முதல் வரலாறு - 1

முதல் வரலாறு - 1

இருப்பு நிலைக் கணக்கில் (Balance Sheet) முதலாவது மற்றும் முக்கியமானது முதல் என்று அழைக்கப்படும் Capital. 

'முதல்'களில் இரண்டு வகை உண்டு. பங்கு சார் முதல் (Equity Capital) மற்றும் கடன் சார் முதல் (Debt Capital) இந்த இரண்டு விதமான ' முதல்' களையும் சமன் செய்து நிறுவனத்தை நடத்துவது வெறும் கணக்கு மட்டுமல்ல. அது ஒரு கலை. 

ஒரு கேள்வி. பங்கு சார் முதல் மலிவானதா அல்லது கடன் சார் முதல் மலிவானதா? பங்கு சார் முதலுக்கு நிறுவனம் வட்டி கட்ட வேண்டியதில்லை. இலாபம் ஈட்டினால் மட்டும் பங்காதாயம் (Dividend) வழங்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் பங்காதாயம் வழங்குவது நிறுவனத்தின் விருப்பத்தைப் பொறுத்தது. பங்காதாயம் வழங்காமல் வேறு முதலீட்டு வாய்ப்புகளை நிறுவனம் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், நிறுவனம் இலாபம் ஈட்டுகிறதோ இல்லையோ கடன் சார் முதலுக்கு கட்டாயம் வட்டி கட்டியாக வேண்டும். அதனால் பங்கு சார் முதல் கிட்டத்தட்ட இலவசம் என்றே சொல்லலாம். சரியா? தவறு. 

பங்கு சார் முதல் என்பது மிகவும் கவனமாகக் கையாளப்பட வேண்டிய ஒன்று. நிறுவனம் ஒன்றின் 10 ரூபாய் முக மதிப்பு உள்ள ஒரு பங்கு எப்படி மதிப்பு உருவாக்கத்தை அடைகிறது என்று பார்க்கலாம். நிறுவனம் தனிப்பட்ட ஒருவரின் கையில் உள்ளது. நன்கு இலாபம் ஈட்டுகிறது. 10 ரூபாய் முக மதிப்புள்ள ஒரு பங்கு 5 ரூபாய் ஈட்டுகிறது. அது தான் ஒரு பங்குச் சம்பாத்தியம் . ஆங்கிலத்தில் EPS என்று அழைக்கப்படும் Earnings Per Share. 

நிறுவனம் விரிவாக்கத்தின் பொருட்டு நிதி திரட்ட பங்குச்சந்தைக்கு முதன்முதலாக வருகிறது (IPO) நல்ல காளைச்சந்தை. நிறுவனம் , விலை வருவாய் விகிதம்  (Price Earnings Ratio ) 20 என்ற மதிப்பில் அதாவது பங்கு ஒன்றின் விலை 100 (5×20) ரூபாய் என்ற அளவில் பங்குகளை வெளியிடுகிறது. 10 ரூபாய் பங்கு 100 ரூபாய் ஆகி விட்டதைக் கவனியுங்கள். நிறுவனம் , முதல் நீர்க்காமை, கடன் இல்லாமை, தரமான வளர்ச்சி, அகழி, நிறுவனர் பங்கு மற்றும் அறம் முதலான ஆறு அளவுருக்களையும் வெற்றி கொள்வதாகக் கொள்ளலாம். இவ்வாறாக நாளடைவில் ஒரு பங்குச் சம்பாத்தியம் 50 ரூபாய் ஆகி விடுகிறது. 

சந்தை இம்மாதிரியான தனித்துவமான நிறுவனங்களுக்கு உயர் மதிப்பிலான PE விகிதத்தை வழங்கும். PE விகிதம் 60 என்று கொண்டால் 10 ரூபாய் பங்கின் மதிப்பு 3000 ரூபாய். காலப்போக்கில் 3000 ரூபாய் என்ற அளவில் மதிப்புப் பெருக்கத்தை அடையக்கூடிய பங்குகளை அது 10 ரூபாய் என்ற குறை மதிப்பில் இருக்கும் போது அதிக அளவில் வெளியிடக்கூடாது . நிறுவனம் தொடர்ந்து நன்கு வளர்ந்து வந்தால் அதன் பங்கு விலைக்கு வானமே எல்லை . 

நிறுவனத்திற்குக் கடன் சார் முதல் கொஞ்சம் இருப்பதாகக் கொள்ளலாம். நிறுவனம் ஒரு QIP (Qualified Institutional Placement) வெளியிட்டு, அதாவது தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு இந்த 60 என்ற உயர் மதிப்பிலான PE விகிதத்தில் பங்குகளைக் கொஞ்சமே கொஞ்சம் வெளியிட்டு மொத்தக் கடனையும் அடைத்து விடலாம். இவ்வாறாக இந்த உயர் மதிப்பிலான PE விகிதத்தைப் பணம் மாதிரி பயன்படுத்திக் கொள்ளலாம். நிறுவனம் தொடர்ந்து மேலே குறிப்பிட்ட ஆறு அளவுருக்களில் கவனம் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானது. இல்லாவிட்டால் இந்தப் பங்குச்சந்தை புனைவுப் பணம் (virtual money) கற்பூரம் மாதிரி காற்றில் கரைந்து விடும். இந்த உயர் மதிப்பிலான PE விகிதம் பரமபத ஆதிசேஷன் பாம்பிடம் கொத்துப் பட்டாற் போன்று சடாரென்று இறங்கி விடும் . இந்தப் பங்கு சார்ந்த முதல் மற்றும் கடன் சார்ந்த முதல் இரண்டையும் சமநிலைப்படுத்தல் கம்பி மேல் கழைக்கூத்தாடி நடப்பதற்கு ஒப்பானதாகும். கரணம் தப்பினால் மரணம். 

அடிக்கடி பங்குச் சந்தைக்கு வந்து நிதி திரட்டி பங்கு சார் முதலைப் பெருக்க வைக்கும் நிறுவனங்களில் அறவே முதலீடு செய்ய வேண்டாம். ராம்கோ சிமெண்ட் மாதிரி உள்முகமாகவே (internal accruals) வளரும் நிறுவனங்கள் தான் முதலீட்டிற்கு ஏற்றவை. சில நிறுவனங்கள் பங்குகளாக மாறும் கடன் பத்திர முதலீடுகள் (convertable debenture) என்று மறைமுகமாக பங்கு சார் முதலை ஊதிப் பெருக்குவதான காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும். இன்னும் சில நிறுவனங்கள் நல்ல காளைச்சந்தையில் PE விகிதம் உச்சத்தில் இருக்கும் போது உரிமைப் பங்குகளை வெளியிட்டு முதலீட்டாளர்களை ஒட்டக் கறந்து விடும். ஒரு நிறுவனம் ஆர்வக் கோளாறில் அடிக்கடி இலவசப்பங்குகளை அள்ளி வழங்கி பிறகு இந்த அதிகரிக்கப்பட்ட முதலுக்கு பங்காதாயம் வழங்க முடியாமல் திணறியது. 

மேலும் படிக்க : முதல் வரலாறு - 2

பங்கு முதல் வரலாறு (Capital History) குறித்துப் படிப்பதன் வாயிலாக நிறுவனம் ஒன்றில் முதலீட்டை மேற்கொள்வதற்கு ஒரு எளிமையான சூத்திரம் இருக்கிறது. முதல் வரலாறு நாலைந்து வரிகளுக்குள் முடிந்து விடவேண்டும். 

அதே மாதிரி நிறுவன ஆண்டறிக்கையில் (Annual Report) பொடி எழுத்துக்களில் அடிக்குறிப்புகள் (foot notes) அதிகம் இருந்தால் அந்த நிறுவனத்தைத் தவிர்த்து விடலாம். 

நிறுவன ஆண்டறிக்கையில் CEO வின் படத்தை ஒரு பக்கம் முழுமைக்கும் போட்டிருந்தால் அந்த நிறுவனத்தை short selling செய்யலாம். இதை வேடிக்கைக்காகச் சொல்லவில்லை. ENRON நிறுவனம் இந்த மாதிரி CEO வின் முழுப்பக்க படத்தை தனது ஆண்டறிக்கையில் வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தது. மேலும் அடிக்குறிப்புகளில் அதன் கணக்கு வழக்குகளை மறைத்தும் வைத்திருந்தது. கொஞ்ச நாட்களில் நிறுவனம் திவாலாகி விட்டது. 

அந்த வகையில் வாரன் பஃபெட்டின் பெர்க்சயர்  ஹாத்வே நிறுவன ஆண்டறிக்கையில் வரைபடம் கூட இடம் பெறாது. 

காளைச்சந்தை மற்றும் கரடிச்சந்தை என்பவை பகலும் இரவும் மாதிரி மாறி மாறி வரும். இன்னொரு விதமாகவும் , நிறுவனங்கள் , இந்தக் காளைச்சந்தை மற்றும் கரடிச்சந்தை ஊசலாட்டத்தைப் பணமாக்கம் செய்கின்றன . நிறுவனங்கள் , கரடிச்சந்தையில் நிறுவன விலை-வருவாய் விகிதம் (PE Multiple) குறை மதிப்பில் வர்த்தகமாகும் போது நிறுவனப் பங்குகளை buyback என்ற முறையில் திரும்ப வாங்கிக் கொண்டு பங்கு சார் முதலைக் குறைத்துக் கொள்ளும் . அதே மாதிரி காளைச்சந்தையில் விலை-வருவாய் விகிதம் உயர் மதிப்பில் வர்த்தகமாகும் போது அந்த உயர் மதிப்பிலான பங்குகளைக் கொண்டு பிற நிறுவனங்களைக் கையகப்படுத்தும்.  நாம் தனிப்பட்ட முறையில் கரடிச்சந்தையில் பங்குகளை வாங்கி காளைச்சந்தையில் விற்பதற்கு மாறாக இத்தகைய நிறுவனங்களை இனங்கண்டு முதலீடு செய்வதன் மூலமாக நிறுவனங்கள் எடுக்கும் முடிவுகளை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14