பங்கு கேள்வி பதில் - 4

பங்கு கேள்வி பதில் - 4


கேள்வி : IPO என்று சொல்லப்படும் முதல் பொது வெளியீட்டை மேற்கொள்ளாமலேயே பங்குகளை வெளியிடலாமா ?


பதில் : நிறுவனப் பிரிப்பு (Demerger) என்ற வகையில் வெளியிடலாம் . Motherson Sumi Wiring India நிறுவனம் இந்த வகையில் தான் வெளி வந்தது . அல்லது தலைகீழ் இணைப்பு (Reverse merger) என்ற அடிப்படையில் வெளியிடலாம் . ஏற்கெனவே சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்துடன் இணைப்பை மேற்கொள்வது இவ்வாறு அழைக்கப்படுகிறது . பதஞ்சலி நிறுவனம் இந்த வகையில் தான் வெளிவந்தது . ஏற்கெனவே சந்தையில் பட்டியல் இடப்பட்டிருந்த Ruchi Soya Industries நிறுவனத்துடன் அது இணைக்கப்பட்டது .



கேள்வி : IRCTC பங்கு அவ்வளவு தானா ? 2021 அக்டோபரில் அது 1000 ரூபாயைக் கடந்தது . தற்போதைய விலை 883 ?


பதில் : IRCTC நிறுவனப் பங்கின் PE வெகு தூரம் சென்று விட்டது . இனி EPS அதனை விரட்டிச் சென்று பிடிக்கும் வரை IRCTC பங்கு நின்று தான் செல்லும் . Avenue Supermart நிறுவனப் பங்கும் இதே நிலையில் தான் இருக்கிறது . 



கேள்வி : Discounted cash flow கணக்குகளை எப்படிப் போடுவது ?


பதில் : உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் இதுவரை எந்தப் பங்குக்கும் இந்தக் கணக்குகளைப் போட்டதில்லை . ITC நிறுவனப்பங்கின்  தற்போதைய விலை 450 ரூபாய் . சில வருடங்களுக்கு முன்னர் அதன் பங்குகளின் விலை 140 என்ற விலையில் வர்த்தகமானது . ITC நிறுவனம் கொடுங்கனவு (worst nightmare) ஒன்றில் இருப்பதாகத் தரகு நிறுவனங்கள் கூறிக் கொண்டன . அது ITC நிறுவனப் பங்கை வாங்க வேண்டிய ஒரு தருணமாகும் . அதே மாதிரி Coal India நிறுவனப்பங்கும் சில காலத்திற்கு முன்னர் 139 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமானது . PTC India நிறுவனப்பங்கு ஒருமுறை 34 ரூபாய் வரை வந்தது . Coal India பங்கும் PTC India பங்கும் இந்த விலைகளில் பங்கு ஈட்டு விகிதம் மூலமாகவே கணிசமான வருமானத்தைத் தரவல்லவையாக மாற்றம் பெறுகின்றன . முதலீட்டுப் பெருக்கம் மூலமான ஏற்றம் தனி . சந்தை , அவ்வப்போது தரும் இத்தகைய மதிப்பு வாய்ப்புகளை இனங்காண எந்தக் கணக்கும் தேவையில்லை . அதனை உள்ளுணர்வில் உங்களால் உணர முடியும் . 



கேள்வி : பங்காதாயப் பலன்களை அதிகமாகவும் தொடர்ந்தும் தரக்கூடிய பங்கு ஈட்டு விகிதப் பங்குகளைப் பரிந்துரைக்க முடியுமா ?


பதில் : Balmer Lawrie Investments , Coal India .



கேள்வி : இந்தக் காளைச் சந்தையில் மதிப்பு முதலீட்டு வாய்ப்புகள் ஏதேனும் உள்ளனவா ?


பதில் : ஏன் இல்லை ? MSTC பங்கு அந்த வகையில் வர்த்தகமாகிறது . நிறுவனம் நமது ஆறு அளவுருக்களான முதல் நீர்க்காமை (No equity dilution after IPO) கடன் இல்லாமை (Debt Equity Ratio - 0.24 %), தரமான வளர்ச்சி (ROCE - 50 %) , நிறுவனர் பங்கு (64.8 %) , அகழி (Asset light model , Monopoly rights by Govt , Network effect) அறம் (ESG) ஆகிய அனைத்தையும் பூர்த்தி செய்வதாக இருக்கிறது . நிறுவனத்தின் PE வெறும் 20.12 சதவீதம் மட்டுமே . 


            

கேள்வி : பென்னி ஸ்டாக் என்று அழைக்கப்படும் ரூபாய் பங்குகள் தான் மல்டி பேக்கர் பங்குகள் ஆகின்றனவா ?


பதில் : அது அவ்வாறு அல்ல . பங்குகளை ஒற்றை இலக்க விலையில் வாங்குவது அவை உயர்ந்து செல்வதற்கான ஒரு சாதகமான கட்டமைப்பைக் கொடுக்கிறது என்பதாக (ஊக வணிக) முதலீட்டாளர்கள் நினைக்கின்றனர் . இது முற்றிலும் தவறானது . 1 ரூபாய் பங்கு 100 ரூபாய் என்ற விலையில் 100 மடங்காளர் , 1000 ரூபாய் என்ற விலையில் அது 1000 மடங்காளர் என்று ஒரு ரூபாய்க்கும் அதற்கும் கீழாக பைசாக் கணக்கில் வர்த்தகமாகும் பங்குகளைத் தேடிப் பிடித்து முதலீடு செய்து கொண்டிருப்பார்கள் . பொதுவாக பத்து ரூபாய் மற்றும் அதற்குக் கீழாக வர்த்தகமாகும் பங்குகள் ரூபாய் பங்குகள் என்று அழைக்கப்படுகின்றன . ஒரு பங்கு ரூபாய் பங்காக இவ்வாறு வர்த்தகமாகிறதென்றால் அது அவ்வாறு வர்த்தகமாவதற்கு 99.99 சதவீதம் நியாயமான காரணங்கள் கட்டாயமாக இருக்கும் . ஒரு ரூபாய்க்கும் குறைவான பங்குகள் மல்டிபேக்கர் பங்குகள் ஆகின்றன என்ற தவறான புரிதலுக்கு இன்னொரு முக்கியமான காரணம் ஒன்றும் உள்ளது . ஐசிஐசிஐ வங்கிப் பங்கு அதன் முதல் பொது வெளியீட்டின் போது 10 ரூபாய் முக மதிப்பு மற்றும் 25 ரூபாய் உயர் மதிப்புடன் 35 ரூபாய் என்ற விலையில் வெளியிடப்பட்டது . ஒரு முறை பங்குப் பிரிப்பையும் (10 ரூபாய் பங்கு 2 ரூபாய்) ஒரு முறை இலவசப் பங்களிப்பையும் (10 பங்குகளுக்கு 1) மேற்கொண்டது . முதல் பொது வெளியீட்டின் 100 பங்குகள் இப்போது 550 பங்குகள் ஆகியிருக்கும் . ஒரு பங்கின் தற்போதைய விலை 1000 ரூபாய் . 550 பங்குகளின் விலை 550000 ரூபாய் . முதல் பொது வெளியீட்டின் 3500 ரூபாய் முதலீடு கிட்டத்தட்ட 157 மடங்கு கூடி தற்போது 550000 ஆகியிருக்கிறது . இதனை முதல் பொது வெளியீட்டின் 6.37 ரூபாய் தற்போது 1000 ஆகியிருக்கிறது என்பதாகவும் கூறலாம் . அதாவது 6.37 ரூபாய் 157 மடங்கு கூடி 1000 ஆகியிருக்கிறது . இது வெறுமனே கணக்கின் பொருட்டு சொல்லப்படுவது . ஐசிஐசிஐ வங்கி ஒருபோதும் 6.37 ரூபாய் என்ற விலையில் ரூபாய் பங்காக வர்த்தகம் ஆனதில்லை .



கேள்வி : பங்கின் விலையை ஏன் முக்கியமாகக் கருதக்கூடாது ? ஏன் அதன் விலை வருவாய் விகிதத்தை முக்கியமாகக் கருத வேண்டும் ?


பதில்  :  Fine Organic Industries நிறுவனப் பங்கை உதாரணமாகக் கொண்டு இதனைப் புரிந்து கொள்ள முயலலாம் . Fine Organic Industries 4985 ரூபாய் என்ற விலையில் தற்போது வர்த்தகமாகிறது . அதன் IPO விலையைக் கொண்டு கணக்கிட்டால் பங்கின் விலை கிட்டத்தட்ட ஆறு மடங்கு கூடியிருக்கிறது . ஆனால் அதன் தற்போதைய விலை வருவாய் விகிதம் (33.31) அதன் IPO விலை வருவாய் விகிதத்தை விட (29.2) பெரிய அளவில் கூடவில்லை . என்ன நடந்தது ? நிறுவன EPS கூடியிருக்கிறது . அதனால் பங்கின் விலையும் கூடியிருக்கிறது . வேறு மாதிரி சொல்வதானால் அதன் பங்குகளை தற்போது வாங்குவதும் IPO ல் வாங்குவதும் கிட்டத்தட்ட ஒன்று தான் . IPO ல் அதன் பங்குகளை வாங்க இயலாதவர்கள் தற்போது கூட அதனை வாங்கலாம் . விலையை மட்டும் கொண்டு பார்த்தால் இந்த மதிப்பு முதலீட்டு வாய்ப்பைத் தவற விட்டு விடுவோம் .



கேள்வி : சிறு பிள்ளைகள் வெள்ளாமை வீடு வந்து சேராது என்கிறான் என் நண்பன் . அவ்வப்போது இலாபத்தைப் பிடித்தே தீர வேண்டும் என்கிறான் ?


பதில் : HDFC வங்கிப் பங்கின் பட்டியல் இலாபத்தைப் பிடித்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி . HDFC வங்கி தற்போது 1708 bagger . உங்களிடம் ஒரு கேள்வி : அந்த நண்பன் நீங்கள் தானே ?



கேள்வி : வங்கிப் பங்குகளில் முதலீடு செய்ய எதனை முக்கியமாகப் பார்க்க வேண்டும் ?


பதில் : Net interest margin என்று அழைக்கப்படும் நிகர வட்டி விகிதம் . வங்கிகள் உங்களிடம் இருந்து முதலீடுகளைப் பல்வேறு வழி வகைகளில் பெறுகின்றன . அதற்கான வட்டி விகிதமும் வேறுபடுவதாக இருக்கும் . நடப்புக் கணக்கிற்கு பூஜ்ய சதவீத வட்டி , சேமிப்புக் கணக்கிற்கு  இரண்டே கால் சதவீதம் , நிரந்தர வைப்புக் கணக்குகளுக்கு ஐந்து முதல் ஆறு வரை . இவ்வாறு வாங்கிய  நிதிகளை வங்கிகள் பல்வேறு வகைகளில் கடனாகக் கொடுத்து வட்டி வருமானத்தை ஈட்டுகின்றன . வீட்டுக் கடன் போன்ற பாதுகாப்பான கடன்களுக்குக் கம்மியான வட்டி . தனிநபர் கடன் போன்ற பாதுகாப்பற்ற கடன்களுக்கு அதிகமான வட்டி . இவ்வாறு வங்கிகள் கடன் கொடுத்து ஈட்டிய வட்டியிலிருந்து அவை நமது முதலீடுகளுக்குக் கொடுக்கும் வட்டியைக் கழித்தால் கிடைக்கப்பெறுவது நிகர வட்டி விகிதம் . CASA என்று அழைக்கப்படும் Current Account Savings Account நிதிகளை அதிக அளவில் திரட்டினால் வங்கிகள் அவற்றின் முதலீடுகளுக்குக் கொடுக்கும் வட்டியைக் கணிசமாகக் குறைத்துக் கொள்ளலாம் . அதன் மூலமாக அவற்றின் நிகர வட்டி விகிதம் அதிகரிக்கும் . இந்த நிகர வட்டி விகிதம் அதிகமாகவும் தொடர்ந்த வாக்கிலும் இருக்கக்கூடிய வங்கிப் பங்குகளில் முதலீடு செய்வது சிறப்பு . குறை PE மதிப்பில் வர்த்தகமாகும் போது அவற்றை வாங்குவது இன்னும் சிறப்பு . Kotak Mahindra வங்கிப் பங்கு தற்போது அந்த இடத்தில் இருக்கிறது .



கேள்வி : 2023 ல் வாங்கிய புதிய பங்குகள் எவை என்பதைப் பகிர முடியுமா ?


பதில் : Aarti Industries 

               CMS Info Systems *

               Dreamfolks *

               eClerx Services 

               Fine Organic Industries *

               Glaxo Smithkline Pharma

               Indus Towers

               IRCON International 

               IRFC

              MSTC *

               Radiant CMS *

               REC

               TN Mercantile Bank


எனது பார்வையில் , நட்சத்திரக் குறியிட்ட பங்குகளைத் தற்போதைய விலையிலும் வாங்கலாம் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14