பங்கு (ஓய்வு) ஊதியம்
பங்கு (ஓய்வு) ஊதியம்
குடும்ப மருத்துவர், ஓய்வூதியம் பெறுவதற்கு நல்ல திட்டங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பதாகக் கேட்டார். ஓய்வூதியம் பெறும் வகையில் பரஸ்பர நிதித் திட்டங்கள் மற்றும் எல்ஐசி யின் annuity திட்டங்கள் இருக்கின்றன என்றாலும் நல்ல நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது தான் ஒரு சரியான தீர்வாக இருக்க முடியும். பங்குகள் என்ன சர்வரோக நிவாரணியா? கையில் சுத்தியல் இருந்தால் எதைப் பார்த்தாலும் ஆணியாகத் தான் தெரியும். எதற்கெடுத்தாலும் டங் (பங்)கென்று மண்டையில் அடிக்கிறீர்களே என்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.
ஓய்வூதியம் என்பது இன்னும் கொஞ்ச நாட்களில் ஒரு கண்காட்சிப் பொருளாக மாற உள்ளது. அதற்கு demographic dividend (இதைப்பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம்) உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இப்போது அரசாங்க ஊழியர்களுக்கு மட்டும் ஓய்வூதியம் கொடுக்கப்படுகிறது. தனியார் துறை சார்ந்த ஊழியர்கள் மற்றும் மருத்துவர், பொறியாளர் போன்ற தொழில் சார் ஊழியர்கள் (professional) அவர்களுக்கான ஓய்வூதியத்தை அவர்களே கட்டமைத்துக் கொள்ள வேண்டிய ஒரு காலச் சூழல்.
பங்குச்சந்தை முதலீடுகளின் மூலமாக ஓய்வூதியம் பெறுவது மிக எளிதானது. ஆனால் இலகுவானதல்ல.
பங்கு முதலீடுகள் மூலமாக ஓய்வூதியம் பெற நல்ல நிறுவனப் பங்குகளாக வாங்கி ஆண்டாண்டு காலம் வைத்திருந்தால் போதுமானது.
கீழ்க்கண்ட நிறுவனப் பங்குகளை IPO வில் வாங்கி இன்றளவும் வைத்திருப்பவர்களுக்கான பங்காதாயப் பட்டியல் (2021 ஆம் ஆண்டுக்கு மட்டும்)
1. Bajaj Auto (10 பங்கு)
- Rs.4146000/-
2. Castrol (100)
- Rs.293216/-
3. ITC (100)
- Rs.444082/-
4. Motherson Sumi Systems (100)
- Rs.57687/-
5. Wipro (3)
- Rs.1148120/-
இந்த ஐந்து நிறுவனப் பங்காதாயங்களைக் கூட்டினால் மாதம் சராசரியாக ஐந்து இலட்சம் ரூபாய் வருகிறது. மிகவும் முக்கியமாக இந்தப் பங்காதாயங்கள் பணவீக்கத்தை வெல்லும் வகையில் வருடாவருடம் அதிகரித்த வண்ணம் இருக்கும். இந்த அதிகரித்து வரும் பங்காதாயங்களைக் கொடுக்கக்கூடிய நிறுவனங்களின் மதிப்பும் அதிகரித்த வண்ணம் இருக்கும்.
Annuity முதலீடுகள் (?) சராசரியாக 6 சதவீத வருமானம் மட்டுமே கொடுக்க வல்லவை. மாதம் ஐந்து இலட்சம் வருமானம் பெறுவதற்கு எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதைச் சற்றே கணக்கிட்டுப் பாருங்கள்.
மேலும் இந்த annuity, பங்குகள் மாதிரி மூலதனப் பெருக்கம் அடையாது. விப்ரோ நிறுவனம் IPO வெளியிடும் போது நான் இன்னும் பிறக்கவேயில்லை என்று சொல்பவர்களுக்கு ஒரேயொரு வாக்கியம். இந்த மாதிரி ஏதேனும் சொல்லி காத்திருத்தல் உங்களை வயசாளியாக்குமே அன்றி பணக்காரன் ஆக்காது. இன்றே நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யத் தொடங்குங்கள். ஒரு குறிப்பிட்ட வேலையை ஒரு நாளின் குறிப்பிட்ட வேளையில் தவறாமல் செய்து வந்தால் அதற்கு இந்த உலகையே மாற்றக்கூடிய சக்தி இருக்கும்.
சரி, பங்குகளில் முதலீடு செய்வது என்று தீர்மானித்தாகி விட்டது. அடுத்த கேள்வி. எப்போது ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்குவது?
நீங்கள் சம்பாதிக்க ஆரம்பித்த உடன் ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்கி விடவேண்டும். சின்ன வயதில் நமக்குப் பொறுப்புகள் கம்மி. இருபது வயதிலேயே அறுபது வயதிற்குத் திட்டமிடுபவர்களுக்கு ஒரு சாதகமான கட்டமைப்பு (structural advantage) கிடைத்து விடும். பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்தை நீங்கள் முழுமையாகப் பணமாக்கம் செய்யலாம். 40 வருடம் என்பது ஒரு மிக நீண்ட ஓடுதளம் (runway) அது உங்களுக்கே உங்களுக்கான ஒரு பந்தய மைதானம்.
மேலும் நீண்ட கால முதலீடு என்பது அடிப்படையில் வெறும் பழக்கம் மட்டுமே. எப்படி செலவழிப்பது ஒரு பழக்கமோ அவ்வாறே சேமிப்பது மற்றும் முதலீடு செய்வதும் வெறும் பழக்கமே. ஆனால் பழக்கம் என்பது முதலில் வெறும் நூலாம்படை என்ற அளவில் தான் இருக்கும். நாளாக ஆக பழக்கங்கள் வேர் பிடித்து இரும்புச்சங்கிலியாக மாறி விடும்.
எனவே சேமிப்பு முதலான பழக்கங்களைச் சின்ன வயதிலேயே பழகத் தொடங்கி விடவேண்டும். மேலும் இந்த சேமிப்பு என்ற ஒரு பழக்கம் பல்வேறு நல் ஒழுக்கங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. சுய ஒழுக்கம், சிக்கனம், பொறுமை, தாமதமான மனநிறைவு ...
வாரன் பஃபெட் அவரது 11 வயதிலேயே தனது சேமிப்புத் திட்டங்களைத் தொடங்கி விட்டார். இவ்வாறு சீக்கிரமாகத் தொடங்குபவர்கள் கூட்டு வட்டியின் மீமிகைப் பெருக்கத்தை தங்கள் வாழ்நாளிலேயே பார்க்க முடியும்.
ஒரு சின்ன கணக்கு. ஒருவர் தனது இருபதாவது வயதிலேயே ஓய்வு காலத்திற்குத் திட்டமிட்டு மாதம் 100 ரூபாய் சென்செக்ஸில் முதலீடு செய்கிறார். சென்செக்ஸ் நீண்ட காலக் கணக்கீட்டில் சராசரியாக 18 சதவீத CAGR கொடுத்திருக்கிறது. சராசரியை நோக்கிய பின்னடைவு என்ற அடிப்படையில் நாம் இதனை 15 சதவீதம் என்று கொள்ளலாம். 60 வயதில் அவருக்குக் கிட்டத்தட்ட 21 இலட்சம் கிடைக்கும். இன்னொருவர் தனது நாற்பதாவது வயதில் இதே திட்டத்தைத் தொடங்குவதாகக் கொள்ளலாம். அவர் இந்த 21 இலட்சம் என்பதான இலக்கை எட்ட மாதம் 1750 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். முதலில் இறகு மாதிரி 100 ரூபாய் என்ற அளவில் இருந்தது பிறகு விறகு மாதிரி 1750 ரூபாய் ஆகக் கனம் கொள்வதைக் கவனியுங்கள்.
ஓய்வு காலம் என்ற அம்பு உங்களை நோக்கிப் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு பாய்ந்து வரும் அம்பை நீங்கள் கவனித்து விட்டால் அது குறைந்த வேகத்துடன் தான் உங்களை நெருங்கும்.
Comments
Post a Comment