பங்கு தன் வரலாறு கூறுதல் - 2

பங்கு தன் வரலாறு கூறுதல் - 2

நான் ...

அதைப்பற்றி அப்புறம் ...

இது என்னுடைய சுருக்கமான கதை . நான் ஏன் இந்தக் கதையைச் சொல்ல ஆசைப்படுகிறேன் ? என் கதை யாருக்கேனும் பாடமாக இருக்கும் என்பதாக நான் நினைக்கிறேனா ? கதையைப் படித்து யாரேனும் தங்களை மாற்றிக் கொள்வார்களா என்ன ? முதலில் அதைப் படிக்கவேனும் செய்வார்களா ? மனிதர்களின் கவன ஈர்ப்பு நேரம் (attention span) கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வருவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன . பிறகு எதற்காக இந்தக் கதை ?

தெருவோரம் நடந்து செல்லும் போது தரையோடு தரையாகப் பூத்திருக்கும் சின்னஞ்சிறிய பூக்களைப் பார்த்திருக்கிறீர்களா ? இத்தினியூண்டு இருக்கும் அந்தப் பூவில் இயற்கை எவ்வளவு நகாசு வேலைகளைச் செய்திருக்கிறது ? எந்த அழகிய பெண்ணின் கூந்தலையாவது அது அலங்கரிக்கப் போகிறதா ? அல்லது ஆண்டவனுக்கு அதனை மாலையாகக் கட்டி யாராவது சூடப் போகிறார்களா ?
இவை எதுவும் நடக்கப் போவதில்லை . அது பூக்கிறது . பூப்பது அதன் இயல்பு . பூக்காமல் அதனால் இருக்க முடியாது .

1993 ஆம் ஆண்டு நாங்கள் பிறந்தோம் . நாங்கள் மொத்தம் 1976100 பேர் . அதற்கு முன்னால் எங்கள் நிறுவனர்களின் எண்ணங்களில் கருவாக மிதந்து கொண்டிருந்தோம் .

நாங்கள் பிறக்கும் போதே ஒரு சின்னப் பிரச்னை எழுந்தது . எங்கள் நிறுவனர்கள் எங்களில் சிலரை விற்று நிறுவன விரிவாக்கத்திற்கு வேண்டிய பணத்தைத் திரட்ட முற்பட்டார்கள் . அப்போதைய சந்தைச் சூழல் ஒரு புறம் . எங்கள் துறை சார்ந்த புதுமை மற்றொரு புறம் . அதனைக் குறித்த புரிதல் சந்தைக்கு இல்லை . இரண்டுமாகச் சேர்ந்து குறிப்பிட்ட எண்ணிக்கையை விடக் குறைவாகவே விற்கப்பட்டோம் . என்னுடைய நினைவில் பிழை இல்லையென்றால் விற்பனையாகாத பங்குகள் 13 சதவீதம் . இப்போது பைசா இலாபம் ஈட்டாத நிறுவனங்களை வாங்க எவ்வளவு போட்டா போட்டி ? அந்தக் காலத்தில் எல்லாம் இவ்வாறு கிடையாது . எங்களை நிர்வகிக்கும் அமைப்பின் சட்ட விதிகளின் படி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் எங்களை விற்றே ஆக வேண்டும் . நல்லவேளையாக எங்களின் எஞ்சிய பங்கு வாங்குபவர் (underwriter) எங்களை வாங்கிக் கொண்டார் . பின்னர் சந்தையில் எங்களை விற்று அவர் இலாபத்தை அள்ளியது வேறு கதை .

நாங்கள் பங்குச்சந்தையில் IPO விலையை விட 50 சதவீதம் அதிக விலையில் பட்டியலிடப்பட்டோம் . IPO ல் எங்களை வாங்க ஆளில்லை . ஆனால் இப்போது நாங்கள் 50 சதவீதம் அதிக விலையில் வர்த்தகமாகிறோம் . என்னே விந்தை ! மனித உணர்ச்சிகளின் கொந்தளிப்பை நான் முதன்முதலாக உணர்ந்த தருணம் அது .

பட்டியல் விலைக்கு என்னை விற்றவர்கள் வானத்தில் மிதந்த வண்ணம் இருந்தனர் . இருக்காதா பின்னே ? ஒரு மாதத்தில் 50 சதவீத வருமானம் என்றால் ஆண்டாண்டு வருமானம் (annualised yield) எவ்வளவு கிடைக்கப்பெறும் என்று அவர்கள் கணக்கிட்டுக் கொண்டனர் . பூக்களை நாடிச் செல்லும் வண்டுகளைப் போல அவர்கள் ஒவ்வொரு பங்காக மாறிய வண்ணம் இருந்தனர் . அவர்கள் மலர்ந்து மணம் பரப்பும் பூக்களைக் கொய்து களைகளுக்கு நீர் பாய்ச்சிய வண்ணம் இருந்தனர் . இந்த மாதிரி உத்தியைக் கையாண்டு ஆண்டாண்டு சம்பாதிக்க முடியாது என்று அவர்களுக்கு எடுத்துக் கூறினாலும் அதனை அவர்கள் நம்ப மாட்டார்கள் . மனிதர்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள் . அவர்கள் தாம் நம்ப விரும்புவதை மட்டுமே நம்புவார்கள் .

உண்மையில் பட்டியல் விலைக்கு என்னை விற்றவர்களை நினைத்து எனக்குப் பாவமாக இருந்தது . கையில் கிடைத்த அட்சய பாத்திரத்தை யாராவது தூக்கி எறிவார்களா என்ன ?

நாட்கள் என்னும் பூக்கள் கொண்டு தான் ஆண்டுகள் என்னும் மாலைகள் கட்டப்படுகின்றன . ஆனால் நாட்கள் பார்க்காததை எல்லாம் ஆண்டுகள் பார்க்கின்றன . காலம் என்னைக் கோபுரத்தின் உச்சியில் வைத்து அழகு பார்க்கப் போகிறது . அதற்குள் என்ன அவசரம் இவர்களுக்கு ? எனக்கு மட்டும் பேசும் சக்தியிருந்தால் நிச்சயம் அவர்களைத் தடுத்திருப்பேன் .

இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா ? காலத்தில் பயணிக்கும் சக்தி எதுவும் எனக்குக் கிடையாது . மேலும் நான் முக்காலமும் உணர்ந்த முனிவருமில்லை ‌. எனக்கு இப்போது 30 வயதாகி விட்டது . எத்தனையோ காளைச் சந்தைகளையும் கரடிச் சந்தைகளையும் பார்த்து விட்டேன் . காலத்தில் பின்னோக்கிப் பார்த்து நான் இதனை எழுதிக் கொண்டிருக்கிறேன் .

பங்குகள் குறித்த ஆறு அளவுருக்கள் என்று சொல்கிறார்களே அதாவது இந்த முதல் நீர்க்காமை , கடன் இல்லாமை , தரமான வளர்ச்சி , அகழி , நிறுவனர் பங்கு மற்றும் அறம் இவைகளில் ஓரளவு நான் தேர்ச்சி பெற்று விட்டதாகத் தான் சொல்ல வேண்டும் . நிறுவனர் பங்கு மட்டும் தற்போது குறைந்து போய் விட்டது .

IPO என்று அழைக்கப்படும் முதல் பொது வெளியீட்டில் எனது 100 பங்குகளை ஒருவர் வாங்கியதாகக் கொண்டு கணக்கைத் தொடங்கலாம் . ஏன் 100 பங்கு ? மனிதர்கள் பெரும்பாலான சமயங்களில் தர்க்கரீதியாகத் தான் சிந்திப்பார்கள் .கதையைக் கூட நம்பும் வகையில் மட்டுமே அவர்களுக்குச் சொல்ல வேண்டும் . ஆனால் பங்குச்சந்தை முதலீடுகளில் மட்டும் தர்க்கத்தைத் தவற விட்டு விடுவார்கள் . நான் வெளிவந்த ஆண்டு மற்றும் பணத்தின் அப்போதைய மதிப்பு இவைகளைக் கொண்டு இந்த 100 பங்குகள் என்பதைக் கணக்கிட்டிருக்கிறேன் . IPO ல் எனது முக மதிப்பு 10 ரூபாய் என்பதையும் கணக்கில் கொள்ளவும் .

1994 , 1997 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் நாங்கள் ஒன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் இலவசமாக வழங்கப்பட்டோம் . முதல் பொது வெளியீட்டின் 100 பங்குகள் தற்போது 800 பங்குகள் ஆகி விட்டன .

2000 ஆவது ஆண்டு உலகம் முழுவதுமான பங்குச் சந்தைகளில் ஒரு பெரிய அலை சுழன்றடித்தது . இந்த மாதிரி அலைகள் சந்தைக்கு ஒன்றும் புதியதல்ல . சில அலைகள் உங்களைக் கற்பனைக்கும் எட்டாத உயரங்களுக்குத் தூக்கிச் செல்வதாக இருக்கும் . சில அலைகள் உங்களைப் பாழும் படு குழிக்குள் தள்ளி விடுவதாக இருக்கும் ‌. இந்த அலை எங்களை மட்டுமல்ல எங்கள் துறை நிறுவனங்கள் அனைத்தையும் ஒய்யாரத்திற்குத் தூக்கிச் சென்றது . இப்போது கூட கூகுள் தேடுபொறியில் எங்கள் நிறுவனப்பங்கு விலையை உள்ளீடு செய்தால் அந்தக் காலகட்டம் ஒரு குன்று மாதிரி தெரியும் . எனது பங்குகள் அசாதாரணமான விலை - வருவாய் விகிதங்களில் (PE multiple) வர்த்தகமாகின . நிறுவனம் 10 ரூபாய் முக மதிப்பைக் கொண்ட எங்களை 5 ரூபாய் என்ற அளவில் பிரித்து எங்கள் விலையைக் குறைத்தது . 800 பங்குகள் தற்போது 1600 பங்குகள் ஆகி விட்டன .

2000 ல் எங்களை அதிக PE மதிப்பில் வாங்கியவர்கள் இலாபம் பார்க்க வெகு நாட்கள் ஆனது . அந்த வகையில் நான் யாரையும் ஏமாற்றவில்லை . என்னுடன் பயணித்தவர்கள் அனைவரும் இலாபம் ஈட்டினார்களை தவிர அதில் நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை . சுழன்று கொண்டிருக்கும் ரங்க ராட்டினத்திலிருந்து இடையில் குதிப்பவருக்கு மட்டுமே அடிபடும் .

இந்த இடத்தில் Futures மற்றும் Options குறித்துக் கூற விரும்புகிறேன் . F & O என்பது பங்குத் தொகுப்புக்கு இழப்புக் காப்பு (portfolio hedging) என்ற அடிப்படையில் அறிமுகப் படுத்தப்பட்டது . முதலில் பங்குகளின் ஒரு தொகுப்பை நீங்கள் கட்டமைக்க வேண்டும் . இந்தப் பங்குகளின் தொகுப்புக்கு இழப்புக்காப்பு என்ற அடிப்படையில் F & O க்களில் நீங்கள் நிலைப்பாட்டை எடுத்துக் கொள்ளலாம் . ஒரு பங்கின் விலை கூடும் என்று நினைத்தால் Call option எடுக்கலாம் . அதன் விலை குறையும் என்று நினைத்தால் Put option எடுக்கலாம் . பங்கின் விலை வேறு மதிப்பு வேறு என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் இந்த இழப்புக் காப்பு என்பதே உங்களுக்குத் தேவைப்படாது . அதே மாதிரி தற்காலிகமான மதிப்பிழப்பு என்பது வேறு , நிரந்தர மதிப்பிழப்பு என்பது வேறு . இதனை அறிந்து கொண்டால் எங்கள் விலை கூடுவதையும் குறைவதையும் நீங்கள் ரசிக்க ஆரம்பித்து விடுவீர்கள் . விலை குறையும் போது எங்களை வாங்கி பலனும் அடையப் பெறுவீர்கள் . ஆனால் எங்கள் F & O மூலமாக ஒரு சிலர் இலாபம் அடைந்தாலும் பெரும்பாலோனோர் நஷ்டத்திற்கு உள்ளாவதை நினைத்து எனக்கு வருத்தமாக இருக்கும் . எளிமையான ஒன்றைச் சிக்கலாக ஆக்கும் மனப்போக்கு எல்லா மனிதர்களுக்குமான ஒரு குணாதிசயமாக உள்ளது .

2004 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு இலவசப் பங்களிப்பு . இந்த முறை ஒன்றுக்கு மூன்று . 1600 பங்குகள் இப்போது 6400 பங்குகள் ஆகி விட்டன .

மீண்டும் 2006 , 2014 , 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் ஒன்றுக்கு ஒன்று என்பதான இலவசப் பங்களிப்புகளையும் சேர்த்து IPO வின் 100 பங்குகள் தற்போது 102400 பங்குகளாகி விட்டன .

நிறுவனம் எப்படிச் செயல்படுகிறது என்பதை நான் விலாவாரியாகச் சொல்லவில்லை என்பதாக நீங்கள் நினைக்கலாம் . இந்த இடைப்பட்ட காலத்தில் நிறுவனம் எத்தனையோ மேடு பள்ளங்களைச் சந்திக்க நேரிட்டது . ஒரு முறை CEO வை முன்னிட்டு பிரச்னை ஒன்று எழுந்தது . Under promise Over deliver என்பதாக என் நிறுவனத்தைக் கூறுவார்கள் . குறைவான சத்தியம் நிறைவான சாத்தியம் என்பதாகத் தமிழில் மொழி பெயர்க்கலாம் . சில சமயம் under deliver அதாவது குறைவான சாத்தியம் என்ற அளவில் எங்கள் நிறுவனம் குறைச் செயலாக்கம் புரிந்திருக்கிறது . அவ்வப்போது whistle blowers சங்கு ஊதிய வண்ணம் இருப்பார்கள் . இதனையும் மீறி  நாங்கள் முதலில் குறிப்பிட்ட ஆறு அளவுருக்களையும் செவ்வனே செயல்படுத்திய வண்ணம் மட்டுமே இருந்தோம் . அதற்கான மறைமுகமான ஆதாரம் தான் இந்த இலவச அளிப்புகள் . இந்த மாதிரி இலவசப் பங்களிப்புகளை எந்த நிறுவனமும் வெறுமனே கொடுத்து விட முடியாது . இலவசப் பங்குகளைக் கொடுத்து அதற்கும் சேர்த்து பங்காதாயங்களைக் கொடுப்பது அதனையும் தொடர்ந்த வாக்கில் கொடுப்பது என்பது சாதாரணமான ஒன்றல்ல .

அப்புறம் இந்தப் பங்காதாயங்களைக் குறித்தும் கூற வேண்டும் . நாங்கள் பிறந்த ஆண்டிலிருந்து பங்காதாயங்களைத் தவறாமல் கொடுத்து வருகிறோம் . 2022 ஆம் ஆண்டுக்கு ஒரு பங்குக்கு 31 ரூபாய் என்ற அளவில் பங்காதாயமாக வழங்கியிருக்கிறோம் . 2022 ஆம் ஆண்டு பங்காதாய வழங்கல் விகிதம் 58 சதவீதம் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும் . இலாபத்தின் மீதி 42 சதவீதம் நிறுவனத்தில் உபரியாக இருக்கிறது . இவ்வாறு சேர்ந்த நிறுவனத்தின் ஆண்டாண்டு உபரி தற்போது எங்கள் முதல் (capital)  மாதிரி 31 மடங்காக இருக்கிறது .

ஒரு பங்குக்கு 31 ரூபாய் பங்காதாயம் என்றால் 102400 பங்குகளுக்கு 3174400 ரூபாய் . ஒரு நாளைக்கு 8696 ரூபாய் . கிட்டத்தட்ட IPO வின் 100 பங்குகளுக்கான விலையை இப்போது நாங்கள் தின அளவில் அதுவும் பங்காதாயம் மூலமாக மட்டும் தந்து கொண்டிருக்கிறோம் . இது ஒப்புயர்வற்ற ஒரு சாதனை தானே ?

இது மட்டுமல்ல . தற்போதைய எனது ஒரு பங்கின் விலை 1500 ரூபாய் . 102400 பங்குகளின் விலை 15 கோடியே 36 இலட்சம் ரூபாய் . IPO விலையைக் கொண்டு கணக்கிட்டால் எங்கள் மதிப்பு 16168 மடங்கு கூடியிருக்கிறது . நாங்கள் தொடக்கத்திலிருந்து கொடுத்த பங்காதாயங்களைக் கணக்கிட்டால் இந்த மடங்கு இன்னும் கூடி விடும் . இந்தப் பங்காதாயங்களைக் கொண்டு எங்கள் பங்குகளை வாங்கியிருந்தால் அதன் மூலமான விலையேற்றத்திற்கு வானமே எல்லையாக இருக்கும் .

வெறும் 100 பங்குகளைக் கொண்டு இந்த அளவு மதிப்புப் பெருக்கத்தை யாராவது ஒருவராவது உருவாக்கியிருக்கிறார்களா என்று என்னால் தீர்மானமாகச் சொல்ல இயலவில்லை . எனது நிறுவனர்கள் கூட பல்வேறு சமயங்களில் நியாயமான கூட்டுக்குழும சமூகப் பொறுப்பு காரணங்களுக்காக எங்களை விற்று விட்டார்கள் . இப்போது அவர்கள் எங்களின் சிறுபான்மை பங்குகளை மட்டுமே வைத்திருக்கிறார்கள் . சிறு முதலீட்டாளர்களுக்கும் பங்குகளை விற்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் . அதைக் குறித்து நான் சொல்ல ஏதுமில்லை .

மேலே குறிப்பிட்ட கணக்கு முதல் பொது வெளியீட்டில் என்னை வாங்கி நாளது தேதி வரை விற்காமல் வைத்திருப்பவர்களுக்கானது .

வாரன் பஃபெட் அவருடைய 2022 ஆம் ஆண்டுக் கடிதத்தில் கோககோலா மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனப் பங்குகள் குறித்து இதே மாதிரி கணக்கு ஒன்றைப் போட்டிருக்கிறார் . அவைகளை விட அதிக வருமானத்தை நான் கடந்த 30 ஆண்டுகளில் கொடுத்திருக்கிறேன் என்பதை அடக்கத்துடன் சொல்லிக் கொள்ள விழைகிறேன் .

என் நிறுவனத்தைக் குறித்த எதிர்மறையான ஒரு விஷயம் என்னவென்றால் நிறுவனம் இப்போது ஆலமரம் மாதிரி வளர்ந்து விட்டது . இனிமேல் சராசரியை நோக்கிய பின்னடைவு (reversion to the mean) என்ற அடிப்படையில் இதன் வளர்ச்சி குறைந்து விடும் . இனி என்னால் முன்னர் மாதிரி இலவசப் பங்குகள் மற்றும் பங்காதாயங்களை வழங்க முடியாது . இத்யாதி . இத்யாதி .

இது சார்ந்த இரண்டு விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன் . ஒன்று , நிறுவனம் அவ்வப்போது குறை மதிப்பில் எங்களை buyback செய்கிறது . அதனால் இலவசப்பங்குகள் வழி எங்கள் எண்ணிக்கை கூடினாலும் பங்குகளைத் திரும்ப வாங்குதல் வழி அது குறைகிறது . Capital reduction என்பதாக இன்னொன்று இருக்கிறது . அதாவது முதல் நீக்கம் . நிறுவனத்தின் இருப்பு மற்றும் உபரி அதன் முதல் மாதிரி தற்போது 31 மடங்குகளில் இருக்கிறது என்று பார்த்தோம் . முதல் நீக்கம் என்ற வகையில் நிறுவனம் தற்போது இருக்கும் முக மதிப்பான 5 ரூபாயை 1 ரூபாய் என்று குறைத்துக் கொள்ளலாம் . இவ்வாறு செய்தால் இருப்பு மற்றும் உபரி கிட்டத்தட்ட 62 மடங்காகி விடும் . நிறுவனம் மீண்டும் இலவசப் பங்களிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடலாம் . ROCE என்று அழைக்கப்படும் தரமான வளர்ச்சியும் முன்பை விட வலிமை பெறும் . இந்த முதல் நீக்கத்தின் காரணமாக IPO முதலீட்டாளருக்கு 409600 ரூபாய் கிடைக்கப்பெறும் .

இது தான் நாளது தேதி வரையிலான எனது கதை .

முடிவாக ஒரு வார்த்தை . சின்ன வயதில் , தேவதைக் கதைகளில் ஒருவர் நிலையாக நிற்க வேண்டுமென்றால் அவர் வேகமாக ஓடிக் கொண்டிருக்க வேண்டும் என்பதாகப் படித்திருப்பீர்கள் . பங்குச்சந்தையில் இது தலைகீழாக மாறுகிறது . ஒருவர் சரியான பங்கை வாங்கியிருக்கும் பட்சத்தில் அவர் வேகமாக ஓடுவதற்கு நிலையாக நிற்க வேண்டும் . பங்கு முதலீடுகளைப் பொறுத்தவரை மனிதர்கள் செய்யும் மிக முக்கியமான தவறு , முதலீடுகளை எந்நேரமும் ஏதாவது செய்து கொண்டேயிருக்க வேண்டும் என்பது . ஒன்றும் செய்யாமல் இருப்பதும் ஒரு செயலே .

வாழ்த்துக்களுடன் ,
இன்ஃபோசிஸ் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14