ஆத்தும குணம் -1

ஆத்தும குணம் -1

Basic Instinct - 1

சின்ன வயதிலிருந்தே ராஜா ராமனுக்கு சூதாடுவதில் ஒரு சுவாரஸ்யம் இருந்தது . சிறுவனாக இருக்கும் போது தீப்பெட்டிப் படங்களை வைத்து கோலிக்குண்டு விளையாடுவதில் அது தொடங்கியது . பின்னர் தீப்பெட்டிப் படங்களுக்குப் பதிலாகக் காசு வைத்து சூதாடுவது என்று அது வளர்ந்தது . பள்ளியில் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்கள் இவன் சொல்வதற்கு மாறாக ஏதாவது சொன்னால் உடனே என்ன பந்தயம் என்று பேனா பென்சில் இவைகளைப் பணயமாக வைப்பது அவனின் வாடிக்கை . ஆனால் இந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே ஒன்றை அவன் கவனித்திருந்தால் உருப்பட்டிருப்பான் . இந்த சூதுகளில் ஒரு முறை இவன் வென்றால் மறுமுறை எதிராளி வெல்வதான ஒரு பாங்கு இருந்தது . துரதிர்ஷ்டவசமாக ராஜா ராமன் தான் அவ்வப்போது அடையும் வெற்றிகளை நன்கு ஞாபகத்தில் கொள்பவனாகவும் தோல்விகளை உடனே மறந்து விடுபவனாகவும் இருந்தான் . அப்புறம் வளர்ந்து வாலிபனான பின்னர் கொஞ்ச நாட்கள் லாட்டரிச் சீட்டு வாங்கிக் கொண்டிருந்தான் . பத்து ரூபாய்க்கு லாட்டரி வாங்கியதும் பத்து இலட்சக் கனவுகளில் மிதக்க ஆரம்பித்து விடுவான் . கட்டாயமாக முதல் பரிசு எனக்குத் தான் என்பதான தீவிரமான எண்ணம் ஒன்று அவனை ஆட்கொள்ளும் . இதில் என்ன வேடிக்கையென்றால் பரிசு எதுவும் விழாமல் அடுத்த மாதம் லாட்டரி வாங்கும் போதும் அதே எண்ணம் அதன் தீவிரம் சற்றும் குறையாமல் அவனை மூழ்கடிக்கும் . லாட்டரியை அரசாங்கம் தடை செய்ததில் அவனுக்கு மிகவும் வருத்தம் . குதிரைப் பந்தயம் , கிரிக்கெட் சூதாட்டம் என்று எதையும் அவன் விட்டு வைக்கவில்லை . அவன் படிக்கும் கதைப் புத்தகங்கள் , பார்க்கும் திரைப்படங்கள் அனைத்தும் கதாநாயகன் பூஜ்யத்திலிருந்து ராஜ்யத்தை உடனடியாக அடைந்தவர்களைக் குறித்ததாக மட்டுமே இருக்கும் . இப்படியாக ராஜா ராமன் கடைசியாக வந்தது பங்குச்சந்தைக்கு .

பங்குச்சந்தை தரகர் அலுவலகத்திற்குள் ராஜா ராமன் நுழைந்த அந்த நாள் நேற்று நடந்தது மாதிரி இன்னமும் அவன் நினைவில் இருக்கிறது . அதற்குள் நீண்ட நெடியதான பத்து ஆண்டுகள் கழிந்து விட்டன . காலம் தான் என்ன வேகமாக ஓடுகிறது ?

அந்தத் தரகர் அலுவலகத்தில் முதலீட்டுக் காலக் கணக்கிற்கு ஏற்ற மாதிரி தனித்தனிப் பகுதிகள் இருந்தன . Decade Investing என்று ஒரு பகுதி இருந்தது . தமிழில் 'பன்னெடுங்காலம்' என்று போட்டிருந்தார்கள் . அந்தப் பகுதியில் யாருமேயில்லை . Medium Term Investing என்று ஒரு பகுதி இருந்தது . தமிழில் ஐந்தாண்டுகள் . ஒரு ஐந்தாறு வாடிக்கையாளர்கள் அங்கு அமர்ந்திருந்தனர் . Instant Investing (தமிழில் 'இப்பவே') பகுதியில் ஒரே கூட்டமாக இருந்தது .  ராஜா ராமன் இதோ எனக்கான வாய்ப்பு என்று கூறிக் கொண்டான் .

இந்த மூன்று பகுதிகளுக்கும் முறையே உத்தமம் , மத்திமம் , அதமம் என்று பெயரிட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது .

ராஜா ராமன் எடுத்த எடுப்பிலேயே பெறுதிகளில் (derivatives) குதித்து விட்டான் . அரசாங்கம் பெறுதித் திட்டங்களை பங்குத் தொகுப்புக்கு இழப்புக் காப்பு (hedging) என்ற அடிப்படையில் மட்டுமே நடத்துகிறது . முதலில் நீங்கள் பங்குகளின் ஒரு தொகுப்பைக் கட்டமைக்க வேண்டும் . பின்னர் அந்தப் பங்குத் தொகுப்புக்கு ஏற்ப பெறுதிகளில் நிலைப்பாடு எடுத்துக் கொள்ளலாம் . அது கூடக் கட்டாயமில்லை . சந்தை ஏறி இறங்கும் தன்மை படைத்தது என்பதை நீங்கள் உளமார உணர்ந்து கொண்டால் சந்தையின் இந்த ஏற்ற இறக்கங்களை இரசிக்க ஆரம்பித்து விடுவீர்கள் . சந்தை இறங்கும் போது பங்குகளை வாங்கி இலாபமும் அடையப் பெறுவீர்கள் . உங்களுக்குப் பெறுதிகளே தேவைப்படாது . ராஜா ராமனுக்குப் பங்குத் தொகுப்பு ஏதுமில்லை . தொகுப்பு என்ன தொகுப்பு ஒரு பங்கு கூடக் கிடையாது . இருந்தாலும் அவன் பெறுதிகளில் அவ்வப்போது நிலைப்பாடுகளை எடுத்து வந்தான் . ராஜா ராமனை மட்டும் நாம் குறை சொல்ல முடியாது . இந்தியப் பங்குச்சந்தையில் ஏன் உலகம் முழுவதுமான பங்குச்சந்தைகளிலும் derivatives என்று சொல்லப்படும் இந்தப் பெறுதிகளில் தான் 90 சதவீத வர்த்தகம் நடைபெறுகிறது . உலகம் முழுமையும் நிறைய ராஜா ராமன்கள் இருப்பதாகத் தோன்றுகிறது . வாரன் பஃபெட்டின் , பெறுதிகள் முதலீட்டாளர்களையும் பொருளாதாரத்தையும் கொத்துக் கொத்தாகக் கொல்லும் ஆயுதங்கள் என்ற எச்சரிக்கை இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது .

ராஜா ராமன் Futures & Options என்று அழைக்கப்படும் இந்தப் பெறுதிகளில் மட்டுமின்றி பொருள் வர்த்தகம் (commodity trading) பண வர்த்தகம் (currency trading) என்று எல்லாவற்றிலும் கலக்கிக் கொண்டிருந்தான் . அதுவும் பணச்சந்தை பங்குச்சந்தை வர்த்தகத்தை விட பன்மடங்கு பெரியது . மேலும் அது இருபத்து நான்கு மணி நேரமும் வருடத்தின் 365 நாட்களும் நடைபெறுவதான ஒரு சந்தை . கோலிக்குண்டில் ஆரம்பித்து பெரியதொரு முன்னேற்றம் தான் .

ராஜா ராமனுக்குப் பெறுதிகளிலும் இந்தக் கோலிக்குண்டுக் கதை தொடர்ந்த வண்ணம் இருந்தது . ஒரு நிலைப்பாட்டில் கிடைக்கும் இலாபம் அடுத்த நிலைப்பாட்டில் கரைந்து விடும் . ராஜா ராமன் தினசரி வணிகத்தைக் கொஞ்ச நாட்கள் செய்து வந்தான் . அப்புறம் Short selling என்று இல்லாத பங்குகளை விற்று வாங்கி வந்தான் . இந்த வர்த்தகங்களுக்கான தரகு மற்றும் வரி முதலான உராய்வுச் செலவுகளில் கவனம் செலுத்த அவனுக்கு நேரமில்லை .

இதற்கிடையில் பத்தாண்டுகள் கழிந்து விட்டன . கொஞ்ச நாட்களாக ராஜா ராமனுக்கு ஓடு பொறியில் (Treadmill) ஓடிக் கொண்டிருப்பது மாதிரியான ஒரு உணர்வு ஏற்பட்டது . மேலும் 24 மணி நேரமும் கணினித்திரை முன் உட்கார்ந்து நிகழ்நிலை வர்த்தகத்தில் (online trading) ஈடுபட்டதால் கண்கள் பாதி காலியாகி விட்டன . இது போதாதென்று நாள் முழுவதும் மன அழுத்தத்திலேயே தொடர்ந்து இருக்க வேண்டியதான ஒரு சூழ்நிலை . ஒரு நாள் அமைதியாக அடங்கி இது வரை எவ்வளவு முதலீடு செய்திருக்கிறோம் , அந்த முதலீடுகளுக்கான உராய்வுச் செலவுகள் எவ்வளவு , வருமானம் எவ்வளவு கிடைத்திருக்கிறது என்று கணக்கிட்டவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது . அவன் ஓடு பொறியில் பின்னோக்கி ஓடிக் கொண்டிருந்திருக்கிறான் .
பன்னெடுங்காலத்திற்கு முன்னர் அவன் வாங்கி விற்ற , சமயங்களில் விற்று வாங்கிய பல பங்குகள் 50 மடங்கு 100 மடங்கு ஒரு சில பங்குகள் 500 மடங்கு என்ற அளவில் முதலீட்டுப் பெருக்கத்தை அடைந்திருப்பது ராஜா ராமனுக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போலிருந்தது . "அடக்கடவுளே !"

எதிர்த்தார்ப் போல் ஒருவர் நின்று கொண்டிருந்தார் . ராஜா ராமனுக்கு அவரை எங்கோ பார்த்தது போல இருந்தது . ரொம்பவும் பார்த்துப் பழகிய கருணையே வடிவான ஒரு முகம் .

ராஜா ராமன் விளிம்பு நிலை வர்த்தகத்தின் (margin trading) பொருட்டு வங்கிகளில் நிறையக் கடன் வாங்கியிருந்தான் . ஒரு வேளை வங்கியிலிருந்து வந்திருப்பவரோ ?

ராஜா ராமன் "நீங்கள் யார் ? "என்று கேட்டான் .

" நான் கடவுள் " என்றார் கடவுள்.

" உங்களைப் பார்த்தால் கடவுள் மாதிரி இல்லையே ? "வந்தவர் சாதாரண எட்டு முழம் வேட்டி மற்றும் ஜிப்பாவில் இருந்தார் .

கடவுள் " இப்படித்தான் ஒரு முறை இராமனாக வில் அம்புடன் வந்தேன் . ஜனங்கள் என்னை நம்பவில்லை. அது என்ன ராமா ராவ்வோ யாரோ என்று சொல்லி ஆட்டோகிராப் கேட்க ஆரம்பித்து விட்டார்கள் .அன்றிலிருந்து இந்த உடுப்பு தான் எனக்கான சீருடை "

ராஜா ராமன் " என்ன விஷயம் ? " என்றான் .

" நீங்கள் தான் என்னை  அழைத்தீர்கள் . நீங்கள் தான் சொல்ல வேண்டும் "

ராஜா ராமனுக்கு ஒரு மாதிரி இருந்தது . வந்தவரை நம்பலாமா வேண்டாமா என்று தெரியவில்லை . இருந்தாலும் இறுதியாக ஒரு பந்தயம் கட்டி விளையாடலாம் என்று தீர்மானித்துக் கொண்டான் . இவரிடம் பந்தயம் கட்டுவதால் இழப்பதற்கு ஏதுமில்லை . தன்னுடைய கதையை விலாவாரியாக எடுத்துச் சொன்னான் .

" இப்போது நான் என்ன செய்ய வேண்டும் ? "

" எனக்குப் பொன் பொருள் எதுவும் வேண்டாம் . அந்தத் தரகர் அலுவலகத்தில் நுழைந்த நாள் இன்றும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது . கால இயந்திரத்தில் என்னை அந்த நாளில் கொண்டு விட்டு விடுங்கள் . நான் பன்னெடுங்காலம் பகுதிக்குச் சென்று பிழைத்துக் கொள்வேன் '

ராஜா ராமன் மனதிற்குள் கடவுளுக்குத் தெரியாமல் (?) இன்னொரு குயுக்தியான கணக்கையும் போட்டு வைத்திருந்தான் . பத்தாண்டுகள் காலத்தில் பின்னோக்கிச் சென்று இன்றைக்கு பன்மடங்கு ஆகியிருக்கும் பங்குகளை அன்றைய விலையில் வாங்கி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்று விடலாம் .

கடவுள் அப்படியே ஆகட்டும் என்று ஆசிர்வதித்தார் .

அடுத்த கணம் ராஜா ராமன் தரகர் அலுவலக வாசலில் நின்று கொண்டிருந்தான் . 'பன்னெடுங்காலம்' பகுதியில் யாருமேயில்லை . 'ஐந்தாண்டுகள்' பகுதியில் ஐந்தாறு பேர் இருந்தார்கள் . ராஜா ராமன் அவசர அவசரமாக 'இப்பவே' பகுதியை நோக்கி நடந்தான் .

பின்னால் நின்று கொண்டிருந்த கடவுள் அதிர்ச்சியில் சிலையாக நின்று விட்டார் .  "அடக் கடவுளே ! "

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14