எனது விருப்ப பங்குச் சலிப்பான்
எனது விருப்ப பங்குச் சலிப்பான்
My Favourite Stock Screen
1.முதல் நீர்க்காமை (No Equity Dilution)
2. கடன் இல்லாமை (Nil Debt/ Low Debt)
3.தரமான வளர்ச்சி (Quality Growth)
4.அகழி (Moat)
5.நிறுவனர் பங்கு (Skin in the Game)
6.அறம் (Corporate Governance)
ஒவ்வொன்றையும் சற்றே நெருங்கிச் சென்று ஆராயலாம்.
1. முதல் நீர்க்காமை
முதல் நீர்க்காமை என்பதைச் சுருக்கமாக இவ்விதம் விளக்கலாம். பீஸ்ஸா ஒன்றை நான்கு துண்டுகளாக வெட்டி உண்டால் ஓரளவு வயிறு நிரம்பும். அதையே நானூறு துண்டுகளாக வெட்டினால் என்ன சுவை தெரியப் பெறும்? முதல் நீர்க்காமையின் சிகர உதாரணமாக ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தைக் குறிப்பிடலாம். IPO ல் நிறுவனம் பங்கு சார் முதல் திரட்டிய பின்னர் அது நிதி திரட்டும் பொருட்டு பங்குச்சந்தையின் பக்கமே வரவில்லை. நிறுவனம் வளர்ந்ததெல்லாம் அதன் இலாபத்தின் மூலமாக மட்டுமே. அடிக்கடி பங்குச்சந்தைக்கு வந்து நிதி திரட்டி தன் பங்கு மூலதனத்தை நீர்த்துப் போகச் செய்யும் நிறுவனங்களில் அறவே முதலீடு செய்ய வேண்டாம். Capital Intensive என்று சொல்லப்படும் சில துறைகளைச் சார்ந்த நிறுவனங்கள் அடிக்கடி மூலதனத்தைத் திரட்டியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும். அந்த மாதிரி பங்குகளைத் தவிர்த்து விடுதல் நல்லது. 'பங்கு மூலதனம் (Share Capital) 4000 கோடி. முக மதிப்பு ரூபாய் 10 உள்ள 400 கோடி பங்குகள். ஒரு பங்கின் விலை 200 ரூபாய். அதனுடைய சந்தை மதிப்பு 80000 கோடி. இந்தியாவின் மிக மதிப்பு வாய்ந்த நிறுவனம் (Most Valuable Company)' என்று பத்திரிகைகளில் ஜல்லியடித்துக் கொண்டிருப்பார்கள். அந்த நிறுவனர்கள் உலகப் பணக்காரர்கள் வரிசையில் இடம் பெற வேண்டுமானால் இது உதவலாம். மேலும் மாயப் பணம் என்று அழைக்கப்படும் இந்தப் பங்குச்சந்தை மெய்நிகர் பணத்தைக் காட்டி கடன் வாங்கலாம். முதலீட்டாளர்களுக்கு இதனால் பைசா பிரயோஜனம் கிடையாது. நம்மைப் பொறுத்தவரை நிறுவனப்பங்கை எவ்வளவு ரூபாய்க்கு வாங்கினோம்? எவ்வளவு ரூபாய்க்கு விற்றோம்? இந்த இடைப்பட்ட காலத்தில் நிறுவனம் வழங்கிய ஈவுத்தொகை எவ்வளவு? இலவசப்பங்கு, பங்குப் பிரிப்பு மற்றும் நிறுவனப் பிரிப்பு முதலான கணக்குகள். அவ்வளவு தான் நமக்குத் தேவை. அந்த வகையில் Money Life பத்திரிகையை இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும். அந்தப் பத்திரிகை ஒன்று மட்டுமே இந்தத் தகவல்களை வருடத்தின் கடைசி இதழில் வெளியிடுகிறது. மற்றபடி அந்த நிறுவனம் உலகின் #1 நிறுவனம் ஆனால் என்ன ஆகா விட்டால் தான் என்ன? இந்த மாதிரி இரைச்சலில் (noise)கவனத்தைச் சிதற விடாமல் குறியீட்டில் (signal) கவனம் கொள்ளுங்கள்.
2. கடன் இல்லாமை
கடன் வாங்கி காணாமல் போன நிறுவனங்களின் பட்டியலுக்கு முடிவே கிடையாது. கடன் இல்லா வாழ்வே வாழ்வு. இது தனி நபர்களுக்கு மட்டுமல்ல, நிறுவனங்களுக்கும் பொருந்தும். நிறுவனம் உள்முகமாகவே (internal) வளர வேண்டும். நிறுவனங்களுக்கு இரண்டு விதமான முதல்கள் (capital) உண்டு. முதலில் குறிப்பிட்ட பங்கு சார் முதல் (equity capital) மற்றும் கடன் சார் முதல் (debt capital) பங்கு சார் முதல் மற்றும் கடன் சார் முதல் இந்த இரண்டையும் நிறுவனம் ரொம்பவும் சார்ந்திருக்கக் கூடாது. மேலும் கம்பி மேல் நடக்கும் கழைக்கூத்தாடி போன்று இந்த இரண்டு 'முதல்'களையும் சமன் செய்வதில் இருக்கிறது சூட்சுமம்.
3. தரமான வளர்ச்சி
ஒரு நிறுவனம் தொடர்ச்சியாக ஆண்டுக்கு ஆண்டு 20 சதவீதம் இலாபம் ஈட்டுகிறது என்று வைத்துக் கொள்வோம். 100 ரூபாய் முதல் (capital) என்று கொண்டால் முதல் வருட இலாபம் 120 ரூபாய். இரண்டாம் வருடம் முதல் வருட இலாபமான 120 ரூபாய்க்கு 20 சதவீதம் என்றால் 144 ரூபாய். அதற்கடுத்த வருடம் இந்த 144 ரூபாய்க்கு... இவ்வாறு ஆண்டுக்காண்டு அதிகரித்து வரும் இலாபத்தின் மேல் இலாபம் ஈட்டுவது இலாபகரமான வளர்ச்சி. எளிதாக எழுதி விட்டேன். இந்திய அளவில் ஏன் உலக அளவில் மிகச்சில நிறுவனங்கள் மட்டுமே இந்தத் தடை தாண்டும் ஓட்டத்தில் தொடர்ந்து வெற்றி பெற்ற வண்ணம் உள்ளன. மேலும் இந்த இருபது சதவீத இலாபத்தை நிறுவனம் உள்முகமாக வளர்வதன் (internal growth) மூலமாக அடையப் பெறுவது தான் தரமான வளர்ச்சி. மதர்சன் சுமி மாதிரியான வெகு சில நிறுவனங்கள் மட்டுமே பிற நிறுவனங்களைக் கையகப்படுத்தும் கலையைக் கற்றுத் தெளிந்திருக்கின்றன. மற்றபடி பெரும்பாலான சமயங்களில் கையகப்படுத்துதல் கை விடுதலில் தான் முடியப் பெற்றிருக்கிறது.
4. அகழி
Capitalism ன் ஒரு பெரும் பிரச்னை என்னவென்றால் கருத்தாக்கம் (concept) ஒன்று வெற்றி பெற்று ஒரு நிறுவனம் நன்கு வளர்ந்து வருகிறதென்றால் அதை நகல் எடுக்க ஓராயிரம் நிறுவனங்கள் புற்றீசல் மாதிரி முளைத்து விடும். அவ்வாறு நகல் எடுக்காவண்ணம் நம் நிறுவனத்தைக் காத்துக் கொள்ள உதவுவது தான் அகழி. அகழியில் பல்வேறு வகை உண்டு.
Positive Feedback Loop (Info Edge)
Brand Equity (Pidilite)
Monopoly (ITC)
Quality (Sundram Fasteners)
Ethical (Ramco Cements)
Strategic Asset (Nesco)
Frequent & Repeated Purchase (AIA Engineering)
World Wide Network (Balkrishna lndustries)
5. நிறுவனர் பங்கு
நிறுவனத்தில் நிறுவனர் பங்கு பிரதானமாக இருக்க வேண்டும். அப்போது தான் அதன் நல்லது கெட்டதுகளில் அவர் கவனம் இருக்கும். வாரன் பஃபெட்டின் 99 சதவீத சொத்து அவரது முதலீட்டு நிறுவனமான பெர்க்சயர் ஹாத்வே யில் உள்ளது என்பது இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது.
6. அறம்
கடைசியாக நிறுவனம் அற வழியில் (Ethical) செயல்படுகிறதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வாரன் பபெட் சொன்னது மாதிரி கெட்ட மனிதர்களுடன் நல்ல ஒப்பந்தம் போட முடியாது. சமீபத்திய உதாரணம் IL&FS குழுமம். Ambika Cotton Mill ன் நிறுவனர் மற்றும் CEO திரு.சந்திரன் அவர்களைக் குறித்த ஒரு செய்தியை இங்கே குறிப்பிட்டால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். திரு.சந்திரன் தனக்கான CEO சம்பளமான மாதம் இரண்டு இலட்சம் ரூபாயை வேண்டாம் என்பதாக விட்டுக் கொடுத்து விட்டார். முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் பங்காதாயம் மட்டுமே நிறுவனர் என்ற அடிப்படையில் அவருக்குக் கிடைக்கும். என்னுடைய வாழ்க்கைக்கு அதுவே தாராளம் என்பதாக ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த மாதிரி நல்ல மனிதர்களுடன் நல்ல ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுக் கொள்ளலாம். இவ்விதமாக அறவழி என்பது வெறும் இலக்கு மட்டுமல்ல. அது ஒரு வாழ்க்கை முறை.
இந்த 6 அளவுருக்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதைக் கொஞ்சம் கூர்ந்து படிப்பவர்கள் உணர்ந்திருக்கலாம். நிறுவனம் உள்முகமாகவும் தரமாகவும் வளர்வதற்கு பங்கு சார் முதல் மற்றும் கடன் சார் முதல் இந்த இரண்டும் குறைவாக இருத்தல் அவசியம். மேலும் இவ்வாறான தரமான வளர்ச்சியைக் காக்கும் அரணாக அகழி செயல்படுகிறது. அறம் சார்ந்த செயல்பாடுகளே அகழியாகவும் செயல்படும். இந்த எல்லாவற்றிக்கும் அர்த்தத்தைத் தருவது நிறுவனர்களின் அர்த்தமுள்ள பங்கு.
இந்த 6 பங்குச் சலிப்பானையும் (stock screen) ஒரு நிறுவனம் வெற்றி கொண்டால் அதனை மதிப்பு முதலீடு அடிப்படையில் மட்டுமே வாங்க வேண்டும் என்பது மிக முக்கியமானது. இவ்வாறு பட்டை தீட்டப்பட்ட வைரங்களை ஆண்டாண்டு காலம் வைத்திருக்க வேண்டும் என்பது அதை விட முக்கியமானது. Diamonds are forever.
அருமையான எளிய விளக்கம்.
ReplyDelete