மெய்நிகர் பணம்
மெய்நிகர் பணம்
Virtual Money
பங்குச்சந்தைகளில் கடும் சரிவு. முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு இத்தனை இலட்சம் கோடி குறைந்தது என்பதாக செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள். அது ஒரு மெய்யல்லாத இழப்பு (notional loss) மறுநாள் பங்குச்சந்தை மீண்டெழுந்து இழப்பை சமன் செய்து விடுவது பத்திரிகைகளில் செய்தியாக வராது.
செய்தி என்பது குறித்து ஒரு ' அகராதி' விளக்கம் இருக்கிறது. நாய் மனிதனைக் கடித்தால் அது செய்தியல்ல. மனிதன் நாயைக் கடித்தால் அது தான் செய்தி.
பில்கேட்ஸ் இந்தப் பூவுலகின் ஆகப்பெரிய பணக்காரர். அவருடைய சொத்தின் மதிப்பு இத்தனை இலட்சம் கோடி டாலர்கள் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அத்தனை பணத்தையும் அவர் ரொக்கமாக அலமாரியில் வைத்துப் பூட்டியிருக்கவில்லை. சொல்லப்போனால் அவ்வளவு பணம் யாரிடமும் கிடையாது. அது ஒரு கருத்தியலான புனைவுப்பணம். பில்கேட்ஸ், மைக்ரோசாப்ட் என்ற மென்பொருள் நிறுவனத்தை இலாபகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார். அந்நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகள் அவர் வசம் உள்ளன. அந்தப் பங்குகளின் எண்ணிக்கையை, பங்குகளின் விலையால் பெருக்கி வரும் தொகை தான் அவருடைய சொத்து மதிப்பு. பங்குச்சந்தையில் வர்த்தகம் நடைபெறும் ஒவ்வொரு வினாடியும் அம்மதிப்பு பங்குகளின் விலைக்கேற்ப மாறக்கூடியது. பில்கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தை விற்று விட்டு வெளியேற முடியாது. அந்நிறுவனத்தை வாங்கக் கூடிய அளவிற்கு அவ்வளவு பணம் யாரிடமும் கிடையாது. பில்கேட்ஸின் சொத்து மதிப்பு, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயல்பாட்டுடன் கட்டப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் இலாபகரமாக இயங்கும் வரை அவற்றின் பங்குகளின் விலை கூடிக் கொண்டிருக்கும்.
சரி, அப்படியென்றால் பில்கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனப்பங்குகளை விற்கவே மாட்டாரா? அவருடைய அறக்கட்டளைக்காக மைக்ரோசாப்ட் நிறுவனப்பங்குகளைத் தொடர்ச்சியாக, கொஞ்சம் கொஞ்சமாக, சந்தை தாங்கும் அளவுக்கு விற்றுக் கொண்டிருக்கிறார். மைக்ரோசாப்ட் நிறுவனப்பங்குகளின் விலை சமீப காலமாக உயராமல் இருப்பதற்குப் பில்கேட்ஸின் பங்கு விற்பனை தான் காரணம் என்பதாகச் சொல்லப்படுகிறது.
ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெறும் அத்தனைக் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பும் அவரவர் நிறுவனத்தின் பங்கு மற்றும் அதன் தொடர்ச்சியாக அந்நிறுவனங்களின் செயல்பாட்டுடன் பிணைக்கப்பட்டுள்ளது. பில்கேட்ஸின் வருமானம் முழுவதும் மென்பொருளிலிருந்து தான் கிடைக்கிறது. அவரால் சிறு முதலீட்டாளர் மாதிரி பரவலான பங்குகளை வைத்திருக்க முடியாது. அந்த வகையில் வாரன் பஃபெட் ஒருவர் தான் அவருடைய முதலீட்டு நிறுவனத்தின் மூலமாக பரவலான பங்குகளை வைத்திருக்கிறார்.
சிறு முதலீட்டாளர்கள் நினைத்த போது ஒரு நிறுவனப்பங்கை விற்று விட்டு வெளியேறி விடலாம். பெரு முதலீட்டாளர்களால் அவ்விதம் செய்ய முடியாது. அந்த விதத்தில் சிறு முதலீட்டாளர்களுக்கு ஒரு சாதகமான கட்டமைப்பு (structural advantage) உள்ளது.
சரி, இந்தப் பங்குச்சந்தை புனைவுப் பணத்தை வைத்துக் கொண்டு வேறு என்னவெல்லாம் செய்யலாம்?
சமீபத்தில் Hindustan Unilever நிறுவனம் Glaxo SmithKline Consumer Healthcare நிறுவனத்தைக் கையகப்படுத்தியது. விலை கிட்டத்தட்ட 31700 கோடி. ஆனால் HUL நிறுவனம் பணமாக ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. மாறாக தனது பங்குகளைக் கொடுத்து அந்நிறுவனத்தை வாங்கிக் கொண்டது. GLAXO நிறுவனத்தின் ஒரு பங்குக்கு 4.39 HUL பங்குகள். அதற்காக HUL தன்னுடைய முதலில் (capital) கிட்டத்தட்ட 6 சதவீதம் பங்குகளை விட்டுக் கொடுத்தது. புனைவுப் பணத்தின் பற்பல பயன்பாடுகளில் இது தலையாயது.
Hatsun Agro Products நிறுவனம் ( ஆரோக்யா பால்) நிறையக் கடன் சுமையில் இருந்தது. அந்நிறுவனத்தின் மதிப்பு ஒரு பங்குச் சம்பாத்தியத்தைப் போல் 80 மடங்கு என்ற PE அளவுகளில் தான் எப்போதும் வர்த்தகமாகும். சராசரியாக ஒரு பங்கின் PE அளவு 16 என்ற மடங்குகளில் இருக்கும் போது ஆரோக்யா ஏன் இவ்வளவு அதிகமான மதிப்பீட்டில் வர்த்தமாகிறது என்பது யாருக்கும் புரியாத ஒரு புதிர். ஆரோக்யா நிறுவனம் தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு தன்னுடைய முதலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை விட்டுக் கொடுத்து, பணத்தைத் திரட்டி, கடனை அடைத்துக் கொண்டது.
பணியாளர்களைத் தக்க வைக்கப் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் நிறுவனப்பங்குகளைக் கொடுப்பது அன்றாட நடைமுறையாக உள்ளது. இந்த மாயப் பணத்தைப் பெற, நிறுவனங்கள், தங்கள் பங்குகளைப் பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டும். பட்டியலிட்டால் மட்டும் போதாது. நிறுவனங்கள் தொடர்ச்சியாக இலாபகரமாக இலாபமீட்டினால் ( இதைப்பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம்) மட்டுமே பங்கு விலைகள் அதிக மதிப்பீட்டில் வர்த்தகமாகும். பின்னர் இந்தப் புனைவுப் பணத்தைக் கொண்டு மென்மேலும் வளரலாம்.
மும்பை பங்குச்சந்தையின் தற்போதைய மெய்நிகர் பண மதிப்பு ரூபாய் 22785048 கோடி. அடுத்த முறை , செய்தித்தாள்களில் பங்குச்சந்தையில் கடும் சரிவு என்பதாக செய்தி வந்தால் லேசாகப் புன்னகைக்க வேண்டுகிறேன் .
Comments
Post a Comment