பூஜ்யத்திலிருந்து ராஜ்யத்திற்கு

பூஜ்யத்திலிருந்து ராஜ்யத்திற்கு ...

Making money on Zero Investment

(முன் குறிப்பு : இந்தப் பதிவு இதில் குறிப்பிடப்பட்டுள்ள பங்குகளை வாங்குவதற்கான பரிந்துரை அல்ல . இந்த வழிமுறைகளில் மட்டும் கவனம் கொள்ளுங்கள்)

கோத்ரெஜ் குழுமம் 1897 ஆம் ஆண்டு பூட்டு தயாரிக்கும் நிறுவனமாகத் தொடங்கப்பட்டது . காலப்போக்கில் வேதிப்பொருட்கள் , மருந்துப் பொருட்கள் , ரியல் எஸ்டேட் மற்றும் நுகர்பொருள் என்று பல்வேறுபட்ட துறைகளில் கால் பதிக்கிறது . பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அப்போதைய அதன் பெயர் Godrej Soaps . 2001 ஆம் ஆண்டு நுகர்பொருள் துறையை மட்டும் தனியே பிரித்து பட்டியலிடுகிறது . பத்து ரூபாய் முக மதிப்பைக் கொண்ட ஒரு Godrej Soaps பங்குக்கு ஆறு ரூபாய் முக மதிப்பைக் கொண்ட ஒரு Godrej Industries பங்கு மற்றும் நான்கு ரூபாய் முக மதிப்பைக் கொண்ட ஒரு Godrej Consumer Products பங்கு . Godrej Soaps நிறுவனத்தின் அன்றைய விலை 55 ரூபாய் . நாம் 5500 ரூபாய்க்கு 100 பங்குகளை வாங்குவதாகக் கற்பிதம் செய்து கொண்டு கணக்கைத் தொடங்கலாம் . இவ்விதம் பிரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு  அப்போது எதிர்பார்க்கப்பட்ட  PE விகிதம் Godrej Industries நிறுவனத்திற்கு 3.5 மற்றும் Godrej Consumer Products நிறுவனத்திற்கு 7.5 (ஆதாரம்: equitymaster.com )

GCP நிறுவன பங்காதாயம்/ பங்குப் பிரிப்பு/ இலவசப்பங்கு பட்டியல் :

2002 - Rs.5.5 (முக மதிப்பு 4)
2003 - 8
2004 - 9
2005 - 12
2006 - 14
2007 - 3.75 (முக மதிப்பு 1)
2008 - 4
2009 - 4
2010 - 4.25
2011 - 4.50
2012 - 4.75
2013 - 5
2014 - 5.25
2015 - 5.5
2016 - 5.75
2017 - 15
2018 - 9 (இலவசப்பங்கு 1:1)
2019 - 15 (இலவசப்பங்கு 1:2)
2020 - 8

இது வெறும் பட்டியல் மட்டுமல்ல . நிறுவனத்தின் காலடித்தடத்தை அதன் பங்காதாயம் , பங்குப் பிரிப்பு மற்றும் இலவசப் பங்கு அளிப்பு வழியாகப் பார்க்கும் ஒரு மிக முக்கியமான பார்வை . பங்காதாயம் CAGR என்ற அடிப்படையில் சீராக உயர்ந்து வரும் பாங்கைக் கவனியுங்கள் . நிறுவனத்தின் பங்கு விலை என்பது இரைச்சல் (noise) பங்காதாயம் என்பது குறியீடு (signal) நீண்ட கால முதலீட்டாளருக்கு பங்காதாயம் ஒன்று தான் பணப்பாய்ச்சல் (cash flow) மேலும் நிறுவனங்கள் மற்ற தரவுகளில் (ஏ)மாற்றம் செய்தாலும் பங்காதாயம் வழங்குவதில் எந்த (ஏ)மாற்றமும் செய்ய முடியாது .

100 GCP பங்குகள் 1200 பங்குகளாக வளர்ந்திருக்கிறது . அதன் இன்றைய விலை ரூபாய் 950 . பங்குகளின் மதிப்பு ரூபாய் 1140000/-

Godrej industries க்கான பட்டியல் :

2001 - Rs.3/- (முக மதிப்பு 6)
2002 - 0.60
2003 - 2
2004 - 3
2005 - 4
2006 - 5
2007 - 1 (முக மதிப்பு 1)
2008 - 1.25
2009 - 1.25
2010 - 1.50
2011 - 1.75
2012 - 1.75
2013 - 1.75
2014 - 1.75
2015 - 1.75
2016 - 1.75
2017 - 1.75
2018 - 1.75
2019 - 1.15

Godrej Industries ன் 100 பங்குகள் 600 பங்குகளாக வளர்ந்திருக்கிறது . நிறுவனப் பங்கின் இன்றைய விலை 621 ரூபாய் . அதன் மதிப்பு ரூபாய் 372600/-

Godrej Industries நிறுவனம் Godrej Consumer Products, Godrej Agrovet, Godrej Properties போன்ற பட்டியலிடப்பட்ட நிறுவனங்களிலும் இன்னும் பட்டியலிடப்படாத  Nature's Basket போன்ற நிறுவனங்களிலும் பங்குகளை வைத்திருக்கிறது . இதன் மதிப்பையும் சேர்த்து அதன் PE விகிதம் உயர் அளவுகளில் (52.48) வர்த்தகமாகிறது .

Godrej Consumer Products ஐ பொறுத்தவரை இந்திய நிறுவனம் என்பதில் தொடங்கி இப்போது உலகெங்கும் தன் கிளைகளை விரித்திருக்கிறது. முதல் நீர்க்காமை (No equity dilution) இலாபகரமாக இலாபமீட்டல் (Higher ROCE) கடன் இல்லாமை (Nil debt/ Low debt) Brand வழி அகழி (Moat) நிறுவனத்தில் மிகை அளவிலான நிறுவனர் பங்கு (Higher share holding) அற வழிச் செயல்பாடு (Ethics) என்ற ஆறு தடை தாண்டும் ஓட்டத்திலும் நிறுவனம் வெற்றி கொள்வதால்  சந்தை உயர் அளவிலான PE மதிப்பை (55.09) வழங்குகிறது .

ஒரு பங்குச் சம்பாத்தியம் (Earnings Per Share) கூடுவதால் பங்கின் மதிப்பு கூடுகிறது . சந்தை , இந்த சீராக வளர்ந்து வரும் 'ஒரு பங்குச் சம்பாத்தியத்திற்கு' உயர் மதிப்பை வழங்குவதால் PE விரிவாக்கமும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது . EPS ஐயும் PE ஐயும் பெருக்கினால் பங்கின் விலை கிடைத்து விடும் என்று ஏற்கனவே பார்த்திருக்கிறோம் .

இவ்வாறாக ஆரம்ப முதலீடான 5500 ரூபாய் 275 மடங்கு கூடியிருக்கிறது .

நிறுவனம் பிரிக்கப்பட்ட பின்னர் ,  இருபது ஆண்டுகளில் 'சராசரியாக' ஒரு ஆண்டிற்கு 14 மடங்கு முதலீட்டுப் பெருக்கத்தை அடைந்திருக்கிறது . 'சராசரியாக' என்ற வார்த்தையில் கவனம் கொள்ளுங்கள் . ஆண்டுக்காண்டு நிறுவனப் பங்குகளின் விலை 14 மடங்கு கூடாது . மூன்று வருடங்களுக்கான முதலீட்டுப் பெருக்கத்தைக் கணக்கில் கொண்டால் இரண்டே முக்கால் வருடம் நிறுவனப் பங்குகளின் முதலீட்டுப் பெருக்கம் மந்தமாக இருக்கும் . மீதி கால் வருடத்தில் மூன்று வருட முதலீட்டுப் பெருக்கத்தையும் எட்டி விடும் . பங்குகளை வாங்கி விற்று வியாபாரம் செய்பவர்கள் இந்த இடத்தில் தான் இடறி விழுந்து விடுவர் .

2000 ல் நிறுவனம் 60:40 என்ற விகிதத்தில் பிரிக்கப்பட்டதை நினைவு கூர வேண்டுகிறேன் . 5500 ரூபாய் முதலீட்டில் Godrej Consumer Products நிறுவனத்தில் நம் முதலீடு 2200 ரூபாய் வருகிறது . இந்த 2200 ரூபாய் முதலீட்டை நிறுவனத்தின் முதல் மூன்று வருட பங்காதாயங்கள் மூலமாக நாம் திரும்பப் பெற்று விடலாம் . வேறு மாதிரி சொல்வதானால் நாம் வெறும் பூஜ்யம் ரூபாய் முதலீட்டில் 1140000 ரூபாய் சம்பாதித்திருக்கிறோம் .

கணக்கில் புலமை பெற்ற என் நண்பர்கள் சிலர் இதனை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் . சின்ன வயதில் நடந்த ஒரு சம்பவம் நெஞ்சில் நிழலாடுகிறது . ஒரு முறை எங்கள் பள்ளிக்கு மாயாஜால நிபுணர் ஒருவர் வருகை தந்திருந்தார் . மறு வாரம் நடைபெறவிருக்கும் அந்த நிகழ்ச்சிக்கு அறிமுக விளக்கம் ஒன்று பள்ளியின் காலைப் பிரார்த்தனைக் கூட்டத்தில் நடைபெற்றது . அப்போது அவர் நான் நெருப்பிலிருந்து அழகழகான பறவைகளை வரவழைப்பேன் . அவை உங்களுடன் கொஞ்சி விளையாடும் என்று சொன்னது இன்னமும் எனக்கு ஞாபகத்தில் உள்ளது . ஆனால் மாயாஜால நிகழ்ச்சியில் நடந்தது வேறு . நெருப்பிலிருந்து ஒரேயொரு புறா மட்டும் வந்தது . அது எங்களுடன் கொஞ்சியெல்லாம் விளையாடவில்லை . கொஞ்ச நேரம் அங்குமிங்குமாகப் பறந்து விட்டு மறைந்து விட்டது . அவர் அந்த அறிமுக உரையில் நெருப்பிலிருந்து ஒரேயொரு புறாவை மட்டும் வரவழைப்பேன் என்று உண்மையை சொல்லியிருந்தால் நன்றாகவா இருந்திருக்கும் ? அந்த மாயாஜால நிகழ்ச்சிக்கு ஒரு நாடகத்தன்மை கிட்டாமல் போயிருக்கும் அல்லவா ?

Godrej Consumer Products நிறுவனம் Godrej Industries நிறுவனத்தின் ஒரு அங்கம் என்று பார்த்தோம் . நிறுவனப் பிரிப்பின் பின்னர் மதிப்பு விடுவிப்பு (value unlocking) என்ற அடிப்படையில் அதன் பங்கு விலை அதனுடைய தாய்ப் பங்கான Godrej Industries நிறுவனப் பங்கை விட உயர் மதிப்பில் வர்த்தகமாவதையும் பார்த்தோம் . Godrej Industries நிறுவனம் Godrej & Boyce நிறுவனத்தின் ஒரு அங்கம். Godrej & Boyce நிறுவனம் இன்னும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத மிக மதிப்பு வாய்ந்த ஒரு நிறுவனமாகும். Aerospace, Appliances, Electricals & Electronics, Furniture, Security Solutions, Storage Solutions மற்றும் பல்வேறு துறைகளில் Godrej & Boyce நிறுவனம் இயங்குகிறது . ஒருவேளை அதன் IPO வெளி வந்தால் அதன் மதிப்புத் திறப்பு சாத்தியக்கூறுகளைச் சற்றே சிந்தித்துப் பாருங்கள் .

2000 லிருந்து இன்றைய தேதி வரை பொறுமையாக இந்தப் பங்குகளை யாராவது வைத்திருப்பார்களா என்று ஒரு வினா எழுவது இயற்கை . என் நண்பர் ஒருவரிடம் பங்குகளை பல்லாண்டுகள் வைத்திருப்பதில் தான் வெற்றிக்கான விதை சூட்சுமமாக இருக்கிறது என்று சொன்ன போது அவர் முகத்தில் ஒரு ஆச்சரியம் . அது அவருக்கு உண்மையிலேயே ஒரு செய்தி . தொலைக்காட்சி சானல்களில் நிலைய கலைஞர்கள் ஓயாமல் Target price மற்றும் Stop loss என்று சொல்லிச் சொல்லி பங்குகளிலிருந்து பணம் சம்பாதிக்க இலக்கு விலை வைத்து விற்பதும் மற்றும் நஷ்டத்தைத் தவிர்ப்பதும் மட்டுமே ஒரேயொரு வழி என்று நினைக்கும் தலைமுறை ஒன்றே உருவாகி விட்டது . 2008 ஆம் ஆண்டு Sub prime crisis ன் போது உலகெங்கும் உள்ள பங்குச்சந்தைகள் தலைகுப்புற விழுந்தன . அப்போது நான் மதிப்பு முதலீடாக Godrej Consumer Products ன் 50 பங்குகளை ஒரு பங்கு 150 ரூபாய் என்ற விலையில் 7500 ரூபாய்க்கு வாங்கி இன்றளவும் வைத்திருக்கிறேன் . அந்த 50 பங்குகள் இரண்டு இலவசப்பங்கு அளிப்பின் மூலமாக 150 பங்குகளாக வளர்ந்திருக்கிறது . அதன் தற்போதைய மதிப்பு 142500/- ரூபாய். சென்ற வருடத்திற்கான பங்கு ஈட்டு விகிதம் (dividend yield) 16% முதலீட்டுப் பெருக்கம் (capital appreciation) 19 மடங்கு . நிறுவனங்களின் மதிப்பை அடையாளம் கண்டு முதலீடு செய்வது ஒரு பாதி . நிறுவனங்களின் தொடர்ச்சியான மதிப்பு உருவாக்கத்தில் பங்கு கொள்வது மறு பாதி . பங்குச்சந்தை பாடத்தை நன்றாகக் கற்றுத் தெளிந்த பின் மதிப்பு முதலீடாக பங்குகளை வாங்கினால் நஷ்டத்தைத் தவிர்க்க வேண்டிய தேவையே எழாது . அதே மாதிரி உங்கள் இலக்கை day trader என்ற கிட்டப் பார்வையிலிருந்து decade trader என்ற தூரப் பார்வைக்கு மாற்றுங்கள் . பின்னர் உங்களுக்கே உங்களுக்காக பங்காதாயங்களின் என்றென்றைக்கும் வற்றாத ஒரு சுனை சுரக்கத் தொடங்கி விடும் . இந்த இடத்தில் இன்னொரு இரகசியத்தையும் உங்களுக்குச் சொல்லி வைக்கிறேன் . இந்த சுனையிலிருந்து தண்ணீரை எடுக்க வேண்டிய தேவையே இருக்காது . ஏனெனில் உங்களுக்குத் தாகமே எழாது . புதிய புதிய சுனைகளை இனங்காண்பதில் தான் உங்கள் தாகம் குடி கொண்டிருக்கும் . புதையலை விட புதையல் வேட்டை தான் உவப்பானது . வாரன் பபெட்டின் ஆத்ம நண்பர் சார்லி மஞ்சர் Enjoy the process along with the proceeds because you are living in the process only என்பதன் மூலமாக இதையே தான் கூற வருகிறார் . வழிமுறைகளிலும் அதனுடன் சேர்த்து வளமையிலும் மகிழ்ச்சி கொள்ளுங்கள் . ஏனெனில் நீங்கள் வழிமுறைகளில் மட்டுமே வாழ்கிறீர்கள் .

ஒரு சின்னக்கதை . கடவுளை நேரடியாகப் பார்க்க வேண்டும் என்று ஒருவர் அரும்பாடு பட்டார் . அது சம்பந்தமாகப் படிப்பது , சாமியார்களுடன் சுற்றுவது என்று அலைந்து திரிந்தார் . ஒருவேளை கடவுளை நேரடியாகப் பார்த்தால் அவரிடம் கேட்டுப் பெறவேண்டிய பொருட்களின் நீண்ட நெடிய பட்டியல் ஒன்றும் அவரிடம் எப்போதும் இருந்தது . ஒரு நாள் கடவுள் நேரடியாக அவருக்குக் காட்சி தந்தார் . கடவுளைப் பார்த்ததும் அவருடைய மனமெல்லாம் நிறைந்து விட்டது . கடவுளிடம் எதனையும் கேட்கத் தோன்றவில்லை. கடவுளும் புன்னகைத்தவாறே மறைந்து விட்டார் .

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14