பெறுதிகள் ஏன் தேவை ?
பெறுதிகள் (Derivatives) ஏன் தேவை ?
நண்பர் ஒருவரின் கேள்வி . Call option மற்றும் Put option போன்ற பெறுதிகள் (derivatives) கொத்துக் கொத்தாகக் கொல்லும் ஆயுதங்கள் (weapons of mass destruction) என்று பஃபெட் கூறுகிறார் . சமீபத்திய Sebi ஆய்வறிக்கை ஒன்று பத்துக்கு ஒன்பது பெறுதி (F&O) வர்த்தகர்கள் நஷ்டத்திற்கு உள்ளாகின்றனர் என்று கூறுகிறது . எனில் அரசாங்கம் அவைகளைத் தடை செய்தால் என்ன ? நியாயமான கேள்வி . ஆனால் பெறுதிகளுக்கு ஒரு நியாயம் இருக்கிறது .
நீங்கள் பத்து இலட்சம் பெறுமானமுள்ள ஒரு பங்குத் தொகுப்பை (portfolio) வைத்திருப்பதாகக் கொள்ளலாம் . பங்குச்சந்தை உயர் அளவிலான PE க்களில் வர்த்தமாவதாகவும் கொள்ளலாம் . குறுகிய கால அளவில் பங்குச்சந்தைப் புள்ளிகள் குறையும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் . இந்த சூழ்நிலையில் நீங்கள் உங்கள் பங்குத் தொகுப்பின் மதிப்பைக் காக்கும் பொருட்டு put option எடுத்துக் கொள்ளலாம் . இது பொதுவாக short என்பதாக அழைக்கப்படுகிறது . இன்னொரு சூழ்நிலை . பங்குச்சந்தை தரை தட்டி விட்டது . இனி கீழே செல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு . மேலே செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் . அப்போது call option எடுத்துக் கொள்ளலாம் . இது பொதுவாக long என்பதாக அழைக்கப்படுகிறது . இவ்வாறாக call option மற்றும் put option கள் பங்குத் தொகுப்பிற்கான காப்பீடு என்ற அடிப்படையில் உதவிகரமாக இருக்கிறது .
இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது முதலில் நீங்கள் பங்குகளின் ஒரு தொகுப்பைக் கட்டவேண்டும் . பங்குத்தொகுப்பிற்குத் தான் பெறுதிகள் காப்பீடாகச் செயல்படும் . ஆனால் உண்மையில் நடப்பது வேறு . பங்குத் தொகுப்பே இல்லாமல் , பங்குத் தொகுப்பு என்ன , ஒரு பங்கு கூட வாங்காமல் நேரடியாக call மற்றும் put option ல் குதித்து விடும் போது தான் பிரச்னை எழுகிறது .
பங்குகளை வாங்கி
வைத்திருப்பவர்களுக்குத் தான் பங்காதாயங்கள் , இலவசப்பங்கு மற்றும் உரிமைப் பங்கு வெளியீட்டில் சந்தை விலையை விடக் குறைந்த விலையில் பங்கு பெறும் வாய்ப்பு போன்றவை கிடைக்கப்பெறும் . பெறுதிகளை வைத்திருப்பவர்களுக்கு எந்த பணப் பலன்களும் கிடைக்கப்பெறாது . குறுகிய கால அளவில் சந்தை நீங்கள் நினைத்த திசையில் சென்றால் பிழைப்பீர்கள் .
இன்னொரு முக்கியமான விஷயத்தையும் இங்கே குறிப்பிட வேண்டும் . இதனைச் சற்று கவனமாகப் படிக்க வேண்டுகிறேன் . பங்குகளே பெறுதிகள் தான் . Shares itself are derivative . கூகுள் நிறுவனத்தை எடுத்துக் கொள்ளுங்கள் . தேடுதல் செயல்முறையில் (search algarithm) அதன் மதிப்பு பொதிந்திருக்கிறது . 3M நிறுவனத்தை எடுத்துக் கொண்டால் post-it note உள்ளிட்ட 50000 க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளில் அதன் மதிப்பு ஒளிந்திருக்கிறது . அல்லது நமது இந்திய Info edge நிறுவனத்தை எடுத்துக் கொள்ளலாம் . அதன் மதிப்பு naukri.com ன் நேர் பின்னூட்ட வளையத்தில் உள்ளது . பங்குகள் அவற்றின் மதிப்பை இந்த செயல்முறை , மற்றும் கண்டுபிடிப்புகளிலிருந்து பெறுவதால் பங்குகளே பெறுதிகள் தான் . இந்தப் பெறுதிகளின் பெறுதிகள் தான் பெறுதிகள் . ஆக நிறுவனம் தான் முதல் அடுக்கு (layer) நிறுவனப் பங்குகள் இரண்டாம் அடுக்கு . பெறுதிகள் மூன்றாம் அடுக்கு . பங்குச்சந்தையை ஒரே வரியில் விளக்க வேண்டுமென்றால் அது ஏறி இறங்கும் தன்மை படைத்தது என்பதாகச் சொல்லலாம் . பங்குச்சந்தையின் ஏறி இறங்கும் தன்மையை நீங்கள் புரிந்து தெளிந்தால் உங்களுக்குப் பெறுதிகளே தேவைப்படாது . நான் இதுவரை எந்த F & O விலும் நிலைப்பாடு எடுத்ததில்லை என்பதை இந்த இடத்தில் சொல்லிக்கொள்ள விழைகிறேன் .
Short selling பற்றிக் கொஞ்சம் நெருங்கிச் சென்று ஆராயலாம் . Short sellers are police men for stock exchange என்று Seth Klarman கூறுகிறார் . Short selling என்றால் ஒரு நிறுவனப் பங்கு குறையும் என்ற நிலைப்பாட்டை எடுப்பது . ஒரு பங்கின் விலை எப்போது குறையும் ? நிறுவனம் மீமிகை PE அளவுகளில் வர்த்தமாகும் போது ... அரசாங்க சட்டதிட்டங்கள் நிறுவனத்திற்குப் பாதகமாக மாறும் போது ... நிறுவனம் ஒரு பெரிய வர்த்தக வாய்ப்பை இழக்கும் போது ... நிறுவனம் பொய்யான கணக்கீடுகளைச் சமர்ப்பிக்கும் போது ... short selling என்பது தவறு செய்யும் நிறுவனங்களை மண்டியிட வைப்பதான (death knell) ஒரு செயல்முறை என்று சொல்லலாம் . தவறு செய்யும் நிறுவனங்களை SEBI கண்டுபிடித்து தண்டிக்க நீண்ட காலம் ஆகலாம் . ஆனால் short sellers ஒரு நிமிடத்தில் தண்டித்து விடுவார்கள் . ஆனால் short selling ல் ஆகப்பெரிய அபாயங்கள் இருக்கின்றன . ஒரு நிறுவனத்தின் PE அளவு அதிகம் என்று நினைத்து நீங்கள் அதனை short அடிப்பதாகக் கொள்ளலாம் . ஆனால் நிறுவனம் தொடர்ந்து மிகை PE அளவுகளில் வர்த்தமாகிக் கொண்டே இருக்கவும் ஒரு வாய்ப்பு இருக்கிறது . அல்லது நிறுவனத்தின் EPS அதிகரித்து PE குறையவும் செய்யலாம் . அல்லது EPS தொடர்ந்து அதிகரித்து வருவதால் மிகை PE மீமிகை PE ஆகவும் வாய்ப்பிருக்கிறது . அரசாங்க சட்டதிட்ட அபாயங்களை எதிர்கொள்ள நிறுவனங்கள் ஏதாவது உபாயங்களைக் கண்டுபிடிக்கலாம் . ஒரு வர்த்தக வாய்ப்பு கையை விட்டுப் போனால் பிறிதொன்று . போட்டி நிறுவனம் கூட பொய்யான கணக்கீடு என்று ஏதாவது புரளியைக் கிளப்பி விட்டிருக்கலாம் . பங்குகளை வாங்கி வைத்திருப்பவர்களுக்கு அதிகபட்சமான நஷ்டம் வருவதற்கான வாய்ப்பு 100 சதவீதம் . Short selling ல் நஷ்டம் முடிவில்லாதது . ஒரு நிறுவனப் பங்கு குறையும் என்று short போகிறீர்கள் . மாறாக பங்கின் விலை கூடிக்கொண்டே செல்கிறது . ஒரு கட்டத்தில் நீங்கள் இந்த உயர் விலையில் வர்த்தகமாகும் பங்கை வாங்கி கணக்கை நேர் செய்தே ஆகவேண்டும் . பங்குகளுக்கான தேவைப்பாடு இவ்வாறு அதிகரிப்பதால் அதன் விலை விண்ணை முட்டிச் செல்லவும் வாய்ப்புள்ளது . சமயங்களில் எவ்வளவு விலை கொடுத்தாலும் பங்குகள் கிடைக்காத நிலையும் ஏற்படக்கூடும் . இது short squeeze என்று அழைக்கப்படுகிறது .
2008 ல் அமெரிக்க sub prime crisis ன் போது பால்சன் என்பவர் மேற்கொண்ட ஒரு short selling நிலைப்பாடு தான் the mother of short selling என்பதாகப் பார்க்கப்படுகிறது . அது சம்பந்தமாக The Greatest trade ever என்பதாக ஒரு தனிப்பட்ட புத்தகம் கூட வெளிவந்திருக்கிறது . 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தெருவில் போகிறவர்கள் வருகிறவர்களுக்கெல்லாம் வீட்டுக்கடன்கள் வாரி வழங்கப்பட்டன . அவைகளுக்கு ninja loans என்று செல்லமாகப் பெயரிட்டும் அழகு பார்த்தார்கள் . NINJA என்றால் No Income No Job and Assets என்பதாகப் பொருள் . பால்சன் இந்த மாதிரியான கடன் வழங்கும் நிறுவனங்களை short செய்தார் . இது தான் இன்றளவும் உலகின் ஆகப்பெரிய மதிப்பு வாய்ந்த short selling . ஆனால் கதை இதனுடன் முடியவில்லை . அதன் பின்னர் பால்சன் மேற்கொண்ட short நிலைப்பாடுகள் இன்றளவும் அவருக்குக் கை கொடுக்கவில்லை . Short selling செய்து உலகப் பணக்காரர்கள் வரிசையில் யாரும் இடம் பெறவில்லை என்பதும் இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது .
வாழ்க்கை மிக எளிமையானது . பங்குச் சந்தையும் அவ்வாறே எளிமையானது தான் . நாம் தான் அதனைச் சிக்கலாக்குகிறோம் . பங்குச்சந்தையைக் குறித்து எளிமையாக இரண்டே வரிகளில் விளக்க வேண்டுமென்றால் , சந்தை ஏறி இறங்கும் தன்மை படைத்தது . மேலும் மிக முக்கியமாக அதன் ஏறி இறங்கும் தளம் உயர்ந்த வண்ணமாகவே உள்ளது .
எளிமை குறித்த ஒரு பொன்மொழியுடன் இந்தப் பதிவை முடிக்கலாம் . 'அறிவைப் பெற வேண்டுமென்றால் நிறைய விஷயங்களைச் சேருங்கள் . ஞானத்தைப் பெற வேண்டுமென்றால் நிறைய விஷயங்களை விலக்குங்கள் '
Comments
Post a Comment