விளிம்பு நிலை வர்த்தகம்

விளிம்பு நிலை வர்த்தகம்

Marginal Trading 



கேள்வி : Marginal trading என்பதைப் புரியும் படி விளக்க முடியுமா ?


பதில் : அருமையான கேள்வி . விளக்குவதற்குக் கொஞ்சம் கடினமான கேள்வியும் கூட . இருந்தாலும் எளிமையாக விளக்க முயற்சிக்கிறேன் . 


அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் வீடு ஒன்று விற்பனைக்கு வருகிறது . அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டின் விலை 75 இலட்சம் என்பதாக ஒருமித்த கருத்து இருக்கிறது . இந்நிலையில் அந்த  வீடு 50 இலட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது . 


இந்த அடுக்கு மாடிக் குடியிருப்பை விற்றவர் marginal seller . வாங்கியவர் marginal buyer . தமிழில் இதனை விளிம்பு நிலை வர்த்தகம் என்பதாகச் சொல்லலாம் . அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஆயிரம் வீடுகள் இருப்பதாகக் கொண்டால் எங்கோ ஒரு ஓரத்தில் விளிம்பில் நடைபெறுவதான வர்த்தகம் இது .


இதனைக் குறித்து அந்த அடுக்குமாடிவாசிகளின் எண்ணப்போக்கு என்னவாக இருக்கும் ? 


ஏதாவது பணமுடை காரணமாக இவ்வாறு குறைந்த விலையில் விற்றிருக்கலாம் . வாங்கியவருக்கு அதிர்ஷ்டம் . வாங்கியவர் வீட்டை விற்றால் உடனடியாக இலாபம் பார்க்கலாம் . வீட்டை ஒத்திக்கோ வாடகைக்கோ விட்டால் கூடுதல் இலாபம் பார்க்கலாம் ...


பெரும்பாலான சமயங்களில் இந்த மாதிரி வீடு ஒன்று குறை விலைக்கு விற்பனையாகியிருக்கிறது என்பதே பிறருக்குத் தெரிய வராமல் போகலாம் . அதற்கும் வாய்ப்பிருக்கிறது .


பங்குச்சந்தையில் இந்த விளிம்பு விற்பனை என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் ? 


அடுக்குமாடிக் குடியிருப்பு விற்பனை மாதிரி அல்லாமல் பங்குச்சந்தையில் இந்த விளிம்பு விற்பனை ஆகப்பெரிய அளவிலான விளைவுகளை ஏற்படுத்துகிறது . 


நிறுவனம் ஒன்று பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கிறது . அதன் 75  சதவீதப் பங்குகள் நிறுவனர் வசம் உள்ளன . 20 சதவீதம் , எல்ஐசி முதலான நிறுவன முதலீட்டாளர்களிடம் உள்ளன . மீதி 5 சதவீதம் பொதுமக்கள் பங்காக உள்ளன . இந்த 5 சதவீதத்தில் பேர் பாதி நீண்ட கால முதலீட்டாளர்கள் . வெறும் 2.5 சதவீதம் மட்டுமே சந்தையில் அன்றாடம் விற்பனைக்கு வர வாய்ப்பு உள்ள பங்குகள் . வாய்ப்பு உள்ள பங்குகள் அனைத்தும் விற்பனைக்கு வராது . ஆக , சந்தையில் தின அளவில் விற்பனைக்கு வரும் பங்குகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு .


இந்தக் குறைவான விளிம்பு நிலை விற்பனை தான் 100 சதவீதப் பங்குகளின் விலையையும் தீர்மானிக்கிறது . இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு கணத்தில் விற்பனையாகும் ஒரு பங்கின் விலை தான் மொத்தப் பங்குகளின் விலையையும் நிர்ணயம் செய்கிறது . MRF போன்ற விலை அதிகமான பங்குகள் ஒரு நாள் என்ற கணக்கில் கூடக் குறைவான எண்ணிக்கையில் தான் வர்த்தகமாகும் . MRF பங்கு ஒன்றின் விலை ஒரு இலட்சத்திற்கும் மேலாக விற்பனையாகிறது . இந்தப் பதிவை எழுதும் நாளில் வர்த்தமாகும் அதன் பங்குகளின் எண்ணிக்கை 4689 . நிறுவனத்தின் மொத்தப் பங்குகளின் எண்ணிக்கை 42 இலட்சம் . இந்த 42 இலட்சம் பங்குகளின் விலையையும் ஒருநாள் என்ற கணக்கில் இந்த 4689 பங்குகள் மட்டுமே தீர்மானிக்கின்றன . முன்னரே குறிப்பிட்ட மாதிரி ஒரு நாளின் ஒரு கணத்தில் ஒரு பங்கு வர்த்தகமாகும் போது அந்த ஒரு பங்கு தான் நிறுவனத்தின் மொத்தப் பங்குகளின் விலையையும் நிர்ணயம் செய்கிறது . அடுக்கு மாடியில் ஒரு வீடு 50 இலட்சத்திற்கு விற்பனையாகிறது என்றால் 1000 வீடுகளுக்கும் இந்த 50 இலட்சம் என்ற விலையைக் கொண்டு கணக்கிட்டு அந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளின் மொத்த விலை 500 கோடி என்று சொல்வது போன்றது இது .


இந்தப் பங்குச்சந்தை வர்த்தகத்தையும் அடுக்கு மாடி வர்த்தகத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள் . முன்பே குறிப்பிட்ட மாதிரி அடுக்கு மாடி வீடு ஒன்று இவ்விதம் குறை விற்பனை செய்யப்பட்டால் அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் உள்ளவர்களுக்கே பெரும்பாலான சமயங்களில் அது தெரிய வராது . பங்குச்சந்தையில் இது தலைகீழாக மாறுகிறது . சந்தை செயல்படும் ஒவ்வொரு வினாடியும் இந்த விலை விவரங்கள் வெளியாகின்றன. இது போக பங்குகளின் அன்றைய அதிக பட்ச விலை , குறைந்த பட்ச விலை , பங்குகளின் 52 வார உயர்ந்த பட்ச விலை , குறைந்த பட்ச விலை என்று சந்தை , விலையால் ஆகப் பெற்றது .


சந்தை கரடியின் பிடியில் சிக்குண்டு கிடப்பதாகக் கொஞ்சம் கற்பனை செய்து பார்க்கலாம் . முதலீட்டாளர்களின் பணம் இத்தனை இலட்சம் கோடி மாயம் என்று பத்திரிகைகள் தலைப்புச் செய்தி வெளியிடும் . ஊடகங்களை நாம் குறை சொல்ல முடியாது . When it bleeds it leads . இரத்தமே ஜெயம் . 


சந்தையின் இந்த விலை ஏற்ற இறக்கங்கள் அனைத்தும் விளிம்பு நிலையில் நடைபெ‌றும் சிறுபான்மை வர்த்தகம் மட்டுமே .


சந்தையில் அவ்வப்போது கரடி தலைகாட்டும் போது பங்குகளின் விலை வீழ்ச்சியடைவதை அடுக்கு மாடிக் குடியிருப்பின் விளிம்பு நிலை வீழ்ச்சியாகப் பாருங்கள் . உங்கள் அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீடு மதிப்பு முதலீடாக விற்பனைக்கு வருகையில் அதை நீங்கள் முற்படலாம் . ஆனால் இது அரிதினும் அரிதான விற்பனை என்பதால் அடிக்கடி இம்மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கப்பெறாது . ஆனால் பங்குச்சந்தை அவ்வாறு அல்ல.  ஒரு வாய்ப்பு அல்ல ஓராயிரம் வாய்ப்புகள் தின அளவில் கிடைக்கப்பெறும் . காளைச் சந்தையில் இந்த மதிப்பைக் கொஞ்சம் மெனக்கெட்டுத் தேட வேண்டும் . கரடிச்சந்தை , மதிப்புச் சந்தையாகச் செயல்படும் . 


அடுக்கு மாடி வீடு ஒன்று குறை விலையில் விற்பனையாகும் போது எந்தப் பத்திரிகையிலும் இந்த மாதிரி பீபிகுளத்தில் அடுக்கு மாடி வீடுகள் விலை கடும் சரிவு , அடுக்கு மாடி வாசிகள் கண்ணீர் என்பதாக செய்திகள் எதுவும் வெளி வராது . அப்படியே ஒருவேளை வந்தாலும் நமது வீட்டைக் குறித்த ஒரு உண்மையான மதிப்பு நமது மனதில் இருக்கும் . யாரோ ஒருவர் குறை விலையில் அவர் வீட்டை விற்பது இந்த மதிப்பைப் பாதிக்காது . 


பங்குச்சந்தையை முக்கியமாகக் கரடிச் சந்தையை இந்தப் பார்வையில் பார்த்தால் கரடியைக் கண்டு அஞ்ச மாட்டீர்கள் . மேலும் கரடியால் பலனும் அடையப் பெறுவீர்கள் .


ஒரு வீடு மதிப்பு முதலீடாக விற்பனைக்கு வருகிறது என்பதை அறிய நீங்கள் discounted cash flow கணக்கெல்லாம் போட்டுக் கொண்டிருக்க வேண்டாம் . அதனை உள்ளுணர்வில் உங்களால் உணர முடியும் . அதே மாதிரி தான் பங்குச்சந்தை கணக்கீடுகளும் . இதனை வாரன் பஃபெட்டின் குரு பெஞ்சமின் கிரகாம் பின்வருமாறு விளக்குகிறார் . தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் பருமனான பெண்மணி ஒருவரின் உண்மையான எடை துல்லியமாகத் தெரியாவிட்டாலும் அவர் உயரத்திற்கு எடை அதிகம் என்பதை உங்களால் பார்த்தவுடன் சொல்லி விட முடியும் அல்லவா ? 


Stock market is settled transactions of marginal buyers and sellers . பங்குச்சந்தை என்பது விளிம்பு நிலை வாங்குதல் மற்றும் விற்றல்களின் முடித்து வைக்கப்பட்ட பரிவர்த்தனைகள் மட்டுமே .


நில முதலீடுகள் பணவீக்கத்தை ஒட்டிய சில சமயங்களில் பணவீக்கத்தை விஞ்சிய வருமானத்தைக் கொடுப்பதில் அந்த முதலீடுகளைப் பொறுத்த நமது நீண்ட காலப் பார்வை முக்கிய இடத்தை வகிக்கிறது . பங்கு முதலீடுகளையும் இதே கண் கொண்டு பாருங்கள் . 


Key Takeaways :

நுட்பமாக அறிய வேண்டியது :


1 . பங்குச்சந்தை வர்த்தகம் அடிப்படையாக விளிம்பு நிலையில் நடைபெறுவதான ஒரு சிறுபான்மை வர்த்தகம் மட்டுமே . இந்த சிறுபான்மை வர்த்தகம் மட்டுமே பெரும்பான்மைப் பங்குகளின் விலையைத் தீர்மானிக்கிறது .


2 . முதலீடுகளின் விலை வேறு . மதிப்பு வேறு . முதலீடுகளின் விலை , மதிப்பை நோக்கி நகர்கையில் விலையைப் புறக்கணித்து மதிப்பைக் கூட்டும் செயல்களில் ஈடுபடுங்கள் . 


3 . நீண்ட காலப் பார்வை சரியானது .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14