பங்குச்சந்தையில் வெற்றி பெறுவது எப்படி ?

பங்குச்சந்தையில் வெற்றி பெறுவது எப்படி ?

பங்குச்சந்தையில் மட்டுமல்ல , பொதுவாக நீங்கள் ஈடுபடும் எந்தத் துறையிலும் வெற்றி பெறுவதற்கான நான்கு நிலைகள் ...

1. அறியாதவை எவை என்று அறியாத நிலை

கணவர் கார் ஓட்டும் போது அருகில் அமர்ந்து எப்படிக் கார் ஓட்ட வேண்டும் என்று கணவருக்கு அறிவுரைகளை அள்ளி வீசும் மனைவியைப் பார்த்திருப்பீர்கள் . இத்தனைக்கும் மனைவிக்குக் கார் ஓட்டத் தெரியாது . இத்தகைய போக்கை பங்குச்சந்தை உட்பட எல்லாத் துறைகளிலும் காணலாம் . இது தான் அறியாதவை எவை என்று அறியாத நிலை . உலகின் 95 சதவீத மக்கள் இந்த முதல் நிலையிலேயே வாழ்கின்றனர் . ஒரு சமயம் என் நண்பர் ஒருவர் ஹுரோ ஹோண்டா நிறுவனம் 8000 சதவீதம் பங்காதாயம் வழங்கவிருப்பதாகவும் அந்த நிறுவனப் பங்கை வாங்குமாறும் அறிவுரை வழங்கினார் . வங்கி நிரந்தர வைப்பு வட்டி அப்போது 10 சதவீதம் என்பதாக இருந்தது . இந்த 10 சதவீதத்தையும் ஹீரோ ஹோண்டாவின் 8000 சதவீதத்தையும் ஒப்பிட்டவராக , அந்த நிறுவனப் பங்கை வாங்க மாட்டேன் என்று சொன்ன என்னை ஙே என்று பார்த்தார். இவர் பரவாயில்லை . நான் என் நண்பர் ஒருவருக்கு ஒரு நிறுவனப் பங்கை நான் ஆயிரங்களில் வைத்திருப்பதாகவும் நல்ல நிறுவனம் நம்பி வாங்கலாம் என்று பரிந்துரை செய்த போது அருகில் நின்று கொண்டிருந்த அவருடைய நண்பர் சொன்னதைக் கேட்டு எனக்குத் தலையே சுற்றியது . என்னைச் சுட்டிக்காட்டி , இவர் அந்த நிறுவனப்பங்குகளை நிறைய வைத்திருக்கிறார் . நான் பரிந்துரை செய்த நண்பரைச் சுட்டிக்காட்டி, இவருக்குத் தள்ளிவிட விரும்புகிறார் .

2. அறியாதவை எவை என்று அறிந்த நிலை

கார் ஓட்டும் போது அறிவுரைகளை அள்ளி வீசும் மனைவியின் அழிம்புகளைப் பொறுக்க மாட்டாமல் கணவர் , மனைவியை ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிக்கு அனுப்புகிறார் . மனைவி இரண்டு நாட்கள் பயிற்சிக்குச் சென்று விட்டு இது நமக்கு ஒத்து வராது என்பதாக விலகிக் கொள்கிறார் . கை இரண்டிற்கும் வேலை கால்களுக்கும் வேலை இது போதாதென்று கண்ணை உற்றுப்பார்த்து வண்டியை ஓட்ட வேண்டியிருக்கிறதாம் . ஓட்டுநர் பயிற்சியில் மட்டுமல்ல பாட்டு வகுப்பு முதல் பங்குச்சந்தை வரை இதே கதை தான் . பங்குச்சந்தையின் ஒரு எளிய அளவீடான PE விகிதம் என்பதை எடுத்துக் கொள்ளலாம் . ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு PE . ஒரு துறை சார்ந்த ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒவ்வொரு PE . அப்புறம் காளைச்சந்தை PE . கரடிச்சந்தை PE . முன்னோக்கு PE . பின்னோக்கு PE . வரலாற்று PE . முதலீட்டாளர்களின் தலை சுழன்றடிக்க இந்த PE விகிதம் மட்டுமே போதுமானது .

3. அறிந்தவை எவை என்று அறிந்த நிலை

ஒரு சில மனைவிகள் இந்த நிலையை அடையக்கூடும் . புதிதாகக் கார் ஓட்டக் கற்றுக் கொண்டவர்கள் தன் உணர்வுடன் இருக்கை நுனியில் அமர்ந்து கார் ஓட்டுவதை நீங்கள் கவனித்திருக்கலாம் . தெருவில் அங்கே ஒரு மாடு வந்தால் இங்கே இவர்கள் வண்டியை நிறுத்தி விடுவார்கள் . இந்த நிலையில் தொடர் பயிற்சி எடுத்தால் மட்டுமே அடுத்த நிலைக்குச் செல்ல முடியும் . இந்த நிலையை அடைந்த பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சந்தை பற்றிய புரிதல் உண்டு . வளர்ச்சி முதலீடு , வேக முதலீடு , மதிப்பு முதலீடு , தினசரி வணிகம் , குறுகிய கால வணிகம் , நீண்ட கால வணிகம் , பங்குகளின் முக மதிப்பில் தொடங்கி இருப்பு நிலைக் கணக்கு மற்றும் இலாப நட்டக் கணக்குகள் எல்லாம் அக்கு வேறு ஆணி வேறாகத் தெரியும் . பங்குகளைத் தன் உணர்வுடன் (conscious) வாங்குவதான ஒரு நிலை .

4. அறிந்தவை எவை என்று அறியாத நிலை

தேர்ந்த ஒரு வண்டி ஓட்டுநர் க்ளட்ச், பிரேக் எல்லாமே அவர் அறியாமலேயே சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்வார் . அருகில் அமர்ந்திருப்பவருடன் பேசியவாறோ அல்லது பாட்டுக் கேட்டவாறோ வண்டியை ஓட்டுவதை நீங்கள் பார்த்திருக்கலாம் . சுருக்கமாகச் சொல்வதென்றால் வண்டி அவர் உடம்புடன் ஒட்டிய இறக்கை மாதிரி.
பங்குச்சந்தையில் ன்கு வளர்ச்சி வாய்ப்புகள் உள்ள ஒரு நிறுவனத்தை உள்ளுணர்வில் இனங்கண்டு விடக்கூடிய நிலை . டென்னிஸ் விளையாட்டின் போது ஒரு உச்சக்கட்ட நிலையைக் கற்பனை செய்து பாருங்கள் . Deuce - Advantage A - Deuce - Advantage B - Deuce - Advantage A ... இவ்வாறாக ஒரு ஆட்டப் புள்ளி (match point) முடிவேயில்லாமல் சென்ற வண்ணமாக இருக்கிறது . அப்போது B கவனக்குறைவாக அடித்த ஒரு பந்து வாகாக வருகிறது . ஆட்டத்தின் அந்த உச்சக்கட்டத்தின் போது எதிராளி அடித்த அந்த டென்னிஸ் பந்து கால் பந்து அளவிற்குத் தெரியுமாம் .  முன்னணி டென்னிஸ் வீரர்கள் அனைவரும் இந்த மாதிரி உணர்ந்திருக்கிறார்கள் . நல்ல கதை தன்னைத் தானே எழுதிக் கொள்ளும் . One hundred years of solitude புத்தகத்தை எழுதிய Gabriel Garcia Marquez பற்றிய ஒரு தகவல். Marquez கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக தன்னை ஒரு அறையில் தனிமைப் படுத்திக் கொண்டு அந்த நாவலை எழுதினார் . அதுவரை வீட்டுப் பொறுப்புகள் முழுவதையும் கவனித்துக் கொண்டது அவருடைய மனைவி . ஒன்றரை ஆண்டுகளின் முடிவில் அவ்வளவு வறுமை . எழுதி முடிக்கப்பட்ட அந்த நாவலை பதிப்பாளருக்கு அனுப்பத் தபால்தலைகள் வாங்கக் கூடக் கையில் போதிய பணம் இல்லாததால் இரண்டு தவணைகளில் அனுப்புகிறார்கள் . அந்த நாவல் உலகப்புகழ் பெற்றது அப்புறம் நடந்த வரலாறு . தமிழ் மொழிபெயர்ப்பு 'ஒரு நூறு வருடத்துத் தனிமை' என்ற பெயரில் வெளி வந்திருக்கிறது . நல்ல பங்கும் தன்னைத்தானே வாங்கிக் கொள்ளும் . அதாவது ஒரு நிறுவனம் நன்கு வளர்ந்து வரும் என்பதை உள்ளுணர்வில் (intuitive) இனங்கண்டு விடக்கூடிய ஒரு நிலை .

பங்குச்சந்தை உட்பட எந்தச் செயலிலும் , தொழிலிலும் , திறமையிலும் இந்தக் கட்டத்தை அடைய எவராலும் முடியும் . தேவை பயிற்சி மற்றும் பொறுமை .

Inspiration from the book படைக்கலாம் உங்களது உலகத்தை  by சஜீவ் நாயர் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14