உராய்வுச் செலவுகள்

உராய்வுச் செலவுகள்

(Frictional Costs)

ஒருவர் 10 இலட்சம் முதலீடு செய்து வியாபாரம் ஒன்றைச் செய்வதாகக் கொள்ளலாம் . அது எந்த வியாபாரமாக இருந்தாலும் சரி , அதற்கென்று சில தனிப்பட்ட உராய்வுச் செலவுகள் இருக்கும் . அது பொருளாக இருக்கும் பட்சத்தில் அதனை உங்கள் வியாபார ஸ்தலத்திற்கு கொண்டு வருவதற்கான செலவு மற்றும் அதனைக் கெடாமல் பாதுகாத்து வைப்பதற்கான செலவு போன்றவை உராய்வுச் செலவுகள் என்பதாக அழைக்கப்படுகிறது . ஒரு தேர்ந்த வியாபாரி என்ன செய்வார் ? கூடிய மட்டும் இந்த உராய்வுச் செலவுகளைக் குறைப்பதில் தான் அவருடைய முழு கவனமும் இருக்கும் .

பங்குச் சந்தைக்கு வருவோம் . சிறுகச் சிறுக பங்குகளின் ஒரு தொகுப்பைக் கட்டுகிறீர்கள் . அந்த வியாபாரியைப் போல் உங்கள் முழு கவனமும் உராய்வுச் செலவுகளைக் குறைப்பதில் தான் குடி கொண்டிருக்க வேண்டும் .

சரி , பங்குச்சந்தையைப் பொறுத்தவரை என்னென்ன உராய்வுச் செலவுகள் இருக்கின்றன என்று பார்க்கலாம் .

முதலாவது மற்றும் முக்கியமானது தரகர் தரகு . நீங்கள் தின அடிப்படையில் பங்குகளை வாங்குவதும் விற்பதுமாக இருந்தால் தரகர் தரகு எகிறி விடும் .

இரண்டாவதாக bid - ask spread . அதாவது பங்குகளை வாங்கும் போது அதிக விலையில் வாங்குதல் மற்றும் விற்கும் போது குறைந்த விலையில் விற்றல் .

மூன்றாவதாக வரி . இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமான பங்குச்சந்தைகளில் குறுகிய கால மூலதன ஆதாய வரியை விட நீண்ட கால மூலதன ஆதாய வரி குறைவாகும் . வேறு மாதிரி சொல்வதானால் ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் மறைமுகமாக தனது முதலீட்டாளர்களின் நீண்ட கால முதலீட்டிற்கு ஊக்கம் தருவதாகக் கொள்ளலாம். .

நான்காவதாகவும் ஒரு உராய்வுச்செலவு இருக்கிறது . தவறான ஒரு வர்த்தகத்தின் மூலம் பணத்தை இழப்பது ...

தரகர் தரகு , வாங்கும் / விற்கும் போதான விலை வேறுபாடு மற்றும் வரி போன்றவை  சின்னஞ்சிறிய உராய்வுச்செலவுகள் என்பதாக நீங்கள் நினைக்கலாம் . எப்படி உங்கள் முதலீடு நீண்ட கால அடிப்படையில் முதலீட்டுப் பெருக்கத்திற்கு உள்ளாகிறதோ அதே மாதிரி இந்த உராய்வுச் செலவுகளும் நீண்ட கால அளவில் செலவுப் பெருக்கத்திற்கு உள்ளாகும் .

நீண்ட கால முதலீடும் உராய்வுச் செலவுகளும் தலைகீழ் விகிதத்தில் இணைந்துள்ளன . எவ்வளவுக்கு எவ்வளவு நீண்ட காலத்திற்குத் திட்டமிடுகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு உராய்வுச் செலவுகள் குறைய ஏதுவாகும் . மேலும் முதலீட்டுக் கால அளவு கூடக்கூட உங்களுடைய போட்டியாளர்கள் குறைந்து கொண்டே வருவார்கள் . சந்தையின் மிகப் பெரும்பான்மையாளர்கள் தினசரி மற்றும் குறுகிய கால அளவுகளில் ஒருவரையொருவர் தோற்கடிக்க மல்லுக்கட்டுக் கொண்டிருக்கும் போது நீண்ட கால அடிப்படையைக் கைக்கொள்ளல் ஒரு சாதகமான கட்டமைப்பாக (structural advantage) உதவும் .

மேலும் stress free investing என்பதான ஒரு கருத்தாக்கம் உள்ளது . அதாவது மனநிம்மதியுடன் செல்வம் சேர்ப்பது . தினசரி மற்றும் குறுகிய கால அளவுகளில் இருபத்தி நான்கு மணி நேரமும் ( சந்தை திறந்திருக்கும் போது சந்தை . சந்தை மூடிய பின்னர் மறுநாள் என்ன ஆகுமோ என்று கெதங் கெதங் என்று இருப்பது )
சந்தையை கண்கள் சிவக்கச் சிவக்க உற்றுப் பார்ப்பதை விடுத்து மதிப்பு முதலீடாக நமக்கு நன்கு புரிந்த நிறுவனப் பங்குகளை வாங்கி காலா காலத்திற்கும் வைத்திருப்பது என்ற ஒரு மனநிலையை மனக்கண்ணால் பாருங்கள் . வாரன் பஃபெட் இதனை இன்னும் தெளிவாக விளக்குகிறார் . சந்தையில் முதலீடு செய்வது என்பது கிரிக்கெட் விளையாடுவது மாதிரி . ஆனால் நிஜ கிரிக்கெட்டிற்கும் இந்த சந்தை கிரிக்கெட்டிற்கும் சில வேறுபாடுகள் உள்ளன . இத்தனை ஓவர் இத்தனை பந்துகள் என்ற எந்தக் கட்டுப்பாடுகளும் இந்த சந்தை கிரிக்கெட்டில் கிடையாது . ITC பங்கு 340 என்ற விலையில் திருவாளர் சந்தை (Mr.Market) அவர்கள் ஒரு பந்தை (பங்கை) வீசி எறிவார் . நீங்கள் அந்தப் பந்தை அடித்து ஆடவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை . உங்களுக்கு நியாயமாகப் படும் விலையில் வரும் பங்குகளை மட்டும் அடித்து ஆடினால் போதுமானது . மற்றபடி நீங்கள் வெறுமனே நின்று சந்தையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் மட்டும் போதும் . உணர்ச்சியின் பாற்பட்டு திருவாளர் சந்தை 240 என்ற PE விகிதத்தில் எறியும் பந்தை அடித்து ஆடினால் அந்த ஆண்டவன் நினைத்தாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது . குறுகிய காலத்தில் நிறைய ரன் எடுக்கிறேன் பேர்வழி என்று அடித்து ஆடினால் முதலுக்கே மோசம் நேரலாம் . அப்படியே நீங்கள் தப்பித்தவறி இலாபம் சம்பாதித்தாலும் உராய்வுச் செலவுகளைக் கழித்த பின்பு எதுவும் மிஞ்சாது .

முன்பே ஒரு பதிவில் பார்த்த மாதிரி பங்குச்சந்தையின் முதலும் முடிவுமான பயன்பாடு முதல் உருவாக்கம் (capital formation) மட்டுமே . மார்ச் மாதம் 1991ல்  இந்தியப் பங்குச்சந்தையின் மொத்த சந்தை மதிப்பு வெறும் 70000 கோடி மட்டுமே . இன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் 1600000 கோடி . இந்த மதிப்பு உருவாக்கத்தில் குறைந்த பட்ச உராய்வுச் செலவுகளுடன் பங்கு பெறுவது தான் ஒரு அறிவார்ந்த செயலாக இருக்க முடியும் . ஆனால் உண்மையில் நடப்பது வேறு . சித்தாடு காப்பணம் செமகூலி முக்காப்பணம் என்பது மாதிரி முதலீட்டாளர்கள் (?) சந்தையின் ஒவ்வொரு துளி மதிப்பையும் பணமாக்குகிறேன் என்ற பதட்டத்தில் உராய்வுச் செலவுகளிலும் தவறான வர்த்தகங்களிலும் (பன்மடங்காகக் கூடிய ஒரு பங்கை சீக்கிரமாக விற்று விடுதல் / நஷ்டம் தரக்கூடிய பங்குகளை ரூபாய் பங்காகும் வரை வைத்திருத்தல்) பணத்தை இழப்பது உண்மையில் வருத்தத்திற்குரியது .

உலகம் முழுவதுமான பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் பணத்தில் 80 சதவீதம் இந்த உராய்வுச் செலவுகளில் தேய்ந்து மறைந்து விடுவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன . வெறும் 20 சதவீதம் மட்டுமே முதல் உருவாக்கத்தில் பங்கு பெறுகிறது . இந்த 80 - 20 ஐ 20 - 80 என்று மாற்ற முடியுமானால் முதலீட்டு உலகம் எவ்வளவு சுபிட்சமாக இருக்கும் ? நன்றாக யோசித்துப் பாருங்கள் , பில்கேட்ஸ் மைக்ரோசாப்ட் பங்குகளுடன் மட்டும் தானே வாழ்க்கையை நடத்துகிறார் ? வாரன் பஃபெட் பெர்க்சயர் ஹாத்வே பங்குகளுடன் மற்றும் நம் இந்திய முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் பங்குகளுடன் மட்டும் தானே தத்தமது முதலீட்டு வாழ்க்கையை வாழ்கின்றனர் ? ஆனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் (?) மட்டும் ஏன் முடிவேயில்லாத இசை நாற்காலி (musical chair) விளையாட்டை ஆடிக் கொண்டிருக்கின்றனர் ?

அசைவு என்பது வேறு . இயக்கம் என்பது வேறு . அசைவு என்பது ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடிக் கொண்டிருப்பது . இயக்கம் என்பது நீண்ட கால நோக்கைக் கைக்கொள்வது . பங்குச்சந்தையைப் பொறுத்தவரை பெரும்பாலான சமயங்களில் இயக்கமின்மை என்பது தான் சிறந்த இயக்கம் . Non action is the best action . பட்டினத்தார்  'தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்' என்று சொல்வது மாதிரி பங்குச்சந்தையில் இயங்காமல் இயங்கி வெற்றி பெறுங்கள் .

பின்குறிப்பு: ITC நிறுவனம் 2021 ஆம் ஆண்டிற்கான பங்காதாயமாக பங்கு ஒன்றுக்கு 10 ரூபாய் 75 காசுகளை வழங்கியிருக்கிறது . 45 ஆண்டுகளுக்கு முன்பு அதன் IPO ல் 100 பங்குகளை 1500 ரூபாய்க்கு வாங்கி நாளது தேதி வரை இயங்காமல் இயங்கியவருக்கான 2021 ஆம் ஆண்டுக்கான பங்காதாயம் ரூபாய் 444082/- பங்குகளின் மதிப்பு ரூபாய் 9336060/-

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14