பங்கு கேள்வி பதில் - 1

பங்கு கேள்வி பதில் - 1

கேள்வி : ITC க்கும் VST Industries க்கும் ROCE ல் ஏன் இத்தனை மாறுபாடு ?

பதில் : ITC நிறுவனம் புகையிலையிலிருந்து கிடைக்கப்பெறும் இலாபத்தை FMCG , விருந்தோம்பல் , காகிதம் இன்னபிற துறைகளில் முதலீடு செய்கிறது ( ROCE - 30 % ) VST Industries புகையிலையிலிருந்து கிடைக்கப்பெறும் இலாபத்தை புகையிலையில் மட்டும் மறு சுழற்சி செய்கிறது ( ROCE - 40 % ) எனவே இந்த மாறுபாடு . ITC செய்வது சரியா தவறா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும் .

கேள்வி : Wipro நிறுவனம் 2021 ஆம் ஆண்டுக்கான பங்காதாயமாக ஒரு பங்குக்கு ஒரு ரூபாய்  வழங்கியிருக்கிறது . 100 பங்குகள் வைத்திருந்தால் வெறும் 100 ரூபாய் மட்டும் தானே பங்காதாயமாகக் கிடைக்கப்பெறும் ?

பதில் : 100 பங்குகள் வைத்திருந்தால் பங்காதாயமாக வெறும் 100 ரூபாய் மட்டும் தான் கிடைக்கும் . 50 பங்குகளை வைத்திருந்தால் 50 ரூபாய் . 10 க்கு 10 . 3 க்கு 3 . ஆனால் அதன் IPO ல் 3 பங்குகளை வாங்கி இன்றளவும் வைத்திருப்பவர்களுக்கு 1148120 ரூபாய் கிடைக்கப் பெறும் . 2022 ஆம் ஆண்டுக்கு Wipro ஒரு பங்குக்கு ஆறு ரூபாய் பங்காதாயம் வழங்கியிருக்கிறது . IPO முதலீட்டின் 3 பங்குகளுக்கு 6888720 ரூபாய் கிடைக்கப்பெறும் . நீங்கள் படித்தது சரி தான் . கிட்டத்தட்ட 69 இலட்சம் .

கேள்வி : Scarcity premium என்றால் என்ன ?

பதில் : உழவர் சந்தையில் ஒரேயொரு உழவரிடம் மட்டும் முருங்கைக்காய் இருக்கிறது . அவரிடம் தான் நீங்கள் அதனை வாங்க முடியும் . எனில் அவர் அதனைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யலாம் . இது தான் scarcity premium . தமிழில் அருமைப்பாடு உயர் மதிப்பு . அரிதாக சில நிறுவனங்களும் இந்த மாதிரி ஒரு பொருள் அல்லது சேவையை அவை மட்டும் தனிப்பட்டு வழங்குவதாக இருக்கும் . அத்தகைய நிறுவனங்களின் பங்குகள் உயர் மதிப்பீட்டில் வர்த்தகமாகும் . தற்போதைய உதாரணங்களாக Bombay Stock Exchange மற்றும் CDSL போன்ற நிறுவனங்களைச் சொல்லலாம் . NSE மற்றும் NSDL நிறுவனங்கள் இதே சேவையை வழங்குவதாக இருந்தாலும் அவை சந்தையில் இன்னும் பட்டியலிடப்படவில்லை .

கேள்வி : V Guard நிறுவனத்தின் இன்வெர்ட்டர் மற்றும் ஹீட்டர் போன்ற அனைத்துப் பொருட்களும் தரமாக இருக்கிறது . அதன் பங்குகளை வாங்கலாமா ?

பதில் : நிறுவனப் பொருட்கள் வேறு . அதன் பங்குகள் வேறு . தற்போது V Guard நிறுவனப் பங்குகள் உயர் மதிப்பீட்டில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கின்றன . அபாய வெகுமதி விகிதம் ( Risk reward ratio) தற்போதைய பங்கின் விலையுடன் சாதகமாக இல்லை .

கேள்வி : கண்டதும் காதல் மாதிரி ஏதேனும் பங்குகளை வாங்கியது உண்டா ?

பதில் : நிறையப் பங்குகளின் மேல் கண்டதும் காதல் கொண்டதுண்டு . பெரும்பாலும் அவை காதல் தோல்வியில் மட்டும் முடிந்திருக்கின்றன . விதிவிலக்காக Amrutanjan Healthcare மற்றும் Sundram Fasteners நிறுவனப் பங்குகளைக் குறிப்பிடலாம் . Amrutanjan பொறுத்தவரை equity capital என்று அழைக்கப்படும் அதன் பங்கு முதல் ( ரூபாய் 2.92 கோடி மட்டும் ) கருத்தைக் கவர்வதாக இருந்தது . இந்த 2 92 கோடி பங்கு முதல் அது வழங்கிய ஐந்து இலவசப் பங்களிப்பிற்குப் பிந்தையது . Sundram Fasteners பொறுத்தவரை அது தரத்திற்காகத் தொடர்ந்து வாங்கிக் கொண்டிருக்கும் டெமிங் விருது மட்டும் அதன் மேல் காதல் கொள்ளப் போதுமானதாக இருந்தது . 

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14