பங்கு கேள்வி பதில் - 8
பங்கு கேள்வி பதில் - 8
கேள்வி : பங்கு முதலீடுகளில் Consistency க்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம்?
பதில் : நிறுவனப்பங்கு ஒன்றின் ஒரு பங்குச் சம்பாத்தியம் (EPS) 100 ரூபாய் என்று கொள்ளலாம். நிறுவனம் ஆண்டாண்டு ஒரே சீராக 15 சதவீதக் கூட்டுப்பெருக்கம் என்ற அளவில் நிகர இலாபம் ஈட்டுவதாகக் கொள்ளலாம். அதன் EPS ஆண்டுக் கணக்கில் ரூ.115, 132, 151, 173, 198 ... என்றவாக்கில் வளர்ந்து வரும். இன்னொரு நிறுவனம் முதல் நான்கு ஆண்டுகளில் 20 சதவீதம் கூட்டுப் பெருக்கம் மற்றும் ஐந்தாவது ஆண்டு 20 சதவீத எதிர்மப் பெருக்கத்திற்கு உள்ளாவதாகவும் கொள்ளலாம். அதன் EPS ரூ.120, 144, 165, 198, 159 ... என்றவாக்கில் வளர்ந்து வரும். முதல் நிறுவனம் குறைவான சதவீதத்தில் வளர்ந்து வந்தாலும் அதன் சீர்மை நிறை (consistency) காரணமாகக் கூடுதல் வருமானத்தை ஈட்டுவதாக இருக்கும். சந்தை இந்த ஒரே சீரான வருமானத்திற்கு அதிக விலை வருவாய் விகிதத்தை வழங்கும். Pidilite Industries பங்கு உயர் PE விகிதங்களில் வர்த்தகமாவதற்கு அதன் consistency முக்கியமான காரணம்.
கேள்வி : Infosys நிறுவனம் இன்றைய தேதியில் 19856 bagger. ஆனால் TCS வெறும் இத்தனை 32 bagger மட்டுமே. ஏனிந்த வேறுபாடு?
பதில்: Infosys நிறுவனம் சிறிய ஒரு செடியாக இருக்கும் போதே பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு விட்டது. எனவே முதலீட்டாளர்கள் அதன் வளர்ச்சியில் பங்கு பெற ஏதுவானது. TCS நிறுவனம் பட்டியலிடப்படும் போதே ஒரு ஆலமரமாக ஆகி விட்டது.
கேள்வி : Stocks are partial ownership of a corporation என்பது புரிகிறது. ஒரு நிறுவனத்தின் வெறும் பத்து பங்கை வைத்திருப்பவருக்கு இந்தப் பார்வை எப்படி வரும்?
பதில் : ஒரு நிறுவனத்தின் பத்து பங்குகளை நீங்கள் வைத்திருந்தாலும் சரி அல்லது அதன் ஒரேயொரு பங்கை வைத்திருந்தாலும் சரி, இந்த உடைமை மனப்பான்மை மிகவும் முக்கியமானது. ஒரேயொரு Cipla நிறுவனப்பங்கு காலங்களின் போக்கில் 36000 பங்குகளைக் கொடுத்திருக்கிறது.
கேள்வி : இலவசப் பங்களிப்பு மற்றும் சிறப்புப் பங்காதாயம்- எது சிறந்தது? ஏன் சிறந்தது?
பதில் : சிறப்புப் பங்காதாயம் அவ்வப்போது வழங்கப்பட்டாலும் அதனுடன் அது முடிந்து விடுகிறது. ஆனால் இலவசப்பங்குகள் அவ்வாறு அல்ல. இலவசப் பங்குகளுக்கு ஆண்டாண்டு பங்காதாயம் கிடைக்கப்பெறும். அடுத்ததாக நிறுவனம் இலவசப் பங்களிப்பு ஒன்றை மேற்கொண்டால் இந்த இலவசப் பங்குகளுக்கும் இலவசப்பங்கு கிடைக்கப்பெறும். நிறுவனப்பிரிப்பு ஏதேனும் மேற்கொள்ளப்பட்டால் இலவசப்பங்குகள் உட்பட அனைத்துப் பங்குகளுக்கும் புதிய நிறுவனப்பங்குகள் கிடைக்கப்பெறும். ஆக, எப்படிப் பார்த்தாலும் இலவசப் பங்களிப்பே சிறந்தது. Motherson Sumi Systems நிறுவனத்தின் முதல் பொது வெளியீட்டின் 100 பங்குகள் அதன் இலவசப்பங்கு வெளியீடு, பங்குப் பிரிப்பு மற்றும் நிறுவனப் பிரிப்பின் பின்னர் 57654 Samvardhana Motherson International பங்குகளாகவும் 57654 Motherson Sumi Wiring India பங்குகளாகவும் வளர்ந்திருக்கிறது.
கேள்வி : இலவசப் பங்களிப்பு என்பது வெறும் book entry மட்டும் தானே? அதற்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம்?
பதில் : உண்மை தான். இலவசப் பங்களிப்பின் போது நிறுவன இருப்பு மற்றும் உபரிப்பணத்தின் (Reserves & Surplus) ஒரு பகுதி நிறுவன முதல் ஆக மாறுகிறது. அந்த வகையில் அது வெறும் book entry மட்டுமே. ஆனால், ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இலவசப்பங்குகள் வழங்கப்பட்டால் பங்கின் விலை பாதியாகிறது. அதன் விலை தாங்கத் தக்கதாக வாங்கத் தக்கதாக மாறுகிறது. அண்மையில் Motilal Oswal Financial Services, ஒன்றுக்கு மூன்று என்ற விகிதத்தில் இலவசப்பங்குகளை வழங்கியது. 2400 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமான பங்கு இலவசப் பங்களிப்பின் பின்னர் 800 ரூபாய் என்ற விலைக்கு வந்தது. இன்னமும் மதிப்பு முதலீடாக குறை விலைவருவாய் விகிதத்தில் வர்த்தகமாகும் ஒரு சில பங்குகளில் இதுவும் ஒன்று.
கேள்வி: Gensol Engineering நிறுவனம் ஊழலில் ஈடுபட்டால் பங்கை விற்று விட்டு வெளியேறி விடலாம் அல்லவா?
பதில்: முடியாது. பங்கு, தினமும் lower circuit அடித்தால் எப்படி வெளியேற முடியும்?
கேள்வி : MRF பங்கு இலட்சங்களில் விற்கிறதே? அடுத்த MRF ஐ அடையாளங் காண முடியுமா?
பதில் : எனக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. என் தாத்தா 1960 களில் பத்து சென்ட் நிலத்தை ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினார், அதன் மதிப்பு இன்று இத்தனை கோடிகள் என்று யாராவது சொன்னால் உடனே CAGR கணக்கைப் போட ஆரம்பித்து விடுவேன். அந்த வகையில் MRF பங்குக்கும் ஒரு கணக்கைப் போடலாம். MRF நிறுவன முதல் பொது வெளியீடு 1961 ஆம் ஆண்டு வெளி வந்தது. 10 ரூபாய் முக மதிப்பைக் கொண்ட பங்கு 10 ரூபாய்க்கே வெளியிடப்பட்டதான அனுமானத்தின் பேரில் 1000 ரூபாய்க்கு 100 பங்குகள் வாங்கப்பட்டுள்ளதாகக் கொண்டு கணக்கைத் தொடங்கலாம். நிறுவனம், 1970 ஆம் ஆண்டு 3:10 என்ற விகிதத்திலும், 1975 ஆம் ஆண்டு 1:2 என்ற விகிதத்திலும் இலவசப் பங்குகளை வழங்கியிருக்கிறது. முதல் பொது வெளியீட்டின் 100 பங்குகள் இப்போது 195 பங்குகள் ஆகியிருக்கும். ஒரு பங்கின் தற்போதைய விலை 1,28,500 ரூபாய். 195 பங்குகளின் விலை 2,50,57,500 ரூபாய். இடைப்பட்ட 64 ஆண்டுகளுக்கு CAGR கணக்கிட்டால் 17.14 சதவீதம் வருகிறது. MRF நிறுவனப்பங்கின் ஆறு இலக்க விலையை அதன் கூட்டுப்பெருக்கக் கணக்கு உண்மையான வெளிச்சத்தில் காட்டுகிறது. மற்றபடி 64 ஆண்டுகளுக்கு 17.14 CAGR என்பது ஒப்புயர்வற்ற ஒரு சாதனை தான்.
கேள்வி: உங்கள் நீண்ட கால பங்கு முதலீடு ஒன்றை உதாரணமாகக் கொண்டு பங்குச்சந்தையை விளக்க முடியுமா?
பதில்: 1997 ஆம் ஆண்டு நான் வாங்கிய ICICI வங்கிப் பங்கை உதாரணமாகக் கொண்டு பங்குச்சந்தை முதலீடுகளைப் புரிந்து கொள்ள முயலலாம். நான் வாங்கும் போது வங்கியின் ஒரு பங்கின் விலை 35 ரூபாய். வங்கி, அதன் பங்குகளின் முக மதிப்பை பத்து ரூபாயிலிருந்து இரண்டு ரூபாயாகக் குறைத்த பின்னர் எனக்கான அடக்க விலையும் 7 ரூபாய் ஆகக் குறைந்தது. 2025 ஆம் ஆண்டுக்கு வங்கி, பங்கு ஒன்றுக்கு 11 ரூபாய் ஈவுத்தொகையை வழங்கியிருக்கிறது. 7 ரூபாய் பங்குக்கு 11 ரூபாய் ஈவுத்தொகை என்றால் சதவீதக்கணக்கில் 157 வருகிறது. ஒரு முதலீடு 157 சதவீத வருமானம் கொடுக்கிறதென்றால் அதற்கான தேவைப்பாடு அதிகமாக இருக்கும் என்பது தெளிவு. ICICI வங்கிப்பங்கு தற்போது 0.78 சதவீத ஈவுத்தொகை தரும் வகையில் வர்த்தகமாகிறது. இவ்வாறு வர்த்தகமாவதால் அதன் பங்கின் விலை தற்போது 1403 ரூபாய் ஆகி விட்டது. இதனைப் பன்மடங்காளர் கணக்கில் சொல்ல வேண்டுமென்றால் 200 மடங்காளர். பங்குச்சந்தையில் செல்வ வளம் இவ்வாறு தான் உருவாகிறது.
கேள்வி: Aster DM Healthcare பங்கின் பங்கு ஈட்டு விகிதம் 26 சதவீதம் என்ற உயர் அளவீட்டில் உள்ளது. அதே மாதிரி MSTC பங்கும் 10 சதவீத பங்கு ஈட்டு விகிதத்தில் வர்த்தகமாகிறது. இவற்றில் முதலீட்டை மேற்கொள்ளலாமா?
பதில்: Aster DM Healthcare அதன் GCC வர்த்தகத்தை விற்றிருக்கிறது. MSTC நிறுவனம் அதன் Ferro Scarp வர்த்தகத்தை விற்றிருக்கிறது. அதனால் இவ்விரு நிறுவனங்களும் ஒருமுறை சிறப்புப் பங்காதாயத்தை வழங்கியிருக்கின்றன. இது ஆண்டாண்டு தொடராது. ஒரு நிறுவனத்தின் பங்கு ஈட்டு விகிதம் இம்மாதிரி அளவுக்கு அதிகமாக இருக்கும் போது இவ்விதமான தரவுகளை ஆராய வேண்டும். இது போக பங்கு ஈட்டு விகிதத்துடன் (Dividend Yield) எப்போதும் அதன் பங்காதாய வழங்கல் விகிதத்தையும் (Dividend Payout Ratio) இணைத்துப் பார்க்க வேண்டும்.
கேள்வி: பங்குக்கதை ஒன்றைக் கூறுங்கள்?
பதில்: Horlicks நிறுவனம் குறித்த உண்மைக்கதை ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். பங்குச்சந்தை குறித்து ஆனா ஆவன்னா கூடத் தெரியாத ஒருவருக்கு அவருடைய மாமனார் மூலம் கல்யாணப் பரிசாக சில ஹார்லிக்ஸ் நிறுவனப் பங்குகள் கிடைத்தன. மாமனாரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் அந்தப் பங்குகளைப் பொன்னே போல் போற்றி வந்தார். நிறுவனம் வருடாவருடம் வழங்கும் பங்காதாயங்களை (dividend) அதன் நிறுவனப்பங்குகளில் மறு முதலீடு செய்து விடுவார். அவ்வப்போது அது வெளியிடும் உரிமைப் பங்கு (rights issue) வெளியீட்டில் கலந்து கொள்வார். மற்றபடி அதன் ஒரு பங்குகளைக் கூட அவர் விற்கவில்லை. மாமனாரின் மேல் அவ்வளவு பக்தி. இது போக, நிறுவனம், அவ்வப்போது, அதன் பங்குகள் மதிப்பு முதலீடாக வர்த்தகமாகும் போது, buyback என்ற அடிப்படையில் அதன் பங்குகளைத் திரும்ப வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. காலம், காளையும் கரடியுமாக உருண்டோடியது. இப்படியான சமயத்தில் ஒரு நாள் நிறுவனத்திடமிருந்து அவருக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. இந்த மாதிரி வரவிருக்கும் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தை (AGM) எந்தத் தேதியில் வைத்துக் கொள்ளலாம் என்பதாகக் கேட்கவும் நம்மவருக்கு ஒன்றும் புரியவில்லை. இதனை எதற்காக என்னிடம் கேட்கிறீர்கள் என்று வினவினார். ஏனென்றால் நிறுவனத்தின் இரண்டாவது பெரிய பங்குதாரர் நீங்கள் தான் என்பதாகப் பதில் வந்தது. Glaxo SmithKline Consumer Healthcare என்பதாக அழைக்கப்பட்ட Horlicks நிறுவனம் தற்போது HUL நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு விட்டது.
Comments
Post a Comment