புதையல் எங்கே ?
புதையல் எங்கே ?
ராஜா ராமன் குடும்பத்தினரின் வாழ்க்கை கைக்கும் வாய்க்குமாக ஓடிக் கொண்டிருந்தது . ஆனால் எப்போதுமே இப்படி இருந்ததில்லை . ஒரு காலத்தில் ஊரிலேயே மிகவும் செல்வாக்கான குடும்பம் அவர்களுடையதாக இருந்தது . அவர்கள் வீட்டை பத்து நிலை வீடு என்பதாகக் குறிப்பிடுவார்கள் . பத்து நிலை வீடு என்றால் பத்து நிலைகள் வைத்துக் கட்டப்பட்ட வீடு . பத்து நிலைகள் என்றால் பத்து அறைகள் . அது அவர்கள் தாத்தா கட்டிய வீடு . அந்த நிலைகளுக்கான தேக்கு மரம் பர்மாவிலிருந்து வரப்பெற்றது . தாத்தா பர்மாவில் ஒரு வியாபார சாம்ராஜ்யத்தைக் கட்டியிருந்தார் . எப்போது பார்த்தாலும் வீட்டில் பத்து சொந்தக்காரர்கள் உண்டு உறங்கிய வண்ணம் இருப்பார்கள் . ஆச்சியையும் சும்மா சொல்லக்கூடாது . யாசகம் என்று ஆச்சியிடம் யாராவது கையை நீட்டினால் அவர்கள் வெறும் கையுடன் திரும்பியதாக சரித்திரம் கிடையாது . நம்மிடம் யாசகம் கேட்டு யாராவது வந்தால் முன் ஜென்மங்களில் நாம் அவர்களுக்குக் கடன் பட்டிருப்பதாகவும் அந்தக் கடனை நாம் சமன் செய்ய அவர்கள் நமக்கு வாய்ப்பு ஒன்றைத் தருவதாகவும் ஆச்சி கூறுவார் . சிறுவன் ராஜா ராமன் ஆச்சி ஆகப்பெரிய விஷயங்களைக் கூறுகிறார் என்ற மட்டில் புரிந்து கொள்வான் . இது தவிர ஆச்சி அக்கம் பக்கத்தினருக்கு மருத்துவ ஆலோசனைகள் கூறுவதும் வழக்கமாக இருந்தது . சிறுவன் ராஜா ராமனுக்கு ஒரு சம்பவம் இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது . ஒரு சமயம் பக்கத்து வீட்டுப் பெண் பற்களிலிருந்து திடீர் திடீரென்று இரத்தம் வடிவதான ஒரு நோய்க்கூறுடன் வந்திருந்தார் . ஆச்சி அவர்கள் வீட்டில் கரிசலாங்கண்ணி செடி இருக்கிறதா என்பதாகக் கேட்டார் . அந்தப் பெண் இல்லை என்பதாகச் சொன்னதும் ஆச்சி நன்றாக யோசித்துப் பார் என்றார் . கரிசலாங்கண்ணி செடி இல்லை , ஆனால் கரிசலாங்கண்ணி பொடி இருக்கிறது என்றார் . அது தானே பார்த்தேன் . கடவுள் நோயைக் கொடுத்து மருந்தையும் கொடுத்து விடுவானாக்கம் . ராஜா ராமனுக்கு இதெல்லாம் பாதி புரியாது . எல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது , தாத்தா பங்குச்சந்தையில் குதிக்கும் வரை ...
தாத்தாவிற்குத் திடுதிப்பென்று பங்குச்சந்தையில் ஈடுபாடு வந்ததற்கான காரணம் எதுவும் தெரியவில்லை . இது குறித்து ஆச்சியிடம் கேட்டால் குட்டியைத் தூக்கி ஆட்டில் போட்டார் , ஆட்டைத் தூக்கி குட்டியில் போட்டார் என்று கூறுவார் . என்ன நடந்தது என்பது காலத்தின் பனி மூட்டத்துக்குள் மறைந்து விட்டது . பெரிய கதையைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் தாத்தா செங்கல் செங்கலாகக் கட்டிய வர்த்தக சாம்ராஜ்யம் சுக்கு நூறாக இடிந்து விழுந்து விட்டது . சினிமாக்களில் கதாநாயகனின் தந்தைக்கு பம்பாயிலிருந்து இந்த மாதிரி பங்குச்சந்தையில் நஷ்டமாகி விட்டது என்று ஒரு ட்ரங்க் கால் வரும் . உடனே அவர் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சாய்ந்து விழுந்து விடுவார் . இது ராஜா ராமனின் தாத்தா விஷயத்தில் உண்மையாகி விட்டது .
தாத்தாவின் மறைவுக்குப் பின்னர் கொஞ்ச காலம் ராஜா ராமனின் அப்பா தாத்தாவின் வர்த்தகங்களைக் கவனித்து வந்தார் . இருந்தாலும் தாத்தாவின் திடீர் மறைவு அந்தக் குடும்பத்தின் ஆணி வேரை அசைத்துப் பார்த்து விட்டது .
ராஜா ராமனின் தந்தைக்குப் பங்குச்சந்தை என்றாலே ஒரு கசப்புணர்வு . நன்றாக இருந்த ஒரு குடும்பத்தை அது புரட்டிப் போட்டதை அவரால் மறக்கவே முடியவில்லை .
ஒரு குடுகுடுப்பைக்காரன் அவர்கள் வீட்டிற்கு அவ்வப்போது வந்து நாலு வார்த்தை நல்லதாகச் சொல்லி யாசகம் வாங்கிச் செல்வது வழக்கம் . ஒவ்வொரு முறையும் இந்த வீட்டில் ஒரு புதையல் இருக்குது சாமி என்று அவன் கூறுவது வழக்கமாக இருந்தது . இந்த முறையும் இந்த வீட்டில் ஒரு புதையல் இருக்குது சாமி உன் கஷ்டமெல்லாம் தீரப் போகுது என்றான் குடுகுடுப்பைக்காரன் .ராஜா ராமனின் தந்தை எங்க புதையல் இருக்குது கடன் தான் இருக்குது என்று சலித்துக் கொண்டார் .
ராஜா ராமனின் தந்தை பங்குச்சந்தையில் அவ்வப்போது கரடிகள் வந்து ஓலமிடும் போது அதை உள்ளூர ரசித்து வருவது வழக்கமாக இருந்தது . பங்குச்சந்தை இன்று மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது , முதலீட்டாளர்களின் பணம் இத்தனை கோடி மாயம் என்ற தினசரிப் பத்திரிகைகளின் செய்திகளை ஊன்றிப் படிப்பார் . பங்குச்சந்தையில் செயலாக இருக்கும் அவர் நண்பர்களைக் கைபேசியில் அழைத்து இன்று எவ்வளவு நஷ்டம் என்று விசாரிப்பார் . காளைகள் சந்தையில் வந்து கூத்தாடும் போது கரடிகள் மாயமாவது மாதிரி ராஜா ராமனின் தந்தையும் மாயமாகி விடுவார் .
தாத்தா இறந்து கொஞ்ச நாட்கள் வரை டிவிடெண்ட் காசோலைகள் அவ்வப்போது வருவது வழக்கம் . ராஜா ராமனின் தந்தை அதில் கப்பல் செய்து ராஜா ராமனுக்கு விளையாடக் கொடுப்பது வழக்கமாக இருந்தது . ராஜா ராமனின் அம்மாவுக்கு மாமனாரின் பேரில் கொஞ்சம் மரியாதை இருந்தது . எதற்கு இந்த மாதிரி செய்கிறீர்கள் என்று கணவனைக் கடிந்து கொள்வாள் . ஆமாம் , பிசாத்துக் காசு பத்து ரூபாய் , இதற்கு ஒரு செக் வேற ... அவர்கள் அந்த வீட்டை விற்று விட்டு வாடகை வீட்டுக்கு வந்த பின்பு அந்தக் காசோலைகள் வருவதும் நின்று விட்டது .
ராஜா ராமனுக்கும் அவனுடைய தந்தை மாதிரியே பங்குச்சந்தையின் மேல் ஒரு இனம் புரியாத வெறுப்பு ஏற்பட்டு விட்டது . ராஜா ராமன் ஒரே மகன் . ஆண்டாண்டு காலமாக ஆடிட்டர் படிப்பு படித்துக் கொண்டிருக்கிறான் .
அந்த விதியான நாளும் வந்தது . ஒரு நாள் ராஜா ராமன் பரணை ஒழுங்கு படுத்தும் போது மஞ்சள் பை ஒன்று தட்டுப்பட்டது . அம்மாவிடம் கேட்ட போது தாத்தாவின் பங்குப் பத்திரங்கள் என்பதாகவும் மாமனாரின் நினைவாக வைத்திருப்பதாகவும் கூறினார் . மேலும் அப்பாவுக்குத் தெரியாமல் அதனை வைத்திருப்பதாகவும் அவர் பார்த்தால் கோபம் கொள்வார் என்றும் சீக்கிரம் பார்த்து விட்டு வைத்து விடு என்றும் கேட்டுக் கொண்டார் .
பங்குப் பத்திரங்கள் தொட்டால் உதிர்ந்து விடும் நிலையை எட்டியிருந்தன .
அப்பா சொன்னது சரி தான் . எல்லாம் குப்பைப் பங்குகளாக இருந்தன . பாதி நிறுவனங்களின் பெயர் கூட கேள்விப்பட்டதாக இல்லை . Hindustan Motors நிறுவனம் கொஞ்சம் தெரிந்ததாக இருந்தது . Electrosteel Castings , AMJ Land Holdings போன்ற நிறுவனங்கள் கொஞ்சம் பரிச்சயமானதாக இருந்தன . Western India Vegetable Products Limited என்று மூன்று பங்குகள் தட்டுப்பட்டன . எதற்காக மூன்றே மூன்று பங்குகளை வாங்கி அதனை வேலை மெனக்கெட்டு பாதுகாத்து வைத்திருந்திருக்கிறார் என்று தெரியவில்லை .
இதற்கிடையில் ராஜா ராமனின் அப்பா வந்து விட்டார் . தாத்தாவின் பங்குப் பத்திரங்களைப் பார்த்ததும் அவருக்குப் பழியாகக் கோபம் வந்தது . அந்த ஆளோட ஒரு பொருள் கூட இந்த வீட்ல இருக்கக்கூடாது என்று அந்தப் பத்திரங்களைச் சுக்கு நூறாகக் கிழித்தெறிந்தார் .
வெகு நாட்களாக வராமலிருந்த குடுகுடுப்பைக்காரன் மறுநாள் வந்தான் . வந்தவன் இந்த முறை உங்கள் வீட்டில் புதையல் இருக்கிறது என்பதாக ஏதும் சொல்லவில்லை . ராஜா ராமனின் தந்தை அவனை வம்புக்கு இழுத்தார் . என்னப்பா ? புதையல் கிதையல் என்று எதுனாச்சும் சொல்லுவியே ? இந்த முறை ஒன்னும் சொல்லலியே ? குடுகுடுப்பைக்காரன் புதையல் எதுவும் இல்லை என்றான் . இதைத்தானப்பா நான் அன்னையிலிருந்து சொல்றேன் . இப்பவாவது புரிஞ்சிக்கிட்டா சரி !
கதை இந்த அளவில் முடிவடைகிறது .
ஒரு மிக முக்கியமான பின் குறிப்பு : Western India Vegetable Products Company என்பது பின்னர் WIPRO என்பதாகப் பெயர் மாற்றம் பெற்றது . ராஜா ராமனின் தாத்தா 1945 ஆம் ஆண்டு வாங்கி வைத்திருந்த , ராஜா ராமனின் தந்தை கிழித்தெறிந்த அந்த மூன்று விப்ரோ பங்குகளின் இன்றைய மதிப்பு ரூபாய் 70 கோடி .
Comments
Post a Comment