கூகுள் கேட்ட கேள்விகள் -1
கூகுள் கேட்ட கேள்விகள் - 1
Questions by Google - 1
(Ideas panel questions)
ஒரு சிறிய முன் குறிப்பு : நாம் தான் கூகுள் தேடுபொறியிடம் கேள்விகள் கேட்போம் . கூகுள் எப்படி கேள்வி கேட்கும் ? வலைப்பூக்களின் (blogs) உள்ளடகத்திற்குப் பொருத்தமான , ஆனால் , இணையத்தில் இன்னமும் பதில் சொல்லப்படாத கேள்விகளை , Ideas Panel என்ற பெயரில் கூகுள் தொகுத்து வழங்குகிறது . Beta version என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில குறிப்பிட்ட வலைப்பூக்களில் மட்டும் இத்தகைய கேள்விகளை கூகுள் பதிவேற்றம் செய்திருக்கிறது . நமது வலைப்பூவும் அதில் ஒன்று . வேறு மாதிரி சொல்வதானால் புதிய பதிவுகளுக்கான எண்ணக் கருக்களை (ideas) கூகுள் வழங்குகிறது . இந்தக் கேள்விகளின் தொகுப்பே இந்த வார பதிவு .
1. In case of scraping equity market by govt how the fund will be paid to shareholders ?
அரசாங்கம் பங்குச்சந்தையை மூடி விட்டால் முதலீட்டாளர்களுக்குப் பணம் எப்படிக் கிடைக்கும் ?
ஏன் இந்தக் கெட்ட கனவு ? பங்குச்சந்தையின் மூலமாக முதல் உருவாக்கம் (capital formation) நிகழ்கிறது . வேலை வாய்ப்புகள் உருவாகின்றன . அந்நியச் செலாவணி கிடைக்கிறது . அரசாங்கம் வரி வருவாய் ஈட்டுகிறது . முறையாக முதலீடு செய்பவர்களுக்கு சொத்து உருவாக்கத்திற்கான ஒரு களமாக உள்ளது . நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பங்குச்சந்தை இன்றியமையாத ஒன்று . எதற்காகப் பங்குச்சந்தையை மூட வேண்டும் ? ஊக வணிகத்தைக் குறைக்கும் வகையில் பங்குச்சந்தையை முறைப்படுத்த வேண்டுமானால் செய்யலாம் . ஒரு வேளை நீங்கள் சொல்வது மாதிரி அரசாங்கம் பங்குச்சந்தையை மூடி விட முடிவெடுப்பதாக ஒரு கற்பனை செய்து பார்க்கலாம் . பங்குச்சந்தை ஒரே நாளில் தலைகுப்புறக் கவிழ்ந்து விடும் . நிறுவனங்கள் தத்தம் பங்குகளை அடி மாட்டு விலையில் முதலீட்டாளர்களிடமிருந்து வாங்குவதன் மூலமாக ஓரளவு பணம் அவர்களுக்குத் திரும்பக் கிடைக்கலாம் . உலகப் பணக்காரர் என்பதெல்லாம் அடிபட்டுப் போய் விடும் . நிறுவனங்களின் முதல் பொது வெளியீடு (IPO) மூலமான மதிப்பு விடுவிப்பு மற்றும் தொடர் பொது வெளியீடு (FPO) மூலமான விரிவாக்கம் போன்றவை நிகழாது . நிறுவனங்கள் முதலுக்கு ஏங்கும் . முதலீட்டாளர்கள் முதலீட்டு வாய்ப்புகள் இன்றி ஏங்குவர் .
2. Is Alexa guidance helpful in stock market ?
Alexa ன் வழிகாட்டல் பங்குச்சந்தை வெற்றிக்கு உதவுமா ?
Alexa என்பது Amazon நிறுவனத்தின் virtual assistant . தமிழில் சொல்வதானால் மாய உதவியாளர் . பாட்டுப் போடுவது , படம் போடுவது , செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியல் போடுவது , வானிலை / விளையாட்டு முதலான நிகழ் நேர (real time) தகவல் அளிப்பு மற்றும் வீட்டு தானியங்கி அமைப்பாகவும் (Home Automation System) அது செயல்படும் . அது Google மாதிரி ஒரு இயந்திரம் . சரி , புத்திசாலித்தனமான ஒரு இயந்திரம் . ஆனால் அதற்கென்று தனிப்பட்ட அறிவு என்று எதுவும் கிடையாது . எப்போதாவது பந்து வீச்சாளர் ஆறு ரன்கள் அடிப்பது மாதிரி குத்து மதிப்பாக ஏதாவது வழி காட்டலாம் . கூகுள் நிறுவனக்கதையை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம் . கூகுள் தேடுபொறி இணையத் தளங்களின் பின்னோக்கிய இணைப்புகளைத் தரவரிசைப்படுத்தும் ஒரு செய்முறை மூலமாகப் பயனாளர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்குகிறது . அது எப்போதுமே சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது . மேலும் அகநிலை சார்ந்த (subjective) என்பதான ஒரு விஷயம் இருக்கிறது . ஒரு இணையத்தளம் சரியான தகவல்களைத் தருவதாக இருந்தாலும் அந்தத் தளம் எனக்குப் பிடித்ததாக நான் விரும்பும் வசதிகளைக் கொண்டதாக இருக்கவேண்டும் . ஒரு பேச்சுக்கு இணையத்தளம் ஒன்றுக்கு இந்த மாதிரி இணைப்புகள் இல்லையென்று கொள்ளலாம் . எனில் , கூகுள் தேடுதலில் அது முதல் சில பக்கங்களுக்குள் வரப்பெறாது . மும்பையில் ஒரு சமயம் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்தது . அது சம்பந்தமான தேடுதலில் கூகுள் ரியல் எஸ்டேட் விளம்பரங்களைக் காட்டியது . கூகுள் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட அறிவுப்பூர்வமான ஒரு இயந்திரம் . ஆனால் மனிதன் மாதிரி அதற்கு இதயம் கிடையாது . உணர்வுகள் கிடையாது . இதனால் கூகுளைக் குறைவாக மதிப்பிட்டு விட வேண்டாம் . கூகுள் மட்டும் இல்லையென்றால் இணையம் என்ற திக்குத் தெரியாத காட்டில் நாம் காணாமல் போயிருப்போம் . மேலும் கூகுள் போன்ற இயந்திரங்களுக்கு சில அனுகூலங்கள் உள்ளன . உதாரணமாக உணர்வுகளற்ற கூகுள் தேடுபொறியிடம் யாரும் பொய் சொல்ல மாட்டார்கள் . நம் ஆசைகளை , எண்ணங்களை , அச்சங்களைப் பகிர்ந்து அதற்கான ஆலோசனைகளைக் கேட்கும் உற்ற நண்பனாகக் கூகுள் உள்ளது . இவ்வாறு நாம் கூகுளிடம் உண்மையைப் பகிர்ந்து கொள்வது தகவல் அகழ்வாராய்ச்சி (Data mining) போன்ற துறைகளில் பேருதவி புரிகிறது . இயந்திரங்களின் இந்த இதயமில்லாத தன்மைக்கு முகநூல் உதாரணம் ஒன்றையும் இவ்விடத்தில் குறிப்பிடலாம் . வியட்நாம் போரின் போது ஆடையின்றி அழுது கொண்டே ஓடி வரும் ஒரு பதினோரு வயது சிறுமியின் புகைப்படத்தை நீங்கள் இணையத்தில் பார்த்திருக்கலாம் . போரின் தாங்கொணாத துயரங்களைப் பார்வையாளர்களுக்குக் கடத்தும் உலகப் புகழ்பெற்ற புகைப்படம் அது . குழந்தை ஆபாச (Child porn) புகைப்படங்களை நீக்குவதற்கான முக நூல் செய்முறை (algorithm) ஒன்று அந்தப் புகைப்படத்தை அனைத்து முக நூல் பதிவுகளிலிருந்தும் நீக்கி விட்டது ! உலகம் முழுவதும் எதிர்ப்புக் கிளம்பிய பின்னர் அந்தப் புகைப்படம் மீண்டும் பதிவேற்றப்பட்டது வேறு கதை . பங்குச் சலிப்பான் என்று அழைக்கப்படும் stock screen பங்குகளை சில குறிப்பிட்ட அளவுருக்களில் (parameters) எடுத்துக் கொடுப்பதற்கான ஒரு இயந்திரம் . ஆனால் அந்த இயந்திரத்தை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும் . பங்கு ஈட்டு விகிதப் பங்குகளை (dividend yield stocks) அந்த இயந்திரத்தில் தேடும் போது பங்காதாய வழங்கல் விகிதத்தையும் ( dividend payout ratio) கணக்கில் கொள்ள வேண்டும் . நிகர இலாப வரம்பை (net interest margin) மட்டும் பார்க்கக்கூடாது . அதனுடன் மொத்த விற்பனை(turn over)யையும் இணைத்துப் பார்க்க வேண்டும் . பங்குச் சலிப்பான்கள் எண்சார் காரணிகளைக் (quantitative factors) கொண்டு வடிவமைக்கப்பட்டவை . பண்பு சார் காரணிகளை (Qualitative factors) அது தெரிவிக்காது . ராம்கோ சிமெண்ட் ஒரு அற வழி நிறுவனம் என்பதை நாம் தான் நம் சிந்தனை கொண்டு தேடித் தெளிய வேண்டும் . மனித மூளை இயற்கையின் கைவண்ணத்தில் பல்லாண்டுகளின் கணக்கில் செதுக்கப்பட்ட ஒப்புயர்வற்ற ஒரு கருவியாகும் . இயற்கையின் கூட்டுப் பெருக்கத்திற்கு அது ஒரு சிகர உதாரணம் . எந்த ஒரு இயந்திரமும் மனிதனின் மூளைக்கு அதன் மூலமான சிந்தனைக்கு மாற்றாக இருக்குமானால் அது ஒதுக்கப்பட வேண்டியதும் அறவே களையப்பட வேண்டியதுமாகும் .
3. I have debt of 10 lakh lost in share market borrowed from private lender . How to tackle these problems ?
கடன் வாங்கி முதலீடு செய்து பங்குச்சந்தையில் பெருத்த நஷ்டத்திற்கு உள்ளாகி விட்டேன் . இந்த மாதிரியான பிரச்னைகளுக்கு என்ன தீர்வு ?
பங்குச்சந்தை என்பது மாறும் நிலை முதலீடு (variable investment) கடன் என்பது மாறா நிலை கடப்பாடு (commitment) இந்த மாறும் மற்றும் மாறா நிலைகளை இணைக்கக்கூடாது . கடன் வாங்கி பங்குச்சந்தையில் முதலீட்டை மேற்கொள்ளும் போது பங்குச்சந்தையில் பணம் ஈட்டினாலும் சரி ஈட்டாவிட்டாலும் சரி கடனைக் கட்டியே ஆகவேண்டும் . கடன் மாதா மாதம் கட்டப்பட வேண்டியது . சந்தை மூன்று வருடங்களில் இரண்டே முக்கால் வருடம் தூங்கிக் கொண்டிருக்கும் . மீதி கால் வருடத்தில் மூன்று வருட வருமானத்தையும் கொடுப்பதாக இருக்கும் . சமயங்களில் ஆண்டாண்டு காலம் ஒரு குறிப்பிட்ட விலைப்பட்டையில் மட்டும் உழன்று நம் பொறுமையைச் சோதிக்கும் . ஒரு கட்டத்தில் பங்குகளை முழுவதும் விற்று கடனை அடைக்க வேண்டிய தேவை எழலாம் . காளைச் சந்தையினால் கவரப்பட்டு கடன் வாங்கி முதலீட்டை மேற்கொள்வது இன்னும் ஆபத்தானது . உறங்கிக் கொண்டிருக்கும் கரடி எப்போது எழும் என்று சொல்ல முடியாது . ஆண்டாண்டு காலம் தேவைப்படாத உபரிப் பணத்தை மட்டுமே பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் . தரமான நிறுவனங்கள் கடன் எதுவும் வாங்காமல் உள்முகமாகவே வளர்வதாக (growth through internal accurual ) இருக்கும் . நிறுவனங்களே கடன் வாங்காமல் இருக்கும் போது அத்தகைய நிறுவனங்களில் கடன் வாங்கி முதலீட்டை மேற்கொள்வது அறிவுடைமையாகாது .
4. Did the Ambanis and Birlas get rich because of the stock market ?
அம்பானிகளும் பிர்லாக்களும் பங்குச்சந்தையின் மூலமாக மட்டுமே பணக்காரர்கள் ஆகி உள்ளனரா ?
ஆம் . அம்பானியின் சொத்து மதிப்பு 7.8 இலட்சம் கோடி . ஆனால் இத்தனை இலட்சம் கோடியையும் அவர் அலமாரியில் வைத்துப் பூட்டியிருக்கவில்லை . அது மாயப் பணம் (virtual money) மட்டுமே . EPS மட்டுமே அவர்களது நிறுவனம் ஈட்டும் பணம் . சந்தை EPS ன் மடங்குகளில் அவர்கள் நிறுவனத்தை மதிப்பிடும் . இது தான் PE . ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது 24.74 என்ற PE க்களில் வர்த்தகமாகிறது . இந்த PE ஐ சந்தை தொடர்ந்து வழங்க நிறுவனம் பங்கு முதல் நீர்க்காமை , கடன் இல்லாமை போன்ற கல்யாண குணங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் . தரமான வளர்ச்சி , அகழி , அறம் மற்றும் நிறுவனர் பங்கு போன்றவைகளில் கவனம் கொள்ள வேண்டும் . மாயப் பணம் என்றால் அந்தப் பணத்தைப் பயன்படுத்த முடியாது என்பதாக அர்த்தமில்லை . உயர் PE க்களில் பங்குகளைப் புதிதாக வெளியிட்டு வேண்டிய நிதியைத் திரட்டி விரிவாக்கத்தின் மூலமாகவோ அல்லது பிற நிறுவனங்களைக் கையகப்படுத்துவதன் மூலமாகவோ வளரலாம் . குறை PEக்களில் பங்குகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டு சிறியதாவதன் மூலமாக வளரலாம் .
5. Why Cipla perform low in share market since few years ?
கடந்த சில வருடங்களாக சிப்லா நிறுவனப் பங்கு ஏன் குறைச் செயலாக்கம் புரிவதாக உள்ளது ?
சந்தையின் அடிப்படையே EPS மற்றும் அதனைத் தொடரும் PE என்ற வகையில் அடங்கி விடும் . இந்தத் தொடர்ச்சி எப்போதும் ஒரே சீராக இருக்காது . சில நேரங்களில் PE வெகு தூரம் ஓடி விடும் . EPS நிதானமாக பின்னால் வரும் . இந்த இடைவெளி அதிகரிக்கும் போது PE நின்று நிதானம் கொள்ளும் . சமயங்களில் PE பின்னோக்கி வரும் . இது தான் குறைச் செயலாக்கம் . நிறுவனத்தின் அடிப்படைகளில் (fundamentals) மட்டும் கவனம் கொள்ளுங்கள் .
Comments
Post a Comment