குறுகிய வழி

குறுகிய வழி

நண்பர் ஒருவர் ஒரு விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஒரு சிலர்    தினசரி வணிகம்  , ரூபாய் பங்கு முதலீடுகள் மற்றும் பெறுதிகள் (F & O) வாயிலாகத் தொடர்ச்சியாகப் பணம் ஈட்டிய வண்ணம் இருக்கிறார்களே, அதைக் குறித்து உங்கள் கருத்து என்ன என்பதாகக் கேட்டார். 

ஒரு சிலர் என்பதில் ஒரு திருத்தம். ரொம்பவும் அபூர்வமான மிக ஒரு சிலர். Richard Lustig என்பவர் 7 முறை லாட்டரியில் மிகப்பெரிய பரிசுகளை வென்றிருக்கிறார். Learn how to increase your chances of winning the lottery என்று புத்தகம் கூட எழுதியிருக்கிறார். இப்படி ஒரு சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கலாம். இது விதிவிலக்கான மிகவும் சிறுபான்மை. நாம் பெரும்பான்மையைத் தான் கணக்கில் கொள்ள வேண்டும். 

தினசரி வர்த்தகம் மூலமாகவோ அல்லது ரூபாய் பங்கு முதலீடு மற்றும் பெறுதிகள் மூலமாகவோ பணம் ஈட்டி உலகப் பணக்காரர்கள் வரிசையில் யாரும் இடம் பெறவில்லை. பில்கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குதாரர் என்ற அடிப்படையில் உலகப் பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். அதே மாதிரி மதிப்பு முதலீட்டின் மூலமாக மட்டும் வாரன் பஃபெட் உலகப் பணக்காரர் ஆகியிருக்கிறார். 

தினசரி வர்த்தகம், ரூபாய் பங்கு முதலீடு மற்றும் பெறுதிகள் இந்த மூன்றுமே குறுகிய கால அளவைக் கொண்டவை. மேலும் இந்தக் குறுகிய காலத்திற்குள் நாம் நினைத்த திசையில் அவை பயணிக்க வேண்டும். தினசரி வணிகம் என்பதன் ஆயுள் மிக மிகக் குறுகியது. ஒரேயொரு நாள் மட்டுமே. ரூபாய்  பங்கு முதலீட்டின் மதிப்பு (?) அதனளவில் இல்லை. மாறாக அது மற்றவர்களின் முட்டாள்தனத்தைச் சார்ந்திருக்கிறது. Futures & Options என்பதாக அழைக்கப்படும் பெறுதிகளும் தங்களுக்கான மதிப்பை மற்ற ஒன்றிலிருந்து பெறுபவை மட்டுமே. எனவே தான் அவை பெறுதிகள் என்று அழைக்கப்படுகின்றன. ஒரு பங்கின் F & O என்பதன் மதிப்பு அந்தப் பங்கிலிருந்து பெறப்படுகிறது. They derive the value from the underlying shares. Hence they are called as derivatives. பெறுதிகளின் கால அளவும் குறுகியது. மேலும் பெறுதிகளில் இன்னொரு பிரச்னையும் உள்ளது. பெறுதிகள் குறுகிய கால அளவில் நீங்கள் எதிர்பார்க்கும் திசையில் நகரவேண்டும். Call option என்றால் பங்கின் விலை உயர வேண்டும். Put option என்றால் பங்கின் விலை குறைய வேண்டும். F & O என்பதை ரொம்பவும் விளக்க முடியாது. அவ்வாறு விளக்க முயற்சித்தால் நாம் என்ன சொல்ல வருகிறோம் என்று நமக்கே தெரியாமல் காணாமல் போய் விடுவோம். 

மேலே குறிப்பிட்ட இந்த ஊக வணிகங்கள் குறித்துக் கதை வடிவில் விளக்க முயற்சிக்கிறேன். 

ஒரு முறை காசு சுண்டும் போட்டி ஒன்று நடைபெற்றது. யார் தொடர்ந்து தலை சுண்டுகிறார்களோ அவர்கள் வெற்றி பெற்றவர்கள். 1000 பேர் போட்டியில் கலந்து கொள்கிறார்கள். சராசரியாக 500 பேருக்குத் தலை விழுகிறது. மீண்டும் இந்தத் தலை எடுத்த 500 வெற்றியாளர்களும் போட்டியைத் தொடர்கிறார்கள். இம்முறை 250 வெற்றியாளர்கள். இவ்வாறே ஒன்பதாவது நிலையில் ஒரேயொரு வெற்றியாளர் இருப்பார். அவர் தான் உலகின் #1 தலை சுண்டி. உடனே அவர் 'நான் எப்படி உலகின் #1 தலை சுண்டியானேன்?' என்று புத்தகம் எல்லாம் எழுதுகிறார். அதில் காசை எப்படிக் காற்றில் 'விசுக்'கென்று வீச வேண்டும், கையில் எண்ணெய் தடவிக் கொண்டால் அது தலை விழுவதற்கு எவ்வாறு உதவும் என்பதையெல்லாம் விவரிக்கிறார். அது பெஸ்ட் செல்லர் வரிசையில் இடம் பிடித்து விடுகிறது. நிகழ்தகவு விதிகளின் படி ஒரு முறை காசு சுண்டினால் 50 சதவீதம் தலை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு ஒன்பதாவது நிலையில் ஒரேயொரு வெற்றியாளர் கட்டாயமாக இருப்பார். பத்தாவது முறையாக அவர் காசை சுண்டினால் தலை வருவதற்கான வாய்ப்பு மீண்டும் 50 சதவீதம் உள்ளது. உங்களுக்கு இந்தக் கணக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். காசு சுண்டும் போட்டியில் மட்டுமல்ல, பங்குச்சந்தை ஊக வணிகங்களிலும் ஒரு சிறுபான்மை வெற்றியாளர் இருந்தே தீருவார். நாம் இந்த சிறுபான்மை வெற்றியாளர்களைக் கணக்கில் கொள்ளக்கூடாது. மாறாக பெரும்பான்மை தோல்வியாளர்களைத் தான் கவனிக்க வேண்டும். 

மேலும் இந்த அளவீடு செய்வதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஒருமுறை தச்சர் ஒருவர் கல்லூரி விடுதிக்குக் கட்டில் செய்ய அளவீடு செய்யும் பொருட்டுச் சென்றார். அது விடுமுறைக்காலம். மாணவர்கள் யாரும் விடுதியில் இல்லை. தச்சருக்கோ கட்டில் செய்வதற்கு சராசரி மாணவன் ஒருவனின் உயரம் கட்டாயம் தேவைப்படுகிறது. அப்போது பனிரெண்டு மாணவர்கள் வருகிறார்கள். தச்சர் அவர்களைப் பார்த்து திருப்தியடைந்தவராகச் சென்று விடுகிறார். அந்த மாணவர்கள் கல்லூரி கூடைப்பந்து அணியைச் சேர்ந்தவர்கள். பயிற்சி செய்யும் பொருட்டு அவர்கள் விடுமுறை எடுக்கவில்லை. ஒவ்வொருவரும் நன்கு ஈடு சாடாக அவ்வளவு உயரமாக இருப்பார்கள்.  உயரம் என்றால் அப்படி ஒரு உயரம். கூடையை எட்டிப்பார்த்து அதற்குள் பந்தைப் போட்டு விடுவார்கள். தச்சர் துரதிர்ஷ்டவசமாக இவர்களை அளவீடாகக் கொண்டு விடுதி மாணவர்கள் அனைவருக்கும் கட்டிலைச் செய்து விடுகிறார். எவ்வளவு மர விரயம்? எவ்வளவு பண விரயம்? 

இன்னொரு கதையையும் கூறுகிறேன். ஒரு ஊரில் மிகவும் பணக்காரரான ஒருவர் இருந்தார். அவருக்கு வேலை வெட்டி என்று எதுவும் கிடையாது. மற்றவர்கள் அனைவரும் காலையில் எழுந்து தத்தம் வேலைகளுக்கும், தொழில்களுக்கும் செல்வதைக் கேலியும் கிண்டலும் செய்தவாறே பொழுதைக் கழிப்பது அவருக்கு வாடிக்கையாக இருந்தது. அவருக்கு எப்படி வருமானம் கிடைக்கப் பெறுகிறது? அவர் ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால் பெரிய கோடீஸ்வரர் ஆகி விட்டார். போட்டி என்னவென்றால் துப்பாக்கி ஒன்றில் ஐந்து ரவைகளை நிரப்பி ஒரு துளையை மட்டும் காலியாக விட்டு விட்டு நெற்றிப் பொட்டில் வைத்துச் சுடுவது... காலியான துளை வந்தால் வெற்றி பெறுவார். பரிசுத்தொகை பத்து கோடி. அவர் இவ்வாறு தான் பணக்காரர் ஆனார். வழக்கம் போல ஒரு முறை பங்குச்சந்தை மதிப்பு முதலீட்டாளர் ஒருவரைக் கிண்டல் செய்தார். நீங்கள் தினமும் மூளையைக் கசக்கி முதலீடு செய்கிறீர்கள். நான் ஒரே அடியில் பணக்காரனாகி விட்டேனாக்கும். அதற்கு முதலீட்டாளரின் பதில். நீங்கள் சென்றது குறுகிய வழி. குறுகியது என்றால் அவ்வளவு குறுகியது.   துப்பாக்கியின் ஒரு துளைக்கும் மறு துளைக்குமானது. குண்டூசி ஒன்றின் காதை  ஒத்தது. அடுத்த துளை வெடிக்கப் பெற்றிருந்தால் ...? நான் செல்வது அகலமான ராஜ பாட்டை. இந்தப் பாதையில் படுகுழிகள் இருந்தாலும் பாதுகாப்பு வழிகளையும் நான் அறிவேன். ஒவ்வொரு இடுக்கண் ஊடாகவும் வாய்ப்பின் ஒரு வாசல் திறந்தே இருக்கும். இந்தப்பாதையின் முடிவில் எனக்கான பரிசு காத்துக் கொண்டிருப்பதை நான் அறிவேன். மேலும் இந்தப் பயணமே எனக்கான பரிசும் கூட.

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14