மீமிகை பணவீக்கம்

மீமிகை பணவீக்கம்

Hyper Inflation

பணவீக்கம் கட்டுக்கடங்காமல் உயர்ந்து செல்வது மீமிகை பணவீக்கம் என்பதாக அழைக்கப்படுகிறது . பொதுவாக நாடு ஒன்றின் விலைவாசி ஒரு மாதத்தில் 50 சதவீதம் கூடினால் அதன் பொருளாதாரம் மீமிகை பணவீக்கத்தை எதிர்கொள்வதாகக் கொள்ளலாம் . ஒரு நாடு போர் முதலிய காரணங்களாலோ அல்லது பொருளாதாரத்தைத் தவறாகக் கையாள்வதாலோ பொருளாதார நெருக்கடிக்கு  உள்ளாகிறது . விளைவாக மீமிகை பணவீக்கத்தை எதிர்கொள்ள வேண்டியதாகிறது . 

1920 ல் முதலாம் உலகப் போரின் முடிவில் ஜெர்மன் மீமிகை பணவீக்கத்தில் சிக்குண்டு கிடந்தது . அந்நாட்களில் இருபது வருட காப்பீட்டுத் திட்டத்தின் முதிர்வுப் பணத்தின் மூலமாக ஒரேயொரு ரொட்டி அடுக்கை (Loaf of bread) மட்டுமே வாங்க முடிந்தது . சிகரெட் ஒன்றின் விலை ஒரு கடையில் அதிகம் என்று நினைத்து அடுத்த கடைக்குச் சென்றால் அங்கு இன்னும் அதிகம் , சரியென்று முந்தைய கடைக்குச் சென்றால் சிகரெட் விலை முதலில் சொன்ன விலையைப் போல் இரண்டு மடங்கு சமயங்களில் மூன்று மடங்கு என்ற அளவில் விலைவாசி விண்ணை முட்டிச் சென்றது . பண நோட்டுக்களை அச்சடிக்க அரசாங்க அச்சகங்கள் போதுமானதாக இல்லாததால் அரசாங்கம் தனியார் அச்சகங்களைக் கையகப்படுத்தி அங்கும் பண நோட்டுக்களை அச்சடித்துத் தள்ளியும் நோட்டுப் பஞ்சம் தீரவில்லை . மக்கள் பணத்தைச் செலவழிக்கும் வேகம் நோட்டு அடிக்கும் வேகத்தை விட விரைவாக இருந்தது . அப்போது ஜெர்மனியின் நாணயமான மார்க் 92.8 quintillion (ஒன்று போட்டு பதினெட்டு பூஜ்யங்கள்) என்ற எண்ணிக்கையில் அச்சடிக்கப்பட்டன .  நான்கு மார்க் ஒரு அமெரிக்க டாலர் என்ற நிலையில் தொடங்கி ஒரு டிரில்லியன் (ஒன்று போட்டு பனிரெண்டு பூஜ்யங்கள்) மார்க் ஒரு அமெரிக்க டாலர் என்ற நிலை வரை பணவீக்கம் எகிறியது . மக்கள் பண நோட்டுக்களை எரித்துக் குளிர் காய்ந்தனர் . ஏனென்றால் விறகின் விலை அதிகம் . ஒரு நாளைக்கான பணவீக்கம் 20.9 சதவீதம் . 3.7 தினங்களில் விலைவாசி இரட்டிப்பானது .  மக்கள் ஜெர்மானிய அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை முழுவதுமாக இழந்த அந்தத் தருணத்தில் தான் ஹிட்லர் உதயமாகிறார் .

ஜிம்பாப்வே நாட்டின் 2004 முதல் 2009 வரையிலான மீமிகை பணவீக்கத்தின் போது ஒரு கட்டத்தில் பணவீக்கம் ஒரு நாளைக்கு 98 சதவீதம் . விலைவாசி இருபத்து நான்கு மணி நேரத்தில் இரட்டிப்பானது . பின்னர் அந்நாடு தன் நாணயத்தை அமெரிக்க டாலருக்கு மாற்றிய பின்னர் இந்த மீமிகை பணவீக்கம் முடிவுக்கு வந்தது .

வெனிசுலா நாட்டின் 2018 ஆம் ஆண்டின் மீமிகை பணவீக்கம் 65000 சதவீதம் .

இந்த மீமிகை பணவீக்கத்தின் போதும் ஒரு சிலர் நன்மை அடையப் பெறுகிறார்கள் . பணவீக்கத்திற்கு முன்னதாகக் கடன் வாங்கியவர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் .

மீமிகை பணவீக்கம் இதுவரை நம் நாட்டைப் பீடிக்கவில்லை . மீமிகை பணவீக்கம் குறித்து படிப்பது என்பது வேறு . மீமிகை பணவீக்கத்தில் வாழ்வது என்பது வேறு . நம்மால் அரசாங்கம் குறிப்பிடும் இந்த ஆறு சதவீதப் பணவீக்கத்தையே தாங்க முடியவில்லை . பங்குச்சந்தையில் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான ஆதாரமான காரணம் என்னவென்றால் நம்முடைய முதலீடுகள் பணவீக்கத்தை விஞ்சி பணத்தின் மதிப்பைத் தக்க வைப்பதாக இருக்கவேண்டும் என்பதற்காக மட்டும் தான் . 

Personal inflation அதாவது தனிப்பட்ட பணவீக்கம் என்பதாக ஒன்று இருக்கிறது . நீங்கள் புதுமணத் தம்பதியாக இருக்கும் பட்சத்தில் நுகர்பொருள் சம்பந்தமான செலவுகளால் உங்கள் பணவீக்கம் ஆகப் பெற்றிருக்கும் . குழந்தைகள் கல்லூரிப்படிப்பு படிக்கும் நிலையில் இருந்தால் உங்கள் தனிப்பட்ட பணவீக்கத்தில் கல்வி சம்பந்தமான செலவுகள் பெரும்பகுதியை ஆட்கொள்ளும் . நீங்கள் ஓய்வூதிய வயதை அடைந்து விட்டால் மருத்துவச் செலவுகள் ...

இவ்விதமாக பணவீக்கம் என்பது விதிக்கப்படாத ஆனால் கட்டாயம் செலுத்தப்பட வேண்டிய ஒரு வரி வகையறா என்ற அளவில் செயல்படுகிறது . வாழ்க்கையில் இரண்டு விஷயங்களிலிருந்து தப்பிக்க முடியாது . ஒன்று இறப்பு . மற்றொன்று பணவீக்கம் . 

இந்தப் பதிவில் கருத்தார்ந்த சில விஷயங்களைப் பார்த்து விட்டோம் . மனதை மென்மையாக்க மீராவின் பஞ்சப்படி (Dearness allowance) பற்றிய ஒரு கவிதை ...

மூட்டை மூட்டையாய்
முதுகில் சுமையை
ஏற்ற மட்டும்
ஏற்றி விட்டு
ஒரேயொரு துரும்பை
எடுத்துப் போட்டதும்
பாரம் எல்லாம்
பறந்து போனதாய்
எப்படி உன்னால்
மகிழ முடிந்ததோ
ஓ ...
பாலைவனத்தில்
பயணம் போகும்
ஒட்டகமே !

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14