முதல் வரலாறு - 2

முதல் வரலாறு - 2

ஒரு தட்டச்சு நிறுவனம் 10000 ரூபாய் முதலீட்டில்  தொடங்கப் பெறுகிறது. 10 ரூபாய் முக மதிப்பைக் கொண்ட 1000 பங்குகள். இது தான் நிறுவனத்தின் பங்கு சார்ந்த முதல் (Equity Capital) நிறுவனம் தனிப்பட்ட ஒருவரின் கட்டுப்பாட்டில் உள்ளது. நிறுவனம் நல்ல கேந்திரமான ஒரு இடத்தில் அமையப் பெற்றிருக்கிறது. முதலாளி திரு.KKV அவர்கள் இன்முகத்துடன் வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்கிறார். ஒரேயொரு தட்டச்சு இயந்திரத்துடன் தொடங்கப்பட்ட KKV நிறுவனத்தில் இப்போது பத்து தட்டச்சு இயந்திரங்கள் ஓய்வு ஒழிச்சல் இல்லாது இயங்குகின்றன. பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள். நிறுவனத்திற்குக் கடன் சார்ந்த முதல் (Debt Capital) எதுவும் இல்லை. திருவாளர் KKV அவர்களுக்குத் தமிழில் பிடிக்காத வார்த்தை கடன். தட்டச்சு நிறுவனம் அவருக்குச் சொந்தமான இடத்தில் இயங்குவதால் வாடகை எதுவும் கிடையாது. மேலும் நிறுவன இயந்திரங்கள் உட்பட அனைத்துத் தளவாடங்களும் நிறுவன இலாபத்தில் (Internal accruals) வாங்கப்பட்டவை. நிறுவனத்தின் தற்போதைய நிகர இலாபம் 100000 ரூபாய். ஒரு பங்கிற்கான நிகர வருவாய் 100 ரூபாய். அதாவது 10 ரூபாய் முக மதிப்பைக் கொண்ட ஒரு பங்கு 100 ரூபாய் ஈட்டுகிறது. இது தான் EPS (Earnings Per Share) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஒரு பங்கு வருவாய். 

திரு KKV அவர்கள் நிறுவனத்திற்கு நாலைந்து கிளைகளை அமைக்க விரும்புகிறார். முன்பே குறிப்பிட்டது மாதிரி அவருக்குக் கடன் வாங்குவதில் உடன்பாடு கிடையாது. நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி பங்குச்சந்தையில் தனது நிறுவனப் பங்குகளைப் பட்டியலிட்டு பணம் திரட்ட முடிவு செய்கிறார். நிறுவனத்தின் ஒரு பங்கு வருவாய் 100 ரூபாய் என்று பார்த்தோம். சந்தை இம்மாதிரியான நிறுவனங்களுக்கு சராசரியாக 15 மடங்கு விலை வருவாய் விகிதம் வழங்கும். இந்த இடத்தில் சராசரியாக என்று குறிப்பிட்டதைச் சற்று கவனிக்க வேண்டுகிறேன். 15 மடங்கு விலை வருவாய் விகிதம் (Price Earning Multiple)  என்பது கல்வெட்டில் பொறிக்கப்படவில்லை. விலை வருவாய் விகிதம் 15 மடங்காக இருக்கலாம். 12 ஆகவும் இருக்கலாம். ஏன், பங்குகளுக்கான தேவைப்பாட்டைப் பொறுத்து 20 ஆகவும் மாறலாம். திரு.KKV அவர்கள் ரொம்பவும் நாணயமானவர். பங்குகள் சந்தையில் பட்டியலிடப்பட்டவுடன் முதலீட்டாளர்களுக்கு எவ்விதத்திலும் நஷ்டம் ஏற்படக்கூடாதென்று விலை வருவாய் மடங்கு 12 என்ற அளவில் IPO விலையை நிர்ணயம் செய்கிறார். இவ்வாறாக ஒரு பங்கு 1200 (100 × 12) ரூபாய் என்ற விலையில், நிறுவனத்தின் 20 சதவீதப் பங்குகளை மட்டும் பட்டியலிட்டு  240000 (1200 × 200) ரூபாய் திரட்டிக் கொள்கிறார். அவருடைய 80 சதவீதப் பங்குகளின் மதிப்பு இப்போது ரூபாய் 960000 (1200 × 800) 

KKV நிறுவனம் அறவழியில் செயல்பட்டு செவ்வனே வளர்ந்து வருகிறது. தட்டச்சு பயிலகம் ஒன்று புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கிறது. பத்து ஜெராக்ஸ் இயந்திரங்களை வாங்கிப் போட்டிருக்கிறார். சந்தை அவருடைய தனித்துவமான நிறுவனத்திற்கு இப்போது 20 விலை வருவாய் விகிதத்தை வழங்குகிறது. சமீபத்திய EPS 150 ரூபாய். ஆக தற்போதைய பங்கின் விலை 3000 (150 × 20) ரூபாய். அவருடைய பங்குகளின் மதிப்பு 24 இலட்சம் ரூபாய் (3000× 800) 

பங்குச்சந்தையில் இப்போது காளைச்சந்தையின் காலம். KKV நிறுவனம் 25 என்ற PE அளவுகளில் வர்த்தகமாகிறது. ஒரு பங்கின் விலை 3750 ரூபாய் (150 × 25) அவருடைய 80 சதவீத நிறுவனப் பங்குகளின் மதிப்பு 30 இலட்சம் ரூபாய் (3750 × 800) 

இன்னொரு தட்டச்சு நிறுவனம் ஒன்று இடர்ப்பாடு விற்பனை (distress selling) என்ற அடிப்படையில் விலைக்கு வருகிறது. KKV அவர்கள் மிகை மதிப்பில் வர்த்தகமாகும் தனது நிறுவன பங்குகள் 5 சதவீதத்தை அந்த நிறுவனர்களுக்கு வழங்கி புதிய நிறுவனத்தை தனது நிறுவனத்துடன் இணைத்துக் கொள்கிறார். இப்போது KKV நிறுவன EPS புதிய நிறுவனத்தையும் சேர்த்து 200 ரூபாய். சந்தை கொடுக்கக்கூடிய PE விகிதம் சற்றே அதிகரித்து 27 என்ற அளவில் வர்த்தகமாகிறது. ஒரு பங்கின் விலை 5400 ரூபாய் (200 × 27) அவருடைய சொத்தின் தற்போதைய மதிப்பு 40 இலட்சத்து  ஐம்பதினாயிரம் (5400 × 750) 

காலச்சக்கரம் சுழல்கிறது. பங்குச்சந்தையில் இப்போது இலையுதிர் காலம். அதாவது கரடிச்சந்தையின் காலம். திடுதிப்பென்று நிறுவன PE விகிதம் 12 என்ற குறை மதிப்பில் வர்த்தகமாகிறது. KKV நிறுவனம் தனது உபரி நிதியைக் கொண்டு 5 சதவீத நிறுவனப் பங்குகளை சந்தையிலிருந்து திரும்ப வாங்கிக் கொள்கிறது. இவ்வாறு நிறுவனம் பங்குகளைத் திரும்பப் பெறுவதால் மொத்தப் பங்குகளின் எண்ணிக்கை குறையும். விளைவாக ஒரு பங்கு வருவாய் கூடும். விலை வருவாய் விகிதம் கூடா விட்டாலும் பங்கின் விலை கூடும். 

பங்குச்சந்தை மீண்டும் தன்னிலை அடைந்து நிறுவனத்தின் தற்போதைய PE விகிதம் 20 என்ற அளவுகளில் வர்த்தகம் நடைபெறுகிறது. தற்போதைய EPS 250 ரூபாய். இதனுடன் PE விகிதமான 20ஐ பெருக்கினால் பங்கின் விலை கிடைத்து விடும். பங்கின் விலை 5000 ரூபாய். KKV அவர்களின் சொத்தின் மதிப்பு இப்போது 40 இலட்சம் ரூபாய் (5000 × 800)  

SEBI, நிறுவனத்தில் நிறுவனர் பங்கு 75 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும் என்பதாக புதிய சட்டம் ஒன்றை இயற்றுகிறது. திரு.KKV அவர்கள் தனது நிறுவன முதலீட்டாளர்களுக்கு மட்டும் (அவருக்கு இல்லை) 5 சதவீத பங்குகளை இலவசமாக அளிக்கிறார். இந்த மாதிரியான தருணங்களில் நிறுவனர்கள் அந்த மீதமான பங்குகளை சந்தையில் Follow on Public Offer - FPO என்று விற்பனை செய்வது தான் நடைமுறை. ஆனால் KKV அவர்கள் இரண்டரை இலட்சம் (5000 × 50) பெறுமானமுள்ள பங்குகளைத் தன் நிறுவன பங்குதாரர்களுக்கு இலவசமாக அளிக்கிறார். KKV அவர்கள் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராகப் பார்க்கப்படுகிறார். அவருடைய அறவழிக்கு ஒரு அளவே இல்லையா? Forbes பத்திரிகையின் Most Ethical Indian Companies வரிசையில் KKV நிறுவனம் முதலிடம் பெறுகிறது. நிறுவன PE விகிதம் இப்போது எங்கேயோ போய் விட்டது. அவருடைய சொத்தின் மதிப்பு அவர் விட்டுக் கொடுத்த 5 சதவிகிதத்திற்கும் மேலாகக் கூடி விட்டது. 

KKV நிறுவன முதல் வரலாறு நாலைந்து வரிகளுக்குள் முடிந்து விட்டதைக் கவனிக்க வேண்டுகிறேன். நிறுவனம் அடிக்கடி பங்குச் சந்தைக்கு வந்து நிதி திரட்டும் காரியங்களில் ஈடுபடவில்லை. பங்குச்சந்தை உச்சபட்ச அளவுகளில் இருக்கும் போது பங்குகளாக மாறக்கூடிய கடன் பத்திரங்களையோ அல்லது உரிமைப் பங்கு வெளியீட்டையோ 'உயர் மதிப்பீட்டில்' மேற்கொள்ளவில்லை.  திரு.KKV அவர்கள் முதலில் குறை PE  மூலமாக முதலீட்டாளர்களுக்கு விட்டுக் கொடுத்த மதிப்பும், கடைசியாக முதலீட்டாளர்களுக்கு உண்மையிலேயே இலவசமாக வழங்கிய பங்குகளின் மதிப்பும் மற்றொரு வகையில் அவரை வந்தடைந்து விட்டன. பணம் என்பது மின்சாரம் மாதிரி. Current என்பது flowல் இருந்தால் தான் அது பயன்படும். அது மாதிரி பணமும் ஒரு பாய்ச்சலில் இருக்க வேண்டும். அதனால் தான் பணத்திற்கு currency என்பதான பெயர் வந்தது. உங்கள் கோப்பை முழுவதும் தேநீர் உள்ளது. அந்தக் கோப்பையிலிருந்து கொஞ்சம் தேநீரை மற்றொரு கோப்பைக்கு மாற்றினால் மட்டுமே தொடர்ந்து வரும் உங்களுக்கான தேநீரை நீங்கள் சிந்தாமல் சிதறாமல் கைப்பற்ற முடியும். இவ்வாறாக KKV நிறுவனத்திற்கு அற வழியே அகழியாகவும் அமைந்து விட்டது.

சிலர் பங்குச்சந்தை ஒரு சூதாட்டக்களம் என்பதான பொத்தாம் பொதுவான பார்வை ஒன்றைக் கொண்டிருப்பார்கள். நிறையப் பேர் பங்குச்சந்தையில் சூதாடுவதால் அது சூதாட்டக்களமாகி விடாது. பங்குச்சந்தை சூதாட்டக்களமல்ல. அது சொத்து உருவாக்கும் ஒரு களம். KKV நிறுவனத்தில் சொத்து எப்படி உருவாக்கம் அடைகிறது என்று விலாவாரியாகப் பார்த்தோம். நிறுவனம் எத்தனை பேர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கிறது, எவ்வளவு வருமான வரி கட்டுகிறது, எத்தனை முதலீட்டாளர்கள் பயன் பெறுகிறார்கள்? எத்தனையோ பேர் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி அதனை வெற்றிகரமாக நடத்தவேண்டும் என்ற கனவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு பேருக்கும் அந்த வாய்ப்பு கிட்டி விடாது. ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது அவர்களின் இலட்சிய தாகத்தைத் தணிக்க உதவுகிறது. மேலும் பங்குச்சந்தை முதலீடுகளின் மூலமாக அனைத்து நிறுவனங்களின் சொத்து உருவாக்கத்திலும் நாம் பங்கு பெறலாம். 

மிகப்பெரும் செல்வ வளங்களை அடைய இரண்டு வழிகள் இருக்கின்றன. நிறுவனம் ஒன்றைத் தொடங்கி அதனைப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவது ஒன்று. இரண்டாவது, பங்குச்சந்தையில் தரமான நிறுவனங்களை மதிப்பு முதலீட்டு அடிப்படையில் வாங்கி ஆண்டாண்டு காலம் வைத்திருப்பது. இந்த இரண்டு வழிகளின் கூடுகையில் (intersection) வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் உலகின் ஒரேயொருவர் வாரன் பஃபெட்.

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14