இயற்கை எவ்விதம் இறுதியில் வெல்கிறது ?

இயற்கை எவ்விதம் இறுதியில் வெல்கிறது ?

உலகம் முழுவதுமான அனைத்துக் கலாச்சாரங்களிலும் இயற்கையை வழிபடும் ஒரு போக்கு இயல்பாக இருக்கிறது . தன் வாழ்நாளில் பாதியைக் கழித்து விட்ட சூரியன் ஒரு மகா சக்தியாக வழிபடப்படுகிறது . அனாதி காலந்தொட்டு உங்கள் முன்னோர்களின் முன்னோர்கள் சூரியனை வணங்கியிருக்கலாம் . நீங்களும் ஆயிரமாயிரம் கரங்கள் கொண்டு இந்தப் பூவுலகை அணைக்கும் சூரியனை வணங்கும் போது தொடர்ச்சியின் ஒரு கண்ணி உருவாக்கம் பெறுகிறது .  வாழ்நாள் முழுமையையும் ஒரே இடத்தில் ஒற்றைக் காலில் தவநிலையில் கழிக்கும் மரங்கள் தெய்வமாக வழிபடப்படுகின்றன .  ஒற்றைச் செல் உயிரினமான அமீபாவில் இருந்து மனித இனம் வரை இயற்கையின் கூட்டுப் பெருக்கமேயன்றி வேறென்ன ? ஆனால் இயற்கையின் கூட்டுப் பெருக்க விகிதம் (CAGR) 0.00000004 சதவீதம் என்ற குறை அளவுகளில் இருப்பதால் குறுகிய கால அளவுகளில் நம்மால் அதனை உணர முடியாது . உணர முடியாதது என்பதற்காக அது இல்லை என்பதாக ஆகி விடாது .

முதலீட்டிலும் இயற்கை வழி என்பதாக ஒரு கருத்தாக்கம் இருக்கிறது . கடன் வழி முதலீடு என்றால் அதற்கான வருமானத்திற்கென்று ஒரு வரையறை இருக்கிறது . அந்த முதலீட்டுக்கென்று தனிப்பட்ட சில அபாயங்கள் இருக்கின்றன . அரசாங்கம் வட்டி விகிதத்தைக் குறைத்தால் / கூட்டினால் கடன் வழி முதலீடுகளின் வருமானம் கூடும் / குறையும் . இந்தத் தலைகீழ் விகிதத்தை நம்மால் தவிர்க்கவே இயலாது . அதே மாதிரி கடன் வழி முதலீடுகள் பண வீக்கத்தை வெல்வதாக இருக்காது .

பங்கு வழி முதலீடுகளுக்கும் இயற்கை வழி என்பதான எழுதப்படாத விதிமுறைகள் உள்ளன . நிறுவனப் பங்குகள் நீண்ட கால அளவில் நிறுவனத்தின் வருமானத்தை அடியொற்றிச் செல்லும் . அது பண வீக்கத்தை வெல்வதாக அமையும் . உயர் அளவிலான வருமானம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் , இந்த உயர் அளவிலான சம்பாத்தியத்தை உயர் அளவுகளில் மறு முதலீடு செய்ய வாய்ப்பு உள்ள நிறுவனங்களை இனங்கண்டு முதலீடு செய்து அமர்வதே இயற்கை வழி முதலீடு .

முன்பே சொன்னது மாதிரி கடன் வழி முதலீடுகளுக்கும் பங்கு வழி முதலீடுகளுக்கும் அதிலிருந்து கிடைக்கப்பெறும் வருமானத்திற்கென்று சில முக்கியமான வரையறைகள் உள்ளன . கடன் வழி முதலீடுகள் 6 சதவீதம் மற்றும் பங்கு வழி முதலீடுகள் 20 சதவீதம் . இதற்கு மேலாக அவ்வப்போது ஒன்றிரண்டு சதவீதம் கூடுதலாகக் கிடைத்தால் அது உபரி என்று தான் கொள்ள வேண்டும் .

இந்த வருமானத்தை நாம் செயற்கையாகக் கூட்ட முயலும்போது பிரச்னை எழுகிறது . முதலீட்டிற்கான கூட்டு வட்டியை விரைவு படுத்த முடியாது . கூட்டு வட்டி என்பது அதன் பின்னாட்களில் தான் பலன் தரும் என்று ஏற்கனவே பார்த்திருக்கிறோம் . குளம் ஒன்றின் தின அளவில் இரட்டிப்பாகும் அல்லி மலர்களின் வளர்ச்சி முதல் சில நாட்களில் குறிப்பிடத்தக்க அளவில் இருக்காது . ஒரு கட்டத்தில் பாதிக் குளத்தை மூடிய அல்லி மலர்கள் மறுநாள் மீதிக் குளத்தையும் மூடி விடும் . வாழும் உதாரணம் ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால் வாரன் பஃபெட்டின் சொத்தின் மதிப்பு அவருடைய அறுபதாவது வயதிற்குப் பின்னர் தான் வேகமெடுக்கத் தொடங்கியதைச் சொல்லலாம் . வாரன் பஃபெட் நீண்ட கால முதலீட்டுடன் விலை வேற்றுமை வாணிபம் (Arbitrage) மற்றும் நீண்ட கால Futures & Options முதலானவற்றையும் கையாண்டார் . ஆனால் மிக முக்கியமாக இந்த Arbitrage மற்றும் F & O வகையறாக்களை ஊறுகாய் மாதிரி மட்டுமே தொட்டுக் கொண்டார் . வெறுமனே ஊறுகாயை மட்டும் மூன்று வேளை உண்டு உயிர் வாழ முடியாது .

நீண்ட கால முதலீட்டைத் தவிர்த்த மற்ற அனைத்து முதலீட்டு உபாயங்களும் செயற்கை வழி முதலீடுகள் மட்டுமே . அவை குறுகிய கால அளவில் , வெல்வது மாதிரி இருக்கும் . ஆனால் அது வெறும் தோற்றப்பிழையே அன்றி வேறல்ல . இறுதியில் வெல்லப்போவது இயற்கை மட்டுமே .

பகலுக்குப் பின்னர் இரவு . கொடும் கோடைக்குப் பின்னர் குளிர் பனிக்காலம் . காளைச் சந்தைக்குப் பின்னர் கரடிச் சந்தை . காளையை வியக்கவும் வேண்டாம் . கரடியை இகழவும் வேண்டாம் . காளையையும் கரடியையும் கடந்து செல்லுங்கள் .

ஜப்பானில் bullet train என்ற அதிவேக ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட சமயம் அது . அந்த அதிவேக ரயில் தன் பயணத்தின் ஊடாக நிலத்தடி சுரங்கப் பாதை ஒன்றைக் கடந்து அதன் பின்னர் ஒரு கிராமத்தைக் கடந்து செல்வதாக இருந்தது . சுரங்கப் பாதையிலிருந்து ரயில் வெளிப்பட்டு கிராமத்தைக் கடந்து செல்லும் போது தாங்க முடியாத வகையில் ஒரு பேரிரைச்சல் எழுந்தது . இப்போது என்ன பிரச்னை என்றால் இந்த இரைச்சலைக் குறைக்க வேண்டும் . அதே சமயம் ரயிலின் வேகத்தைக் குறைக்கக்கூடாது . பொறியாளர்கள் பல்வேறு உபாயங்களைக் கைக்கொண்டனர் . எதுவும் கதைக்காகவில்லை . அப்போது இயற்கை அவர்களின் பிரச்னைக்கு ஒரு தீர்வைத் தருகிறது . பொறியாளர் ஒருவர் கிங் பிஷர் ஒன்று கடலில் மிதக்கும் மீன் ஒன்றை மின்னல் வேகத்தில் அதே சமயம் ஓசையின்றிப் பறந்து வந்து கவ்விச் செல்லும் காட்சியைப் பார்க்கிறார் . எவ்வளவு விரைவாகப் பறந்து வந்தாலும் சிறிய சத்தம் கூட எழும்பாத வண்ணம் பல்லாண்டுகளின் கை வண்ணத்தில் இயற்கையால் அது படைக்கப் பட்டிருக்கிறது . புல்லட் ரயிலின் முகப்பையும் கிங் பிஷர் வடிவத்தில் அமைத்த பின்னர் அதன் சத்தம் கணிசமாகக் குறைந்தது . இயற்கை ஆண்டாண்டுக் கணக்கில் கிங் பிஷர் பறவையைத் தட்டிக் கொட்டி (tinkering) அதன் தற்போதைய வடிவத்தை அதனுக்கு அருளியிருக்கிறது . இயற்கையின் CAGR 0.00000004 சதவீதம் . உங்களுக்கான இயற்கை முதலீட்டு CAGR 20 சதவீதம் .

முதலீட்டிலும் இயற்கையின் போக்கைக் கைக்கொள்ளுங்கள் . அதன் இரகசியம் பொறுமை .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14