வேகம் விவேகம் அல்ல .

வேகம் விவேகம் அல்ல .

ஒரு இலட்சம் ரூபாய் முதலீடு செய்தால் எங்கள் வியாபாரத்தில் பங்குதாரர் ஆகலாம் . நிலம் , பல்பொருள் அங்காடி , காப்பீடு , தங்கம் , உணவகம் ... என்று 18 வகையான தொழில்களில் முதலீடு செய்கிறோம் என்று வகையாக முதலீட்டாளர்களை (?) ஏமாற்றியிருக்கிறது ஒரு நிறுவனம் . ஒரு இலட்சம் ரூபாய்க்கு எங்கள் நிறுவனப்பங்குகளை வாங்கினால் மாதம் 10000 ரூபாய் இலாபப் பங்கீடு தருகிறோம் , இரண்டு ஆண்டுகளில் உங்கள் ஒரு இலட்சம் ரூபாயைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்லி 161 கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறது .

முதலில் இந்த மாதிரி தனிப்பட்ட எவரும் இவ்வளவு எண்ணிக்கையில் பங்குகளை வெளியிட முடியாது . பங்கு வெளியீட்டுக்கென்று ஏகப்பட்ட சட்ட திட்டங்கள் இருக்கின்றன . இம்மாதிரி வருமானம் தரக்கூடிய முதலீட்டு வாய்ப்புகள் (ஒருவேளை) இருந்தால் அதனை யாரும் யாருடனும்  பகிர்ந்து கொள்ள விரும்ப மாட்டார்கள் . இன்னொன்று 18 வகையான வியாபாரங்களில் ஈடுபடுவதற்கான அவர்களின் தகுதி என்ன என்பதைப் பார்க்க வேண்டும் . எனக்கென்னவோ அவர்கள் ஒரேயொரு வியாபாரத்தை மட்டும் செவ்வனே செய்வதாகத் தோன்றுகிறது . அது முதலீடு செய்பவர்களை ஏமாற்றும் வியாபாரம் . எளிதாக வருமானம் கிடைக்கிறது என்று எதிலாவது முதலீடு செய்து வைத்தால் அங்கு விற்கப்படும் பொருளே நீங்களாகத் தான் இருப்பீர்கள் .

இது ஒருபக்கம் இருக்கட்டும் . அவர்கள் மாதாமாதம் வழங்குவதாகச் சொல்லும் வட்டி விகிதத்தை மட்டும் கணக்கில் எடுத்துப் பார்ப்போம் . ஒரு இலட்சம் ரூபாய்க்கு மாதம் 10000 என்றால் வருடத்திற்கு 120000 வருகிறது . வருட வட்டி 120 சதவீதம் . 12 சதவீத வட்டிக்குக் கடன் வாங்கினால் அதை ஒரு வட்டி என்று குறிப்பிடுவார்கள் . நிறுவனம் தருவதாகச் சொல்வது 10 வட்டி . 10 வட்டிக்குக் கடன் வாங்கி இவர்கள் எப்படி இலாபம் சம்பாதிப்பார்கள் ? வட்டி கட்டவே பணம் போதாது .

இந்த மாதிரி எளிய கணக்குகளைப் போட்டுப் பார்த்தாலே இது டுபாக்கூர் திட்டம் என்பது புரிந்து விடும் . இந்த மாதிரி முதலீடுகளை மேற்கொள்பவர்களுக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்காது . அதையும் மீறி வேகமாகச் சம்பாதிக்கும் ஆசை , உடனடி மனநிறைவு (instant gratification) கொள்ளல் , முதலில் முதலீடு செய்தால் நிறுவனம் மூடப்படுவதற்குள் நாம் ஓரளவு இலாபம் சம்பாதித்து விடலாம் என்பதான ஒரு குயுக்தி போன்றவை அவர்களின் கண்களைக் கட்டி விடுகிறது . இன்னொரு முக்கியமான காரணம் இம்மாதிரி திட்டங்களின் விற்பனை முகவர்களுக்கு இத்தகைய நிறுவனங்கள் கொடுக்கும் ஊக்கத்தொகை .

பங்குச்சந்தை முதலீடுகள் தரும் வட்டியையும் இந்த 120 சதவீத வட்டியையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம் . சென்செக்ஸ் முதலான பங்குச்சந்தைக் குறியீடுகள் நீண்ட கால நோக்கில் சராசரியாக 16 சதவீத வட்டி வருமானத்தைக் கொடுப்பதாக இருக்கின்றன . நீண்ட காலம் மற்றும் சராசரியாக என்ற வார்த்தைகளில் கவனம் கொள்ளவும் . குறுகிய கால அளவில் இந்தக் குறியீடுகள் எதிர்ம வருமானத்திற்கு உள்ளாகலாம் . தரமான பரஸ்பர நிதிகளின் நீண்ட கால சராசரி வருமானம் 20 சதவீதம் . கடந்த மூன்று தசாப்தங்களின் வெற்றிக் கதையான இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்கு நீண்ட கால சராசரியாக 36 சதவீத கூட்டுப் பெருக்கத்தை வழங்கியிருக்கின்றது . 120 சதவீத வருமானத்தைத் தொடர்ந்து கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்று ஏதுவுமில்லை . அது இரண்டாண்டுகள் என்றாலும் அதற்கான வாய்ப்புகள் கூட இல்லை . முதலில் இந்தத் திட்டத்தில் இணைபவர்களுக்கு பின்னர் இணைபவர்களின் பணத்தைக் கொடுத்து Ponzi scheme என்ற முறையில் கொஞ்ச நாட்களுக்கு நிறுவனம் செயல்படுவதான ஒரு மாயத் தோற்றத்தை வேண்டுமானால் உருவாக்கலாம் .

பங்குச்சந்தை குறியீடுகள் 16 சதவீத கூட்டுப் பெருக்கம் தருவதாகப் பார்த்தோம் . இந்தியப் பங்குச்சந்தை ஒரு வளரும் சந்தை என்ற வகையில் வருகிறது . வளர்ந்து விட்ட அமெரிக்கப் பங்குச்சந்தையின் சராசரி வெறும் 11 சதவீதம் மட்டுமே . அதே மாதிரி இன்ஃபோசிஸ் பங்கு தொடர்ந்து இதே மாதிரி வருமானத்தைக் கொடுப்பதாக இராது . சராசரியை நோக்கிய பின்னடைவு என்ற அடிப்படையில் இனி அது தரும் வருமானம் கண்டிப்பாகக் குறையும் .

வளர்ந்த சந்தைகள் தரும் இந்த 11 சதவீத கூட்டுப் பெருக்கமும் அதன் நீண்ட கால சராசரி மட்டுமே . வருடா வருடம் கடிகாரச்சுற்று மாதிரி ஒரு வருடம் முடிந்ததும் இந்த 11 சதவீத வருமானத்தை சந்தை தராது .

120 சதவீத வருமானம் ஒரு பக்கம் இருக்கட்டும் . பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருடா வருடம் 18 முதல் 20 சதவீத வருமானம் தருகிறேன் என்று சொல்லி மாட்டிக் கொண்ட ஒருவரைத் தெரியுமா ?

அவர் அமெரிக்காவைச் சேர்ந்த Bernie Madoff . வருடத்திற்கு 20 சதவீத வருமானத்தைத் தருவதாகச் சொல்லி ஒரு டாலர் இரண்டு டாலர் அல்ல 5000 கோடி டாலர் ஏமாற்றியிருக்கிறார் . இது தான் உலகின் இந்த நாள் வரையிலான மிக பிரம்மாண்டமான ஏமாற்றுத் திட்டமாகும் . 20 ஆண்டுகள் , பொன்ஸி திட்டம் என்ற வகையில் இந்த ஏமாற்றுத் திட்டம் இயங்கியிருக்கிறது . அதற்காக அவருக்கு 150 ஆண்டு சிறைத் தண்டனையும் 170 பில்லியன் டாலர் இழப்பீடும் விதிக்கப்பட்டது . இரண்டுமே அர்த்தமற்றவை தான் . அவ்வளவு பணம் அவரிடம் இல்லை . அவ்வளவு வயது யாருக்கும் இல்லை . சிறைத்தண்டனை பெற்று 12 ஆண்டுகளில் அவர் இறந்து விட்டார் . NASDAQ பங்குச்சந்தை வியாபார மென்பொருள் அவரால் தான் வடிவமைக்கப்பட்டது . அந்தப் பங்குச் சந்தைக்கு அவர் தலைவராகவும் இருந்திருக்கிறார் . அவர் ஏன் இம்மாதிரியான ஒரு  ஏமாற்றுத்திட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் என்பதற்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை .

சரி , இம்மாதிரியான திட்டங்களில் பணத்தை இழக்காமல் நம்மிடமிருந்து நம்மை எவ்விதம் காப்பாற்றிக் கொள்வது ?

வாழ்க்கையில் பல விஷயங்களுக்குக் காலம் கனிவதற்காகக் காத்திருக்க வேண்டும் . முதலீடு அவற்றில் முக்கியமான ஒன்று .

பணத்தைச் சம்பாதிக்க ஓட வேண்டாம் . மெதுவாக நடந்து செல்லுங்கள் . நடந்து செல்லும் இந்தப் பாதைகளில் பரவசம் கொள்ளுங்கள் .

வளமை முக்கியமானது . வளமையை வந்தடைவதற்கான வழிமுறைகள் அதனினும் முக்கியமானது .

புதையல் உவப்பானது . புதையல் வேட்டை அதனினும் உவப்பானது .

வளமையுடன் சேர்த்து வழிமுறைகளிலும் கவனம் கொள்ளுங்கள் . ஏனென்றால் வழிமுறைகளில் தான் நீங்கள் வாழ்கிறீர்கள் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14