பங்குச்சந்தை விதிகள்

பங்குச்சந்தை விதிகள்

1. பங்கு முதலீட்டுத் திட்டங்களைச் சிறிய வயதிலேயே தொடங்கி விட வேண்டும் .

வாரன் பஃபெட் பதினோரு வயதிலேயே அவரது முதலீட்டுப் பயணத்தைத் தொடங்கி விட்டார் . முதலீட்டுச் சமன்பாட்டில் வட்டி விகிதம் கூடக்கூட வருமானம் கூடுவது மாதிரி ஆண்டுகள் கூடக்கூட வருமானமும் மீமிகைப் பெருக்கத்திற்கு உள்ளாகும் . வாரன் பஃபெட் உலகின் முதலாம் நிலை முதலீட்டாளராக இருப்பதற்கான முழு முதற்காரணம் அவருடைய 80 ஆண்டு முதலீட்டுக் காலம் மட்டுமே .

2. கூட்டு வட்டியை விரைவு படுத்த முயலக்கூடாது .

நிறைய முதலீட்டுத் தவறுகளுக்கான அடிப்படையான காரணம் முதலீட்டின் மூலமான வருமானத்தை விரைவு படுத்த முயல்வது தான் . வருமானத்தை விரைவு படுத்த முயல்வதன் காரணமாக 50 சதவீதத்தை இழந்தால் அந்த இழப்பை சமன் செய்ய 100 சதவீதம் சம்பாதிக்க வேண்டும் . மலையேற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கான முக்கியமான விதி என்னவென்றால் ஒரு நாளைக்குக் குறிப்பிட்ட உயரம் மட்டுமே ஏறவேண்டும் . வானிலை சாதகமாக இருந்தாலும் சரி அல்லது பாதகமாக இருந்தாலும் சரி இந்த உயரத்தை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ கூடாது . வானிலை சாதகமாக இருக்கிறது என்பதற்காகக் குறிப்பிட்ட உயரத்தை விட அதிகமாக ஏறினால் மறுநாள் அயர்ச்சிக்கு ஆளாகி ஒத்திசைவை இழக்க நேரிடும் . முதலீட்டிற்கும் இது முக்கியமாகப் பொருந்தும் .

3. முதலீட்டுத் தொகுப்பில் நிறுவனப் பங்குகளுக்குப் பிரதான இடத்தைக் கொடுக்க வேண்டும் .

ஏனென்றால் பங்குகளில் மட்டும் தான் இரண்டு வழிகளில் வருமானம் கிடைக்கப் பெறுகிறது . ஒன்று , பங்குகளின் மூலமான ஆண்டாண்டு அதிகரித்து வரும் பங்காதாயம் , இரண்டு , இந்த அதிகரித்து வரும் பங்காதாயங்களைக் கொடுக்கக்கூடிய பங்குகளின் விலை ஏற்றம் . கடன் பத்திரங்கள் முதலான நிலையான வருமான முதலீடுகள் , நிலையான (fixed) வருமானத்தை மட்டுமே தரவல்லவை . மேலும் கடன் பத்திரங்கள் பங்குகள் மாதிரி முதலீட்டுப் பெருக்கத்திற்கு உள்ளாகாது . பணவீக்கத்தையும் இவை வெல்லாது .

4. வாசிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும் .

பணத்தின் கூட்டுப் பெருக்கத்திற்கு அறிவின் கூட்டுப் பெருக்கமே அடிப்படையானது .Conscious learning becomes unconscious knowledge . தன் உணர்வுடன் கற்பது தன் உணர்வில்லாத அறிவுக்கு இட்டுச் செல்லும் . அறிவு என்பது நேர் பின்னூட்ட வளையத்திற்கான (Positive Feedback Loop) சிகர உதாரணம் .

5. மென் சொத்துக்களான பொறுமை , தாமதமான மனநிறைவு , நீடிப்புத் திறன் போன்ற கல்யாண குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் .

பன்மடங்காளர் பங்குகளைக் கைப்பற்றத் தடையாக இருப்பது பொறுமையின்மை , உடனடி மனநிறைவு கொள்ளல் ,  நீடிப்புத்திறன் இல்லாமை போன்ற குணாதிசயங்கள் மட்டுமே . இயற்கையிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளுங்கள் . இயற்கை எதற்கும் விரைவு கொள்வதில்லை . ஆனால் எல்லாமே அடைந்து விடப்படுகின்றன .

6. எளிமையான உத்திகளைக் கைக்கொள்ள வேண்டும் .

பங்குச்சந்தையை வெற்றி கொள்வதற்கான எளியதொரு உத்தியாக , 'அதிகரித்து வரும் பங்காதாயம் - அதிகரித்து வரும் பங்கு விலைகள்' என்பதைச் சொல்லலாம் . பிரச்னை ஒன்றுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தீர்வுகள் இருந்தால் அவைகளில் எளிதான ஒன்றைத் தேர்ந்தெடுங்கள் . பங்குச்சந்தை ஒரு சிக்கலான தகவமைப்பு அமைப்பு . சிக்கலை சிக்கலால் வெல்ல முடியாது . அதனை எளிமையால் மட்டுமே வெல்ல முடியும் .

7. பணத்தை நேரடியாக அடைய முடியாது . பணம் என்பது துணை விளைபொருள் மட்டுமே .

பணத்தை அடைவதற்கான சிறந்த வழி அதனை நோக்கி ஓடாமல் இருப்பது மட்டுமே . பணத்தை மட்டுமல்ல , வாழ்க்கையில் மகிழ்ச்சி உள்ளிட்ட பற்பல விஷயங்களை நேரடியாக அடைய முடியாது . மகிழ்ச்சி என்பது பட்டாம்பூச்சி போன்றது . அதனைத் துரத்தத் துரத்த விலகி ஓடும். ஆனால் எதிர்பாராத ஒரு கணத்தில் நம் தோள் மீது வந்து மென்மையாக அமரும் .

8. நிதி விடுதலை என்பது நேர விடுதலை மட்டுமே . 

உங்களுக்குப் பிடிக்காத ஒரு வேலையில் பணத் தேவையின் பொருட்டு உழன்று கொண்டிருக்கிறீர்கள் . நிதி விடுதலை (Financial Independence) பெற்று விட்டால் இந்தப் பத்து முதல் ஐந்து வரையிலான சமயங்களில் பத்து முதல்  பத்து வரையிலான நேரச் சிறையிலிருந்து விடுதலை பெற்று விடலாம் . பின்னர் உங்கள் மனதிற்குப் பிடித்த வேலையில் ஈடுபடலாம் . மனதிற்குப் பிடித்த வேலையில் உங்களுக்கு ஓய்வே தேவைப்படாது .

9. இலக்கை அடைந்த பின்னர் இன்னும் அதிகப்படியான இலக்குகளை நோக்கி ஓடாதீர்கள் .

உங்கள் முதலீட்டுத் தொகுப்பின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் என்ற இலக்கத்தை அடைவது உங்கள் இலக்காக இருக்கலாம் . அதனை அடைந்த பின்னர் அந்த இலக்கை இரண்டு கோடி என்பதாக மாற்றாதீர்கள் . அப்புறம் நிரந்தரமாக நீங்கள் இலக்கை நோக்கி ஓடிய வண்ணம் இருக்க வேண்டியதாகி விடும் . இலக்கை எட்டிய பின்னர் ஒரு ஆசிர்வாதமான புறக்கணிப்பை மேற்கொண்டால் மட்டும் போதுமானது . அது தன்னைப்போல் இரண்டு கோடி ... நான்கு கோடி ... என்று பெருகிய வண்ணமாகவே இருக்கும் .

10. பயணமே பரிசு .

இலக்கை அடைவது ஒருபுறம் இருக்கட்டும் . (மேற்கண்ட) வழிமுறைகளில் பரவசம் கொள்ளுங்கள் . ஏனெனில் நீங்கள் வழிமுறைகளில் தான் வாழ்கிறீர்கள் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14