சிறிதே பெரிது - 2

சிறிதே பெரிது - 2

பங்குச்சந்தையில் சிறிய கணக்குகள் பற்றிய சரியான புரிதல் இல்லையென்றால் அதற்குப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும். 

முதலாவது மற்றும் முக்கியமானது என்னவென்றால் உங்களுடைய முதலீட்டு வருமானம் பண வீக்கத்தை விஞ்சியதாக இருக்க வேண்டும். முதலீட்டு வருமானத்திலிருந்து பண வீக்கத்தைக் கழித்தால் உங்களுக்குக் கிடைக்கப்பெறுவது தான் உண்மையான வருமானம் (real return) நிறையப் பேர் பணவீக்கம் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் மரத்துப் போயிருப்பது எனக்கு எப்போதும் ஆச்சரியமளிக்கும் ஒரு விஷயம். பணத்தின் வாங்கு திறன் இழப்பு என்ற கருத்தாக்கத்தை உணர்ந்தால் தான் உண்மையான வருமானம் பெற ஏதுவாகும். தவளையைக் கொதிக்கும் வெந்நீரில் போட்டால் துள்ளிக்குதித்து வெளியே வந்து விடும். அதே தவளையை வெதுவெதுப்பான நீரில் போட்டு சிறிது சிறிதாக வெப்பத்தைக் கூட்டினால் அதனால் நீரின் வெம்மையை உணர முடியாமல் இறந்தே போய் விடும். பண வீக்கமும் சிறிது சிறிதாக (incremental) உயர்வதால் பெரும்பாலோனோரால் அதனை உணர முடிவதில்லை. உண்மையான வருமானம் பெற பங்கு முதலீடுகள் தான் ஒரே ஒரு வழி.  பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு அஞ்சி  அதனைப் புறத்தள்ளுவது பேதைமை. பண  வீக்கத்திற்குத் தான் நாம் உண்மையிலேயே அஞ்ச வேண்டும்.

10000 ரூபாய் நிரந்தர வைப்பு முதலீடு 30 வருடங்களில் 10 சதவீத CAGR என்ற கணக்கீட்டில் 1.7 இலட்சம் ரூபாயாக வளர்கிறது. பரஸ்பர நிதிகள் 15 சதவீதம் தருவதாகக் கணக்கிட்டால் 30 வருடத்திற்கு 6.6 இலட்சம் ரூபாய் வருகிறது. நிறுவனப் பங்குகள் 20 சதவீதம் தருவதாகக் கொண்டு கணக்கிட்டால் 23.7 இலட்சம் ரூபாய். 21 சதவீதம் என்று கணக்கிட்டால் எவ்வளவு வரும் என்று நினைக்கிறீர்கள்? 30.4 இலட்சம் ரூபாய். ஒரு சதவீதம் என்ற சின்னஞ்சிறிய  வேறுபாடு முப்பது வருடங்களில் வளரும் விதத்தைக் கவனிக்க வேண்டுகிறேன். முதிர்வுத் தொகையைக் கூட்டிக் காட்ட வேண்டும் என்பதற்காக 30 ஆண்டு என்று கணக்கிடவில்லை‌. நம் முதலீடுகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதாகக் கொண்டால் 30 வருடம் என்பது மிகவும் குறைந்த அளவீடு.

பங்குகளை வாங்க விற்க என்று இருந்தால், பங்குகளை வாங்குவதற்கான மற்றும் விற்பதற்கான தரகு, bid ask spread மற்றும் குறுகிய கால மூலதன ஆதாய வரி எல்லாமாகச் சேர்ந்து உங்கள் முதலீட்டு வருமானத்தைக் கரையான் கணக்காக அரித்துத் தின்று விடும். பங்குகளை வாங்கி விற்று , விற்று வாங்கி (short selling) இருப்பதில் இன்னொரு பெரும் பிரச்னை உள்ளது. கடந்த 26 வருடங்களாக ஒரே சீராக உயர்ந்து வரும் HDFC வங்கிப் பங்கை எடுத்துக் கொள்ளலாம். ஒருவர் IPO வில் 1000 பங்குகளை 10000 ரூபாய்க்கு வாங்கி அலமாரியில் வைத்துப் பூட்டி விடுகிறார். இன்னொருவர் 10 ரூபாய்க்கு வாங்கி 20 ரூபாய்க்கு விற்றும், 25 ரூபாய்க்கு வாங்கி 50 ரூபாய்க்கு விற்றும் ... வருவதாகக் கொள்ளலாம். IPO வில் வாங்கி வைத்திருப்பவர் ஒன்றரைக் கோடி மதிப்பிலான பங்குகளைக் கையில் வைத்திருப்பார். வாங்கி வாங்கி விற்றவர் எவ்வளவு வைத்திருப்பார் என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன். ஒரு பங்கை தினசரி வாங்க மற்றும் விற்க என்று எல்லோராலும் அல்லாடிக் கொண்டிருக்க முடியாது. பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு தனிப்பட்ட ஒரு வாழ்க்கை உள்ளது. மேலும் ஒவ்வொரு முறை பங்குகளை வாங்கும் போது மற்றும் விற்கும் போதான சிறிய சிறிய உராய்வுச் செலவுகளையும் கணக்கில் கொண்டாக வேண்டும். ஒரே சீராக உயர்ந்து வரும் HDFC வங்கிப் பங்கும் அவ்வப்போது குறைந்து பின் கூடும். நாம் வாங்க விற்க என்று இருக்கையில் ஒரேயொரு தவறான வர்த்தகம் நம்மைப் பல படிகள் கீழே இறக்கி விடும். AUROBINDO PHARMA நிறுவனப்பங்கு கடந்த பத்தாண்டுகளில் 100 மடங்கு கூடியிருக்கிறது. ஆனால் இந்தப் பத்தாண்டுகளில் அது 1லிருந்து 100க்கு நேர் கோட்டில் பயணிக்கவில்லை. பலமுறை 25 சதவீதத்திற்கும் கீழாக இறங்கித் தான் 100 மடங்காளர் ஆகியிருக்கிறது. அதே மாதிரி MOTHERSON SUMI SYSTEMS பங்கும் ஏறி இறங்கி ஏறி இறங்கித் தான் பன்மடங்காளர் ஆகியிருக்கிறது. எப்போது கூடும்/ குறையும் என்பதைத் துல்லியமாகக் கணிப்பது என்பது குரங்கு, கணினியில் தப்பும் தவறுமாக உள்ளீடு செய்து அது கம்ப இராமாயணத்தின் ஒரு பாடலாக வருவதற்கு எவ்வளவு வாய்ப்பு இருக்கிறதோ அதற்கு சற்றும் குறையாததாகும். 

பொதுவாக புள்ளியியல் விதிகளின் படி நூற்றுக்கணக்கான  முடிவுகள் எடுத்தால் அதில் பாதி சரியாக இருப்பதற்கும், மீதி தவறாக இருப்பதற்குமான வாய்ப்புகள் அதிகம். பங்குகளை தின அடிப்படையில் வாங்குவதும் விற்பதுவுமாக இருந்தால் நிறைய முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கும். மாறாக நிறுவனங்களை மதிப்பு முதலீட்டு அடிப்படையில் அடிப்படைப் பகுப்பாய்வு செய்து 'வாங்குவது' என்ற ஒரேயொரு சரியான முடிவை எடுத்தால் கோடிகளைக் குவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிலும் சில பங்குகள் நாம் நினைத்ததற்கு மாறாகக் குறையும் வாய்ப்புகள் இருந்தாலும் சராசரியாக வெற்றி வாகை சூடுவதற்கான வாய்ப்புகள் பிரகாசம்.

இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யத்தகுந்த நிறுவனங்கள் குறைந்த பட்சமாக 200 இருக்கலாம். இந்த நிறுவனங்களை அடிப்படைப் பகுப்பாய்வு செய்து மதிப்பு முதலீட்டை மேற்கொள்வதற்கே ஒரு வாழ்நாள் போதாது. இந்த மாதிரி முதலீட்டுத் தொகுப்பைக் கட்டுவதற்கே நாம் பல முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். அவ்விதம் இருக்கையில் தினசரி வர்த்தகத்தில் ஈடுபடுகிறேன் பேர்வழி என்று ஒரேயொரு பங்கை வாங்கவும் விற்கவும் என்று ஆயிரக்கணக்கான முடிவுகள் எடுப்பது அறிவார்ந்த செயல் ஆகாது. 

வாரன் பஃபெட் துளை அட்டை (punch card) என்ற கருத்தாக்கத்தின் மூலம் சொல்ல வருவதும் இதைத் தான். ஒவ்வொரு முதலீட்டாளரும் 20 துளைகள் கொண்ட ஒரு அட்டையைக் கையில் வைத்திருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு, ஒவ்வொரு நிறுவனப் பங்கையும் அலசி ஆராய்ந்து வாங்கியதும் அந்த அட்டையில் ஒரு துளையைப் போட்டு விட வேண்டும். இவ்வாறாக ஒரு முதலீட்டாளர் தன் வாழ்நாளில் இருபது பங்குகளுக்கு மேல் வாங்கக் கூடாது. பஃபெட் சொல்ல வருவது என்னவென்றால் முதலீட்டு முடிவுகளைக் கூடிய மட்டும் குறைவாக எடுங்கள் என்பதைத் தான்.

இவ்வாறாக சின்னஞ்சிறிய பண அளவீடுகளில் கவனம் செலுத்துங்கள். பெரிய அளவீடுகள் தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும்.

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14