வாய்ப்பு விலை - 1
வாய்ப்பு விலை - 1
Opportunity Cost- 1
பங்குச்சந்தை சமீப காலமாகக் கூடவும் இல்லை. குறையவும் இல்லை. ஒரு வரம்புக்கு உட்பட்டு (Range bound) வர்த்தமாகிக் கொண்டிருக்கிறது. தப்பித்தவறி பங்குச்சந்தை மேலேறிச் சென்றாலும் குறியீட்டுப் பங்குகள் மட்டுமே விலை கூடுகிறது. தரமான , முதலீட்டுப் பெருக்கத்தை ( Capital Appreciation) அடையக்கூடிய பங்குகளை மதிப்பு முதலீட்டு அடிப்படையில் வாங்கலாம் என்றாலும் அவற்றின் பங்கு ஈட்டு விகிதம் (Dividend Yield) மிகவும் குறைவாகவே இருக்கும். எனது பங்குத் தொகுப்பிலிருந்து வரும் வருமானம் பங்காதாயம் மட்டும் தான். இலாபத்தைப் பிடித்தல் (Profit Booking) எனக்கு ஒத்து வராது. எனவே நான் பங்காதாயத்தைக் கூட்ட வேண்டும். அவ்வாறெனில் பங்கு ஈட்டு விகிதம் அதிகமாகக் கொடுக்கக்கூடிய , அதே சமயம் குறைவான முதலீட்டுப் பெருக்கத்தை அடையக்கூடிய பங்குகளில் நான் முதலீடு செய்தாக வேண்டும். என் முன்னே இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. ஒன்று பங்கு ஈட்டு விகிதம் குறைவாகக் கொடுக்கக்கூடிய தரமான பங்குகளில் மதிப்பு முதலீடு செய்வது. மற்றொன்று பங்கு ஈட்டு விகிதம் அதிகமாகக் கொடுக்கக்கூடிய பங்கு ஈட்டு விகிதப் பங்குகளில் (Dividend Yield Stocks) முதலீடு செய்வது. நான் இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய முடியும். ஒரு கதவைத் திறந்தால் மற்றொரு கதவு மூடிக் கொள்ளும். இது தான் opportunity cost தமிழில் வாய்ப்பு விலை என்று அழைக்கப்படுகிறது.
வாய்ப்பு விலை வாழ்க்கையில் எல்லா இடங்களிலும் தலைகாட்டும். ஒரு சாதாரண நடைப்பயிற்சியை எடுத்துக் கொள்ளலாம். ஒன்று நீங்கள் நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். அல்லது தூங்கலாம். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மட்டுமல்ல. பெரும் பெரும் பிரச்னைகளுக்கான தீர்வுகள், விஞ்ஞானிகளுக்கு, காலாற நடக்கும் போது தான் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. இந்தப் பதிவை எழுதுவதற்கான புதுப்புது உத்திகள் எனக்கு நடைப்பயிற்சியின் போது கிடைக்கப்பெற்றதை இந்த இடத்தில் சொல்லிக் கொள்ள விழைகிறேன். நடைப்பயிற்சியை மேற்கொள்ளாமல் இருந்தால் நீங்கள் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியாது. நடைப்பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பதற்கான வாய்ப்பு விலை அல்லது வாய்ப்பு இழப்பு ( Opportunity loss) உங்கள் உடல் மன ஆரோக்கியம் மேம்படாமை.
நீங்கள் மாருதி கார் வாங்கலாம் அல்லது மாருதி ஷேர் வாங்கலாம். கார் வாங்கினால் ஒரு சௌகர்யம் தான். மறுக்கவில்லை. சமூகத்தில் உங்கள் அந்தஸ்து கூடுகிறது. உண்மை. ஆனால் கார் வாங்கினால் உண்மையில் நாம் காரை மட்டும் வாங்கவில்லை. அதனோடு மற்றும் சில செலவுகளையும் சேர்த்தே வாங்குகிறோம். காரைக் கடையிலிருந்து வெளியே எடுப்பதில் இருந்து பார்க்கலாம். கடையை விட்டு கார் வெளியே வந்ததும் தேய்மானம் ஆரம்பித்து விடும். ஒரு பேச்சுக்கு உங்கள் காரை விற்பதாக வைத்துக் கொள்வோம். அது இப்போது புத்தம் புதிய (brand new) கார் அல்ல. அது உபயோகப்படுத்தப்பட்ட (Second hand) கார் தான். விலை கம்மியாகத் தான் விற்க முடியும். குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்பு (service) க்கு உட்படுத்த வேண்டும். காரை சும்மாவேனும் தாழ்வாரத்தில் வைத்து அழகு பார்க்க முடியுமா? பக்கத்தில் இருக்கும் பிள்ளையார்பட்டிக்காவது சென்றே ஆக வேண்டும். சொந்தக்காரர் யாராவது காரை கடன் கேட்டால் கொடுத்து விட்டு கார் பத்திரமாகத் திரும்ப வரும் வரை கெதங் கெதங்கென்று காத்திருக்க வேண்டும். ஒரு கண்ணாடி உடைந்தாலும் புதுக் கண்ணாடி வாங்க ஆயிரங்களில் செலவாகும். சரி, மாருதி காருக்குப் பதிலாக மாருதி ஷேரை வாங்கினால் என்ன ஆகியிருக்கும் என்று பார்க்கலாம். அதற்குமுன் உலகின் சிறந்த மதிப்பு முதலீட்டாளர்களில் ஒருவராகிய டெம்பிள்டன் கார் வாங்கிய கதையைப் பார்த்து விடுவோம்.
டெம்பிள்டனின் அலுவலகத்திற்கு அருகில் பழைய பொருட்களை ஏலம் விடும் ஒரு நிறுவனம் இருந்தது. சில சமயங்களில் சில பொருட்களை ஏலம் கேட்க யாரும் முன்வர மாட்டார்கள். அவ்வாறான தருணங்களில் டெம்பிள்டன் அந்தப் பொருட்களை மதிப்பு முதலீடு என்ற அடிப்படையில் வாங்குவது வழக்கம். இந்த வழக்கம் அவர் பங்குச்சந்தையில் மதிப்பு முதலீட்டாளராக வெற்றி பெற பேருதவியாக இருந்தது. ஒரு சமயம் இவ்வாறாக டெம்பிள்டன் இரண்டு பழைய ஃபோர்டு கார்களை அடிமாட்டு விலைக்கு வாங்கினார். அந்த இரண்டு கார்களையும் பொறியாளரிடம் கொடுத்து அவற்றின் நன்றாக இயங்கும் பாகங்களைக் கொண்டு புதிய கார் ஒன்றை உருவாக்கிக் கொண்டார். அந்தக் காரை எட்டு வருடங்களுக்கும் மேலாகப் பயன்படுத்தி விட்டு அவர் வாங்கிய விலையைப் போல் பன்மடங்கு விலையில் விற்று விட்டார். வாரன் பஃபெட் இன்னும் அவருடைய பழைய வீட்டில் தான் எளிமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய வீட்டை Buffetts Folly என்று சொல்வார். அதாவது பஃபெட்டின் முட்டாள்தனம். டாடா நிறுவனருக்கு அந்த வீடு கூடக் கிடையாது. வாரன் பஃபெட் ஐபோன் வைத்துக் கொள்ளவில்லை. இத்தனைக்கும் அவர் ஆப்பிள் நிறுவனப்பங்குகளை வைத்திருக்கிறார்.
மாருதி நிறுவனம் 2003 ஆம் வருடம் 5 ரூபாய் முக மதிப்பு உள்ள ஒரு பங்கை 125 ரூபாய் என்ற உயர் மதிப்பில் வெளியிட்டது. அதன் பங்கு ஒன்றின் தற்போதைய விலை 7500 ரூபாய். ஒருவர் 2003 ல் மாருதி கார் வாங்குவதற்குப் பதிலாக மாருதி ஷேரில் ஒரு இலட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் அதன் இன்றைய மதிப்பு 60 இலட்சம்.
மேலும் படிக்க : வாய்ப்பு விலை - 2
வீடு வாங்க வேண்டாம் என்றோ அல்லது கார் வாங்க வேண்டாம் என்றோ நான் சொல்ல வரவில்லை. எந்தப் பொருளை வாங்கினாலும் தன்னுணர்வுடன் (consciousness) வாங்குங்கள்.
இவ்வாறாக வாழ்க்கையில் நாம் செல்லும் ஒவ்வொரு வழிக்குமான வாய்ப்பு விலையைக் கணக்கிட்டுப் பாருங்கள். பெரும்பாலோனோர் பயணிக்காத வழியில் பயணியுங்கள். அது தான் அனைத்திற்கும் அடிப்படை.
Comments
Post a Comment