பங்குக்கதை - 2

பங்குக்கதை - 2

ந்தக் கதையைத் தனியாகப் படித்தாலும் புரியும். ஆனால் இது பங்குக் கதை - 1 ன் தொடர்ச்சி. பங்குக்கதை - 1 ஐ படித்து விட்டு இதைப் படித்தால் சுவை பெருகும். இந்தக் கதையில் வரும் பெயர்கள் சம்பவங்கள் யாவும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல)

பங்குத் தரகர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த ஆடிட்டர் மகனுக்கு உலகமே பளிச்சென்று அலம்பி விட்டது போல் இருந்தது. ஒன்றல்ல இரண்டல்ல மூன்று கோடி. ஒரு கோடிக்கு எத்தனை பூஜ்யம்? 

அப்பா ரொம்பவும் அமுக்குளி என்று அம்மா சொல்வது உண்மை தான். அவருடைய மின்னணுக் கணக்கில் (Demat Account) மூன்று கோடி ரூபாயை வைத்துக் கொண்டு ஒன்றும் தெரியாத அப்பாவி போல் இருக்க எப்படி முடிந்தது? எள்ளுக்குள் எண்ணெய் மாதிரி இருக்கவேண்டும் என்று அடிக்கடி அவர் சொல்வதன் அர்த்தம் இது தானா? எண்ணெய் இருந்தால் பரவாயில்லை. ஒரு எண்ணெய்க் கிணறே அல்லவா வைத்திருந்திருக்கிறார்? ஆடிட்டர் மகன் இந்த விஷயத்தில் அப்பாவுக்கு நேரெதிர். கையில் பத்து காசு இருந்தால் பதறி விடுவார். 

தரகர் மிகவும் தெளிவாகச் சொல்லி விட்டார். ITC நிறுவனமே தனது வியாபாரத்தைப் பன்மயமாக்கம் (Diversification) செய்யும் பொருட்டு விருந்தோம்பல், நுகர்பொருள் மற்றும் காகிதம் முதலான துறைகளில் கால் பதிக்கும் போது நாமும் பன்மயமாக இருப்பது தான் பங்குச்சந்தை முதலீட்டிலான அபாயத்தைக் குறைப்பதற்கான ஒரே வழி. எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போட்டு விட்டு வெறுமனே அந்தக் கூடையை மட்டும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? மேலும் மூன்று கோடி ரூபாய் பங்குத் தொகுப்பிற்கு (Portfolio) இழப்புக்காப்பு (Hedge) எடுத்தே ஆகவேண்டும். அதற்குப் பெறுதிகளில் (Futures & Options) கட்டாயம் நிலைப்பாடு (Position) எடுக்கவேண்டும். எல்லாப் பணத்தையும் பங்குச்சந்தையில் வைத்துக் கொள்ளாமல் ஒரு பகுதியைத் தங்கத்தில் முதலீடு (?) செய்யவேண்டும். அவ்வப்போது இலாபத்தைக் கைப்பற்றி (Profit Booking) அந்தப் பணத்தை IPO வில் போடவேண்டும். தரகரின் வழிகாட்டுதல் மிகத் தெளிவாக இருந்தது. உங்கள் அப்பாவிடம் நாங்கள் பலமுறை எடுத்துச் சொன்ன விஷயங்கள் தான் இவை. ஆனால் உங்கள் அப்பா சங்கரன் ரொம்பவும் பிடிவாதக்காரர். நாங்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கூடக் கேட்க மாட்டார். போதும் போதாததற்கு எங்களையே கிண்டல் செய்வார். IPO என்பதை எரியும் தீக்குச்சி என்பதாகச் சொல்லுவார். காளைச்சந்தையில் நிறுவனப் பங்குகளை உயர் மதிப்பில் பட்டியலிடுவதன் மூலமாக அந்த எரியும் தீக்குச்சியின் பேர் பாதி வெளிச்சம் நிறுவனர்களைச் சென்றடைந்து விடுகிறது. பேராசை பிடித்த Merchant Bankers எனப்படும் IPO நிர்வாகிகள் இன்னொரு கால்வாசியை எடுத்துக் கொள்வார்கள். நாம் அந்த IPO குச்சியைத் தொட்டால் கை பொசுங்கி விடும் என்று எதற்கெடுத்தாலும் ஒரு கதையைச் சொல்லி எங்கள் வாயை அடைத்து விடுவார். ஆனால் நீங்கள் ஆடிட்டர் படிப்பு படித்திருக்கிறீர்கள். எங்கள் வேலை பாதி மிச்சமாகி விட்டது. 

இவ்வாறாக ஆடிட்டர்  மகன் ITC பங்குகளைக் கொஞ்சம் கொஞ்சமாக விற்று பிற நிறுவனங்களிலும், IPO விலும் முதலீடு செய்யத் தொடங்கினார். தங்கத்தில் ஒரு பகுதியை முதலீடு செய்தார். அம்மாவிற்கு, அப்பாவிடம் அம்மா கேட்டு அவர் கடைசி வரை வாங்கிக் கொடுக்காத அந்த ஐந்து வடம் தங்கச் சங்கிலி உட்பட பல்வேறு நகைகளை வாங்கிக் கொடுத்தார். 

ஆடிட்டர் மகனுக்குத் தரகர் அலுவலகத்தில் இராஜ மரியாதை. இருக்காதா பின்னே? அவர் ஒவ்வொரு முறை பங்குகளை விற்கும் போதும் வாங்கும் போதும் அவர் இலாபம் பெறுகிறாரோ இல்லையோ தரகருக்குத் தரகு தவறாமல் வந்து விடுகிறது.

ஆடிட்டர் மகன் வளர்ச்சி முதலீடு (Growth Investing) வேக முதலீடு (Momentum Investing) என்று சட்சட்டென்று முதலீட்டு உத்திகளை மாற்றிய வண்ணம் இருந்தார். சின்னஞ்சிறு குழந்தைகள் பொம்மைகளை வைத்து விளையாடுவது மாதிரி தினசரி வணிகத்தில் (Day Trading) நிலைப்பாடு ஒன்றை எடுப்பார். அது நஷ்டத்தில் முடிந்தால் அந்த நிலைப்பாட்டை குறுகிய காலத்திற்குக் கடத்துவார். கடைசியில் பொறுமை இழந்து அவர் பங்குகளை நஷ்டத்தில் விற்று விட்டு வெளியேறியதும் அந்தப் பங்குகள் விர்ரென்று விலையேறத் தொடங்கும். சிகரெட் அட்டையில் புகையிலை புற்றுநோயை உண்டாக்கும். மற்றும் உயிரைக் கொல்லும் , Smoking is injurious to health என்று போட்டிருப்பார்கள். Trading is injurious to wealth என்று பங்குப் பத்திரங்களில் போட்டிருக்க மாட்டார்கள். 

ரொம்ப நாள் தூங்கிய கரடி சோம்பல் முறித்துக் கொண்டு எழுந்தது. ஆடிட்டர் மகன் IPO வில் வாங்கிய பங்குகளின் விலைகள் எல்லாம் பாதியாகக் குறைந்து விட்டன. Average down என்ற அடிப்படையில் ஆடிட்டர் மகன் அந்தப் பங்குகளை இன்னும் கொஞ்சம் வாங்கினார். அவர் வாங்க வாங்க யாரோ போட்டி போட்டுக் கொண்டு விற்ற வண்ணம் இருந்தார்கள். 

Futures & Options களும் எதிர்பார்த்த மாதிரி கை கொடுக்கவில்லை. பத்து நிலைப்பாடுகளில் வந்த இலாபம் பதினோராவது நிலைப்பாட்டில் மொத்தமாகக் கரைந்து விடுகிறது. 

அப்பா காலத்தில் அவர் ITC நிறுவனம் மூலமாகப் பெற்ற பங்காதாயம் பாதியாகக் குறைந்து விட்டது. இத்தனைக்கும் ITC நிறுவனம் தன் பங்காதாயத்தை வருடாவருடம் அதிகரித்து வந்திருக்கிறது.

திடுதிப்பென்று அம்மாவுடைய தூரத்து சொந்தங்கள் எல்லாம் துளிர் விட ஆரம்பித்திருந்தன. எப்போது பார்த்தாலும் ஒன்று விட்ட அத்தை இரண்டு விட்ட பெரியப்பா என்று யாராவது ஒருவர் வீட்டில் டேரா அடித்துக் கொண்டிருந்தார்கள். ஆடிட்டர் மகனுக்கும் அம்மாவிற்கும் முரண்பாடுகள் எழ ஆரம்பித்தன. 

அப்பா கட்டிக்காத்து வந்திருந்த பங்குத் தொகுப்பின் மதிப்பு பாதியாகக் குறைந்து விட்டது.

ஒருநாள் தரகரிடம் இந்த விஷயத்தைச் சொல்லி வருத்தப்படும் போது, விளிம்பு நிலை வர்த்தகம் (Margin Trading) செய்து இழந்ததை மீட்டு விடலாம் என்பதாகத் தரகர் கூறினார். விளிம்பு வர்த்தகம் இலாபத்தை உருப்பெருக்குமாம். தரகர் சொல்லாமல் விட்டது ஒன்று உள்ளது. அது நஷ்டத்தையும் உருப்பெருக்கும். 

கடைசியில் வாரன் பஃபெட் அடிக்கடி சொல்லும் F & O மற்றும் விளிம்பு வர்த்தகம் போன்றவை கொத்துக் கொத்தாகக் கொல்லும் ஆயுதங்கள் (Weapons of Mass Destruction) என்ற வாசகம் உண்மையாகி விட்டது. ஆடிட்டர் மகனின் பங்குத் தொகுப்பு சின்னாபின்னமாகி ஒரு சின்ன பின்னம் மட்டும் மிச்சமிருந்தது.

இறுதியாக ஆடிட்டர் மகனுக்கு ஒரு உள்ளாள் வணிக (Insider Trading) வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. அதாவது நிறுவனம் ஒன்றைக் குறித்த இரகசியத் தகவல். ஒரு மாதம் கழித்து அந்தத் தகவல் பங்குச்சந்தைக்குத் தெரிய வரும் போது அந்த நிறுவனப் பங்கின் விலை எங்கேயோ போய் விடும். ஆடிட்டர் மகன் தரகர் எச்சரித்ததையும் மீறி மிச்சம் மீதமிருந்த அப்பாவின் பங்குத் தொகுப்பை முழுவதுமாக விற்றும் மேலும் அம்மாவிற்கு வாங்கிக் கொடுத்த நகைகளை அடமானம் வைத்தும் திரட்டிய பணத்தை அந்த நிறுவனப் பங்கின் விலை கூடும் என்று Call Option ல் ஒரு பெரும் நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டார். 

அந்த விதியான நாளும் வந்தது. இரகசியத்தகவல் உண்மையானது தான். அந்த நிறுவனப்பங்கின் விலை ராக்கெட் வேகத்தில் உயர இருந்தது. அதே நேரம் அமெரிக்க அதிபர் வெடித்த வர்த்தக குண்டு ஒன்று பங்குச்சந்தையில் உணரப்பட்டது. உலகப் பங்குச்சந்தைகள் அனைத்தும் தலைகுப்புற விழுந்தன. எந்தப்பங்கும் தப்பவில்லை. 

பரமபத ஆதிசேஷன் பாம்பிடம் கொத்துப்பட்டாற் போல ஆடிட்டர் மகன் ஆரம்பித்த இடத்திற்கே வந்து விட்டார். 

ஆடிட்டர் மகன் தரகர் அலுவலகத்தை விட்டு வெளியேறும் போது சுவரில் மாட்டியிருந்த பகவத்கீதை வரிகள் கண்ணில் பட்டன. 

உன்னுடையது எதை இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? எதை நீ படைத்திருந்தாய், அது வீணாகுவதற்கு? எதை நீ எடுத்துக் கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதைக் கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும். இந்த மாற்றம் உலக நியதியாகும். 

ஆடிட்டர் மகன் புகை பிடித்தல் பங்குகளின் மூலமாகக் கெட்ட வழியில் வந்த பணம் வந்த வழியிலேயே போய் விட்டது என்பதாக மனதைத் தேற்றிக் கொண்டார்.

சங்கரன் இருந்திருந்தால் லேசாக சிரித்திருப்பார் என்று தோன்றியது

                     /முற்றியது/

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14