சந்தை உச்சத்தில் முதலீடு செய்வது எப்படி?
சந்தை உச்சத்தில் முதலீடு செய்வது எப்படி ?
How to invest at all time high markets ?
85000 புள்ளிகள் என்பது சென்செக்ஸ் பயணத்தின் ஒரு மைல்கல் மட்டுமே . அது பயணத்தின் இலக்கு அல்ல .
சென்செக்ஸ் என்பது அதன் 30 நிறுவனங்களை மட்டுமே சார்ந்தது . நிஃப்டி என்பது அதன் 50 நிறுவனங்களைச் சார்ந்தது . சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டு நிறுவனங்கள் உயர் மதிப்பீட்டில் வர்த்தகமாகிக் கொண்டிருந்தாலும் இந்தக் குறியீட்டிற்கு அப்பால் எத்தனையோ நிறுவனப்பங்குகள் மதிப்பு முதலீடாக , குறை மதிப்பீட்டில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கலாம் . அந்த வகையில் காளைச் சந்தைக்குள் ஒரு கரடிச் சந்தையும் இயங்கிக் கொண்டிருக்கிறது .
மேலும் , தரமான நிறுவனங்கள் தற்காலிகமான பிரச்னைகளில் சிக்கித் தவிக்கையில் அவற்றைக் குறை மதிப்பில் வாங்குவதற்கான வாய்ப்பு எப்போதும் திறந்த நிலையில் உள்ளது .
வாரன் பஃபெட் owner mentality என்று குறிப்பிடும் உடைமை மனப்பான்மை குறித்துக் கொஞ்சம் பார்க்கலாம் . இப்போது பங்குச்சந்தை அதன் உச்சபட்ச அளவுகளில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது . சென்செக்ஸ் குறியீட்டில் 13 சதம் இடம் பிடித்திருக்கும் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளும் உயர் மதிப்பீட்டில் வர்த்தகமான வண்ணம் உள்ளன . ரிலையன்ஸ் நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருக்கும் பெரிய அம்பானி அதன் பங்குகள் இந்த மாதிரி உச்ச அளவை எட்டி விட்டன என்ற எண்ணத்தில் அதனைப் பணமாக்கம் செய்ய முனைவாரா ? ஒரு போதும் அவ்விதம் செய்ய மாட்டார் . நிறுவனத்தைப் புதிய திசைகளில் செலுத்துவதில் தான் அவர் கவனம் கொண்டிருப்பார் . எதிர்காலத்தில் நிறுவனம் அடையவிருக்கும் உயரங்களைக் கணக்கில் கொள்ளும் போது அதன் தற்போதைய விலை குறைவு என்பதாகக் கூட ஒருவேளை அவர் நினைக்கலாம் . அதற்கும் ஒரு வாய்ப்பு உள்ளது . அந்த வகையில் ஒரே ஆற்றில் இரண்டு முறை குளிக்க முடியாது என்ற கருத்தாக்கம் நிறுவனங்களுக்கும் பொருந்தும் . நேற்று இருந்த ரிலையன்ஸ் நிறுவனம் வேறு . இன்று இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் வேறு .
முன்னொரு காலத்தில் சென்செக்ஸ் குறியீட்டின் 6000 என்பது அதன் உச்ச பட்ச அளவாக இருந்தது . சென்செக்ஸின் ஆரம்ப அளவான 100 என்ற அளவீட்டுடன் ஒப்பு நோக்கும் போது இது 60 மடங்கு ஏற்றமாகும் . சந்தை 60 மடங்கு ஏற்றம் கண்டு விட்டது , இனி ஏறுமுகம் கிடையாது , இறங்குமுகம் மட்டுமே என்றெல்லாம் கூற முடியாது . வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் அதனைப் பின் தொடரும் சந்தையும் வளர்ந்து வருவதாகவே இருக்கும் . சந்தைக்குப் பொருளாதாரமே ஆதாரம் .
கரடிச் சந்தையில் மதிப்பு முதலீட்டு வாய்ப்புகள் காலடி எங்கும் சிதறிக் கிடக்கும் . காளைச் சந்தையில் மதிப்பு முதலீடுகளைக் கொஞ்சம் மெனக்கெட்டுத் தேட வேண்டும் .
நிறுவனங்களின் உயர்ந்து வரும் ஒரு பங்குச் சம்பாத்தியம் (earnings per share) இந்த ஒரு பங்குச் சம்பாத்தியத்தைப் பின் தொடரும் விலை வருவாய் விகிதம் (pe multiple) மற்றும் இந்த விலை வருவாய் விகிதத்தின் விரிவாக்கம் (pe expansion) ஆகியவற்றால் ஆகப்பெற்றது தான் பங்குச்சந்தை . அந்தப் பார்வையில் ஒரு பங்கின் 52 வார உயர் விலை அடுத்த வருடத்தில் அதன் 52 வாரக் குறை விலையாகக் கூட மாறி விடலாம் . அந்த வகையில் 52 வார உயர் விலையில் வர்த்தகமாகும் பங்குகளில் முதலீடு செய்வது கூட ஒரு சிறந்த உத்தியாக இருக்கும் .
தனிப்பட்ட பங்குகளின் விலையைக் கொண்டு எதனையும் தீர்மானிக்க முடியாது . அந்த வகையில் பங்கின் விலை எவ்வளவு என்று கேட்பதை விட அதன் PE multiple எவ்வளவு என்று கேட்பது தான் சரியான ஒரு கேள்வியாக இருக்க முடியும் .
இது சென்செக்ஸ் முதலான குறியீடுகளுக்கும் பொருந்தும் . அப்படிப் பார்த்தாலும் சென்செக்ஸ் PE அதன் அபாய அளவை எட்டவில்லை . அதன் தற்போதைய PE விகிதம் 25 மட்டுமே .
முன்னரே குறிப்பிட்டது மாதிரி 6000 என்பது ஒரு காலத்தில் சந்தையின் பெரும் மலை முகடாக இருந்தது . இப்போது 85000 அடி உயரத்தில் இருந்து பார்க்கும் போது அது எங்கோ ஒரு பள்ளத்தில் கிடக்கிறது . எதிர் வரும் காலங்களில் இந்த 85000 என்ற எவரெஸ்ட் சிகரம் கூட ஒரு சிறு குன்றாக மாறி விடலாம் . யார் கண்டது ?
எனவே சந்தை உச்சத்தில் இருந்தாலும் காலப் பன்மயமாக்கம் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் சந்தை முதலீடுகளைத் தொடர்ந்து செய்வது தான் சரியான ஒரு வழிமுறையாக இருக்கும் .
காளைச்சந்தையில் , உயர் மதிப்பீட்டில் தான் IPO க்கள் வெளியிடப்படும் என்றாலும் இத்தகைய புதிய நிறுவனங்களையும் ஆராய்ந்து அவற்றின் கால வெளியிலான மதிப்பு உருவாக்கத்திலும் நாம் பங்கு பெறலாம் . அந்த வகையில் ஏற்கெனவே சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் வளர்ச்சியுடன் புதிதாகப் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் வளர்ச்சியும் இணைகிறது . அதனால் நமது பங்குச்சந்தையின் மதிப்பு நாளும் கூடுகிறது . அண்மையில் பட்டியலிடப்பட்ட Bajaj Housing Finance நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.28 இலட்சம் கோடி ரூபாய் என்பது இங்கே கவனம் பெறுகிறது .
எவ்வளவு தான் கவனம் கொண்டு முதலீடு செய்தாலும் அவ்வப்போது உங்கள் பங்குத்தொகுப்பில் தவிர்க்க முடியாமல் இடம் பெறும் தேவையற்ற பங்குகளைப் பணமாக்கம் செய்ய இந்த உச்ச பட்ச சந்தையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் . மற்றபடி பங்குத் தொகுப்பின் மறு சமன் (rebalancing) கருதிப் பங்குகளை விற்று வைப்பது மற்றும் தரமான பங்குகளைப் பணமாக்கம் செய்யும் பொருட்டு அவற்றைப் பகுதியாகவோ முழுமையாகவோ விற்று வைப்பது பன்மடங்காளர் பங்குகளைக் கைக்கொள்ளத் தடை போடுவதாக இருக்கும் . ஆனால் இத்தகைய தரமான நிறுவனங்களின் வளர்ச்சியில் உங்களுக்கு நம்பிக்கை (conviction) இருப்பதும் முக்கியம் .
பங்குச்சந்தை முதலீடு என்பது மனிதத்தின் கூர்மதியில் முதலீடு செய்வதாகும் . மனிதத்தின் கூர்மதிக்கு எல்லைகள் என்று எதுவும் கிடையாது .
மனிதத்தின் கூர்மதியை கூகுள் நிறுவனத்தை உதாரணமாகக் கொண்டு முன்பொரு பதிவில் பார்த்தோம் . இந்த முறை அமேசான் நிறுவனத்தை உதாரணமாகக் கொள்ளலாம் . அமேசான் உலகளாவிய புத்தகக்கடை என்று தான் தொடங்கப்பட்டது . அதற்கும் முன்னால் அது Jeff Bezos ன் எண்ணத்தில் ஒரு கருவாக மட்டும் இருந்தது . இன்னும் சொல்லப்போனால் அமேசான் நிறுவனம் Regret Minimalisation Framework (வருத்தத்தைக் குறைப்பதற்கான ஒரு வழிமுறை) என்ற வகையில் தான் தொடங்கப்பட்டது . அறுபது வயது ஆன பின்னர் எது உங்களை அதிகம் வருத்தமுற வைக்கும் என்று நினைக்கிறீர்கள் ? அது விடுபிழை (Errors of omission) என்ற வகையில் நீங்கள் செய்யாமல் விட்ட செயல்களாக மட்டுமே இருக்கும் . அமேசான் நிறுவனத்தை Bezos ஆரம்பித்த காலகட்டத்தில் இணையம் ஆண்டாண்டு 2300 சதவீதம் என்ற அளவில் வளர்ந்து வந்தது . இவ்வளவு மீமிகைக் கூட்டுப் பெருக்கத்தில் பங்கேற்காமல் விடுவது விடுபிழையாகி விடும் என்ற எண்ணத்தில் மட்டுமே அமேசான் தொடங்கப்பட்டது . அப்புறம் நடந்தது வரலாறு . இன்று அமேசானில் அ முதல் ஃ வரையிலான அனைத்துப் பொருட்களும் கிடைக்கிறது . இது போக Prime , Amazon Web Services , Alexa , Amazon Market Place போன்ற சேவைகள் தொடங்கப்பட்டு அவை வெற்றிகரமாக இயங்கிய வண்ணம் உள்ளன . இந்த வெற்றிகரமான சேவைகளின் பின்னால் ஏராளமான தோல்விகளின் காயங்கள் உள்ளன . Jeff Bezos ன் கூர்மதியின் தற்போதைய சந்தை மதிப்பு 2.04 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் .
அற்புதமான பதில்...
ReplyDelete