பதிவு குறித்த ஒரு பதிவு
பதிவு குறித்த ஒரு பதிவு
கேள்வி : எதற்காக எழுதுகிறீர்கள் ? யாருக்காக எழுதுகிறீர்கள் ? நீங்கள் எழுதுவதன் நோக்கம் நிறைவேறியதா ?
பதில் : எழுதுவதன் நோக்கம் , குறிக்கோள் என்று ஆகப்பெரிய திட்டமிடல்கள் எதுவும் இல்லை . ஒரேயொரு நண்பரிடம் பங்குச்சந்தை குறித்த எனது எண்ணங்களை மணிக்கணக்காக பேசிக் கொண்டிருப்பதில் இது தொடங்கியது . பின்னர் அவர் கேட்டுக் கொண்டதன் பேரில் WhatsApp பதிவுகளாக இந்த எண்ணக் கருக்களை எழுதி அதனை பங்குச்சந்தையில் ஆர்வம் கொண்ட நண்பர்களுக்கு அனுப்புவதான பணி என்ற அளவில் இது தொடர்ந்தது . இந்தப் பதிவுகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை அடைந்ததும் பழைய பதிவுகளைத் தேடி எடுத்துப் படிப்பது கடினமானதாக இருக்கிறதென்று நினைத்த நண்பர் ஒருவரின் முன்னெடுப்பில் வலைப்பூவாக இது மலர்ந்தது . WhatsApp பதிவுகளில் இல்லாத நிரந்தரம் (permanence) வலைப்பூவிற்கு உள்ளது . மேலும் வலைப்பூ , தனிப்பட்ட ஒருவருக்கோ அல்லது குழு ஒன்றுக்கோ அல்லாமல் உலகம் முழுமைக்குமான ஒரு மேடையாகும் .
ஏதாவது ஒரு கருத்தாக்கம் சரிவர புரிபடவில்லையென்றால் அதைக் குறித்து எழுதிப்பார்ப்பது சரியான ஒரு வழிமுறையாகும் . இன்னும் சொல்லப்போனால் அந்தக் கருதுகோள் குறித்து சின்னக்குழந்தை ஒன்றுக்குப் புரியவைக்கும் விதத்தில் நீங்கள் தெளிவு பெற வேண்டும் . அந்த வகையில் , எழுதுவது என்பது ஒரு உரத்த சிந்தனை .
எவ்வளவுக்கு எவ்வளவு படிக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு எழுத முடியும் . இதன் பொருள் படிப்பதை நகலெடுப்பது என்பதாக அல்ல . நீங்கள் காலப்போக்கில் படித்த ஒன்றுக்கொன்று தொடர்பு எதுவும் இல்லாத எண்ணக்கருக்களின் மோதலில் புதிய கருத்துக்கள் தோன்றும் . எப்போதோ நீங்கள் படித்தது மனதின் அடியாழத்திலிருந்து வெளி வரும் பாங்கு சற்று அமானுஷ்யமாகக் கூட இருக்கும் .
சின்ன வயதில் படித்த திருக்குறள் ஒன்று : 'அகலாது அணுகாது தீக்காய்வார் போல இகல் வேந்தர் சேர்ந்தொழுகுவார் ' இதன் பொருள் : நெருப்பில் குளிர் காயும் போது ரொம்பவும் நெருங்கிச் சென்றால் தீயின் வெம்மை நம்மைப் பொசுக்கி விடும் . நெருப்பிலிருந்து ரொம்பவும் விலகியிருந்தால் தீயின் வெம்மையை நம்மால் உணர முடியாது . ஒரு பாதுகாப்பான தூரத்தில் இருந்து குளிர் காய்தல் உத்தமம் . அதே மாதிரி பெரிய மனிதர்களுடன் பழகும் போது ரொம்பவும் நெருங்கிச் சென்று அவர்களுடன் பழகக்கூடாது . அதற்காக அவர்களிடமிருந்து ரொம்பவும் தள்ளியும் இருக்கக்கூடாது . ஒரு இடைப்பட்ட இடத்தைத் தேர்ந்தெடுத்துப் பழக வேண்டும் . பங்குச்சந்தை பெறுதிகளும் (Derivatives) இந்த நெருப்பை ஒத்தது தான் . நீங்கள் பங்குகளின் ஒரு தொகுப்பைக் கட்டிய பின்னர் அதைப் பாதுகாக்கும் பொருட்டு (hedging) பெறுதிகளில் நிலைப்பாட்டை எடுத்துக் கொள்ள வேண்டும் . மாறாகப் பங்குகளே இல்லாமல் ஊக வணிகத்தின் பொருட்டுப் பெறுதிகளை வாங்கினால் கையைச் சுட்டு விடக்கூடிய ஆபத்து உள்ளது . வள்ளுவர் , பங்குச்சந்தை குறித்து அந்தக் காலத்திலேயே எழுதியிருக்கிறார் என்றெல்லாம் சொல்ல வரவில்லை . எப்போதோ படித்த ஒரு குறளும் அது பங்குச்சந்தைக்கு இணைப்பாகும் பாங்கையும் கவனியுங்கள் . அதே மாதிரி பைபிள் வாசகம் ஒன்று : கண்ணீருடன் விதைக்கிறவர்கள் கெம்பீரமாய் அறுப்பார்கள் .
இந்தப் பதிவுகளை புத்தக வடிவில் வெளியிடலாமே என்பது சில நண்பர்களின் எண்ணப்போக்கு . புத்தகம் என்பது அம்பு மாதிரி . விட்டால் விட்டது தான் . அச்சிட்ட பிறகு தவறுகள் ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டால் அதனை அடுத்த பதிப்பில் வேண்டுமானால் திருத்தலாம் . வலைப்பூவில் அதே பதிவில் திருத்தங்கள் இடக்கூடிய வசதி உள்ளது . புதிதாக எதையும் சேர்ப்பதானாலும் சேர்க்கலாம் .
வலைப்பூக்களில் labels இருக்கும் . பங்காதாயம் பற்றிப் படிக்க வேண்டும் என்றால் அந்த label ஐ சொடுக்கினால் மட்டும் போதுமானது . அந்த வகையில் labels என்பவை புத்தகத்தின் அத்தியாயங்கள் மாதிரி . வலைப்பூவில் புதிய அத்தியாயங்களைச் சேர்க்கலாம் . ஒரு அத்தியாயத்தில் புதிய
பதிவுகளை இணைக்கலாம் .
புத்தகம் அச்சுக்குச் செல்வதான ஒரு கட்டத்தில் நிறைவு பெற்று விடுகிறது . புதிதாக நிறைய விஷயங்களைச் சேர்க்க வேண்டுமென்றால் தனிப்பட்டு இன்னொரு புத்தகத்தை வெளியிட வேண்டும் . வலைப்பூ என்பது நமக்கே நமக்கான ஒரு படுதா . அந்தப் படுதாவில் நீங்கள் உங்களுக்கே உங்களுக்கான ஒருபோதும் முற்றுப் பெறாத ஓவியத்தை வரையலாம் . அதற்கு வண்ணம் தீட்டலாம் . வண்ணக்கலவையை மாற்றலாம் .
புத்தகம் வாங்கக் காசு கொடுப்பது மாதிரி வலைப்பூவிற்குக் காசு எதுவும் கொடுக்க வேண்டியதில்லை . காற்று , ஒளி , தண்ணீர் மாதிரி அது முற்றிலும் இலவசம் . இலவசம் என்றால் தரமற்றது என்று அர்த்தமாகாது . விலை மதிப்பற்றது என்று அர்த்தம் .
புத்தகம் அதனைக் காசு கொடுத்து வாங்குபவர்களுக்கானது . வலைப்பூ உலகம் முழுமைக்குமானது .
புத்தகங்களுக்கு ஸ்தூல (material) வடிவிலான ஒரு எல்லை இருக்கிறது . அகராதியே ஆனாலும் ஆயிரம் பக்கங்கள் மட்டுமே அச்சிட முடியும் . வலைப்பூவிற்கு அவ்விதமான எல்லைகள் கிடையாது .
பதிவுகள் குறித்து படிப்பவர்கள் தங்கள் கருத்துக்களை வலைப்பூவில் பதிவேற்றலாம் . அடுத்தவர் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களையும் படிக்கலாம் .
ஒரு ஆற்றில் இரண்டு முறை குளிக்க முடியாது . ஒரே வலைப்பூவை இரண்டு முறை படிக்க முடியாது . புதிதாக ஒரு பூ பூத்திருக்கும் . ஒரு இதழ் விரிந்திருக்கும் . படிப்பவர்களுக்கும் இது பொருந்தும் . படிக்கும் வாசகரும் கணத்திற்குக் கணம் மாறிக்கொண்டே இருக்கிறார் .
WhatsApp பதிவுகளை வலைப்பூவில் பதிவேற்றம் செய்வதற்காக நெருங்கிச் சென்று ஆராயும் போது ஆச்சரியமூட்டும் வகையில் நிறைய எண் பிழைகள் , எண்ணப் பிழைகள் , ஒற்றுப் பிழைகள் தென்பட்டன . இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து வலைப்பூ பதிவுகளில் ஏராளமான திருத்தங்கள் செய்ய முடியும் . அவ்வாறு திருத்தங்கள் ஏதும் தென்படாவிட்டால் நான் வளரவில்லை என்பதாக அர்த்தம் .
படிப்பது மற்றும் எழுதுவது நேர் பின்னூட்ட வளையத்திற்கான (positive feedback loop) சிகர உதாரணம் . படிப்பது , படித்ததைப் பகிர்ந்து கொள்வது , பகிர்ந்து கொள்வதற்காகப் படிப்பது என்று இது ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு . பங்குச்சந்தை குறித்தான பதிவுகளில் இது இன்னும் சுவாரஸ்யமாக மாறுகிறது . இந்தப் பதிவுகளை முறையாகப் படித்து முதலீட்டை மேற்கொண்டால் கரும்பு தின்னக் கூலியாக அறிவுக் கொள்முதல் மட்டுமின்றி பணக் கொள்முதலும் செய்யலாம் . பன்மடங்காளர் பங்குகள் மாதிரி உங்கள் அறிவும் விருத்தியாகும் .
முன்னரே குறிப்பிட்டபடி ஒரு விஷயம் குறித்து ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதனைக் குறித்து எழுதிப் பாருங்கள் என்பதுடன் எனக்குப் பூரண சம்மதம் . நிறுவனப்பங்கு ஒன்றைக் குறித்து இடுகை ஒன்றை இட்டதும் அதன் பங்குகளை நானே வாங்கிய அல்லது ஏற்கெனவே வாங்கியிருந்தால் அதனைக் கூடுதலாக வாங்கிய நிகழ்வுகள் அனேகம் . அந்த வகையில் இந்தப் பதிவுகளின் வாசகர்களில் நானும் ஒருவன் .
பகிர்ந்த துன்பம் பாதியாகிறது . பகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகிறது . பகிர்ந்த அறிவு பன்மடங்காகிறது .
ரமண மகரிஷியின் பொன்மொழி ஒன்றுடன் இந்தப் பதிவை முடிப்பது பொருத்தமாக இருக்கும் .
'ஒருவன் பிறருக்குக் கொடுப்பதெல்லாம் தனக்குத்தானே கொடுத்துக் கொள்கிறான் '
Comments
Post a Comment