நியாயமற்ற பிரபஞ்சம்

நியாயமற்ற பிரபஞ்சம்

Unfair Universe

How to get lucky புத்தகத்தில் Max Gunther அதிர்ஷ்டத்தைப் பெறுவதற்கான 13 உத்திகளைப் பட்டியலிடுகிறார் . அதில் ஒரு உத்தியான நியாயமற்ற பிரபஞ்சத்தை ஏற்றுக் கொள்ளுதலின் (Accepting an Unfair Universe) மிகச் சுருக்கமான மொழிபெயர்ப்பு ...
               *               *              *
Rabbi Harold Kushner பொதுவாக ஒரு நல்ல மனிதர் . எல்லோரையும் போல சின்னஞ்சிறிய தவறுகளைச் செய்திருக்கிறார் என்றாலும் அவர் மாபெரும் தண்டனையைப் பெறுவதற்கான முகாந்திரம் எதுவுமில்லை . ஆனால் அவருடைய மகனுக்கு பிரபஞ்சம் ஆகப்பெரிய தண்டனை ஒன்றை வழங்குகிறது . அவருடைய மகன் மூன்று வயதில் Progeria என்று சொல்லப்படும் அதிவிரைவாக முதுமையடையும் நோயினால் பாதிக்கப்படுகிறான் . அந்த நோய்க்கு மருந்துகள் ஏதுமில்லை . அதனால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று அடிக்கு மேல் வளர மாட்டார்கள் . முடி எதுவும் அவர்களுக்கு முளைக்காது . அவர்கள் சின்னஞ்சிறு வயதிலேயே முதுமைத் தோற்றம் அடைந்து விடுவார்கள் . பதின்ம வயதின் ஆரம்பத்திலேயே அவர்கள் இறந்து விடுவர் . அவருடைய மகன் இறக்கும் போது அவனுக்கு வயது பதினான்கு . Rabbi Harold Kushner தனது எஞ்சிய வாழ்நாளை அந்த அறியாச் சிறுவனுக்கு ஏன் இவ்விதம் நேர்ந்தது என்பதற்கான விடை தேடும் முயற்சியில் கழிக்கிறார் . அவருடைய அனுபவங்களை When bad things happen to good people என்று ஒரு புத்தகமாக எழுதியிருக்கிறார் . அந்தத் தேடலின் முடிவில் அவர் கண்டடைந்தது என்ன ? It was just a random stroke of bad luck . அது துரதிர்ஷ்டத்தின் தற்செயலான ஒரு தாக்கம் மட்டுமே .

நியாயம் நேர்மை என்பதெல்லாம் மனிதக் கருத்தாக்கங்கள் .  பிரபஞ்சத்திற்கு இதெல்லாம் தெரியாது . நமக்குக் கெடுதல் ஏதாவது நேரும் போது கடவுள் நம்மை நம்முடைய பாவங்களின் பொருட்டுத் தண்டிக்கிறார் , நமக்கு நீதி போதனை நடத்துகிறார் , துன்பங்களைக் கொடுத்து நம்மை வலிமையாக்குகிறார் என்பதெல்லாம் வெற்றுப் பேச்சு . கடவுளுக்கோ பிரபஞ்சத்திற்கோ இது எதுவும் தெரியாது . பிரபஞ்சம் அதன் போக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது . ஒரு சமயம் அதிர்ஷ்டத்தின் அலை அடிக்கிறது . பிறிதொரு சமயம் துரதிர்ஷ்டத்தின் அலை அடிக்கிறது . நன்றாகக் கவனியுங்கள் , கடவுள் இல்லை என்று நான் சொல்லவரவில்லை . இந்த உலகில் நாம் நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்து கொள்வதற்கு நாம் ஏதாவது ஒரு சக்தியை அது கடவுளோ கர்மாவோ இயற்கையோ அதனை நம்பித் தான் ஆகவேண்டும் . கடவுள் இருக்கிறார் இல்லை என்பது இங்கே பிரச்னையில்லை . கடவுள் தேவைப்படுகிறார் . ஆனால் நியாயமற்ற இந்தப் பிரபஞ்சத்துடன் தர்க்கவாதம் செய்யாமல் அதன் நியாயமற்ற தன்மையை ஏற்றுக்கொண்டால் அதிர்ஷ்டத்தை நோக்கி நாம் ஒரு படி முன்னேறலாம் . மாறாக இந்தப் பிரபஞ்சத்துடன்  பிரதிவாதம் செய்து கொண்டிருந்தால் மேலும் மேலும் துரதிர்ஷ்டத்தை நாம் விலை கொடுத்து வாங்குவதாக அர்த்தம் . இவ்வாறு பிரதிவாதம் செய்தவரின் கதை ஒன்றையும் பார்த்து விடலாம் .

தாய் தந்தை ஒரேயொரு பெண் குழந்தை என்பதான சிறிய குடும்பம் அது . ரொம்பவும் இறை நம்பிக்கை அவர்களுக்குக் கிடையாது . அடிக்கடி ஆலயத்திற்குச் செல்லாவிட்டாலும் எப்போதாவது செல்வார்கள் . அவர்களது மகளும் அவர்கள் மாதிரியே வளர்ந்து வருகிறாள் . இந்த நிலையில் ஒரு நாள் அவர்களது அன்பு மகள் கற்பழிக்கப்பட்டு கொல்லப்படுகிறாள் . இது துரதிர்ஷ்டத்திலும் துரதிர்ஷ்டமான ஒரு நிகழ்வு . அவர்களைப் பொறுத்தவரை ஆண்டவன் எல்லாவிடத்திலும் இருக்கிறார் . அதையும் மீறி இவ்வாறு நடந்ததற்கு அவர்கள் மேல் தான் தவறு என்பதாக அவர்களின் எண்ணப்போக்கு இருக்கிறது . துரதிர்ஷ்டத்தை துரதிர்ஷ்டம் என்று இனங்கண்டால் அது உங்களை அத்துடன் விட்டு விடும் . ஆனால் துரதிர்ஷ்டத்திற்கு உங்களைக் குற்றம் சொன்னால் அது உங்களை வேருடன் அழித்து விடும் . அந்தப் பெண்ணின் தந்தை மன அழுத்தத்துக்கு ஆளாகிறார் . தாய் அவரை அந்தப் படுகுழியிலிருந்து மீட்க நினைத்தாலும் அவரால் இயலவில்லை . அவர் பார்க்கும் வங்கி வேலையில் அவரால் கவனம் செலுத்த முடியாமல் போகிறது . வங்கி ஒரு பிரச்னையில் சிக்கித் தவிக்கும் போது அவர் பலிகடா ஆக்கப்பட்டு அவருடைய வேலை பறி போகிறது . இதுவும் துரதிர்ஷ்டவசமான மற்றுமொரு நிகழ்வு மட்டுமே . தந்தை , கடவுள் மீண்டும் தன்னைத் தண்டித்து விட்டதாக எண்ணிக் கொள்கிறார் . ஒருநாள் அவர் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் உட்கார்ந்தவர் உட்கார்ந்தவர் தான் . அங்கேயே உண்டு குடித்து புகைத்து ஒரு நாள் உயிரை விடுகிறார் .

கலைந்து செல்லும் மேகங்களில் கற்பனை உருவங்களைப் பார்க்கும் சிறு வயது விளையாட்டை வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்பும் ஏதோ ஒருவகையில் விளையாடிக் கொண்டிருப்பவர்களாகவே நாம் இருக்கிறோம் . என்னுடைய  நண்பர்கள் அனைவருக்கும் நல்ல வேலை கிடைத்து வாழ்க்கையில் நிலை பெற்று விட்டார்கள் . அடுத்தது என் முறை ... இரண்டு முறை எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது . அடுத்த குடும்ப வாழ்க்கை எனக்கு சுமுகமாக அமையும் ... சூதாட்ட வட்டில் நிறையப் பணத்தை இழந்து விட்டேன் . அடுத்தது கட்டாயம் என் முறை ... பங்குச்சந்தையில் நிறையப் பங்கு ரூபாய் பங்கு ஆகி விட்டது . அடுத்தது பன்மடங்காளர் பங்கு தான் ... இவ்வாறு சீரற்ற முறையில் இயங்கும் பிரபஞ்சத்தை நாம் சீர்மைப்படுத்த முயல்கிறோம் . சூதாட்ட வட்டில் நீங்கள் எத்தனை முறை தோற்றாலும் அடுத்த முறை நீங்கள் வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு எப்போதும் 50 - 50 மட்டுமே .
             *                   *                 ‌ *
பங்குச்சந்தையில் நியாயமற்ற பிரபஞ்சத்தின் பாதிப்புகள் என்னவாக இருக்கும் ? எந்தவொரு பங்குக்கும் உங்கள் தகுதிக்கேற்றதைத் தரவேண்டும் என்பதற்கான ஆர்வம் எதுவும் இராது . அண்ணன் பாவம் , வாராவாரம் வலைப்பூ பதிவுகளை இடுகை செய்கிறார் , அவருக்குப் பன்மடங்காளர் பங்கு ஒன்றை இனங்காட்டுவோம் என்றெல்லாம் அது நினைக்காது . நீண்ட கால அளவில் சந்தைக் குறியீடுகள் உயர்ந்து செல்வதாக இருந்தாலும் குறுகிய கால அளவில் அது குடிகாரனின் நடை மட்டுமே . நீங்கள் எவ்வளவு தான் அடிப்படைப் பகுப்பாய்வு செய்து மதிப்பு முதலீடாக தரமான பங்குகளைப் பார்த்துப் பார்த்து வாங்கி அவற்றை நீண்ட கால அளவில் வைத்திருந்தாலும் இவ்வாறு வைத்திருக்கும் எல்லாப் பங்குகளும் வருமானத்தை அள்ளித்தரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது . பங்குச்சந்தை சாத்தியக்கூறுகளால் (possibilities) ஆகப் பெற்றது . நிச்சயங்களால் (certainty) அல்ல .

துரதிர்ஷ்டத்தை துரதிர்ஷ்டம் என்று இனங்கண்டு அதற்குத் தனிப்பட்ட முறையில் நம்மைப் பொறுப்பாக்காமல் இருப்பது நல் அதிர்ஷ்டத்தைப் பெறுவதற்கான ஒரு வழிமுறையாகும் .

நன்றி : Max Gunther

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14