பகம் மூடப்படும் . ஆனால் ஒரு பத்து சதவீதம் பெற்றோர்கள் மாலை ஆறரை , ஏழு என்று வந்த வண்ணம் இருந்தார்கள் . இவர்களைச் சரியான நேரத்திற்கு வரவழைக்கும் பொருட்டு காப்பகத்திற்குத் தாமதமாக வரும் பெற்றோர்களுக்கு அபராதம் விதிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது . ஆனால் ஆச்சரியப்படத்தக்க வகையில் அபராதம் விதிப்பது என்று முடிவெடுக்கப்பட்ட பின்னர் தாமதமாக வரும் பெற்றோர்களின் சதவீதம் அதிகரிக்கத் தொடங்கியது . அபராதம் விதிக்காத போது தாமதமாக வரும் பெற்றோர்களுக்கு ஒரு குற்ற உணர்வு இருந்தது . அந்தக் குற்ற உணர்வுக்கு அபராத வடிவில் ஒரு விலை நிர்ணயம் செய்த பிறகு பெற்றோர்களின் குற்ற உணர்வு குறையத் தொடங்கியது . விளைவாக தாமதமாக வரும் பெற்றோர்கள் அதிகரிக்கத் தொடங்கினர் . இது unintended consequences என்பதாக அழைக்கப்படுகிறது .

கார் ஓட்டுதல் என்பது இப்போது ஆபத்தில்லாத பயண முறையாக மாறி விட்டது . குண்டும் குழியும் இல்லாத நெடுஞ்சாலைகள் , மிதித்தால் டக்கென்று பிடிக்கும் நிறுத்தி (brake) இருக்கைப் பட்டை (seat belt) என்று ஏகப்பட்ட வசதிகள் . எனில் சாலை விபத்துகள் கணிசமாகக் குறைய வேண்டும் அல்லவா ? மாறாக விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது . இந்த சாலைகளும் , நிறுத்திகளும் , இருக்கைப் பட்டைகளும் கொடுக்கும் பாதுகாப்பு உணர்வால் மக்கள் முன்பை விட அதிவேகமாகச் சென்று விபத்திற்கு உள்ளாகின்றனர். திட்டமிடப்படாத விளைவுகள் ...

பங்குச்சந்தையில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் .

கணினி உபயத்தால் இப்போது பங்குச்சந்தைகளின் உராய்வுச் செலவுகள் கணிசமாகக் குறைந்திருக்கிறது . இணையம் (internet) என்பது ஒரு சிறந்த ஒரு சமநிலை விளையாட்டு மைதானம் (level playing field) ஆக செயல்படுகிறது . பெரிய நிறுவன முதலீட்டாளர்களுக்கு உடனுக்குடன் கிடைக்கப்பெறும் தகவல்கள் இணையத்தின் உபயத்தால் சிறு முதலீட்டாளர்களுக்கும் கிடைக்கப்பெறும் ஒரு சூழல் . அந்தக் காலத்தில் நிறுவனம் ஒன்றின் ஆண்டறிக்கையைப் பெற குறைந்த பட்சமாக அந்த நிறுவனப் பங்குகளை lot என்ற அடிப்படையில் 50 அல்லது 100 என்ற கணக்கில் வாங்க வேண்டிய நிலை இருந்தது . இப்போது இணையத்தில் நிறுவனங்களின் அனைத்து ஆண்டறிக்கைகளையும் இலவசமாகத் தரவிறக்கம் (download) செய்து கொள்ளலாம் . சந்தை lot என்பதெல்லாம் இப்போது கிடையாது . குறைந்த பட்சமாக ஒரு பங்கைக் கூட வாங்கலாம் . பங்குகளை வாங்கி விற்பதற்கான தரகு இப்போது ஒரு சதவிகிதத்திற்கும் கீழே வந்து விட்டது . தினசரி வர்த்தகமாகும் பங்குகளின் நீர்மை நிறையால் (liquidity) தாக்கச் செலவும் (impact cost) குறைந்து விட்டது . விளைவாக முதலீட்டாளர்கள் சம்பாதிக்கும் பணம் கூட வேண்டும் அல்லவா ? மாறாக குறைந்திருக்கிறது . இந்த உராய்வுச் செலவுகள் கணிசமாகக் குறைந்ததால் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி விற்றும் மற்றும் விற்று வாங்கியும் (short selling) வருவது கற்பனைக்கெட்டாத வகையில் அதிகரித்து இணையம் வந்ததற்குப் பின்பான உராய்வுச் செலவுகள் இணையம் வருவதற்கு முன்பான உராய்வுச் செலவுகளை விட அதிகரித்த வண்ணம் உள்ளது . மேலும் இணையம் வந்த பின்பு சுட்டியின் ஒரு சொடக்கில் (click of the mouse) பங்குகளை வாங்குவதும் விற்பதும் மீமிகையாகி விட்டது .

இணையத்தையும் திட்டமிடப்படாத விளைவுகளின் ஒரு உதாரணமாகப் பார்க்கலாம் . நிறுவனம் ஒன்றின் பெயரை கூகுள் தேடுபொறியில் உள்ளீடு செய்ததும் அடுத்த விநாடி அந்நிறுவனம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்வது ஒரு வசதி தான் . ஆனால் இந்தத் தகவல்களில் எதைக் கொள்ளுவது எதைத் தள்ளுவது என்பது மேலும் மேலும் கடினமாகிக் கொண்டு வருகிறது . பங்குச்சந்தை குறித்தே ஏகப்பட்ட தகவல் வெள்ளம் ... அடிப்படைப் பகுப்பாய்வு , தொழில்நுட்பப் பகுப்பாய்வு , தினசரி முதலீடு , குறுகிய கால முதலீடு , நீண்ட கால முதலீடு , பெறுதிகள் (derivatives) விளிம்பு நிலை வர்த்தகம் (margin trading) என்று அடுக்கிக் கொண்டே போகலாம் . A wealth of information creates a poverty of attention . தகவல்களின் வளமை கவனக்குறைவின் வறுமைக்கு இட்டுச்செல்லும் .

Unintended consequences ன் சிகர உதாரணமாக F & O ஐ சொல்லலாம் . பங்குச்சந்தையில் பங்குகளின் ஒரு தொகுப்பைக் (portfolio) கட்டிய பின்னர் அதற்கு இழப்புக் காப்பீடு (hedging) எடுப்பதற்காக Futures and Options என்ற பெறுதிகள்  அறிமுகம் செய்யப்பட்டன . ஆனால் உண்மையில் நடந்தது வேறு . முதலீட்டாளர்கள் (?) பங்குகளின் தொகுப்பை , தொகுப்பை என்ன , ஒரு பங்கைக் கூட வாங்காமல் நேரடியாக F & O ல் நிலைப்பாடு எடுக்கத் தொடங்கினர் . உங்களிடம் முதலீடு செய்ய பத்தாயிரம் ரூபாய் இருப்பதாகக் கொள்ளலாம் . ஒரு நிறுவனப் பங்கின் விலை ஆயிரம் ரூபாய் என்றால் உங்களால் பத்து பங்குகளை மட்டுமே வாங்க முடியும் . பங்கின் விலை ஒரு வருடத்தில் இருபது சதவீதம் கூடுகிறதென்றால் உங்களுக்கான இலாபம் அந்த இருபது சதவீதம் மட்டுமே என்பது தெளிவு . ஆனால் F & O ல் (பங்குகளின் விலை கூடுமா அல்லது குறையுமா என்று பந்தயம் கட்டுவது) இந்த பத்தாயிரம் ரூபாய்க்கு நிலைப்பாடு எடுத்துக் கொண்டால் அது இலாபத்தை பன்மடங்கு உருப்பெருக்கும் . மிகவும் முக்கியமாக நஷ்டத்தையும் உருப்பெருக்கும் . நீங்கள் பத்தாயிரம் ரூபாய்க்குப் பங்குகளை வாங்குகிறீர்கள் . துரதிர்ஷ்டவசமாக பங்கின் விலை இருபது சதவீதம் குறைந்து விட்டதாகக் கொள்ளலாம் . உங்களுக்கான நஷ்டம் இரண்டாயிரம் ரூபாய் . ஆனால் F&O ல் நஷ்டமாகி விட்டால் இந்த பத்தாயிரமும் காணாமல் போய் விடும் .

நீண்ட கால மதிப்புப் பெருக்கத்தை அடைய குறுக்கு வழிகள் எதுவும் கிடையாது . மேலும் சரியான வழியில் சென்றால் வேகமாக ஓடினாலும் மெதுவாக ஓடினாலும் இலக்கை அடைந்து விடலாம் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14