பங்குச் சுழல்

பங்குச் சுழல்

(முன் குறிப்பு : அன்பான வாசகருக்கு , இது ஒரு சுழல் . இதனுள் இறங்கினால் நீங்கள் வெளியேற முடியாது . கவனம் தேவை)

The bust requires a boom . The boom requires a bust . ஒரு இறக்கத்திற்கு ஒரு ஏற்றம் தேவைப்படும் . ஒரு ஏற்றத்திற்கு ஒரு இறக்கம் தேவைப்படும் . காளைச் சந்தைக்கு ஒரு கரடிச்சந்தை தேவைப்படுகிறது . கரடிச்சந்தையில் பங்குகளின் விலை தரை தட்டிய பின்னர் மதிப்பு முகிழ்த்தெழுகிறது . தலால் தெரு எங்கும் வைரங்கள் சிதறிக் கிடக்கின்றன . ஆனால் அது வெறும் கூழாங்கல் என்று யாரும் அதனைத் தொடக்கூட மாட்டார்கள் . மதிப்பு முதலீட்டாளர்கள் ( Value Investors) கொஞ்சம் கொஞ்சமாக அந்த வைரங்களை வாங்கத் தொடங்குகின்றனர் . PE விகிதம் அடி மேல் அடியாக உயர்ந்த வண்ணம் உள்ளது . பிறகு சந்தையில் கைகட்டி வேடிக்கை பார்த்தவண்ணம் இருக்கும் வளர்ச்சி முதலீட்டாளர்கள் (Growth Investors) முதலீட்டை மேற்கொள்ளத் தொடங்குகின்றனர் . PE இன்னும் மேலே உயரத் தொடங்குகிறது . இப்போது வேக முதலீட்டாளர்கள் (Momentum Investors) படுவேகமாக வரும் நேரம் . PE இன்னும் கொஞ்சம் மேலே உயரே என்ற அளவில் வர்த்தகமாகிறது . கடைசியாக ஊக வணிகர்களின் காலம் . PE இப்போது மேலே உயரே உச்சியிலே ... சென்செக்ஸ் விரைவில் ஒரு இலட்சம் புள்ளிகளை எட்டி விடும் என்று கோட் சூட் அணிந்த நிபுணர்கள் கருத்துக்களை அள்ளி வீசிய வண்ணம் இருப்பார்கள் . தொலைக்காட்சி சானல் தரவரிசையில் பங்குச்சந்தை சானல்கள் முதலிடத்தை எட்டிப் பிடிக்கும் .  நிறைய நிறுவன PE க்கள் உங்கள் இம்மையையும் மறுமையையும் discount செய்து 122 என்ற அளவில் சர்வசாதாரணமாக வர்த்தகமாகும் . பங்காதாயம் மற்றும் பங்கு ஈட்டு விகிதம் என்பதெல்லாம் கெட்ட வார்த்தை . பங்கின் விலை கூடுகிறதா ? ஜோலி முடிந்தது . பங்காதாயம் ? மூச் !  இதற்கு நடுவில் பங்குகளின் PE அசாதாரணமான அளவுகளில் வர்த்தகமாகிறது என்று கணித்து short selling வணிகர்கள் கோதாவில் குதிப்பார்கள் . ஆனால் அவர்கள் கணிப்பையும் மீறி சந்தை உயர்ந்த வண்ணம் இருக்கும் .  தலால் தெருவில் சிதறிக் கிடக்கும் கூழாங்கற்களை வைரங்கள் என்று கொண்டாடும் நேரம் . இப்போது ஊக வணிகர்கள் பங்குகளின் விலை இன்னும் விலை உயரும் என்று இருக்கின்ற சொத்துக்களை விற்று Futures & Options களில் புகுந்து விளையாடத் தொடங்குவார்கள் . இப்போது பங்குச்சந்தை பலூன் முழுவதுமாக ஊதப்பட்டு விட்டது . அப்புறம் தீவிரவாதிகள் தாக்குதலோ அல்லது கிருமித் தாக்குதலோ ஏதாவது ஒன்று நிகழும் . பங்குச்சந்தை குறியீடுகள் தலைகுப்புற விழத் தொடங்கும் . பங்குகள் விலை உயரும் என்று பந்தயம் கட்டிய சூதாடி சித்தன்கள் இந்த சுழலில் மாட்டிக் கொள்வார்கள் . முன்னர் short selling செய்து கையைச் சுட்டுக் கொண்டவர்கள் மற்றொரு வாய்ப்பு  கிடைத்திருக்கிறது என்பதாக மறுபடி சூதாட்டத்தைத் தொடங்குவார்கள் . ஆனால் அவர்கள் கணிப்பையும் மீறி சந்தை போக்குக் காட்டிய வண்ணமாக இருக்கும் . நான்கு நாள் சம்பாத்தியம் ஐந்தாம் நாள் short squeeze ல் கரைந்து விடும் . இப்போது வேக முதலீட்டாளர்கள் வேக வேகமாக சந்தையை விட்டு ஓடத் துவங்குவார்கள் . அப்புறம் வளர்ச்சி முதலீட்டாளர்களும் கொஞ்சம் கொஞ்சமாக கடையைக் காலி செய்யத் தொடங்குவார்கள் . கடைசியாக எஞ்சி நிற்பது மதிப்பு முதலீட்டாளர்கள் . அப்புறம் கரடிச்சந்தை . இவ்விதமாக கரடிச்சந்தைக்கு ஒரு காளைச்சந்தை தேவைப்படுகிறது .

(மீண்டும் முதலிலிருந்து படியுங்கள்)

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14