பங்குக்கதை - 1
பங்குக்கதை - 1
(இந்தக் கதையில் வரும் பெயர்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல. எண்ணங்கள் மட்டும் தான் கற்பனை. எண்கள் அனைத்தும் உண்மை)
சங்கரன் கடைசி முறையாக சிகரெட்டை ஒரு இழுப்பு இழுத்து விட்டுக் காலடியில் போட்டு ஒரு நசுக்கு நசுக்கினார். பத்து வருடப் பழக்கம். கொஞ்சம் ஏக்கமாகத் தான் இருந்தது. மாதம் இதற்காக நூறு ரூபாய் தண்டம் அழுவது அவருக்குப் பிடிக்கவில்லை. மற்றபடி சமூகத்திலும் இந்தப் பழக்கத்திற்கு அவ்வளவு மரியாதையில்லை. மகன் வேறு, ஒரு மாதிரி பார்க்கிறான். ஒரே மகன். ஆடிட்டர் படிப்பு படித்துக் கொண்டிருக்கிறான்.
சங்கரனின் நண்பர் ஒருவர் பங்குச்சந்தையில் புலி. அவர் ஒரு தகவலைச் சொல்லியிருந்தார். அவர் பிடிக்கும் சிகரெட் தயாரிக்கும் நிறுவனம் , பெயர் கூட ITC என்று சொன்னதாக ஞாபகம் , தனது பங்குகளை வெளியிடப் போகிறதாம். பத்து ரூபாய் பங்கு பதினைந்து ரூபாய் என்று ஏதேதோ சொன்னார். சங்கரனுக்குப் பாதி புரியவில்லை. இந்த சிகரெட்டைப் புகைத்துப் புகைத்து மூளை மழுங்கி விட்டது.
சங்கரன் இரயில்வேயில் guard வேலை பார்க்கிறார். இரவுப் பணிக்கு அடிக்கடி சென்று தான் இந்தப் புகைப்பழக்கம் ஒட்டிக் கொண்டது. இரவுப் பணி என்றால் இரண்டு மடங்கு படி தருவார்கள். சம்பளம் தனி. இந்த மாதிரி கிடைக்கும் பணத்தையெல்லாம் ஊதித் தள்ளுவதிலேயே காலம் கழிந்து விட்டது.
சங்கரனுக்குப் பிடித்த எழுத்தாளர் தமிழ்வாணன். சங்கர்லால் துப்பறியும் ' கருகிய கடிதம்' நாவல் எல்லாம் அவருக்குத் தலைகீழ் மனப்பாடம். தமிழ்வாணன் ஒரு கட்டுரையில் ' மடைமாற்றம்' என்பதான ஒரு கருத்தாக்கத்தைச் சொல்லியிருந்தது அவருக்கு நினைவில் இருந்தது. அது என்னவென்றால் ஒரு கெட்ட பழக்கத்திலிருந்து விடுபட இன்னொரு நல்ல பழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும். கெட்ட பழக்கத்தை மடைமாற்றம் செய்து நல்ல பழக்கத்திற்குத் திருப்பி விட வேண்டும். சங்கரன், விவசாயிகள் நிலத்திற்கு நீர் பாய்ச்சும் போது மடையை மாற்றி விடுவதைச் சின்ன வயதில் பார்த்திருக்கிறார்.
சங்கரனுக்குப் பங்குச்சந்தை குறித்தெல்லாம் அவ்வளவாகத் தெரியாது. இருந்தாலும் தொலைத்த இடத்தில் தானே பணத்தைத் தேட வேண்டும்? சிகரெட்டில் விட்ட பணத்தைச் சிகரெட்டில் பிடித்தே தீர வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டார்.
சங்கரன், ITCன் 100 பங்குகளை 1500 ரூபாய்க்கு வாங்கினார். 1976 ல் 1500 ரூபாய் என்பதெல்லாம் பெரிய தொகை. அந்தச் சமயத்தில் ஒரு சம்பள பாக்கி போட்டிருந்தார்கள். சங்கரனுக்கு முன்பே சொன்ன மாதிரி அவ்வளவு மூளை கிடையாது. ஆனால் ஒரு செக்கு மாட்டுத்தனம் உண்டு. ஒன்றைத் தொடங்கினால் தொடங்கியது தான். அதனால் தான் உதட்டில் ஒட்டிக் கொண்ட சிகரெட் கீழே விழுவதற்குப் பத்து வருடம் ஆகி விட்டது.
சங்கரன் இன்னொரு காரியத்தையும் தொடங்கி வைத்தார். சிகரெட்டிற்குச் செலவழித்த மாதம் நூறு ரூபாய் பணத்தைக் கொண்டு தொடர்ந்து ITC பங்குகளை வாங்கி வரலானார். ஒரு குறிப்பிட்ட வேலையை ஒரு நாளின் குறிப்பிட்ட வேளையில் தவறாமல் செய்து கொண்டிருந்தால் அதற்கு இந்த உலகையே மாற்றக் கூடிய சக்தி இருக்கும் என்பதெல்லாம் சங்கரனுக்குத் தெரியாது. சங்கரனின் மனைவிக்கு உழவர் சந்தை தெரியும். பங்குச்சந்தை குறித்தெல்லாம் எதுவும் தெரியாது. மகன் படிப்பு தான் CA. மற்றபடி அவனுக்கும் பங்குச்சந்தைக்கும் காத தூரம். பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்தையும் குடிகாரனின் நடையையும் ஒப்பிட்டு random walk theory என்று புரியாத ஆங்கிலத்தில் ஏதேதோ கூறிக் கொண்டிருப்பான். சங்கரனுக்கு ஆடிட்டர் படிப்பு படித்தவர்கள் பங்குச்சந்தையைக் கண்டு பயப்படுவது ஒரு புரியாத புதிராகவே இருந்தது. எப்போதும் போல நமக்கு மூளை கம்மி என்பதாக நினைத்துக் கொண்டார்.
சங்கரன் ஏனோ ITC முதலீடான மாதம் நூறு ரூபாய் என்பதைக் கூட்டவேயில்லை. அவர் நினைத்திருந்தால் ஐந்து வருடம் கழித்து 500 ரூபாய், பத்து வருடம் கழித்து 1000 ரூபாய் என்று முதலீடு செய்திருக்கலாம். அவருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் உறைந்து நின்று விட்டது மாதிரி இந்த நூறு ரூபாய் முதலீடும் காலத்தில் அப்படியே உறைந்து நின்று விட்டது.
ஒவ்வொரு மார்ச் மாதமும், பட்ஜெட் சமயம், பங்குத் தரகு அலுவலகத்திலிருந்து சங்கரனுக்கு ஒரு அழைப்பு வரும். இந்த மாதிரி சிகரெட் மீதான வரியைக் கூட்டி விட்டதாகவும் அதனால் ITC பங்கை விற்று விடுமாறும் நுனி நாக்கு ஆங்கிலத்தில் ஒரு அம்மையார் பேசுவார்கள். சங்கரனுக்கு இதெல்லாம் ஒரே குழப்பமாக இருக்கும். சிகரெட் மீதான வரியைக் கூட்டினால், கம்பெனி அந்தக் கூடுதல் வரியை சிகரெட் பிடிப்பவர்களின் தலையில் கட்டப் போகிறது. இதற்காக எதற்கு ITC பங்கை விற்க வேண்டும்? அப்புறம் ஒரு சமயம் பம்பாய் தரகு அலுவலகத் தலைமையகத்திலிருந்து ஒரு அவசர அழைப்பு. புதிய சிகரெட் நிறுவனங்களையும், சிகரெட் மீதான விளம்பரங்களையும் இனி அனுமதிக்க மாட்டார்களாம். இது ITC பங்குக்கு பெரும் பாதிப்பு என்பதாக ஒரு தகவல். சங்கரனுக்கு இதில் என்ன பாதிப்பு என்று சுத்தமாகப் புரியவில்லை. புதிய நிறுவனங்களை அனுமதிக்காவிட்டால் பெரும்பான்மை சந்தையைக் கையில் வைத்திருக்கும் ITCக்கு அது சாதகம் தானே? மேலும் விளம்பரச் செலவும் மிச்சம் தானே? சிகரெட்டை ஊதுபவன் எப்படியும் ஊதிக் கொண்டே தான் இருக்கப் போகிறான். மிட்டாய்க்கடைக்கு எதற்கு விளம்பரம்?
சங்கரனுக்கு இந்தப் பங்குச்சந்தை நெளிவு சுளிவுகள் எதுவும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் மிகத் தெளிவாகத் தெரியும். சிகரெட்டைத் தொட்டால் அதை விடுவது மிக மிகக் கடினமானது. அவருடைய அடிப்படை மற்றும் தொழில்நுட்பப் பகுப்பாய்வு எல்லாம் இந்த ஒரு வரியில் அடக்கம்.
சங்கரன் 72 வயதில் கேன்சர் வந்து இறந்து போனார். கேன்சருக்கே நிறையப் பணம் இலட்சங்களில் செலவாகி விட்டது. சங்கரன் மகனிடம் வைத்தியச்செலவிற்கு என்று பணம் எதுவும் கேட்கவில்லை. ஆடிட்டர் மகன் என்று தான் பெயர். மகனுக்கு அப்பாவுடைய முதலீடுகள் பற்றி மேம்போக்காகத் தான் தெரியும். அப்பா நன்றாக 72 வயது வரை வாழ்ந்தார். கடைசிக் காலம் வரை வைத்தியச்செலவுக்குக் கூடத் தன்னை எதிர்பார்க்கவில்லை என்பதில் மகனுக்கு ஒரு திருப்தி. அப்பாவுடைய பங்குத் தரகர் அலுவலகத்திலிருந்து அப்பாவுடைய மின்னணுக் கணக்கில் (Demat Account) உள்ள பங்குகளை உங்கள் கணக்கிற்கு மாற்றிக் கொள்ளுங்கள் என்பதாக ஒரு தகவல் வந்தது. வைத்தியச்செலவுக்கே இலட்சங்களில் செலவாகி விட்டது , எதுவும் மிஞ்சியிருக்காது என்று ஆடிட்டர் மகன் நினைத்துக் கொண்டார். அதுவும் அவர் முதலீடு செய்தது வெறும் பிசாத்துக் காசு மாதம் நூறு ரூபாய். ஆடிட்டரின் அம்மாவும் மகன் பெரிய படிப்பெல்லாம் படித்திருக்கிறான். அவன் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்பதாக நினைத்துக் கொண்டார். ஆனால் தரகர் அலுவலகத்திலிருந்து அழைப்பு மேல் அழைப்பு வந்த வண்ணமாக இருந்தது. ஆடிட்டர் பல்வேறு அலுவல்களுக்கிடையே வேண்டாவெறுப்பாக தரகரைப் பார்க்கச் சென்றார்.
இதற்கு நடுவில் ITC பங்குகளின் வரலாற்றைக் கொஞ்சம் பார்த்து விடலாம்.
ITC - Bonus & Split
1976 - IPO - 100 shares
1978 - 1:5 bonus - 120
1980 - 1:5 bonus - 144
1989 - 1:1 bonus - 288
1991 - 3:5 bonus - 459
1994 - 1:1 bonus - 918
2005 - 1:2 bonus - 1377
2005 - 10:1 stock split - 13770
2010 - 1:1 bonus - 27540
2016 - 1:2 bonus - 41310
தற்போது ITC பங்கு ரூபாய் 200 என்ற விலையில் வர்த்தகமாகிறது. 41310 பங்குகளின் விலை கிட்டத்தட்ட 82 இலட்சம் . அதாவது 1500 ரூபாய் 82 இலட்சம் ரூபாய்களாக முதலீட்டுப் பெருக்கத்தை அடைந்திருக்கிறது.
சங்கரன் மாதம் நூறு ரூபாய் ITC பங்கில் முதலீடு செய்தார் அல்லவா? அது என்னவாயிற்று என்று பார்க்கலாம். ITC பங்கு 1976 லிருந்து 2021 வரையிலான 45 வருடங்களில் 20 சதவீதம் CAGR என்ற கணக்கில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. மாதாமாதம் முதலீடு செய்த 100 ரூபாய்க்கும் இதே 20 சதவீத CAGR போட்டுப் பார்க்கலாம். பங்குச்சந்தையில் மாதாமாதம் முதலீடு செய்யும் போது rupee cost averaging என்ற அடிப்படையில் ஒரு பங்கு , விலை அதிகமாக இருக்கும் போது குறைந்த எண்ணிக்கையிலும், விலை குறைவாக இருக்கும் போது அதிக எண்ணிக்கையிலும் வாங்கப்படுவதால் உண்மையான வருமானம் இதை விடக் கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளது. இருந்தாலும் நாம் இந்த 20 சதவீதம் என்ற அளவிலேயே கணக்கிடலாம். அது ஒரு 2.4 கோடி வருகிறது. ஆக மொத்தம் 3.24 கோடிகள்.
சங்கரன் வைத்தியத்திற்குச் செலவழித்த சில இலட்சங்கள் ஈவுத்தொகை மூலமாகக் கிடைக்கப் பெற்றது .
மின்னணுக் கணக்கைப் பார்த்ததும் ஆடிட்டர் ஒரு கணம் ஆடிப் போய்விட்டார். இத்தனை கோடிகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை. எதிரே அமர்ந்திருந்த தரகர் இந்தக் கோடிகளை அடமானம் வைத்து இன்னும் எப்படி சம்பாதிக்கலாம், பங்குப் பரவலாக்கம் மற்றும் Futures and Options என்று நிறைய விளக்கினார். F & O பற்றிய அவருடைய விளக்கம் புரியும் படியாக இருந்தது. ஆடிட்டருக்குப் படிக்கும் போது இப்படிப் புரிந்திருந்தால் CAல் முதல் பத்து இடங்களில் வந்திருக்கலாம் என்பதாக ஆடிட்டர் மகன் நினைத்துக் கொண்டார்.
ஆடிட்டர் மகன், அப்பா சம்பாதித்த கோடிகளை F & Oவில் இழந்தது வேறு கதை.
Comments
Post a Comment