செய்முறை வர்த்தகம்

செய்முறை வர்த்தகம்
Algo Trading

செய்முறை வர்த்தகம் என்பது மனித உணர்வுகளைக் களைந்த , முன்பே தீர்மானிக்கப்பட்ட சில அளவுருக்களின் (parameters) அடிப்படையில் கணினி மூலமாகப் பங்கு வியாபாரத்தை மேற்கொள்வதான ஒரு வியாபார முறையாகும் . இந்த அளவுருக்கள் பங்குகளின் விலை சார்ந்தோ , எண்ணிக்கை சார்ந்தோ , பங்குகளை வாங்குவதற்கான நேரம் சார்ந்தோ எவ்விதம் வேண்டுமானாலும் இருக்கலாம் . 1987 ல் அமெரிக்கப் பங்குச்சந்தை ஒரு மாபெரும் சரிவைச் சந்தித்தமைக்கு இந்த செய்முறை வர்த்தகம் தான் காரணம் .

பங்குச்சந்தையில் நாம் அன்றாடம் சந்திக்கும் stop loss ( நஷ்டம் தவிர்த்தல் - பங்கின் விலை நாம் வாங்கிய விலையை விட ஒரு குறிப்பிட்ட சதவீதம் குறைந்ததும் விற்று விடுவது) மற்றும் target price ( இலாபத்தைப் பிடித்தல் - பங்கின் விலை நாம் வாங்கிய விலையை விட  ஒரு குறிப்பிட்ட சதவீதம் கூடியதும் விற்று விடுவது) போன்றவையும் இந்த செய்முறையின் பாற்பட்டது தான் . செய்முறை வர்த்தகத்தைப் புரிந்து கொள்ள பங்கு வர்த்தகத்தின் இந்த இரண்டு முக்கியக் கருவிகளான நஷ்டம் தவிர்த்தல் மற்றும் இலாபத்தைப் பிடித்தல் என்பதைக் கொஞ்சம் கிட்டே சென்று ஆராயலாம் .

நிறுவனப் பங்கு ஒன்றை அடிப்படைப் பகுப்பாய்வு செய்து மதிப்பு முதலீடாக நீங்கள் வாங்குவதாகக் கொள்ளலாம் . அது சில பல காரணங்களால் நீங்கள் வாங்கிய விலைக்கும் குறைவாக வந்து விடுகிறது . இந்தக் குறைவான விலையில் அந்தப் பங்கின் உள்ளார்ந்த மதிப்பு இன்னும் அதிகமாகிறது . பங்குச்சந்தை தலைகீழ் விகிதங்களில் இது தலையாய ஒன்று .இந்தக் கருத்தாக்கத்தை ஒரு சின்ன உதாரணம் மூலமாக இன்னும் கொஞ்சம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம் . பங்கு ஒன்றை அதன் உள்ளார்ந்த மதிப்பின் (Intrinsic value) பாதி விலையில் வாங்கினால் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற தள்ளுபடி விகிதத்தில் வாங்கியதாக அர்த்தம் . அதே பங்கு இன்னும் கொஞ்சம் விலை குறைந்து அதன் உள்ளார்ந்த மதிப்பின் மூன்றின் ஒரு பங்கு விலையில் வர்த்தகமாகிறது . இப்போது ஒன்று வாங்கினால் இரண்டு இலவசம் ( ! ) என்று குறை விலையில் அதன் மதிப்பு கூடுகிறது . ஆக , நஷ்டம் தவிர்த்தல் நஷ்டம் அதிகரிப்புக்கு இட்டுச் செல்வதாக அமைகிறது .

அடுத்து இலாபத்தைப் பிடித்தல் . நல்ல நிறுவனங்களின் மதிப்புப் பெருக்கத்திற்கு யாராலும் வரம்பு கட்ட முடியாது . அதற்கு வானமே எல்லையாகும் . சமீபத்திய கணக்கீட்டின்படி விப்ரோ நிறுவனம் 1576751 bagger . அதன் பங்குகள் ஒரு மடங்கு இரண்டு மடங்கு அல்ல 15 இலட்சம் மடங்கு முதலீட்டுப் பெருக்கத்தை அடைந்திருக்கின்றது . பங்கின் விலை வெறுமனே 20 சதவீதம் கூடியதும் இலக்கு விலை வைத்து விற்று விடுவது நம் காலை நாமே வெட்டிக் கொள்வதற்கு ஒப்பானதாகும் .

பங்குச்சந்தையின் இரைச்சலை (noise)  அதிகப்படுத்துவதில் இந்த செய்முறை வர்த்தகம் பெரும் பங்கை வகிக்கிறது . இந்த இரைச்சலிலிருந்து குறியீடு (signal) களைப் பகுத்துணர்வதில் தான் பங்குச்சந்தை வாயிலான வெற்றி அடங்கியிருக்கிறது .

கிருமித்தொற்றின் முதல் அலையின் போது சென்செக்ஸ் 28000 புள்ளிகள் வரை இறங்கியது . தொற்றைக் குறைக்க ஊரடங்கைப் போட்டு மக்களைத் தனிமைப் படுத்தியதும் நம்மவர்களின் பார்வை பங்குச்சந்தையின் பக்கம் திரும்பியது . டீமேட் கணக்குகள் கோடிகளில் துவங்கப்பட்டன . மழையின் பொருட்டு பள்ளி(பங்கு)க் கூடம் வந்த இவர்களுக்கு பங்குச்சந்தை குறித்த ஆனா ஆவன்னா கூடத் தெரியாது . இவர்களின் கைங்கர்யத்தில் சந்தை புதிய உச்சங்களைத் தொட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன . இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் சந்தைக்கு எது அபாயம் என்று நினைக்கிறோமோ அதுவே சந்தை கூடுவதற்கான ஒரு உபாயமாக அமைகிறது . ஊரடங்கால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு சந்தை சரியும் என்பது ஒரு கருத்து . ஆனால் அதே ஊரடங்கு சந்தை ஏற்றத்திற்கான காரணமாக அமைகிறது . செய்முறை வர்த்தகத்தில் event strategy என்பதான ஒரு உத்தி இருக்கிறது . இந்த மாதிரி பெருந்தொற்று காலங்களில் சந்தை சரியும் என்பதாக சரியாக ( தவறாக ) ஊகித்து பங்குகளை விற்று வைப்பது . ஆனால் அபாயமும் உபாயமும் இருதலை நாகம் போல் பின்னிப் பிணைந்திருப்பதைக் கவனிக்க வேண்டுகிறேன் .

Algo பரஸ்பர நிதிகள் கூட இப்போது வந்து விட்டன . ஆனால் Algo பரஸ்பர நிதிகளின் மென்மையான பதிப்பான குறியீட்டு நிதிகளின் ( Index Funds) தொடர்ச்சிப் பிழைக்கு (tracking error) செய்முறை வணிகம் காரணமாவது ஒரு நகைமுரண் . பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில் பங்குச்சந்தைக் குறியீடுகளில் இடம் பெறும் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைக்கப்படும் . இந்தக் குறியீடுகளில் இடம்பெறப் போகும் நிறுவனப் பங்குகளை HFT ( High Frequency Trading) முறையில் Algo நிதிகள் வாங்கி வைப்பதால்  குறியீட்டு நிதிகள் அதிக விலைக்கு இந்தப் பங்குகளை வாங்க வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு உள்ளாகின்றன . அதே மாதிரி குறியீட்டிலிருந்து நீக்கப்படும் நிறுவனங்களில் இது தலைகீழாக மாறுகிறது . Algo நிதிகள் இத்தகைய நிறுவனப் பங்குகளை அதிக எண்ணிக்கையில் விற்று வைப்பதால் அவற்றின் விலை குறைந்து குறியீட்டு நிதிகள் நஷ்டத்திற்கு உள்ளாகின்றன .

செய்முறை வர்த்தகத்தில் Pairs Trading , Delta Neutral ,  Mean Reversion என்று பற்பல உத்திகள் இருக்கின்றன . அவைகளை விரிவாக விளக்குவது இந்தப் பதிவின் நோக்கத்திற்கு அப்பாற்பட்டது . சுருக்கமாக இவைகளைக் குறித்துச் சொல்ல வேண்டுமென்றால் இவை விட்டில் பூச்சிகளை வேட்டையாடுவது மாதிரி பங்குச்சந்தையின் சிறிய சிறிய இலாபங்களைப் பணமாக்கம் செய்ய முயல்கின்றன .

கணினி இல்லாமல் பங்குகளைக் கூவிக் கூவி விற்ற ஒரு காலம் இருந்தது . போலிப் பங்குகள் உலாவிய காலம் அது . நீங்கள் சந்தையில் நிறுவனங்களின் பங்கை ஒன்று என்ற எண்ணிக்கையில் எல்லாம் வாங்க முடியாது . சந்தை lot என்ற அளவீட்டில் 50 மற்றும் 100 என்று தான் வாங்க முடியும் . பங்குகளை வாங்கி விற்பதற்குள் உயிர் போய் உயிர் வரும் . இப்போது கணினி உபயத்தில் நிகழ்நிலை வர்த்தகம் (online trading) வந்து விட்டது . போலிப் பங்குகள் அறவே ஒழிக்கப்பட்டு விட்டன . நீங்கள் நிறுவனங்களின் ஒரேயொரு பங்கைக் கூட வாங்கலாம் . ஆனால் செய்முறை வர்த்தகம் வந்து முன்பை விட இப்போது சந்தையின் இரைச்சல் அதிகரித்திருக்கிறது . காட்சிகளைத் துலக்கமாகக் காட்டும் என்று எடுத்தணிந்த கண்ணாடி முக அடையாளத்தையே மறைக்கும் முகமூடியாகப் போனது என்ற இந்திரனின் கவிதை வரிகள் நெஞ்சில் நிழலாடுகிறது .

மனித உணர்வுகள் பங்கு முதலீட்டிற்குத் தடையாக உள்ளன என்று முன்பு படித்திருக்கிறோம் . எனில் மனித உணர்வுகள் அற்ற கணினி வழி முதலீடுகள் நல்லது தானே என்பதான ஒரு கேள்வி எழலாம் . மனித உணர்வுகள் முதலீட்டிற்குத் தடையாக உள்ளது என்பதென்னவோ உண்மை தான் . அதற்காக உணர்வுகளே இல்லாமல் இயந்திரம் மாதிரியும் இருக்கக்கூடாது . Sundram Fasteners நிறுவனத்தைக் குறித்து எனக்குச் சில உணர்வுகள் இருக்கின்றன . அந்த நிறுவனம் தரத்தில் என்றும் சமரசம் செய்து கொண்டதில்லை . தரத்திற்கான உலகின் உயரிய விருதான டெமிங் விருதை அது தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறது . அது வளர்ச்சியின் மீதான வளர்ச்சி காண்பதாக இருக்கிறது . நிறுவனம் உள்முகமாகவே வளரும் (Growth through Internal accruals) ஒரு தன்மையைக் கொண்டிருக்கிறது .  அதற்குக் கடன் சுமைகள் கிடையாது . நிறுவனம் பங்காதாய வடிவிலும் அவ்வப்போது வழங்கும் இலவசப் பங்களிப்பின் மூலமாகவும் தன் செல்வ வளத்தை முதலீட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்கிறது . இது மாதிரி பல தரவுகளின் அடிப்படையில் அந்த நிறுவனம் மீதான எனது உணர்வு கட்டப்பட்டுள்ளது . பல்லாண்டுகளின் சிந்தனைப் பயிற்சியின்  வாயிலாக  பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒவ்வொரு நிறுவனம் குறித்தும் எனக்கே எனக்கான சில உணர்வுகள் இருக்கின்றன . இந்த உணர்வுகளைக் கணினி ஒன்றில் எப்படி உள்ளீடு செய்ய முடியும் ? ஆக , பங்குச்சந்தையில் வெற்றி பெற உணர்வுகள் அவசியம் தேவை . ஆனால் சந்தையில் ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டும் முடிவுகளை எடுக்கக்கூடாது . பங்குச்சந்தையில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் இந்த எதிரெதிர் நிலையில் தான் நாம் வாழ வேண்டும் . ஒன்றுக்கொன்று நேர் எதிரான சிந்தனைகளை மனதில் தேக்கி அவற்றிலிருந்து புதிய தீர்வுகளை நோக்கி முன்னேறிச் செல்லவேண்டும் .

மனித மூளை ஈடு இணையற்ற ஒரு கணினியாகும் . இயற்கையின் கூட்டுப் பெருக்கத்திற்கு ஒப்புயர்வற்ற ஒரு உதாரணமாக அதனைச் சொல்லலாம் . இந்த மனித மூளையை அதன் மூலமான சிந்தனையைச் செயலாக்கம் செய்யாமல் அதனை மனிதனால் படைக்கப்பட்ட கணினிகளின் மூலமாக அயலாக்கம் (outsource) செய்ய முனைவது அறிவின் பாற்பட்டதாகாது . மனித சிந்தனையின் மாண்பைக் குறைவாக மதிப்பிட்டு விடவேண்டாம் . ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் thought experiment என்று சொல்லப்படும் சிந்தனைச் சோதனையின் மூலமாக மட்டுமே கண்டறியப்பட்டது .

முதலீடு என்பது ஒரு செய்முறையில் அடங்குவதான அறிவியல் அல்ல . மேலும் அறிவியல் கோட்பாடுகள் கூட மாறுதலுக்கு உட்பட்டவையே . Science advances funeral by funeral . கோட்பாடு ஒன்றின் உடைந்த மண்மேடுகளின் மேல் புதிய கோட்பாடுகள் கட்டமைக்கப்படுகின்றன .

சரி , செய்முறை வர்த்தகத்தில் நன்மையே இல்லையா ? பங்குகளின் நீர்மை நிறை உருவாக்கத்தில் (liquidity) இவை பேருதவி புரிகின்றன . அதனால் பங்குகளை வாங்கும் போது அதிக விலைக்கு வாங்குதல் மற்றும் விற்கும் போது குறைந்த விலைக்கு விற்பதான தாக்கச்செலவு (Impact cost) மட்டுப்பட ஏதுவாகிறது ‌. மற்றும் விலை வேற்றுமை வாணிபம் (arbitrage) என்ற வகையிலும் இவை உதவிகரமாக இருக்கின்றன . பொதுவாகப் பங்கின் விலைகள் மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் ஒரே விலையில் வர்த்தகமாவதைக் குறித்து நீங்கள் வியந்திருக்கலாம் . இதற்கு அடிப்படையான காரணம் இந்த Algo க்கள் தான் .

சரி , அப்போது சந்தையில் முதலீடு செய்ய என்ன உத்தியைத் தான் கைக்கொள்வது ? சந்தை யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை என்பதைப் புரிந்து கொள்வது முதல் படி . It has a mind of its own . சந்தைக்கென்று ஒரு தனிப்பட்ட மனம் இருக்கிறது. அது குறுகிய கால அளவில் தன் மனம் போன போக்கில் மட்டுமே செல்லும் . ஆனால் நீண்ட கால அளவில் சந்தை , சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் வருமானத்தை அடியொற்றிச் செல்வதாக அமையும் . ஆக , அடிப்படைப் பகுப்பாய்வை மேற்கொண்டு  வெயிலோ மழையோ , காளையோ கரடியோ தொடர்ந்த வாக்கிலான முதலீட்டை மேற்கொள்ளுங்கள் . உயர் PE என்றாலும் சரி , குறை PE என்றாலும் சரி , சராசரி PE என்றாலும் சரி சிறிய சிறிய அளவுகளில் முதலீடு செய்யுங்கள் . காலப்போக்கில் இந்த வெவ்வேறு PE க்கள் சமன் செய்யப்பட்டு நீங்கள் வாங்கிய பங்கு பன்மடங்காளராக உருமாற்றம் பெறும் .

செய்முறை வர்த்தகம் பற்றிய ஒரு பொன்மொழியுடன் இந்தப் பதிவை முடிக்கலாம் . பங்குச்சந்தையில் எந்த உத்தியும் மனித சிந்தனைக்கு மாற்றாக அமையுமானால் அது ஒதுக்கப்பட வேண்டியதும் அறவே களையப்பட வேண்டியதுமாகும் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14