ஆராய்ந்தெடுத்த சில பங்கு மொழிகளும் அவற்றுக்கான விளக்கங்களும்
ஆராய்ந்தெடுத்த சில பங்கு மொழிகளும் அவற்றுக்கான விளக்கங்களும்
ஒரு அழகிய பழமொழி நினைவில் இருப்பது பணப்பெட்டியில் ஒரு பொற்காசு இருப்பது போல. இது இலக்கியரீதியாக மட்டும் உண்மையில்லை. பணரீதியாகவும் உண்மை. என் மனம் என்ற குளத்தில் விழுந்த இந்த (வைரக்) கற்கள் எழுப்பிய எண்ண அலைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
பங்கு மொழி 1
விதி எண் 1 : பணத்தை இழக்காதே
விதி எண் 2 : விதி எண் 1 ஐ மறக்காதே
பூவுலகின் # 1 முதலீட்டாளர் வாரன் பஃபெட் முதலீட்டில் பணத்தை இழக்காமல் இருப்பதை ஏன் இவ்வளவு வலியுறுத்திக் கூறுகிறார்? ஒரு எளிய கணக்கு. ஒருவர் பங்குச்சந்தையில் முதல் வருடம் கரடியிடம் 50 சதவீதத்தை இழந்து விடுகிறார். ஒரு இலட்சம் ரூபாய் முதலீடு ஐம்பதினாயிரம் ஆகக் குறைந்து விடுகிறது. அடுத்த வருடம் நல்ல காளைச்சந்தை. 50 சதவீதம் இலாபம் கிடைக்கப் பெறுகிறது. அவருடைய பங்குகளின் மதிப்பு எவ்வளவு? பங்குகளின் மதிப்பு ஒரு இலட்சம் அல்ல. வெறும் 75000 ரூபாய் மட்டுமே. ஒரு முதலீட்டில் 10 சதவீதத்தை இழந்தால் அந்த இழப்பை சமன் செய்ய 11 சதவீதம் சம்பாதிக்க வேண்டும். 25 சதவீதத்தை இழந்தால் 33 சதவீதம். 50 சதவீதத்தை இழந்தால் 100 சதவீதம். 80 சதவீதத்தை இழந்தால் அதை சமன் செய்ய எவ்வளவு சம்பாதிக்க வேண்டும் தெரியுமா? 500 சதவீதம். மேலும் இந்த இழப்பின் வாய்ப்புச் செலவு வருடாவருடம் கூடிக்கொண்டே செல்லும். முதல் வருட இழப்பான இந்த ஐம்பதினாயிரம் ரூபாய் பத்து சதவீதம் இலாபம் சம்பாதித்து இருப்பதாகக் கணக்கிட்டால் உங்கள் இலாபம் , அல்ல , நஷ்டம் ஐயாயிரம் ரூபாய். அந்த இலாபத்திற்கு , அல்ல , நஷ்டத்திற்கு பத்து வருட CAGR போட்டுப் பாருங்கள். உங்களுக்கு இந்தக் கணக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதனால் பணத்தை இழக்காதீர்கள். இந்த விதியையும் மறக்காதீர்கள்.
பங்கு மொழி 2
காளைச்சந்தை, கவலைகளின் மேல் ஏறிச் செல்கிறது. கரடிச்சந்தை, நம்பிக்கை என்ற வழுக்கு மரத்தின் ஊடாகச் சறுக்குகிறது .
பங்குச்சந்தையில், காளைச்சந்தையும் கரடிச்சந்தையும் எப்போது வருமென்று யாராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. கெட்ட செய்திகளாக வந்து கொண்டிருக்கும். சந்தை அது பாட்டிற்கு மென்மேலும் ஏறிக் கொண்டிருக்கும். நல்ல செய்திகளாக வந்து கொண்டிருக்கும். சந்தை சரிந்து கொண்டிருக்கும். கரடிச்சந்தையில் கூட சில பங்குகள் உயர்ந்த வண்ணமாகவும், காளைச்சந்தையில் சில பங்குகள் குறைந்த வண்ணமாகவும் இருக்கும். சில பங்குகள் நிரந்தர (perpetual) காளைச்சந்தை என்ற கணக்கில் 52 வார உயர்ந்த பட்ச விலையிலேயே வர்த்தகமாகிக் கொண்டிருக்கும்.( உ- ம்) HDFC Bank. சில பங்குகள் நிரந்தர கரடிச்சந்தை என்ற கணக்கில் 52 வார குறைந்த பட்ச விலையிலேயே வர்த்தகமாகிக் கொண்டிருக்கும். (உ- ம்) Jet Airways. சில பங்குகள் ஆண்டாண்டாக ஒரு குறிப்பிட்ட விலைப்பட்டையிலேயே (price band) வர்த்தகமாகி நம் பொறுமையைச் சோதிக்கும். இதற்கெல்லாம் முக்கியமான காரணம் முதலீட்டாளர்களின் உணர்ச்சிப் போராட்டம் தான். ஒரு பங்கை நீங்கள் வாங்குகிறீர்கள். ஒருவர் விற்கிறார். வாங்குபவரும் விற்பவரும் சந்திக்கும் போது தான் ஒரு வர்த்தகம் நிறைவு பெறுகிறது. ஒருவர் ஏன் ஒரு பங்கை வாங்க வேண்டும்? விற்பவருக்குத் தெரியாத ஒரு தகவல் வாங்குபவருக்குத் தெரிந்திருக்கிறதா? சரி, ஒருவர் ஒரு பங்கை ஏன் விற்க வேண்டும்? வாங்குபவருக்குத் தெரியாத ஒரு தகவல் விற்பவருக்குத் தெரிந்திருக்கிறதா? ஓராயிரம் கேள்விகள் எழுகின்றன. ஒரு ஊகத்தன்மை (speculation) உள்ளார்ந்து இருக்கிறது. பங்குச்சந்தையில் இந்த ஊகத்தன்மையைத் தவிர்க்கவே இயலாது. மேலும் நீங்கள் மேற்கொண்ட ஒரு வர்த்தகம் சரியா அல்லது தவறா என்று தெரிந்து கொள்ள நீங்கள் பல்லாண்டுகள் காத்திருக்க வேண்டும். பங்குச் சந்தையும் கிட்டத்தட்ட வாழ்க்கை மாதிரி தான். எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதி எழுதி மேற்செல்லும் என்ற உமர் கய்யாமின் கவிதை வரிகள் மாதிரி பங்குச்சந்தையும் அதுபாட்டிற்கு சம்பவங்களின் போக்குடன் பயணித்துக் கொண்டிருக்கும். இந்தப் பனிமூட்டமான சூழலில் தான் நாம் நம் முதலீட்டுப் பயணத்தைத் தொடர வேண்டும். வெயில் அடித்து எல்லாம் துலாம்பரமாகத் தெரிந்தால் பங்குகளின் விலை உயர்ந்து விடும். பனி மூட்டம் தான் பங்குகளை வாங்குவதற்கு உகந்த சூழல். மேலும் பங்குகளில் இலாபம் சம்பாதிப்பது விற்கும் போது தீர்மானிக்கப் படுவதில்லை. குறைவான விலையில் பங்குகளை வாங்குவதில் அது தீர்மானிக்கப்படுகிறது.
பங்கு மொழி 3
பங்குச்சந்தையில் எளிமையான முதலீட்டு வாய்ப்புகளைக் கடினமானதாக ஆக்கும் ஒரு வக்கிரமான மனோபாவம் பெரும்பான்மையானவர்களிடம் இருக்கிறது
- வாரன் பஃபெட்
பறவைகளிடமும் மனிதர்களிடமும் பரிசோதனை ஒன்றை நடத்தினார்கள். பரிசோதனை மிகவும் எளியது. சிவப்பு விளக்கு சில சமயம் பளிச்சிடும். பச்சை விளக்கு சில சமயம் பளிச்சிடும். ஒரு நீண்ட தொடர்ச்சியைக் கொண்டு கணக்கிட்டால், நீண்ட தொடர்ச்சி என்பது 50 முறை என்று கொள்ளலாம், பச்சை விளக்கு 60 சதவீதம் என்ற அளவிலும், சிவப்பு விளக்கு 40 சதவீதம் என்ற அளவிலும் பளிச்சிடும். இந்த விவரங்கள் பரிசோதனையின் முன்னரே பங்கு பெறுவோரிடம் தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டு விட்டது. நாம் எந்த விளக்கு எப்போது பளிச்சிடும் என்று யூகித்துச் சொல்ல வேண்டும். அதிக முறை யார் சரியாக யூகித்துச் சொல்கிறார்களோ அவர்கள் வெற்றி பெற்றவர்கள். பச்சை விளக்கு பெரும்பாலும் பளிச்சிடும் என்ற அடிப்படையில் நாம் எல்லா முறையும் பச்சை விளக்கு பொத்தானை அழுத்தினாலே எளிதாகப் போட்டியில் வென்று விடலாம் என்பது தெளிவு. பறவைகளுக்கு இந்த மாதிரி விளக்குகள் குறுகிய தொடர்ச்சியில் சீரற்ற முறையில் (random) பளிச்சிடும் ஆனால் நீண்ட தொடர்ச்சியில் 60 சதவீதம் பச்சை விளக்கு பளிச்சிடும் என்று புரிய வைக்க முடியாது. ஆனால், ஆச்சரியப்படத்தக்க வகையில் பறவைகள் பச்சை விளக்கு சராசரியாக அதிக முறை பளிச்சிடுவதை உள்ளுணர்வாகப் புரிந்து கொண்டு அனைத்து முறையும் பச்சை விளக்கு பளிச்சிடும் என்ற பொத்தானை அழுத்தி பரிசோதனையில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றன. மனிதர்களுக்கு இந்த விவரங்களைத் தெளிவாக முன்னரே தெரிவித்தும் சிவப்பு பச்சை என்று மாறி மாறி ( மாற்றி மாற்றி) யூகித்து குறைந்த மதிப்பெண் பெற்று பறவைகளிடம் தோற்றுப் போனார்கள். இனிமேல் யாரையும் பறவை மூளை, ஆட்டு மந்தை என்று திட்டும் போது சற்று யோசிக்க வேண்டும் என்பதாகத் தோன்றுகிறது. எளிமையான விஷயங்களைச் சிக்கலானதாக ஆக்கும் ஒரு போக்கு மனிதர்களிடம் இயற்கையாகவே இருக்கிறது. இந்தப் போக்கிற்கு மற்ற இடங்களை விட பங்குச்சந்தையில் நாம் கொடுக்கும் விலை மிக அதிகம். ஒரு ரூபாய் மதிப்பு (விலை அல்ல) உள்ள பங்கை ஐம்பது காசுகளுக்கு வாங்குவது மதிப்பு முதலீடு (Value Investing) என்று அழைக்கப்படுகிறது. வாரன் பபெட் மதிப்பு முதலீட்டின் மாண்புகளைப் பற்றி 'கரடி'யாகக் கத்தினாலும் கடை விரித்தோம் கொள்வாரில்லை என்ற கணக்கில் அந்த வைரம் யாராலும் எடுக்கப்படாமல் உங்கள் தொடுகைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. அதே சமயம் தினசரி வணிகம் (day trading) குறுகிய கால வணிகம் (short term trading) விற்று விட்டு வாங்குதல் (short selling) பெறுதிகள் (futures and options) முதலான ஊக வணிக முதலீடுகள் (?) தழைத்தோங்கிய வண்ணம் உள்ளன. வாரன் பபெட் பெறுதிகளை weapons of mass destruction என்று எச்சரிக்கை செய்தும் நம்மவர்கள் அதை தீபாவளி வாணம் கணக்காகக் கையில் பிடித்து வெடித்த வண்ணம் இருக்கிறார்கள். சொர்க்கத்திற்கு மலர்கள் தூவிய பாதை இருக்கிறது. ஆனால் அதில் யாரும் நடப்பதில்லை.
பங்கு மொழி 4
பங்குச்சந்தையில் மதிப்பு முதலீட்டு வாய்ப்பு என்ற தங்க மழை ஆபூர்வமாகத் தான் பொழியும். அவ்விதம் பொழியும் தங்க மழையைச் சின்னக்குவளையில் பிடிக்காமல் பெரிய வாளியில் பிடியுங்கள்
- வாரன் பஃபெட்
இந்தியப் பங்குச்சந்தையில் மதிப்பு முதலீட்டுத் தங்க மழை கடைசியாகப் பொழிந்தது 2008 US sub prime crisis ன் போது தான் ( கொரோனா பெருந்தொற்று முதல் அலையின் போது ஒரு சிறு தூறல் மட்டுமே விழுந்தது ) அப்போது நம்முடைய பங்குத் தொகுப்பும் மிகவும் குறைவான விலைக்கு (மதிப்பில் அல்ல. விலை வேறு. மதிப்பு வேறு) இறக்கம் அடைந்திருக்கும். அதைப் புறக்கணித்து எதிர் நீச்சல் போட்டுப் பங்குகளை வாங்கும் இரும்பு இதயத்தை நாம் கைக்கொள்ள வேண்டும். காளைச்சந்தையில் ஒரு சதவீத பங்கு ஈட்டு விகிதத்தில் வர்த்தகமான பங்குகள் 2008 ல் ஐந்து சதவீத பங்கு ஈட்டு விகிதம் என்ற குறைந்த மதிப்பில் வர்த்தகமாகின. தரமான பங்குகளை ஒரு சதவீத பங்கு ஈட்டு விகிதத்தில் வாங்கி அது ஐந்து சதவீத பங்கு ஈட்டு விகிதத்தைக் கொடுக்கப் பல்லாண்டுகள் காத்திருக்க வேண்டும். தங்க மழையின் போது அதே பங்குகளை ஐந்து சதவீத பங்கு ஈட்டு விகிதத்தில் வாங்குவது காலத்தை வாங்குவது போல.
பங்கு மொழி 5
பங்குச்சந்தையில் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்ய வேண்டுமென்பதற்கு அடிப்படையான காரணம் காளைச்சந்தை நீண்ட காலத்திற்கும் கரடிச்சந்தை குறுகிய காலத்திற்குமாக இருப்பது மட்டுமல்ல. காளையின் பாய்ச்சல் மிகவும் குறுகிய காலத்தில் அமுக்கமாக இருப்பதும் ஒரு முக்கியமான காரணம் .
2019 மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளி வந்ததும் பங்குச்சந்தை gap up opening என்ற அடிப்படையில் ஒரே நாளில் 1000 புள்ளிகள் உயர்ந்தது. இந்த 1000 புள்ளிகள் உயர்வில் பங்கு பெற நீங்கள் ஏற்கனவே பங்குச்சந்தையில் முதலீடு செய்திருக்க வேண்டும். செய்தி வெளிவந்த பிறகு நீங்கள் அதைப் பணமாக்கம் செய்ய முடியாது. அந்த 1000 புள்ளிகள் அமுக்கமாக (compressed) இருந்து வெளிப்படுவதைக் கவனியுங்கள். அதனால் தான் பங்குச்சந்தையில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்வது கேந்திரமான (strategic) ஒரு உத்தியாகப் பார்க்கப்படுகிறது. நீங்கள் பங்குச்சந்தையில் timing பண்ணுகிறேன் பேர்வழி என்று உள்ளே வெளியே விளையாட்டு விளையாடி இந்த 1000 புள்ளிகள் உயர்வு மாதிரியான சிறந்த பத்து நாட்களைத் தவற விட்டு விட்டால் உங்கள் இலாபம் பங்குச்சந்தைக் குறியீட்டு முதலீடுகளான sensex, nifty போன்றவை கொடுக்கக்கூடிய இலாபத்தில் பாதியாகக் குறைந்து விடும். சிறந்த இருபது நாட்களைத் தவற விட்டு விட்டால் உங்கள் இலாபம், அல்ல, நஷ்டம் - .33% பங்குச்சந்தையில் காலக்கணிப்பை (timing) விட காலம் (time) தான் முக்கியம்.
Comments
Post a Comment