பங்குச்சந்தை பதில்கள் - 2
பங்குச்சந்தை பதில்கள் - 2
கேள்வி : பங்குச்சந்தையில் வெற்றி பெற கணக்கில் புலமை அவசியமா ?
பதில் : சாதாரண கூட்டல் கழித்தல் தெரிந்திருந்தால் போதும் . டெரிவேட்டிவ் முதலான சிக்கலான கணக்குகள் தெரியாமலிருந்தால் மிக நல்லது . கூட்டு வட்டியை அதிசயிக்கத் தெரிந்திருத்தல் அவசியம் .
கேள்வி : விமானத்துறை பங்குகளில் முதலீடு செய்யலாமா ?
பதில் : நீங்கள் இலட்சாதிபதியாக வேண்டுமென்றால் கோடிக்கணக்கான ரூபாய்களை முதலீடு செய்து விமான சேவை நிறுவனம் ஒன்றைத் தொடங்குங்கள் . வெகு விரைவில் இலட்சாதிபதியாகி விடுவீர்கள் . சொன்னவர் ரிச்சர்ட் பிரான்ஸன் . வெர்ஜின் ஏர்லைன்ஸ் என்ற விமான சேவை நிறுவனத்தை ஒரு காலத்தில் நடத்தியவர் . அனுபவஸ்தர் . அவர் சொன்னால் நிச்சயம் சரியாகத் தான் இருக்கும் .
கேள்வி : பங்குச்சந்தையில் இந்த ஒரு விஷயம் புரிந்தால் பத்து விஷயங்கள் புரிந்ததற்குச் சமமான ஒரு விஷயம் எது ?
பதில் : Price - Value differentiation என்று சொல்லப்படும் விலை மற்றும் மதிப்பு இவைகளுக்கிடையேயான வேறுபாடு .
கேள்வி : பங்குச்சந்தைக் குறியீடுகளை எப்படி வெற்றி கொள்வது ?
பதில் : உங்கள் உணர்ச்சிகளை வெற்றி கொள்வதன் மூலமாக .
கேள்வி : பங்குச்சந்தையில் வெற்றி பெறுவதற்கான இரகசியம் என்ன ?
பதில் : உலகின் ஆகப்பெரிய முதலீட்டாளர் திருவாளர் வாரன் பஃபெட் சொன்ன இரகசியம் : Be fearful when others are greedy and be greedy when others are fearful . அடுத்தவர்கள் பேராசைப்படும் போது அச்சம் கொள்ளுங்கள் . அடுத்தவர்கள் அச்சப்படும் போது பேராசை கொள்ளுங்கள் .
கேள்வி : சந்தையில் ஒரு வருடத்திற்கான இலாபம் மூன்றே மாதங்களில் கிடைத்து விடுகிறது . அப்போது இலாபத்தைப் பிடித்தல் நல்லதா ? அல்லது முதலீட்டைத் தொடர்வது நல்லதா ?
பதில் : Don't trade an investment . முதலீட்டை வாங்கி விற்கும் பொருளாக மாற்றி விடாதீர்கள் .
கேள்வி : பங்குச்சந்தை சூதாட்டக்களமா ?
பதில் : அல்ல , அது சொத்து உருவாக்கும் களம் .
கேள்வி : Black - Scholes model பற்றிக் கொஞ்சம் புரியும் படி விளக்குங்கள் ?
பதில் : Black - Scholes , Future & Options மற்றும் Algo Trading போன்றவைகள் தெரியாமலிருப்பது கேந்திரமான ஒரு அனுகூலமாகும் . அவைகள் புரியாத புதிர்களாகவே இருந்து விட்டுப் போகட்டும் .
கேள்வி : நாம் இடும் ஆரம்ப முதலீடு / அதிலிருந்து நமக்குக் கிடைக்கப்பெறும் வருமானம் இந்த இரண்டில் எது முக்கியம் ?
பதில் : இந்த இரண்டும் முக்கியமில்லை . முக்கியமானது இந்த முதலீட்டை எவ்வளவு நாட்கள் தொடர்ந்து வைத்திருக்கிறீர்கள் என்பதான காலம் .
கேள்வி : முதலீட்டிற்கேற்ற மாதிரி எந்தத் துறையின் எதிர்காலம் பசுமையாக இருக்கிறது ?
பதில் : முதலீட்டிற்கேற்ற மாதிரி எந்தத் துறையின் எதிர்காலம் பாலைவனமாக இருக்கிறது என்பது தான் சரியான கேள்வி . பசுமையையும் மதிப்பையும் ஒருசேர வாங்க முடியாது .
Comments
Post a Comment