காலம்
காலம்
சின்ன வயதில் கால் பரீட்சை விடுமுறை என்பது ஒரு நீண்ட நெடிய காலமாகத் தோன்றும். அந்தப் பத்து நாள் விடுமுறை என் முன்னால் உட்கார்ந்து என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும். இப்போதெல்லாம் காலம் இறக்கை கட்டிப் பறப்பதாகத் தோன்றுகிறது.
என் நண்பர் ஒருவர் எல்லாவற்றிக்கும் கிரிக்கெட்டை உதாரணம் காட்டிப் பேசுவார். அவருடைய பாஷையில் சொல்வதானால் ஓவர் கம்மியாக இருப்பதால் இவ்வாறு தோன்றுகிறதோ என்னவோ?
என்னுடன் பணி புரிந்து ஓய்வு பெற்ற சிலரின் பெரிய பிரச்னை இந்த நேரத்தைத் தள்ளுவது தான். பொழுதே போகவில்லை என்று புகார் சொல்லிய வண்ணம் இருப்பார்கள். ஏதாவது ஒரு துறையில் தீரா ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்பொழுது பிழைப்பீர்கள். எனக்கு நேரம் போதாமை என்பது ஒரு பெரும் பிரச்னையாக இருக்கிறது. பங்குச்சந்தை குறித்துப் படிக்க வேண்டிய புத்தகங்கள் இன்னும் எண்ணற்றவை இருக்கின்றன. படித்த புத்தகங்களையே கொஞ்ச காலம் கழித்துத் திரும்பவும் படித்தால் புதுப்புது அர்த்தங்கள் தென்படும். தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தால் நம் பார்வை விசாலமடைகிறது. புதிய கோணங்கள் பார்க்கக் கிடைக்கிறது. வாரன் பஃபெட், வாழ்க்கையில் முன்னேற ஒரேயொரு உத்தியைத் தான் முன் வைக்கிறார். தினமும் படுக்கப் போவதற்கு முன் முதல் நாளை விட புதிதாக ஏதேனும் ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்ளுங்கள். பணத்தின் கூட்டுப் பெருக்கம் மாதிரி அது அறிவின் கூட்டுப்பெருக்கம்.
முதலீட்டுச் சமன்பாட்டில் காலம் ஒரு கேந்திரமான இடத்தை வகிக்கிறது. ஒரு முதலீட்டுச் சமன்பாட்டில் மூன்று உட்கூறுகள் இருக்கின்றன. ஆரம்ப முதலீடு, வருமான விகிதம் மற்றும் காலம். இதில் ஆரம்ப முதலீடு மற்றும் வருமான விகிதம் என்பவைகளைச் சற்றே மறந்து விட்டு காலத்தை மட்டும் முன்னிலைப்படுத்திப் பார்க்கலாம். ஒரு முதலீட்டின் 5 /10/15 வருட கூட்டுப் பெருக்கம் எவ்வளவு என்பதை மட்டும் அட்டவணைப்படுத்திப் பாருங்கள். மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1979 லிருந்து நாளது தேதி வரையான இந்த 42 வருட காலத்தில் 16 சதவீத CAGR கொடுத்திருக்கிறது. தரமான பங்குகளை மதிப்பு முதலீட்டு அடிப்படையில் வாங்கி ஆண்டாண்டுக் கணக்கில் வைத்திருந்தால் சராசரி வருமானமாக 25 சதவீத CAGR பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசம்.
இவ்வாறு காலத்தை முன்னிலைப்படுத்திப் பார்ப்பதால் முதலாவதும் முக்கியமாவதுமாக ஒரு நீண்ட காலப் பார்வை கிடைக்கப் பெறுகிறது. பங்குச்சந்தை தினசரி ஏறி இறங்கிக் கொண்டிருக்கும். ஆனால் பத்தாண்டுகளின் (decade) கணக்கில் கட்டாயமாக ஏறுமுகத்தில் இருக்கும். தினசரி ஏறி இறங்கும் பங்குச்சந்தை ஒரு இரைச்சல் (noise) பத்தாண்டுகளின் கணக்கிலான பங்குச்சந்தை ஒரு குறியீடு (signal)
இரண்டாவதாக நாம் பங்குகளை வாங்க விற்க என்று உள்ளே வெளியே விளையாட்டு விளையாடாமல் இருப்பதால் தரகருக்கான தரகு, bid ask spread (பங்குகளை வாங்கும் போது கூடுதல் விலை/ விற்கும் போது குறைந்த விலை) மூலதன ஆதாய வரி முதலான உராய்வுச் செலவுகள் (frictional costs) குறைந்த அளவே வரும். நீண்ட கால முதலீட்டில் 0.5 சதவீத அதிகரிப்பு கூட மிகப்பெரிய விளைவை ஏற்படுத்த வல்லது.
இவ்வாறாக பங்குகளை மதிப்பு முதலீட்டு அடிப்படையில் வாங்கி நீண்ட காலத்திற்கு ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட புறக்கணிப்பை (Benign Neglect) மேற்கொள்ளலாம். தனிப்பட்ட பங்குகளை வாங்கி அதைத் தொடர (track) இயலாதவர்கள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி முதலான குறியீட்டு ETFகளை வாங்கலாம். ETF களுக்கென்று சில தனிப்பட்ட ஆதாயங்கள் இருக்கின்றன. பரஸ்பர நிதிகளுக்கு மேலாண்மைச் செலவுகள் (management expenses) 2.5 சதவீதம் என்றால் ETFகளுக்கு 0.75 மட்டும் தான். ETFகளில் தொடர்ச்சிப் பிழை ( tracking error) குறைந்த பட்ச அளவீட்டில் மட்டுமே இருக்கும். மேலும் குறியீடுகள் பழைய நிறுவனங்கள் கழிதலும் புதிய நிறுவனங்கள் புகுதலுமாக என்றென்றும் இளமையாகவே இருக்கும்.
முதலீட்டாளரின் ஆயுட்காலம் வரையறைக்கு உட்பட்டது. நிறுவனங்களுக்கு அந்த மாதிரி ஆயுட்கால வரையறை எதுவும் கிடையாது. ITC மற்றும் Britannia போன்றவை 100 வருட இளமையான நிறுவனங்கள். FABER CASTELL என்ற எழுதுபொருள் நிறுவனம் 1761 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. முதலீட்டாளர்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்க நம்மிடம் மருந்துகள் இல்லை. முதலீட்டின் ஆயுட்காலத்தை ஒரு வகையில் நீட்டிக்கலாம். நம் முதலீட்டை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதன் மூலமாக ... ஒரேயொரு பிரச்னை. நம்முடைய விழுமியங்களை (values) அவர்களும் மதிக்க வேண்டும்.
Comments
Post a Comment