காப்பீடு முதலீடு அல்ல

காப்பீடு முதலீடு அல்ல

Insurance is not Investment

முதலீடு செய்வதற்கு முன்பாகக் காப்பீடு எடுத்துக் கொள்வது மிக முக்கியம். நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்து, காலப்போக்கில், உலகின் எட்டாவது அதிசயம் என்று அழைக்கப்படும் கூட்டு வட்டியின் மூலமாக முதலீட்டுப் பெருக்கத்தை அடைந்து உங்களுக்கே உங்களுக்காக ஒரு சேமிப்புக் கருவூலத்தை உருவாக்குவது ஒரு வகை. காப்பீட்டில் அடிப்படையாக என்ன நிகழ்கிறதென்றால் , நீங்கள் ஐம்பது இலட்சத்திற்குக் காப்பீடு எடுத்துக் கொண்டால், உடனடியாக, அடுத்த கணமே நீங்கள் ஐம்பது இலட்சத்திற்கான சேமிப்புக் கருவூலத்தை உருவாக்கிக் கொண்டதாக அர்த்தம். நாம் இல்லாத போது நம் வாரிசுகளுக்குத் தான் அந்தப் பணம் கிடைக்கும் என்றாலும் காப்பீட்டின் பொருள் என்பது இது தான். 

காப்பீட்டைக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ எடுத்துக் கொள்ளக்கூடாது. மனித வாழ்க்கை மதிப்பு (Human Life Value) என்று சொல்வார்கள். அதைக் கணக்கிட்டு சரியான தொகைக்குக் காப்பீடு எடுத்துக் கொள்ள வேண்டும். 

குறைந்த முனைமத் தொகைக்கு (Premium) அதிகபட்சக் காப்பீடு எடுத்துக் கொள்வதும் மிக முக்கியம். அந்த அடிப்படையில் பார்த்தால் வரையறுக்கப்பட்ட காப்பீடு (Term Insurance) தான் மலிவானது‌. மேலதிக காப்பீட்டில் (Endowment Insurance) சேமிப்பு என்ற கருத்தாக்கமும் இணைவதால் முனைமத் தொகை சற்று அதிகம். பணம் திரும்பத் தரும் காப்பீடுகளில் (Money Back Insurance) பணத்தை அவ்வப்போது திரும்பத் தருவதால் முனைமத்தொகை இன்னும் அதிகம். 

பொதுவாகக் காப்பீட்டையும் முதலீட்டையும் இணைத்துக் குழப்பிக் கும்மியடிக்கக் கூடாது. இரண்டையும் தனித்தனியே மேற்கொள்வது தான் சாலச்சிறந்தது. காப்பீட்டிலிருந்து எனக்கு முதலீட்டு இலாபம் ஏதாவது கிடைக்குமா என்ற கேள்வியே தவறானது. தவறான கேள்விக்குப் பதிலும் தவறாகத் தான் கிடைக்கும். வாகனங்களுக்குக் காப்பீடு எடுக்கிறோம். அதிலிருந்து எனக்கு ஏதாவது இலாபம் கிடைக்குமா என்று கேட்பதில்லை. வாகனங்களுக்குக் காப்பீடு எடுப்பது மாதிரியே வாழ்க்கைக்கும் காப்பீடு எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு முனைமத்தொகை குறைவாக உள்ள வரையறுக்கப்பட்ட காப்பீடு தான் சிறந்தது. அதனினும் சிறந்ததாக ஒரு வழி இருக்கிறது. மேலதிக காப்பீடுகள் , வரையறுக்கப்பட்ட காப்பீடுகளை விட தோராயமாக மூன்று மடங்கு முனைமத் தொகை கூடியவை. நாம் மேலதிகம் எடுப்பதாக நினைத்துக் கொண்டு அந்த முனைமத்தொகையைத்  தனியே எடுத்து வைக்க வேண்டும். வரையறுக்கப்பட்ட காப்பீடுகளில் மூன்றில் ஒரு பங்குத் தொகையைத் செலுத்தி விட்டு மீதி இரண்டு பங்கை ஒரு பங்கு சார்ந்த பரஸ்பர நிதியில் தொடர்ந்து முதலீடு செய்தால் காப்பீடும் கிடைத்து விடும். காப்பீட்டுக் கால முடிவில் மேலதிக காப்பீடுகளில் கிடைக்கும் தொகையை விடக் குறைந்த பட்சம் மும்மடங்குத் தொகை உறுதியாகக் கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகளில் மட்டுமல்ல , காப்பீட்டிலும் Take the term and invest the difference முதலான எளிமையான உத்திகளே வெற்றி பெறும் . 

ஐயா, நான் ஒரு சோம்பேறி. எனக்கு இந்த மாதிரி பிரித்து , அதுவும் தொடர்ச்சியாக முதலீடு செய்ய ஏலாது என்பவர்களுக்கு மேலதிக காப்பீடு தான் சரியானது. ஒன்றுமில்லாததற்கு ஏதாவது ஒன்றாவது கிடைக்கும். 

இன்னும் சொல்லப்போனால் நம் மக்களின் இந்த நிதி சார்ந்த அறிவு வறட்சி தான் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஒரு சாதகமான கட்டமைப்பாகப் (structural advantage) பயன்படுகிறது. நீங்கள் மேலதிகத் காப்பீடுகள் எடுப்பதோடு, அந்தக் காப்பீட்டு நிறுவனங்களின் பங்குகளையும் வாங்கிப் போடலாம். அவ்வாறு செய்தால் நீங்கள் நுகர்வோர் என்ற தளத்தில் மட்டுமின்றி உரிமையாளர் என்ற தளத்திலும் இயங்குவதாக அர்த்தம். மற்றவர்களின் அறிவு வறட்சியை நீங்கள் பணமாக்கம் செய்ய ஒரு வாய்ப்பாக அமையும். 

ஒருவரின் இருபதாவது வயதில் நிதி சார்ந்த சொத்துக்கள் பூஜ்யத்திலிருந்து துவங்கி சிறிது சிறிதாக வளர்ந்து வரும். அப்போது காப்பீட்டை அதிக பட்சமாக எடுத்துக் கொள்ள வேண்டும் (உடனடி சேமிப்புக் கரூவூலம்) வயது ஆக ஆக நிதி சார்ந்த சொத்துக்கள் அதிகரிக்கும். அதற்குத் தகுந்தாற்போல் காப்பீட்டைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொள்ள வேண்டும். ‌ஒரு கட்டத்தில் நிதி சார் சொத்துக்கள் ஒரு நிறைவு நிலையை எட்டிய பின் காப்பீடே தேவைப்படாது. அதே மாதிரி குடும்பமாக இல்லாமல் தனி நபராக இருப்பவர்களுக்கும் காப்பீடே தேவையில்லை. குழந்தைகளுக்கும் காப்பீடு தேவையில்லை. அவர்கள் வளர்ந்து சம்பாதிக்கத் தொடங்கிய பின்பு தான் காப்பீடு தேவைப்படும். சிலர் சின்ன வயதிலேயே காப்பீடு எடுத்துக் கொண்டால் முனைமத்தொகை குறைவாக இருக்குமென்று கணக்கிட்டுக் கொண்டிருப்பார்கள். அந்த முனைமத் தொகையை ஒரு குறியீட்டு பரஸ்பர நிதியில் முதலீடு செய்திருந்தால் எவ்வளவு இலாபம் கிடைத்திருக்கும் என்று வாய்ப்பு விலை (Opportunity Cost) கணக்கிட்டுப் பாருங்கள். மற்றபடி முழு வாழ்க்கைக் காப்பீடு (Whole Life Policy) ஆண்டாண்டு பணம் தரும் காப்பீடு (Annuity) வகைகளும் பணவீக்க இழப்புக்காப்பு (Inflation Hedge) என்ற அடிப்படையில் தான் இலாபம் (?) தரும். 

இந்தக் காப்பீட்டு வகைகளின் உத்தம வில்லன் யாரென்றால் ULIP (Unit Linked Insurance Plan) தான். ULIP வேண்டவே வேண்டாம். காப்பீட்டு நிறுவனங்கள் அட்டவணைப்படுத்திக் காண்பிக்கிற அவ்வளவு சதவீத இலாபங்கள் எல்லாம் சாத்தியமேயில்லை. IRR என்று சொல்வார்கள். Internal Rate of return. அது மேலதிக காப்பீடுகளில் 6 சதவீதம் தான் வரும். பணவீக்கத்தைக் கழித்தால் கடைசியில் எதுவும் மிஞ்சாது. முதலீட்டில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் இலவசம் என்று எதுவுமே கிடையாது. இலவசமாகக் கிடைக்கிறது என்று எதையாவது வாங்கினால் அங்கு விற்கப்படும் பொருளே நீங்களாகத் தான் இருப்பீர்கள். 

காப்பீட்டை வேறு ஒரு கண்ணோட்டத்திலும் பார்க்கலாம். காப்பீட்டு நிறுவனமும் நாமும் ஒரு பந்தயம் கட்டுவதாக எண்ணிப்பாருங்கள். உங்களுக்கு எதுவும் கெடுதலாக நிகழாது என்று நிறுவனம் பந்தயம் கட்டுகிறது. நிகழ்வதற்கான வாய்ப்பு இருப்பதாக நாம் பந்தயம் கட்டுகிறோம். நாம் இந்தப் பந்தயத்தில் வென்றாலும் தோற்றாலும் ' இறுதி' யில் வெல்வது நாம் தான். 

மனித வாழ்க்கை மதிப்பை எப்படிக் கணக்கிடுவது? பல்வேறு வழிமுறைகள் இருந்தாலும் எளிமையான ஒரு வழியை விளக்குகிறேன். ஒருவர் மாதம் 40000 ரூபாய் சம்பாதிப்பதாக வைத்துக் கொள்வோம். வருடத்திற்கு 480000 ரூபாய். அவர் இல்லையென்றால் இந்த 4.80 வராது. வங்கியில் 60 இலட்சம் ரூபாயை நிரந்தர வைப்புத் தொகையாக முதலீடு செய்தால் 8 சதவீத வட்டியாக வருடத்திற்கு 4.80 மாதத்திற்கு 40000 கிடைக்கும். எனவே 60 இலட்சம் ரூபாய்க்குக் காப்பீடு எடுத்துக் கொள்ள வேண்டும். முனைமத் தொகை குறைவாகக் கட்ட வேண்டுமென்றால் வரையறுக்கப்பட்ட காப்பீடு தான் நனி நன்று என்பது தெளிவு. 

மனித உயிரின் மதிப்பு 60 இலட்சம் ரூபாய் என்பது ஒரு குரூரமான மதிப்பு தான். மனித உயிரை மதிப்பிட வேறு அளவீட்டுக் கருவிகள் எதுவும் என்னிடம் இல்லை. மற்றபடி தாய் தந்தையர் கொடுக்கிற அன்புக்கும் அரவணைப்பிற்கும் இந்த உலகையே விலையாக கொடுத்தாலும் தீராது.

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14