பங்கு கேள்வி பதில் - 3

பங்கு கேள்வி பதில் - 3

கேள்வி : ROCE அதிகமாகவும் , PE விகிதம் குறைவாகவும் உள்ள பங்கு ஒன்றைப் பரிந்துரைக்க முடியுமா ?

பதில் : Coal India .


கேள்வி : இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்கு இன்றைய தேதியில் ஒரு மல்டிபேக்கர் என்பதெல்லாம் சரி , ஆண்டாண்டாக இவ்வாறு ஒரு நிறுவனப் பங்கை விற்காமல் வைத்திருப்பது சாத்தியமாகக்கூடிய ஒரு நிகழ்வா ?

பதில் : பெரும்பாலும் சாத்தியமில்லை . சாத்தியமானால் அதன் மதிப்புப் பெருக்க சாத்தியக்கூறுகள் அனேகம் . இந்த இடத்தில் ஒரு தகவலைக் கூற விழைகிறேன் . அமெரிக்க ஆய்வு ஒன்றின் படி பணமாக்கம் செய்யப்படாத இறந்த முதலீட்டாளர்களின் பங்குத் தொகுப்புகள் சிறப்பாகச் செயல்படுகின்றனவாம் .


கேள்வி : பங்கு முதலீட்டு வருமானங்கள் ஆளாளுக்கு மாறுமா ?

பதில் : இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்கு ஒரு மல்டிபேக்கர் . அதனால் இலாபம் பெற்றவர்களைத் தவிர நஷ்டம் அடைந்தவர்கள் எவருமிலர் . சரியா ? தவறு . இன்ஃபோசிஸ் பங்கை 2000 ஆவது ஆண்டில் அதன் உச்ச விலையில் வாங்கியவர்கள் , இலாபம் மற்றும் நஷ்டம் இல்லாத நிலையை (breakeven point) அடையப் பல்லாண்டுகள் ஆனது . 2000 ல் வாங்கி பின்னர் தொடர்ந்து Average down (பங்குகளின் விலை குறையக் குறைய வாங்குதல்) செய்தவர்களுக்கும் அதே நிலை தான் . இவையிரண்டையும் செய்யாமல் அச்ச விற்பனையில் ஈடுபட்டவர்கள் பெரும் இழப்பைச் சந்தித்தனர் . மேலும் இவ்வாறு இந்தப் பங்குகளை உச்ச விலையில் வாங்கியவர்களும் சரி , Average down செய்தவர்களும் சரி சராசரியான வருமானங்களையே பெற்றனர் . இன்ஃபோசிஸ் பங்குகளை IPO ல் வாங்கி , பட்டியல் இலாபத்திற்கு விற்றவர்கள் குறுகிய கால அறுவடை மட்டும் செய்து கொண்டனர் . உண்மையிலேயே இன்ஃபோசிஸ் பங்குகள் மூலம் இலாபம் பெற்றவர்கள் , இன்னும் பெற்றுக் கொண்டிருப்பவர்கள் அந்தப் பங்குகளை அதன் IPO ல் வாங்கி இன்றளவும் வைத்துக் கொண்டிருப்பவர்கள் மட்டுமே . இன்ஃபோசிஸ் நிறுவனம் அதன் IPO ன் 100 பங்குகளுக்கு , 2023 ஆம் ஆண்டுக்கான பங்காதாயமாக 3481600 ரூபாய் வழங்கியிருக்கிறது . மாதம்  290133 ரூபாய் வருகிறது . முதலீட்டுப் பெருக்கம் தனி .


கேள்வி : சிப்லா நிறுவனம் ஒரு பங்குக்கு 5 ரூபாய் மட்டுமே பங்காதாயம் தருகிறது .100 பங்குகளை வைத்திருப்பவர்களுக்குக் கூட வெறும் 500 ரூபாய் மட்டும் தானே பங்காதாயமாகக் கிடைக்கப்பெறும் ?

பதில் : ஆம் . இந்தப் பங்காதாய வருமானத்தை அதிகரிக்க நீங்கள் அதிகப் பங்குகளை வாங்கிச் சேர்க்கலாம் . ஓரளவு பங்குகளை மட்டும் வாங்கி பங்காதாய வருமானங்களை அதிகரிக்க எளிமையான வழி ஒன்று இருக்கிறது . காலாகாலத்திற்கும் பங்குகளை பேணிப் பாதுகாத்து வைத்திருப்பதே அது . சிப்லா நிறுவனத்தின் ஒரேயொரு பங்கை 1979 ஆம் ஆண்டிலிருந்து வைத்திருப்பவருக்கு 2022 ஆம் ஆண்டுக்கான பங்காதாயம் எவ்வளவு கிடைக்கப்பெறும் தெரியுமா ? ஏதேனும் ஊகம் ? அது உங்கள் ஊகத்திற்கு அப்பாற்பட்டது . அது ரூபாய் 1,80,000 /- ஆம் . நீங்கள் படித்தது சரி தான் . அது ஒரு இலட்சத்து எண்பதினாயிரம் ரூபாய் .


கேள்வி : ITC நிறுவனத்தின் dream run தொடரும் என்ற பங்குத் தரகு நிறுவனங்களின் கணிப்பு குறித்து ?

பதில் : இதே நிறுவனங்கள் தான் சில ஆண்டுகளுக்கு முன்னர் ITC நிறுவனம் worst nightmare ல் இருப்பதாகக்  குறிப்பிட்டது ஞாபகத்திற்கு வருகிறது .


கேள்வி : Godrej Consumer Products நிறுவன IPO விவரங்கள் இணையத்தில் காணக் கிடைக்கவில்லை ?

பதில் : Godrej Consumer Products நிறுவனம் IPO என்ற வகையில் வரவில்லை . அது Godrej Industries நிறுவனத்திலிருந்து நிறுவனப் பிரிப்பு என்ற வகையில் வெளியிடப்பட்டது . இந்த வகையில் Bajaj Finserv & Bajaj Holdings , Gulf Oil Lubricants , Motherson Sumi Wiring India , RHI Magnesita India ... என்பதாகப் பிரிந்த நிறுவனங்களின் ஒரு பெரும் பட்டியல் இருக்கிறது . பங்குகளில் நீண்ட கால முதலீட்டை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு இதுவும் ஒரு காரணம் . நீண்ட கால அளவில் தான் நிறுவனங்கள் இந்த மாதிரி நிறுவனப் பிரிப்பை மேற்கொள்ளக்கூடிய தகுதி பெறும் .


கேள்வி : எதிர் காலத்தில் நிறுவனப் பிரிப்பு மேற்கொள்ள வாய்ப்புள்ள நிறுவனங்கள் ஏதாவது ?

பதில் : ITC நிறுவனத்தை இதற்கான சிகர உதாரணமாகச் சொல்லலாம் . Reliance , Aurobindo Pharma போன்ற நிறுவனங்களையும் குறிப்பிட்டுச் சொல்லலாம் .


கேள்வி : Paytm நிறுவனப் பங்குகளில் இப்போது முதலீடு செய்யலாமா ? அதன் IPO விலையிலிருந்து கணிசமாகக் குறைந்து இப்போதைய விலையில் நிலை பெற்றது போல் தோன்றுகிறது ?

பதில் : ஒரு பங்குச் சம்பாத்தியம் ஒரு ரூபாய் கூட இல்லாத நிறுவனத்தில் முதலீட்டை எப்படி மேற்கொள்வது ? நன்னம்பிக்கை (optimism) என்பது பங்கு முதலீடுகளுக்கு ஆதாரமாக தேவை . ஆனால் நிறுவனங்களின் இலாப நஷ்டக் கணக்கில் (Profit and Loss Account) நன்னம்பிக்கை இடம் பெறாது .


கேள்வி : பென்னி பங்கு ஏதேனும் ஒன்றுக்கான பரிந்துரை ?

பதில் : விலையைக் கொண்டு பங்குகளைத் தேர்ந்தெடுத்தல் அறிவுடைமையாகாது .  இருந்தாலும் IRFC பங்குகளை வாங்கிச் சேர்க்கலாம் . இந்திய ரயில்வேயின் எதிர்காலத்தில் நன்னம்பிக்கை கொண்டு இந்தப் பங்குகளை வாங்கலாம் . நிறுவனத்தின் ஒரு பங்குச் சம்பாத்தியம் (EPS) 4.66 ரூபாய் . அதன் விலை வருவாய் விகிதம் (PE) 5.53 மடங்கு . பங்கு ஈட்டு விகிதம் (Dividend Yield) 5.2 சதவீதம் . பங்காதாய வழங்கல் விகிதம் ( Dividend Payout Ratio) 20 சதவீதம் . அது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரான அதன் முதல் பொது வெளியீட்டு விலையை ஒட்டி வர்த்தகமாகிறது . IRFC நிறுவனத்தைக் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் : நிறுவனம் 5000 கோடி நிகர இலாபம் ஈட்டினாலும் அதன் பணியாளர்கள் 40 பேருக்கும் குறைவானவர்கள் மட்டுமே . விடுதி ஒன்றின் சில அறைகளில் அதன் பதிவு மற்றும் முதன்மை அலுவலகம் செயல்படுகிறது . அதன் பத்தாண்டு வருமானம் 16 சதவீத CAGR மற்றும் அதன் பத்தாண்டு நிகர இலாபம் 30 சதவீத CAGR ( ஆதாரம் : பிஸினஸ் லைன் ) இந்தப் பங்குகள் உடனே இரட்டிப்பாகும் என்றெல்லாம் நினைக்க வேண்டாம் . இந்த IRFC வண்டி மிக மெதுவாக ஊர்ந்து மட்டுமே செல்லும் . வருடாவருடம் பங்காதாயம் கூடும் . அதைத் தொடரும் பங்கு ஈட்டு விகிதம் கூடும் . அதைத் தொடர்ந்து பங்கின் விலைகளும் கூடும் .


கேள்வி : வாரன் பஃபெட்டின் முதலீட்டு நிறுவனப் பங்கு தின அளவில் அதிகம் வர்த்தகமாகாத நீர்மை நிறையற்ற பங்கு (most illiquid stock) என்பதாகச் சொல்கிறார்களே ?

பதில் : இவ்வாறு நீர்மை நிறை குறைவாக இருப்பதால் பஃபெட்டின் முதலீட்டு நிறுவனப் பங்குகளில் ஊக வணிகம் செய்ய முடியாது . இதனால் அவை எப்போதும் ஒரு நியாயமான விலை - வருவாய் விகிதங்களில் மட்டுமே வர்த்தகமாகும் . யார் எப்போது அந்தப் பங்குகளை வாங்கினாலும் நஷ்டம் ஏற்படாது . அது அங்ஙனம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது . அது  பஃபெட் தன் உணர்வுடன் எடுத்த முடிவு .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14