சராசரியை நோக்கிய முன்னடைவு
சராசரியை நோக்கிய முன்னடைவு
இந்தக் கதை 1986 ல் தொடங்குகிறது .
ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தனர் . ஒருவர் லாட்டரிப் பைத்தியம் . மாதம் 250 ரூபாய் லாட்டரிக்கென்று ஒதுக்கி விடுவார் . அவ்வப்போது ஐநூறு ஆயிரம் என்று பரிசுகள் விழுந்திருக்கிறது . ஒரேயொரு முறை ஐயாயிரம் ரூபாய் கிடைக்கப் பெற்றிருக்கிறது . இவ்வாறு கிடைத்த பணத்தையெல்லாம் லாட்டரியிலேயே மறு முதலீடு (?) செய்து விடுவார் .
இன்னொரு நண்பருக்கு லாட்டரியில் அவ்வளவு ஆர்வம் கிடையாது . முதலீட்டிலும் அவருக்கு ஆர்வம் இருந்ததாகச் சொல்ல முடியாது . இன்னும் சொல்லப்போனால் அவருக்கு எதிலுமே மிகை ஆர்வம் கிடையாது . ஒரு சராசரியான மனிதர் என்பதாக அவரைக் குறிப்பிடலாம் .
அவர் குறியீட்டு நிதிகளில் முதலீட்டை மேற்கொள்ள இந்த சராசரித் தன்மை ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது .
அதற்காக சராசரியைக் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள் . படிப்பில் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் , போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கிற இந்த உலகில் சராசரிக்கு மதிப்பு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை .
ஆனால் முதலீட்டில் சராசரிக்கு ஒரு முக்கியமான மதிப்பு இருக்கிறது .
பங்குச்சந்தை முதலீடுகளில் அது தனிப்பட்ட பங்குகளாக இருந்தாலும் சரி அல்லது பரஸ்பர நிதிகளாக இருந்தாலும் சரி குறுகிய கால அளவுகளில் அவை மிகை வருமானத்தைக் கொடுத்தாலும் நீண்ட கால அளவில் இந்த மிகை வருமானத்திற்கு உத்தரவாதம் கிடையாது . இந்த மிகை வருமானம் சராசரியை நோக்கிச் சரிந்து விடும் . இது சராசரியை நோக்கிய பின்னடைவு (Reversion to the mean) என்பதாக அழைக்கப்படும் .
உதாரணமாக HDFC வங்கி அதன் முதல் பொது வெளியீட்டிலிருந்து நாளது தேதி வரை 28 சதவீத கூட்டுப் பெருக்கத்தைக் கொடுத்திருக்கிறது . முன்பொரு காலத்தில் இது 36 சதவீத கூட்டுப் பெருக்கம் என்ற உயர் அளவுகளில் இருந்தது . இனி வரும் காலங்களில் இந்த 28 சதவீதமும் சராசரியை நோக்கிய பின்னடைவு என்ற அடிப்படையில் குறைந்து விடுவதற்கான வாய்ப்பு அதிகம் . உலகின் முதல் நிலை முதலீட்டாளரான வாரன் பஃபெட்டின் முதலீட்டு நிறுவனம் அதன் ஆரம்ப காலங்களில் அளித்த வருமானத்தைத் தற்போது அளிப்பதாக இல்லை . அதன் தற்போதைய சராசரி , 20 சதவீத CAGR .
இவ்வாறு முதலீடுகளில் இந்த சராசரியை நோக்கிய பின்னடைவு புவியீர்ப்பு விசை மாதிரி செயல்படும் .
இந்த இடத்தில் பஃபெட்டின் முதலீட்டு சாதனை குறித்த ஒரு தகவல் : பஃபெட் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த 20 சதவீத கூட்டுப் பெருக்கத்தைக் கொடுத்து வருகிறார் .
சராசரி முதலீடுகளில் முக்கியமான ஒன்றாக Index Funds என்று சொல்லப்படும் குறியீட்டு நிதிகளைக் குறிப்பிடலாம் . மும்பை பங்குச்சந்தையின் குறியீடான சென்செக்ஸ் , தேசிய பங்குச்சந்தையின் குறியீடான நிஃப்டி முதலியவற்றில் முதலீட்டை மேற்கொள்ளும் நிதிகள் குறியீட்டு நிதிகள் என்று அழைக்கப்படும் .
நமது சராசரி நண்பர் 1986 ஆம் ஆண்டிலிருந்து மாதம் 250 ரூபாயை சென்செக்ஸ் குறியீட்டு நிதியில் முதலீடு செய்து வருகிறார் .
குறியீட்டு நிதிகளைக் குறித்துக் கொஞ்சம் பார்க்கலாம் . குறியீட்டு நிதிகள் காரசாரமில்லாத உப்பில்லாத கஞ்சியை ஒத்ததாகும் . அதனை நிர்வகிக்க நிதி மேலாளர் தேவையில்லை . சென்செக்ஸ் குறியீட்டு நிதி என்றால் சென்செக்ஸில் இடம் பெற்ற 30 நிறுவனங்களில் குறியீட்டின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ற வகையில் முதலீடு செய்வது . உதாரணமாக ரிலையன்ஸ் பங்கில் 11.77 சதவீதம் , ICICI வங்கியில் 9.15 சதவீதம் ... சென்செக்ஸ் குறியீட்டில் எப்போதாவது மாற்றங்கள் செய்யப்படும் . அண்மையில் HDFC , HDFC வங்கியுடன் இணைக்கப்பட்டது . எனவே அதனை சென்செக்ஸ் குறியீட்டிலிருந்து விலக்கி வேறொரு நிறுவனம் இணைக்கப்பட்டது . குறியீட்டு நிதிகள் இவ்வாறு செயல்படுவதால் பங்குகளை வாங்குவது மற்றும் விற்பது அறவே குறைந்து அதன் செயலாக்கச் செலவுகள் அரை சதவீதம் என்ற அளவில் இருக்கும் . பன்மய பரஸ்பர நிதிகளின் (Diversified Funds) செயலாக்கச் செலவான 2.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் இது 20 சதவீதம் மட்டுமே . நீண்ட கால அளவில் இந்த 2 சதவீத சேமிப்பின் காரணமாகக் குறியீட்டு நிதிகள் நிறைச் செயலாக்கம் புரிகின்றன .
இப்படியே காலங்கள் உருண்டோடி விட்டன . இப்போது 2024 ஆம் ஆண்டு .
லாட்டரியில் ஒரு கோடி பரிசு கிடைப்பதற்கான நிகழ்தகவு அரிதினும் அரிதான ஒன்று . பெரும்பாலான சமயங்களில் விற்காத சீட்டுகளுக்குப் பரிசு விழுதல் வழக்கமான ஒரு நடைமுறை . இது போக போலி லாட்டரி சீட்டுகள் உலவுவதாக வரும் செய்திகளும் லாட்டரி முதலீடுகளுக்கான (?) அபாய விகிதங்களை அதிகரிப்பதாக இருக்கிறது . முதலீடு அவ்வாறு அல்ல . அதுவும் நீண்ட கால முதலீடுகளில் கூட்டுப் பெருக்கம் தனது கடமையைச் செவ்வனே செய்து விடும் .
லாட்டரி நண்பருக்கு பரிசு விழுவதற்கான வாய்ப்பு இவ்விதமாக குறைவாக இருந்தாலும் அவருக்கு ஒரு கோடி பரிசு விழுந்ததாகக் கொண்டு கதையைத் தொடரலாம் . பரிசு விழாவிட்டால் கதை இந்த அளவில் நின்று விடும் . இது சாதாரண நீதிபோதனைக் கதையாகி விடும் . பரிசு கிடைத்தது அதுவும் ஒரு கோடி கிடைத்தது என்றால் கதை சற்று சுவாரஸ்யமாக மாறுகிறது .
லாட்டரியில் பெற்ற ஒரு கோடியில் அரசாங்கம் தனது பங்காக (வரியாக) 31 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாயை (31.2%) எடுத்துக் கொண்டது . அவர் கைக்குக் கிடைத்தது 68 இலட்சத்து 80 ஆயிரம் மட்டுமே .
சராசரி நண்பர் மாதம் 250 ரூபாயைக் குறியீட்டு நிதியில் முதலீடு செய்து வருகிறார் என்று பார்த்தோம் . இடைப்பட்ட இந்த 38 ஆண்டுகளை மாதக் கணக்கில் சொல்வதானால் 456 மாதங்கள் . மாதம் 250 ரூபாய் என்ற கணக்கில் அவர் முதலீடு செய்தது 1 இலட்சத்து 14 ஆயிரம் ரூபாய் . சென்செக்ஸ் 1986 ஆம் ஆண்டிலிருந்து நாளது தேதி வரை 19 சதவீத கூட்டுப் பெருக்கத்தை வழங்கியிருக்கிறது . அவரது முதலீட்டின் இன்றைய மதிப்பு 1 கோடியே 88 இலட்சம் ரூபாய் . அவருக்கான முதலீட்டுப்பெருக்கம் 1 கோடியே 86 இலட்சத்து 86 ஆயிரம் ரூபாய் . இதில் ஒரு இலட்சம் ரூபாய்க்கு வரி கிடையாது . மீதி 1 கோடியே 85 இலட்சம் ரூபாய்க்கு 10 சதவீதம் வரி என்ற கணக்கில் அரசாங்கம் அதன் பங்காக 18 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொள்ளும் . ஆக அவர் பெற்றது 1 கோடியே 69 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் . ஆனால் நமது சராசரி நண்பர் இதனைப் பணமாக்கம் செய்யவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது . அவ்வப்போது ஏற்படும் தேவைகளுக்கு மட்டும் இதிலிருந்து எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார் . அது சரி , பொன் முட்டையிடும் வாத்தை யாராவது அறுப்பார்களா என்ன ?
சராசரி நண்பர் எல்லாவற்றிலும் சராசரி என்று பார்த்தோம் . அவர் செலவுகளும் சராசரி வகையைச் சேர்ந்தது தான் .
அவர் சிறுகக் கட்டி பெருக வாழ்ந்திருக்கிறார் . இடைப்பட்ட ஒவ்வொரு ஆண்டிலும் அவர் எவ்வளவு பணத்தை ஈட்டியிருக்கிறார் என்பது அவருக்குத் தெரியும் . மேலும் அந்தப் பணம் கூடிக் குறைந்து கூடிக் குறைந்து ஒரே தளத்தில் பல காலம் நிலை பெற்று இன்றைக்கு இந்த அளவில் இருக்கிறது என்பதும் அவருக்குத் தெரியும் . அந்தச் சுகமான சுமையைக் கையாண்டு அவர் பழகியிருக்கிறார் . திடுதிப்பென்று யாராலும் 1000 கிலோ எடையைத் தூக்க முடியாது . அந்த எடையைத் தூக்குவதற்கு நீங்கள் உங்கள் தசைகளைத் தின அளவில் பழக்க வேண்டும் .
ஆனால் லாட்டரி நண்பரை அவ்விதம் சொல்ல இயலாது . திடுதிப்பென்று பணம் கைக்கு வந்தால் அவர்களுக்கு அதனை எப்படிக் கையாள வேண்டும் என்று தெரியாது . திடீர் பணக்காரர் ஆவதின் ஆகப்பெரிய ஆபத்து இது தான் . திடீர் பணக்காரர்கள் காலப்போக்கில் தத்தம் பழைய நிலைமைக்குத் திரும்புவதன் காரணமும் இது தான் . துரதிர்ஷ்டத்தை விட நல் அதிர்ஷ்டத்தைத் தாங்கப் பெருங்குணங்கள் தேவை .
அவர் லாட்டரியில் பெற்ற பணத்தை லாட்டரியிலும் இன்ன பிறவற்றிலும் இழந்தது வேறு கதை .
நுட்பமாக அறிய வேண்டியது :
1. சராசரியை நோக்கிய பின்னடைவு என்பது நீண்ட கால அளவில் ஒரு முன்னடைவு .
2 . செல்வந்தராவது வேறு . செல்வந்தராக இருப்பது வேறு .
3 . பளுவைக் கையாண்டு பழகுவது மாதிரி பணத்தையும் கையாளப் பழக வேண்டும் .
4 . சிறிய பண அலகுகள் (units) கூட தொடர்ச்சியாக முதலீடு செய்யப்படும் போது பெரிய அளவாக மா(ஏ)ற்றம் பெறும் .
Comments
Post a Comment