நிரந்தர இயக்கம்

நிரந்தர இயக்கம்

Perpetual Motion

நிரந்தர இயக்கம் என்பது அறிவியல்பூர்வமாக சாத்தியமில்லாத ஒன்று . வெப்ப இயக்கவியலின் (Thermodynamics) முதலிரண்டு விதிகளை மீறுவதால் நடைமுறைக்கு இது ஒத்து வராது .

வெப்ப இயக்கவியலின் முதல் விதி ஆற்றல் அழியாமை விதி என்று அழைக்கப்படுகிறது . அதாவது ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது . அதனை ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு மாற்றலாம் . ஆனால் மொத்த ஆற்றல் அளவு மாறாதது .

வெப்ப இயக்கவியலின் இரண்டாவது விதி : போதுமான நேரம் கொடுக்கப்பட்டால் எல்லா அமைப்புகளும் இறுதியில் சமநிலையற்றதாகவே இருக்கும் .

முதலீட்டு உலகத்திற்கு வருவோம் . எந்தப் புறவிசையுமின்றி  தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் ஆற்றல் வாய்ந்த ஒரு முதலீட்டு இயந்திரத்தை  சமநிலையுடன் உருவாக்கம் செய்ய முடியுமா ? நிச்சயமாக முடியும் . மேலும் இந்த இயந்திரம் வெப்ப இயக்கவியல் விதிகளைப் புறந்தள்ளி எந்தப் புறவிசையுமின்றி நீண்ட கால அளவில் வேகமாகவும் அதே சமயம் இவ்விதம் வேகமாகச் சுற்றுவதால் ஏற்படும் தேய்மானத்தைப் புறக்கணித்ததாகவும் சமநிலையுடனும் இருக்கும் .

முதலில் நீங்கள் பங்குகளின் ஒரு தொகுப்பைக் கட்டவேண்டும் . நீண்ட கால ஓடுதளம் உள்ள நிறுவனங்கள் , புதிய பாதைகளில் பயணம் செல்ல வல்ல நிறுவனங்களாக இவை இருக்கவேண்டும் . முதல் நீர்க்காமை , கடன் இல்லாமை , தரமான வளர்ச்சி , அகழி , நிறுவனர் பங்கு மற்றும் அறம் என்ற ஆறு தடை தாண்டும் ஓட்டங்களிலும் இவை வெற்றி பெற்றிருக்க வேண்டும் . இத்தகைய நிறுவனங்களை மதிப்பு முதலீடாகவோ அல்லது வெவ்வேறு கால கட்டங்களில் மற்றும் வெவ்வேறு விலைகளில் வாங்கிச் சேர்க்க வேண்டும் . ரோம் நகரம் ஒரு நாளில் கட்டப்படவில்லை என்று படித்திருக்கிறோம் . இந்தப் பங்குகளின் தொகுப்பைக் கட்டவும் பல்லாண்டுகள் பிடிக்கும் . இவ்வாறு பங்குகளின் தொகுப்பைக் கட்டிக் கொண்டிருக்கும் காலத்தில் முதலில் சிறு சிறு தூரலாகப் பங்காதாய மழை விழத் தொடங்கும் . அது உங்களால் உணரப்படக்கூட இயலாத வகையில் சிறு சாரல் மழையாக மட்டுமே இருக்கும் . நிறையப் பேர் இந்த வேகத்தில் ஊர்ந்து சென்று இலக்கை எப்போது அடைவது என்று தேங்கி நின்று விடுவார்கள் . கூட்டுப் பெருக்கத்தின் பிரம்மாண்டத்தை ஆண்டாண்டு காலம் கழிந்த பின்னர் மட்டுமே உணர முடியும் . அதற்கு நீண்ட கால திருஷ்டி , பொறுமை , நீடிப்புத்திறன் முதலான மனப்பாங்குகள் மட்டுமே தேவை . இவ்வாறு பொறுமை இல்லாதவர்கள் இலக்கு விலை என்ற குருவி வேட்டையில் ஈடுபடத் தொடங்குவார்கள் . இன்னும் சிலர் F & O முதலான சூது விளையாட்டுக்களில் ஈடுபடுவார்கள் . நீடித்த காலத்தில் மட்டுமே கிடைக்கப்பெறும் இந்தப் பண இயந்திரத்தைக் கொஞ்சம் நெருங்கிச் சென்று ஆராயலாம் .

பெரும்பான்மையும் பங்குகளால் சிறுபான்மையாகப் பரஸ்பர நிதிகளால் இந்த இயந்திரம் கட்டப்பட்டிருக்கிறது . இயந்திரத்தின் சமநிலைக்காக நிலையான வருமான முதலீடுகளும் 20 சதவீதம் என்ற அளவில் உள்ளது . பணமாக 10 சதவீதம் உள்ளது .  இயந்திரம் ஒரு சுற்றுச் சுற்றி வர ஓராண்டு காலம் எடுத்துக் கொள்ளும் . ஓராண்டின் முடிவில் பலன்களைப் பங்காதாய வடிவில் வழங்கும் . அவ்வப்போது ஆறு மாதம் மற்றும் மூன்று மாதம் என்ற அளவிலும் பங்காதாயப் பலன்கள் கிடைக்கப்பெறும் . அபூர்வமாக சிறப்பு பங்காதாயங்களையும் தரும் காமதேனுவாக இது இருக்கும் . முதல் சில ஆண்டுகளில் இந்த இயந்திரம் மிக மெதுவாகச் சுழல்வதே தெரியாவண்ணம் மட்டுமே சுழலும் .  பெரும்பான்மையானவர்கள் பொறுமை இழந்து வேறு முதலீட்டு உத்திகளை நாடிச் செல்வது இந்த இடத்தில் தான் . ஆனால் நாட்கள் செல்லச் செல்ல இவை தரும் பங்காதாயங்கள் அதிகரித்துச் செல்லும் . இந்த அதிகரித்து வரும் பங்காதாயங்களைக் கொடுக்கக்கூடிய இயந்திரமும் அதனளவில் வளர்ந்து கொண்டே செல்லும் . இந்தப் பங்காதாயங்களை இயந்திரத்தில் மறு சுழற்சி செய்தால் இயந்திரம் தரும் பங்காதாயங்களும் இயந்திரத்தின் வளர்ச்சியும் மீமிகைப் பெருக்கத்தை அடையும் . இவ்வாறு அதி வேகமாகச் சுழல்வதால் இயந்திரம் எந்தத் தேய்மானத்திற்கும் உட்படாது என்பது இதன் சிறப்பம்சம் . இதன் செயலாக்கத்திற்கு நாம் தனிப்பட்ட முறையில் எதனையும் செய்ய வேண்டியதில்லை . சும்மாவேனும் கையைக் கட்டிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமானது .

அவ்வப்போது இயந்திரம் உமிழும் கழிவுகளையும் மறு சுழற்சிக்குப் பயன்பாடு செய்து கொள்ளலாம் .

ஒரு குறிப்பிட்ட வேலையை ஒரு நாளின் குறிப்பிட்ட வேளையில் தவறாமல் தினமும் செய்து கொண்டிருந்தால் அதற்கு இந்த உலகையே மாற்றக்கூடிய சக்தி இருக்கும் . Conscious learning becomes unconscious knowledge . தன் உணர்வுடன் கற்பது தன் உணர்வில்லாத அறிவுச் செல்வத்திற்கு இட்டுச் செல்வதாக இருக்கும் . அதே மாதிரி , கருத்துடன் இந்தச் செயலைச் செய்வது கட்டற்ற செல்வத்திற்கு வழிவகை செய்யும் . இவ்வாறு  ஆண்டாண்டுகளின் கணக்கில் தொடர்ந்து செய்து வர ஒரு கட்டத்தில் புதிய பண முதலீடுகளை இட வேண்டிய அவசியமின்றி இயந்திரம் தன்னளவில் இயங்கத் தொடங்கி விடும் . இதுவே நிரந்தர இயக்கத்தின் ஆரம்பமாகும் .

அவசரத் தேவைகளுக்கு இயந்திரம் தரும் பங்காதாயங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் . அதுவும் போதாதென்றால் இயந்திரத்தையே கொஞ்சம் பிரித்தும் எடுத்துக் கொள்ளலாம் . இதனால் இயந்திரத்தின் சுழற்சிக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது . வருடத்திற்கு பங்காதாய வடிவிலும் முதலீட்டுப் பெருக்கத்திலுமாக எவ்வளவு எடுக்க வேண்டும் என்பதற்கு ஒரு வரையறை இருக்கிறது . அது 4 சதவீதம் . 

இந்தப் பதிவைப் படிப்பவர்களுக்கு  நம்பிக்கையும் உற்சாகமும் ஊட்டும் விதமாக ஒரு தகவல் : நான் சிறிய அளவில் அமுதசுரபி மாதிரியான இத்தகைய இயந்திரத்தை உருவாக்கி வைத்திருக்கிறேன் என்பதை இந்த இடத்தில் சொல்லிக்கொள்ள விழைகிறேன் . இந்த இயந்திரத்தை உருவாக்க இருபத்தைந்து நீண்ட நெடிய ஆண்டுகள் ஆனது என்பதனையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன் .

நிலைத்து நிற்பது நீடித்த காலத்தில் மட்டுமே கிடைக்கும் . 

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14